சென்னையை அடைந்ததும் வெண்ணிலா பைக்கை நிறுத்திவிட்டு திரும்பி பார்க்க அவளின் வேகத்தில் அவனுமே தனது செரோகியை நிறுத்தியிருந்தான்.
இருவருமே அவர்களின் வாகனத்தை விட்டு இறங்கவில்லை. அருகருகே நின்றிருக்க இருள் நன்றாகவே கவிழ்ந்திருந்தது.
என்னவோ சற்றுநேரத்தில் இந்த பயணத்தில் மனம் ஆசுவாசம் கொண்டிருந்தாலும், அடிமனதில் இன்னும் தணியாத வெம்மை தகித்துக்கொண்டு தான் இருந்தது.
ராம்நாத். அவரை நினைக்கையில் பச்சைமிளகாயை கடித்ததை போல உச்சிக்கு சுள்ளென்று ஏறியது.
எல்லாம் நடக்கட்டும், இருக்கிறது என்று உள்ளுக்குள் நினைத்தபடி கௌரவ்வை பார்த்தாள்.
இவனால் எப்படி தன் உணர்வுகளை மடைமாற்ற முடிகிறது என்னும் ஆச்சர்யம் ததும்பும் ஒரு பார்வை தான்.
ஹெல்மெட்டை கழற்றியவள் கைகள் கலைந்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு அவனின் மீது பார்வையை பதிக்க, ப்ரீசரை பருகியபடி அவளை தான் பார்த்திருந்தான் கௌரவ்.
“நான் என்ன குழந்தையா? கையை புடிச்சு கூட்டிட்டு வந்து விட்டு போக?…” என்றாள் நக்கலுடன்.
“கையை? நான்?…” என இதழ்களில் அழுத்தம் கூட்டி அவளின் கரத்தை பார்த்துவிட்டு பேச,
“ப்ச், இப்படி உங்களுக்குள்ள பேசினா எனக்கு ஒன்னும் கேட்காது. அதுவும் இந்த ரோட்ல…” என்று அவன் சொல்லியது கேட்கவில்லை என குதித்தவளை அவனின் அந்த பார்வையும், மீசைக்கடியில் அழுந்தி மீண்ட இதழ்களும் என்னவோ செய்தது.
‘என்ன பன்றான் இவன்?’ என தலை சுற்றி போய் அவனை பார்க்க, கௌரவ் மெலிதாய் இதழோரம் கீற்று புன்னகை.
கடந்து சென்ற வாகனங்களின் வெளிச்சம், சாலையோர விளக்குகளின் வெளிச்சம் என அந்த புன்னகை மின்னலடிக்க,
“ஹலோ, நான் சொன்னதுக்கு பதில் சொல்லனும். சிரிக்கிறீங்களே? சரியான பேர் தான். ஓவர் கௌரவம். இதுக்கு கூட பார்க்கறதும்?…” என்றாள் சத்தமாக.
“ஷ்ஷ்ஷ், காம்டவுன்….” என்று கைவிரல்களை இறக்கி காண்பித்தவன், தன் உள்ளங்கையை விரித்து பார்த்து, மீண்டும் புன்னகைத்து வெண்ணிலாவை பார்த்தான்.
“இதுக்கு தனி டிக்ஷனரி தான் போடனும் போல. காட். சரி நான் கிளம்பட்டுமா?…” என வெண்ணிலா கேட்க,
“ஹ்ம்ம், கோ…” என்றான் கௌரவ்.
அவன் சொல்லியும் இன்னும் சிறிதுநேரம் அவனை பார்த்தபடி நின்றவள், ராம்நாத்தை எதுவும் கேட்காமல் செல்வதில் தோற்றுவிட்ட உணர்வு.
தன் தன்மானம் மட்டுமின்றி, தனக்கென வாழும் சாவித்ரியின் மனதையும் அல்லவா நோகடித்திருக்கிறார்.
இப்போது அவர் மகன் கூறவும் சட்டென்று திரும்பிவிட்டதில், தன்னிடமே தான் தாழ்ந்துவிட்டதை போல் ஒரு எண்ணம்.
முகம் கசங்க அமர்ந்திருந்தவள் விழிகள் மீண்டும் வெறித்த பார்வையுடன் கௌரவ்வை பார்த்தது.
“நீங்க சொன்னா நான் கேட்டுடனும்? இல்ல?…” என்று கேட்டதன் பொருளை உணர்ந்தவன் பெருமூச்சுடன் அவளை பார்த்தான்.
“நீங்க ஏன் வந்தீங்க? வரலைன்னா நானே வந்திருப்பேன். கேட்டிருப்பேன். என் மனசு சமாதானம் ஆகியிருக்கும். இப்ப உங்களுக்காக நான் எல்லாத்தையும் உதறிட்டு போறது மாதிரி இருக்கு…” என கூற, தன் வாகனத்தை விட்டு கீழிறங்கி நின்றான் கௌரவ்.
அதன்மீது சாய்ந்து நின்றவன் வெண்ணிலாவை அருகில் வரும்படி தலையசைக்க,
“எல்லாமே கேட்டுட்டே இருக்க முடியாது. சத்தமா பேசுங்க. சும்மா கண்ட்ரோல் பண்ணிட்டு…” என அவள் கூற, சிலநொடிகள் கௌரவ்வும் மௌனமாய் பார்த்தான் அவளை.