கண்ணீர் பொங்கிக்கொண்டு வந்தது அவளுக்கு. எத்தனை கஷ்டங்கள் அவர்களுக்கு.
அத்தனையிலும் சாவித்ரி தான் துணையாய் இருந்தார். எதற்கும் வாட விடவில்லை.
“எதுக்குடா கலங்கற? நான் தான் இருக்கேன்ல. செத்தா போனேன்? உனக்கு செய்யாம என்ன செய்ய போறேன்?…” என்று பிள்ளை முகம் பார்த்து பசியாற்றும் தாய் போல அவர்களை அடைகாத்தவர்.
இத்தனை தூரம் வசதி என இருந்தாலும் ஒரு கஷ்டம் என்று கேட்டுவிட்டால் யோசிக்காமல் உதவுபவர்.
சுனந்தாவின் திருமணத்திற்கு பணம் புரட்ட முடியாமல் சாவித்ரியிடம் வந்து நிற்க, பணத்தை கொடுத்ததோடு,
“ஏழு லட்சம் கல்யாண செலவு சீருக்கே பத்தாதே. இதுல என்ன நகை போடுவ? அவ நகையோட என் நகையும் தர்றேன். போட்டுவிடு…” என தானே முன்வந்து திருமணத்தை நடத்தியவர்.
இப்போது அவரையே சாய்ப்பதை போல தன் தகப்பன் பேசியதை தாங்கமுடியாமல் சுனந்தாவும் பேசிவிட்டாள்.
அத்தனையும் வெண்ணிலாவை பெண் பார்த்துவிட்டு சென்ற அன்றிரவு சாவித்ரி வீட்டில் நடந்த பேச்சுவார்த்தைகள்.
அத்தனை நடக்கையில் வெண்ணிலா வீட்டில் இல்லை. ரெக்கார்டிங் சென்றிருந்தவள் திரும்பி வரும்முன் அவ்வளவும் நடந்து முடிந்து அவர்கள் கிளம்பி இருந்தனர்.
கிளம்பும் முன்பும் கூட குமரனுக்கு தான் பேசியது உறுத்தவில்லை. சாவித்ரியும் அவரிடம் இருக்கவேண்டும், நடத்தவேண்டும் என்று எதுவும் கெஞ்சவில்லை.
அதுவே குமரனை இன்னும் சீண்டியதை போல் இருந்தது. இருந்தால் இரு இல்லையா செல் என்பதை போன்ற பாவனையில் தான் இருந்தார் சாவித்ரி.
அத்தனை திமிர் பார்வையாக தோன்றியது சாவித்ரி அவரை பார்த்த பார்வை. அது நிமிர்வும், தன்னம்பிக்கையும் தான் என்று தெரியவில்லை.
‘காசிருந்தா போதுமா? கல்யாணத்துக்கு சொந்தம் வேணுமே?’ என்று ஒருவித அலட்சியம் வேறு.
“என் பொண்ணுக்கு எவ்வளோ சொந்தம் வந்தாங்க. அப்படி வரவேண்டாமா?…” என்றும் கேட்க,
“யாரையும் வாங்கன்னு கெஞ்சி கூப்பிடவே முடியாது குமரா. வாழ்த்துறதுக்கு மனசு வேணும். கெஞ்சி கூப்பிட்டு வர்றவங்க வாழ்த்துல என்ன அர்த்தம் இருக்கு?…” என்று கூறிவிட்டார் சாவித்ரி.
அதனை அலட்சியமாகவே அவர் நினைக்க வளர்மதியும், சுனந்தாவும் அப்படி நினைக்கவில்லை.
“பாட்டி, எங்கப்பாவுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அவர் வரலைன்னா என்ன? நானும் என் புருஷனும் வருவோம். கூட என் ப்ரெண்ட்ஸ். அதெல்லாம் ஜமாய்ச்சிடலாம்…” என்று சொல்லிவிட்டு,
“உங்களுக்கு சொல்ல எதுவும் இல்லைன்னா கிளம்புங்க ப்பா…” என குமரனிடம் சொல்லிவிட்டு சாவித்ரியை அணைத்து விடைகொடுத்து சென்றாள் சுனந்தா.
“நாங்க இருக்கோம் த்தை. நீங்க வருத்தப்படாதீங்க. அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். கண்டிப்பா நம்ம நிலா கல்யாணத்தை சிறப்பாவே பண்ணுவோம்…” என்று சொல்லி கிளம்பினார் வளர்மதி.
இன்றுவரை அதன் தாக்கம் குறையவில்லை சாவித்ரிக்கு. அதனை வெண்ணிலாவிடம் அவர் தெரியப்படுத்தவும் இல்லை.
தெரிந்தால் நிச்சயம் கோலாருகே கிளம்பி சென்று குமரனை நன்றாய் கேட்டுவிடுவாள்.
