இதுவரை அவளை சந்தித்த தருணங்கள் அனைத்திலும் அவளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியை போல குளுமையாய் இருந்தவள்.
இன்றைக்கு ஒற்றை பார்வை தீயாய் சுட்டெரித்தது அவனை. என்னவென்று இன்னும் புரியவில்லை.
சென்னையிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தவன் வழியில் சாலையோரம் அவளை பார்த்துவிட்டு தான் காரை நிறுத்தினான்.
முதலில் அவனின் கருத்தை கவர்ந்தது அந்த பைக். அருகில் அவள். தன்னை பார்க்கவோ என்று சிறுபுன்னகையுடன் தான் அவன் அவளை நெருங்கியது.
அருகில் வருகையிலேயே கீழே சிதறிக்கிடந்த தண்ணீரும், பாட்டிலும், அவள் நின்ற கோலமும் என்னவோ சரியில்லை என்பதை உணர்த்திவிட, அவளுக்கு தேவையானதோடு வந்து நின்றான்.
“நிலா…”
“அதா வேண்டாம்ன்னு சொல்றேனே?…” என்றவளின் எரிச்சல் பார்வையில் அவன் மௌனமாய் நிற்க,
“வேண்டாம்ன்னா வேண்டாம். எதுவும். எல்லாம்…” என்றதற்கும் அவனிடம் மௌனம் தான்.
என்னவென்று அவன் கேட்கவில்லை. ஆனால் அவள் வேண்டாம் என்று கூறுகையில் முகத்தில் வந்துபோன வேதனையும், வலியும் அத்தனை சுலபத்தில் அவனை விட்டு செல்ல விடவில்லை.
வேறு எவருமிருந்தால் பார்வைக்கே தள்ளி சென்றிருப்பான். நிலாவாகிற்றே.
“திரும்ப என்ன? அதை சொல்ல தான வந்தேன். அதான். அதான் இப்படி…” என்றவள் தொண்டை அடைத்தது.
தன் பைக்கை காண்பித்து கண்கள் சிவக்க அதனை கூறியவளுக்கு அவன் கேட்டதை கூற முடியவில்லை.
“இன்னும் சொல்லலை நீ…” என அவன் கேட்க,
“அதான் சொன்னேனே. நான் வேண்டாமாம். அப்போ எனக்கும் நீங்க வேண்டாம் தான். ஆனா சும்மா எல்லாம் சொல்லிட்டு போக முடியாது. பேசின வார்த்தைக்கு எல்லாம்…” என்று சொல்ல சொல்ல இதழ்கள் துடிக்க, கண்ணில் நெருப்பு கனன்று, நீரும் ததும்பி நின்றது.
குரலில் அப்படி ஒரு ஆக்ரோஷம். அடக்கப்பட்ட புயலின் சீற்றத்துடன் இருக்க அவளை நிதானத்தில் வைக்க அவளாலேயே முடியவில்லை.
அதுவும் கௌரவ். அப்படி என்ன அவன் மீது அத்தனை ஆசை? பார்த்த சில நாட்களில் என தன்னை தானே நிந்தித்து நெற்றியில் அறைந்துகொண்டாள் வெண்ணிலா.
“நிலா…” என மீண்டும் அந்த சாக்லேட்டை கௌரவ் நீட்ட, நிச்சயம் அது இப்போது தேவையாய் இருந்தது.
எடுத்து பிரித்து வாயில் போட்டவள் கோபத்தில் வேகமாய் மென்று தின்றபடி அவனை பார்த்தாள்.
“உங்கப்பாவுக்கு நான் உங்க குடும்பத்துக்கு சரி இல்லையாம். ஸோ உங்களை பார்த்து நானும் நோ சொல்ல வந்தேன்…”
“ஓஹ்…” என்றான் புருவம் உயர்த்தி.
“என்ன ஓஹ்? அதான் உங்களை பார்த்து வேண்டாம்ன்னு சொல்ல வந்தேன்…”
“சரி சொல்லு…” என்றான் மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி அவளை ஆழ்ந்த பார்வை பார்த்துக்கொண்டே.
“உங்க இஷ்டத்துக்கு தான் இதையும் சொல்லனுமோ?…” என்று அவன் கேட்டதில் இன்னுமே கோபம் பொங்க பேசினாள் வெண்ணிலா.
இதனை இங்கே வைத்து பேசி சரி செய்வதா? ராம்நாத் என்ன செய்திருக்கிறார் என்று முழுதாய் தெரியவேண்டும்.
