“மன்னிப்பு கேட்கவேண்டியவர் கேட்டாச்சு. அவர் பேசினதுக்கு நாம வருத்தம் தெரிவிச்சுக்கலாம். ஆறுதலா பேசலாம்….” என்றவன் வார்த்தையில் கௌசல்யா மன்னிப்பு கேட்கவேண்டியதில்லை என்பதன் வலியுறுத்தல்.
அது தப்பிதமின்றி அவனின் தாய்க்குமே புரிந்துவிட, விக்ரம் அதிர்வில் பார்த்தான் தன் அண்ணனை.
‘என்ன இந்த மனுஷன் மன்னிப்பு கேட்டாரா? இது எப்போ?’ என்னும் விதமாக பார்த்தவனின் தோளை தட்டிய கௌரவ்,
“சாப்பிட்டா போய் படு…” என்று சொல்லவும் மறுக்காமல் தலையசைத்துவிட்டு கிளம்பினாலும் தன் வீட்டில் என்னவோ மர்மமாக இருப்பதை கண்டுகொள்ள முடியாமல் தவித்தான்.
கௌரவ், ஆகர்ஷன், ஷ்யாமளா, ராம்நாத், இவர்களுக்கு நடுவில் கௌசல்யா. இதில் யாரிடமிருந்து எங்கே யாருக்கு ஆரம்ப நூல் என்று தெரியாமல் அத்தனை குழப்பம்.
பிரத்யூக்ஷாவிடம் ஆரம்பித்து, ராம்நாத்தின் மருத்துவ சிகிச்சையில் தொடர்ந்த உறவு என்று எல்லாம் யோசிக்கவே முடியவில்லை.
‘இவங்களுக்குள்ள எதுவும் முன்ஜென்ம பந்தம் இப்படி எதுவும் இருக்குமா பெரியண்ணி பிரத்யூ?’ என்று அவளிடமே கேட்டதுண்டு முன்பு.
‘அறிவு வாளி நிரம்பிருச்சு பாரு’ என்று கலாய்ப்பாளே தவிர பிரத்யூக்ஷா அதை பற்றி ஒருவார்த்தை கூட பேசியதில்லை.
குழப்பத்துடனே உறங்க சென்றுவிட கௌசல்யாவும் அங்கிருந்து வெளியேறினார்.
“நீயும் போய் தூங்கு கௌரவ்….” என்று கூற,
“ஹ்ம்ம், நீங்க போங்க ம்மா…” என்றவன் கௌசல்யா அவரின் அறை செல்லும் வரை பார்த்திருந்து அங்கேயே சோபாவில் அமர்ந்துவிட்டான்.
அறைக்குள் வந்தாலும் மனதின் அழுத்தம் காரணமாக எதுவோ உந்த அவரும் வெளியே வந்து எட்டி பார்க்கையில் மகன் சோபாவில் அமர்ந்து தலை சாய்த்திருக்க கண்டார்.
இந்த பிரச்சனையினால் அவனுக்கு மிகப்பெரிய மனக்கஷ்டமும், அழுத்தமும் என்று புரிய, ஒரு தலையணை, போர்வையுடன் தானுமே சோபாவிற்கு வந்துவிட்டார்.
“நீங்க தூங்கலையாம்மா?…” என மெல்லிய வெளிச்சத்தில் அவரின் நிழல் கண்டு கௌரவ் கேட்க,
“உனக்கும் தூக்கம் வரலையா கௌரவ்? இங்க இருக்க?…” என கூறி தலையணை, போர்வையை சோபாவின் ஒருபுறம் போட்டுவிட்டு அவனருகில் அமர்ந்தார்.
“ஹ்ம்ம், தூங்கனும். உங்க கண்ணா வந்துட்டு கிளம்பறதுக்குள்ள கல்யாணம் செய்யனும். நாளைக்கு நீங்க பேசிட்டு வாங்க….” என்றான் மீண்டும் அவன்.
“நிலாவும், சாவித்ரியம்மாவும்?…”
“அவங்ககிட்ட கேட்காம செய்யலை. நாளைக்கு ஷ்யாமளாம்மா பார்த்துப்பாங்க…” என்றவன்,
“எப்படி நடக்கனும் இந்த கல்யாணம்? உங்களுக்கு ஆசை எதுவும்?…” என்று முடிக்கும்முன்,
“உங்கப்பா யோசிச்சு வச்சிருப்பாரே….” என்றார் அவர்.
“உங்க விருப்பம் என்ன?…” என்றான் கௌரவ்.
அவரை பேசவைத்து கேட்டுக்கொண்டே இருந்தவனின் முக மாறுதல்கள் எல்லாம் கௌசல்யாவின் அக கண்களுக்கு புலப்படவில்லை.
எக்கணம் பேச்சு கௌரவ்வின் சிறுவயதினை நோக்கி சென்றதோ அவரின் ஒவ்வொரு நாட்களும் கௌரவ்வின் இரண்டாம் மாதத்தில் இருந்தே தான் துவங்கியது.
ரசித்து ரசித்து அவனின் பிள்ளை பருவத்தினை அவர் கூற, நெஞ்சம் வலிக்க கேட்டவனுக்கு, தன்னை சுமந்து பெற்றிருந்தால் இன்னும் எத்தனை உவகையாக இருந்திருப்பார் என்று தோன்றாமலில்லை.
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கௌசல்யா மட்டுமே அவனின் தாயின் உருவம் பெறுவார் என நினைக்கையில், தன்னை பெற்றவளின் முகம் எப்படி இருக்கும் என்றும் தோன்றாமலில்லை.
பேசிக்கொண்டே வயதின் தள்ளாமையில் கௌசல்யா லேசாய் மகனின் தோளில் சரிய, அவரின் உறக்கம் கலைக்காமல் தன் மடிக்கு இடம் மாற்றிக்கொண்டான் கௌரவ்.
தானுமே காலை டீப்பாயின் மீது நீட்டி, சற்று தளர்ந்து அமர்ந்து தலையை சோபாவின் ஹெட்ரெஸ்ட்டில் சாய்த்துக்கொள்ள, அப்போதுமே அவனின் மூளையும், மனதும் விழித்தே கிடந்தது.
கண்ணாடி ஜன்னலின் வெளியே இருள் சூழ்ந்திருந்த வானத்தில் சிறு சலனமற்ற கருமை படலம்.
பார்வை அதனில் பதிந்திருந்தாலும் நினைவுகள் தன்னை பெற்றவளை பற்றி சுழல ஆரம்பித்தது.
தெய்வங்களின் திருவிளையாடல். அத்தனையிலும் அவன் இப்போதும் நம்பிக்கை வைத்திருந்தான்.
காரணமின்றி எந்த செயல்களும் நடப்பதில்லை. அவனின் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்வுகளும் அதனை பறைசாற்றுகின்றனவே.
இப்போதும் கூட அந்த தெய்வங்களுக்கு மத்தியில் தன்னை பெற்றவளும் நின்று இதனை எல்லாம் பார்த்துக்கொண்டு தானே இருக்க கூடும் என நினைத்தான்.
அந்த உயிரை பற்றி நினையாமல், தன் மடி சேர்ந்திருக்கும் இந்த தாயின் கைவிரலை விட்டுவிடமுடியாமல் போராடும் தன் போராட்டத்தை மனம் வலிக்க கண்டுகொண்டு தானே இருக்க கூடும் என்று நினைத்தவன்,
“ம்மா…” என தீனமான குரலில் அனத்தலாய் அழைக்க, திடுமென அவன் விழிகளில் சிறு சலனம்.