“இப்போலாம் அடிக்கடி அழறீங்கம்மா…” என அழுத்தமாய் கேட்டான்.
சற்றுமுன் கொந்தளித்த உணர்வுகள் அத்தனையும் தாயின் புன்னகையில் மீண்டும் அதன் கூட்டுக்குள் சென்று அடைந்துவிட்டது.
வழக்கம்போல் தன்னை தானாகவே மீட்டுக்கொண்டவன் பேச்சும் இலகுவான நிலைக்கு திரும்பியிருந்தாலும் உள்ளுக்குள் சுருக்கென்று ஒரு வலி முணுமுணுவென துருத்திக்கொண்டே தான் இருந்தது.
அதனையும் அடக்கி ஆண்டவன், உணவை விழுங்கி பசியை விரட்டி, பேச்சுக்களில் கவனம் செலுத்தினான்.
“அழறேனா? அடிக்கடி எல்லாம் இல்லையே?…”
“நீங்க லாஸ்ட்டா அவருக்கு ஹார்ட் அட்டாக் அப்போ அழ ஆரம்பிச்சது…” என்றதும் பரிதாபமாய் அவனை நிமிர்ந்து பார்த்தார்.
“அதுக்கு முன்னாடி உங்க கண்ணு கலங்கி கூட நாங்க யாரும் பார்த்ததில்லை. இந்த அழுகை எனக்காக, இல்லையா?…” என்று கேட்க,
“பசிக்கும் கௌரவ். இன்னொரு தோசை போட்டுக்கோ…” என்று அவனின் தட்டில் வைக்க,
“நீங்க சரியா சாப்பிடலைல…” என்றவன்,
“எனக்கு போதும். நீங்க உட்காருங்க…” என்று கூறி அவருக்கு அங்கிருந்த ஸ்டூலை இழுத்து போட்டான்.
“இந்தநேரம் சாப்பிட்டா ஜீரணிக்காது கௌரவ்…” என்று அவர் சொல்ல,
“சாம்பார் தானே? சரியாகிடும். சின்னதா ரெண்டு…” என்று அவனே தோசையை ஊற்ற, இங்குமங்குமாய் ஈஷிக்கொண்டு பிய்ந்து வந்தது.
அந்த அலங்கோலம் அவனின் மனநிலையை பிரதிபலிப்பதை போலிருக்க மீண்டும் மேலெழும்பும் உணர்வுகளை தட்டிவைத்தான்.
“வேற வார்க்கறேன்…” என தலையை லேசாய் கோதியபடி தாயை பார்க்க,
“ஏன் இதுக்கென்ன தங்கத்துக்கு?…” அதையே தனக்கு எடுத்துக்கொண்டார் கௌசல்யா.
சின்ன விஷயம் தான். ஆனால் அவனுக்கு அது மாபெரும் ஒன்று தான். தன் முகம் சிறிதளவும் வாடிவிடாமல் இருக்க நினைக்கும் அவரின் அன்பில இப்போதும் நெக்குருகி போனான் கௌரவ்.
“என்ன இந்தநேரம் கடை திறந்திருக்கீங்க?…” என்ற விக்ரமின் உற்சாக குரலில் சட்டென கௌரவ் திரும்பி பார்க்கவும் விக்ரம் திருதிருத்தான்.
“ஸாரிண்ணா. ஒரு ப்லோவ்ல…” என அவனும் தலையை சொரிந்துகொண்டு மன்னிப்பை வேண்டும் விதமாய் பார்த்தான்.
அந்தவீட்டில் தான் இதுவெல்லாம் பேச கூடாதென்று எழுதப்பட்ட சட்டமாகிற்றே.
என்னதான் கௌரவ்விடம் சில மாற்றங்கள் தோன்றி, இறுக்கங்கள் தளர்ந்திருந்தாலும் எப்போதும் ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்துகொண்டே இருக்கும் அவனிடம்.
எந்தநேரத்தில் எதனை தவறென்று கூறுவார்களோ என வெகுவாய் யோசித்தே பேசவேண்டி சொல்லிக்கொடுத்து வளர்க்கப்பட்டவன் தானே அவனும்.
தன் தாயையும் அண்ணனையும் அந்தநேரத்தில் பார்த்தவன் ஒரு சந்தோஷத்தில் கூச்சலிட்டதோடு, இப்படி சொல்லியிருக்க, என்ன பேசுவானோ என பயந்துகொண்டே பார்த்தான்.