அதனை சொல்லும் நிதானம் வெண்ணிலாவிடம் இல்லை என்று புரிந்தது. அதனால் அமைதி காத்தவன், மௌனமாய் நிற்க சல்சல்லென்று நன்கு பைக்குகள்.
அதில் பறந்து கொண்டு சென்ற வாலிபர்கள் வேகம் குறைத்து, இவர்கள் இருவரையும் கண்டுவிட்டு விசிலடித்து கலாட்டா செய்ய, வெண்ணிலா சலிப்புடன் முகம் திருப்பினாள்.
அவள் பெரிதாய் கண்டுகொள்ளாததில் அவர்களும் சாலையோரம் வந்து நின்றதோடு வேண்டுமென்றே இயற்கை உபாதையை கழிக்க நினைக்க,
“பொறுக்கி ராஸ்கல்ஸ்…” என கௌரவ் கை முஷ்டி இறுக அடிக்க பாய்ந்துவிட்டான். அவன் முகம் பார்த்து பயந்தே போனாள் வெண்ணிலா.
கழுகின் பார்வை, சிங்கத்தின் கர்ஜனையை ஒருங்கே கொண்டவனை போல் அத்தனை கோபம் சடுதியில்.
இவ்வளவு கோபத்தை அவள் நினைத்ததே இல்லை. எங்கே பிரச்சனையாகிவிடுமோ என சட்டென அவனின் கை பிடித்து தடுத்தவள்,
இன்னுமே அவனின் முழங்கையில் ஒரு கரமும், மணிக்கட்டில் ஒரு கரமும் என அவனை பிடித்தபடி அத்தனை நெருக்கமும், பதட்டமுமாய் அவள் நின்றிருந்தாள்.
“நிலா…” என்றவன் சுற்றிலும் பார்வையை சுழற்றினான்.
மாலை பொழுது. இன்னும் சற்றுநேரத்திற்கெல்லாம் இருட்டிவிடும். ஆனால் இருக்கும் இடம், இருக்கும் சூழ்நிலை.
லேசாய் அவளில் இருந்து விலக நினைக்க, நிலாவின் பிடி இன்னும் வலுத்தது.
“அவ்வளோ கோவமா வந்தேன். உங்களை யார் இப்ப இங்க வர சொன்னா? வரலைன்னா நானும் போய் நல்லா லெப்ட் அன்ட் ரைட் வாங்கிட்டு போயிருப்பேன்….”
“வேண்டாம்ன்னும் சொல்லி…” என்று குத்தலுடன் அவன் கேட்க,
“ஆமா, என்னை வேண்டாம்ன்னு சொல்லும் போது. எனக்கும் தான்…” என்றவள் அவனின் பார்வையில் வார்த்தைகளை விழுங்கினாள்.
“ஹ்ம்ம், தென்…”
“அதான் சொல்லிட்டேனே? வேற என்ன? புரியும்…”
“சரி, புரிஞ்சது. நெக்ஸ்ட்…” என்று இன்னுமே கேட்க,
“வேற என்ன? அடுத்து. நான் என்னோட ப்ரோக்ராமை சேஞ்ச் பண்ணமாட்டேன். ஹிமாச்சல் கிளம்பறேன். என்னோட சாவியும். இந்த சென்னை, காஞ்சிபுரம், கல்யாணம் எல்லாம் எல்லாம்..” என்றவள் தொண்டையை செருமிக்கொள்ள, தண்ணீர் இல்லை.
“ப்ச், கோவத்துல அதையும் வீசிட்டேன். தண்ணி தாங்க…” என்று சோர்வுடன் அவள் கேட்க, தன் காரில் எட்டி பார்த்தான்.
அவனிடமும் தண்ணீர் பாட்டில் இல்லை. நெற்றியை கீறியபடி அவளை திரும்பி பார்த்தவன் அந்த பாட்டிலை எடுத்தான்.
“பகார்டி ப்ரீசர்…” வெண்ணிலா அவனை முறைக்க,
“இந்த ப்ளேவர் ஓகே வா? தண்ணி இல்லை…” என அவளிடம் நீட்டினான்.
“இது…”
“எனர்ஜி ட்ரிங் தானே? ஹிமாலையன் ரைடர்க்கு தெரியாதா?…” அவன் குரலில் அப்பட்டமாய் பரிகாசம் தான்.
வேண்டுமென்றே அவளை சீண்டினான் கௌரவ். அதிலும் வேண்டாம் என்று சொல்ல வந்தேன் என கூற எத்தனை தைரியம் என நினைத்தான்.
அதனை வாங்கி அருந்தியவள், இன்னும் சமன்படாத மனதுடன் ஆற்றாமை பொங்க அவனை பார்த்தாள்.