அதற்காகவே சுனந்தாவிடம் எதையும் நிலாவிடம் கூறாதே என்றிருக்க அவருக்காக சுனந்தாவும் சொல்லவில்லை.
வயதாகிறதே என்று அவருக்கு தோன்றாமல் இல்லை. அதற்குள் தன் பேத்திக்கு நல்ல குடும்ப அமைப்பை, அவளை கொண்டாடும் சொந்தங்களை தந்துவிடவே இத்தனை தூரம் உயிரை கையில் பிடித்தபடி ஒரு போராட்டம்.
இன்னும் நான்கே நாட்கள் இருந்தது வெண்ணிலா ஹிமாச்சல பிரதேசம் கிளம்புவதற்கு.
குடும்பத்தில் அத்தனைபேருக்குமே தெரிந்திருந்தது அவள் கிளம்புவதை பற்றி.
பத்திரம் என்று தான் பேசி அவளை ஊக்குவித்திருந்தனர். விக்ரம்மிற்கு மட்டும் தானும் ஒருமுறை சென்று பார்த்தால் என்ன என்னும் ஆசை.
அதிலும் சாருலதா சொல்லியதில் இருந்த வெண்ணிலா வைத்திருக்கும் பைக்கை தேடி பார்த்தவனுக்கு தனக்கும் வாங்கினால் என்ன என்னும் எண்ணம்.
விலை அதிகம் தான். கௌரவ்விடம் சொன்னால் வாங்கியும் தருவான் தான். ஆனாலும் ஒரு தயக்கம்.
அன்று நிலா தன் பைக்கில் பொருத்துவதற்கான கேமராக்களை எடுத்து வைத்தபடி பேசிக்கொண்டிருந்தாள் விக்ரம்மிடம்.
“ஏன் விக்ரம்? நான் ஏன் சும்மா சொல்லனும்? ஆனா வீட்டுல கேட்டுக்கோ…” என நிலா சொல்லியிருக்க, பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவனுக்குள் செல்லவேண்டும் என்னும் ஆசை இன்னும் அதிகமானது.
முதலில் கௌசல்யாவிடம் பேசலாம் என்று வீட்டில் மதிய உணவு நேரம் கௌசல்யாவிடம் இதனை கூறுகையில் ராம்நாத்தின் காதிற்கும் சென்றுவிட்டது.
“எவ எக்கேடு கெட்டா எனக்கென்ன? நீ எப்படிடா கேட்ப? உசுரோட இருக்கனும்ன்னு எண்ணமில்லையா? அதுவுமில்லாம பொட்டக்கழுத அவ. கல்யாணத்தை பேசின கையோட இப்படி ஊர் சுத்துவாளா? நல்ல பொண்ணா அவ….” என்று விக்ரம்மை ஒரு விளாசு, கௌசல்யாவை அத்தனை பேச்சு என்று பேசிவிட்டு சென்றிருந்தார் ராம்நாத்.
“இன்னைக்கு இதுக்கு ஒரு முடிவு கட்டறேன். இவளுக்கு நேந்துவிடவா நான் புள்ளைய பெத்து வளர்த்திருக்கேன்….” என்று வாய் கூசாமல் அத்தனை பேச்சு நிலாவை.
“அதிகமா பேசறீங்கப்பா. அண்ணி பாவம். நான் தான் கேட்டேன். அதுமில்லாம அண்ணியை இப்படி பேசாதீங்க…” என்று விக்ரம் பேச,
“எவடா உனக்கு அண்ணி? அதுக்கு தான் முடிவு கட்டுறேன். போய்ட்டு வந்து பேசிக்கறேன். என்னையே எதிர்த்து பேசறியா நீ?…” என்று ஆவேசத்துடன் கிளம்பி சென்றிருந்தார்.
“என்ன விக்ரம் இவ்வளோ கோவமா போறாரு? நீ கௌரவ்க்கு கூப்பிடு…” என்று சொல்ல,
“எல்லாம் என்னால தான். ஒரு ஆர்வத்துல பேசிட்டேன்…” என்று தலையில் அடித்துக்கொண்டவன், கௌரவ்விற்கு அழைத்தான்.
அவனின் எண்ணிற்கு அழைப்பு செல்லவே இல்லை. அத்தனை முறை அழைத்து சோர்ந்தவர்கள், டிப்போவிற்கு அழைக்க,
“ஸார் சென்னை தான் போயிருக்கார். நானும் ரொம்ப நேரமா கூப்பிடறேன். ரீச்சாகவே இல்லை….” என்றிருந்தான் மேனேஜர் சுசீ.
ஷ்யாமளாவிற்கு அழைக்க அவர் முக்கியமான அறுவை சிகிச்சையில் இருப்பதாய் கூறியிருந்தனர்.