இவ்வளவு தூரம் ஆவேசம் கொண்டு தன்னிலை மறந்து இப்படி சாலையில் தனியே அமர்ந்திருக்கிறாள் என்றால் எத்தனை தூரம் காயப்பட்டிருக்க வேண்டும் என்று புரிந்தது.
சரி என்று அமைதியாக சென்றுவிட்டால் அவன் எடுக்கும் முடிவே வேறாக இருக்கும்.
நிச்சயம் அவன் மனதும் உரைத்தது அவளின் முடிவு என்னவாக இருக்கும் என்று.
“என்னை, என் சாவியை பேசினதுக்கு பதில் தராம கிளம்பனுமா?…”
“உடனே தந்தா தான் பதிலா?…”
“என்ன?…”
“பதிலடின்றது வார்த்தைக்கு வார்த்தையா தான் இருக்கனுமா?…” என்று கேட்க வெண்ணிலாவின் முகத்தில் அத்தனை யோசனை.
அவன் தன்னுடைய கோபத்தை மட்டுமே வைத்து பேசுகிறானா என்று புரியாமல் பார்த்தாள்.
“வாட்?…” என்று தோளை குலுக்கி கேட்க,
“ப்ச், நத்திங். இது ஜஸ்ட் ஒரு அரேஞ்ச்ட் ப்ரப்போசல் தானே? போகட்டும்ன்னு தோணலையா?…” என்றாள் கொஞ்சம் நிதானத்திற்கு வந்து அவனை சீண்டும் விதமாய்.
“தோணுதா?…” என அவனும் அடிக்கண்ணால் புருவத்தை நெருக்கியபடி பார்த்து கேட்க,
“கேள்வி கேட்டது நான்…” என்றதற்கு எந்தவித பதிலும் இல்லை.
தோளை குலுக்கிக்கொண்டவன் அவள் பைக் வந்தவிதத்தினை பார்த்தான். சாலையோர மணல் சறுக்கியிருக்க அவள் நிறுத்தியிருப்பது புரிந்தது.
“ஓகே, நாளைக்கு சொல்றேன். ஆனா என்னைக்கா இருந்தாலும் என் பதிலடி நிச்சயம் உண்டு…” என்று சொல்லிவிட்டு தனது பைக்கில் அவள் ஏறி அமர்ந்து,
“இப்ப போறது என்னவோ நீங்க சொன்னதால மட்டும் இல்லை. என்னவோ ஆணழகன் விடமுடியாம போறதா ஒன்னும் நினைக்கவேண்டாம்…” என்று முறைப்புடன் அவள் கூற, கௌரவ்வின் விழிகள் சுருங்கியது.
சாதாரணமாய் பார்த்தபடி அவன் நின்றிருக்க, பல்லை கடித்தாள் வெண்ணிலா.
“ஆட்டிடியூட் கௌரவம். முதல்ல இப்படி நிக்காதீங்க…” என்று சொல்லி இருபுறமும் சாலையை பார்த்தவள் தன் ஹெல்மெட்டை அணிந்துகொண்டு ஆக்ஸிலேட்டரை முறுக்கிவிட்டு,
“இதுக்கு ஒருநாள் இருக்கு வேட்டை…” என அவனிடமே சொல்லிவிட்டு சென்னை நோக்கி செல்லும் சாலை புறம் திரும்பினாள் வெண்ணிலா.
மறுபுறம் வந்து கௌரவ்வை பார்த்து கையசைத்துவிட்டு அவள் கடக்க, சற்று நேரத்தில் வெண்ணிலாவின் பைக்கை ஒட்டியபடி கருப்பு நிற கிரான்ட் செரோகி அவளோடு இணைந்தே வந்தது.
பக்கவாட்டில் லேசாய் திரும்பி பார்க்க அவனே தான். அனலாய் கொதித்திருந்த மனதிற்கு மழை மேகமாய் அவனின் அண்மை.
‘என்ன’ என்பதை போல வெண்ணிலா அவனிடம் ஒற்றை கையை காண்பித்து கேட்க, ‘ஷ்’ என்று வாயில் விரல் வைத்து, சுட்டுவிரலை சாலையை நோக்கி காண்பித்து ‘செல்’ என தலையசைத்தான் கௌரவ்.
தன் முன் சீறிப்பாயும் வேகத்துடன் பறந்து செல்பவளின் வேகத்தை பார்த்தபடியே கௌரவ்வின் இதமான பயணம்.
வெம்மை கொள்ளும் நெஞ்சங்களின் இளைப்பாறல் தருணங்களில் சிறிது சிறிதாய் சில்லிடும் பூந்தூறல்கள்.