எதுவும் விபரீதமாக நடந்துவிட கூடாதென்று நினைத்து வேண்டிக்கொண்டிருக்க, நிலைமை கைமீறி இருந்தது.
ராம்நாத் நேராக சாவித்ரியின் மருத்துவமனைக்கு சென்றவர், இடம் பொருள் எதுவும் பாராமல் அத்தனை பேச்சு.
கொஞ்சமும் தரமின்றிய வாத்தைகளை பயன்படுத்தி பேசியதோடு திருமணம் நடக்காது என்றும் கூறியிருந்தார்.
விஷயம் அங்கிருந்த இன்னொரு மருத்துவர் மூலம் வெண்ணிலாவிற்கு தெரியப்படுத்தப்பட, இதோ காஞ்சிபுரத்தின் எல்லையில் கோபத்துடன் சாலையோரம் நின்றிருந்தாள்.
கோபம் என்றால் கடுமையான கோபம். செல்லவேண்டும், அவனிடம் எனக்கும் இந்த திருமணம் தேவையில்லை என்று சொல்லி, ராம்நாத்தை நார் நாராக கிழிக்க வேண்டும் என்று அத்தனை ஆவேசம்.
அவளின் வேகம் இரு கைகளிலும் இறங்க, சாலையில் மெலிதாய் ஒரு தடுமாற்றம்.
‘அவன் வேண்டாமா? ஆம் வேண்டாம்.’ தொண்டையை இறுக்கி பிழியும் வேதனையுடன் முடிவெடுத்தவள், கைகள் தடுமாற, சட்டென பைக்கை ஓரம்கட்டிவிட்டு தானும் அங்கிருந்த தடுப்புசுவர் திண்டில் அமர்ந்துவிட்டாள்.
தன்னை நிதானப்படுத்த வேண்டும். தன் கோபம், தன்னை பலி கொள்வதோடு, வேறு எவரையேனும் பலி கொண்டுவிட்டால்?
அப்படி ஒரு விபத்தில் தானே தானுமே தாய், தகப்பனை இழந்தது. பெற்றவளின் முகம் சிதைந்துபோய் இன்றளவும் மறக்க முடியாத கொடூரம் அது.
பைக்கில் பொருத்தியிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தில் அடித்துக்கொண்டவள் ஆவேசம் தான் தணியும் பாடில்லை.
நீர் திவலைகள் சொட்டு சொட்டாய் வழிய, பாட்டிலை வீசி எறிந்தவள் விழியோரம் நீர் துளிர்த்தது.
“ம்மா…” என்று அந்த அரவமற்ற சாலையில் சத்தமாய் கத்தியவள் எப்போதும் தன்னோடு வைத்திருக்கும் ஆசை மிட்டாயை தேடினாள்.
அதுவும் நட்டநடு சாலையில், அவளிருக்க இருக்க, ஆழ் மனதில் புதைந்திருந்த அந்த காட்சிகள் தான் மேலெழும்பியது.
விபத்து நடந்த இடத்திலேயே முகம் சிதைந்து உயிரிழந்த அன்னையின் உருவம், அதனை கண்டும் பாதி உயிர் ஊசலாடிக்கொண்டிருக்க, மகளை பார்ப்பதா, மனைவியை பார்ப்பதா என அனத்தலுடன் தன்னுயிரையும் காப்பாற்ற முடியாமல் நினைவிழந்த தன் தந்தை என்று இருவரும் அவளின் கண் முன் வர, உயிரெல்லாம் படபடத்தது.
உணர்வுகள் மரத்து போய், சுற்றி நடப்பதை உணராமல் அவளின் எண்ணங்கள் பெற்றோரின் இறப்பில் சுழல, அவளருகில் வந்து நின்ற வாகனத்தை கூட கவனிக்கவில்லை.
கைகள் நடுங்க தடுப்பு சுவற்றை இறுக்கி பிடித்தபடி மீண்டும் அமர்ந்தவளின் முகத்திற்கு நேரே அவனின் கரம்.
ஆபத்பாந்தவனோ. அவளுக்கு அனைத்துமானவன் தான். அவளுக்கானவன் தான். கௌரவ்.
நீட்டிய கைகளுக்குள் ஆசை சாக்லேட். பார்த்ததுமே சட்டென நிமிர்ந்தவள் விழியில் நீர் துளிர்த்துவிட,
“எடுத்துக்கோ…” என்றான் கௌரவ்.
அதனை எடுக்காமல் கௌரவ்வின் முகத்தை வெறித்து பார்த்தவள், பார்வை சற்று தள்ளி நகர அவனும் அவளை பார்த்துவிட்டு காரை நிறுத்தியிருக்கிறான் என்றே புரிந்தது.
சட்டென்று ஒரு ஆசுவாசம். அதனை அடித்து துவம்சம் செய்யும் அளவிற்கு ஆவேசமும் சேர்ந்தே எழ,