இருள் கவிழ்ந்திருந்த அந்த வானத்தின் மொத்த நட்சத்திர கூட்டமும் அந்த ஜன்னலின் மத்தியில் வந்து நிற்பதை போல் இது என்ன அதிசயம், ஆச்சர்யம் என்று பார்த்தான்.
தலையை சாய்த்திருந்தவன் சட்டென நிமிர்ந்து பார்க்க, ஜன்னலின் கண்ணாடியின் பின் அவ்வளவு ஒளிர்வு.
வெளிச்சம் தந்து நட்சத்திரங்கள் ஜொலிக்க, உடலில் உள்ளே சிறு தவிப்பு மின்சாரம் போல் ஊடுருவியது.
கண்களை மூடி திறந்தவன் பார்வையில் மீண்டும் மீண்டும் நட்சத்திர கூட்டம். தொண்டை அடைக்க அவனை சிறைபிடித்திருக்கும் உணர்வுகள் மொத்தமும் அலைபாய துவங்கியது.
அகன்ற கண்களை நிறைத்த அந்த ஜாலத்திலிருந்து ‘கௌரவ்’ என உறக்கத்தில் அழைத்த கௌசல்யாவின் குரல் அவனை மீட்டெடுக்க,
“ம்மா…” என்றான் மீண்டும் அவரை குனிந்து பார்த்து.
இன்னும் அயர்ந்த உறக்கத்தில் தான் அவர். லேசாய் தலையை கோதியவன் மனம் மெல்ல மெல்ல அமைதியாக முயன்றது.
இன்னும் சற்றுநேரத்தில் விடிந்துவிடும். தானுமே மெல்ல கண்ணயர்ந்தான் கௌரவ்.
தன்னை மன்னிப்பு கேட்க சொல்லி மிரட்டிவிட்டு கௌரவ் கிளம்பியதும் கதவை அடைத்தவர் தான்.
இரவெல்லாம் ராம்நாத் சரியான உறக்கமின்றி அறையிலேயே இங்குமங்குமாய் நடந்துகொண்டிருந்தவர், ஒருகட்டத்தில் சோர்வடைந்து வந்து படுக்கையில் விழுந்தார்.
‘மன்னிப்பு கேட்க வச்சிட்டானே? என் வாயால அந்த படுபாவிப்பயலை கூப்பிட வச்சிட்டானே?’ என புலம்பிக்கொண்டே உறங்கி போனவர் விழிக்கையில் பத்துமணி என்றாகி இருந்தது.
இத்தனை தூரம் அவர் என்றுமே உறங்கியதில்லை. யாரும் கதவை தட்டவில்லையோ என்ற யோசனை வேறு.
ஒருவேளை கௌசல்யா வந்து தன்னை அழைத்து தான் உறக்கத்தில் கவனிக்கவில்லையோ என நினைத்தபடி எழுந்து சென்று குளித்துவிட்டு வந்தவர் கதவை திறக்க, வீட்டில் ஒருவரும் இல்லை என்பதை போலான தோற்றம்.
சமையல் அறையில் உதவிப்பெண் மட்டுமே அமர்ந்திருந்தார். ராம்நாத்தை பார்த்ததும் வேகமாய் எழுந்து வந்து,
“ஐயா சாப்பாடு வைக்கட்டுங்களா?…” என்று கேட்க,
“கௌசி எங்க?…” உறுமலாய் வந்தது கேள்வி.
“அம்மாவும், பெரிய தம்பியும் சென்னைக்கு போயிருக்காங்க….” என்று கூற,
“என்ன?…” என திடுக்கிட்டு போனார்.
“ஐயா சாப்பாடு…”
“உன் மூஞ்சில கொட்டிக்கோ. வந்துட்டா…” என்று அந்த பெண்ணிடம் காய்ந்துவிட்டு விறுவிறுவென தன் அறைக்குள் வந்தவர் தன் கைப்பேசியை தேட அப்போதுதான் மகன் எறிந்துவிட்டு சென்ற ஞாபகம்.
அறையின் ஒரு ஓரத்தில் சிதறிக்கிடந்ததை பார்த்ததும் அவன் தன்னை பார்த்து எச்சரித்த அந்த பார்வை தான் ஞாபகம் வந்தது.
‘இந்த போனுக்கு நேர்ந்தது தான் உனக்கும்’ என்பது போன்றான பார்வையா அது என்று ஒரு எண்ணம் எழாமலும் இல்லை. அதனை விரட்டியடித்தவர்,
“என்னவோ கோவத்துல அந்த மோட்டார்க்காரி மேல இப்படி பண்ணிட்டான்…” என்று தன் பின் மண்டையை தட்டிக்கொண்டார்.
“ஐயா…” மீண்டும் உதவிப்பெண்ணின் குரல்.
“ஏய், என்ன?…” என்று ஆவேசமாய் வெளியே வர,
“இதை பெரிய தம்பி உங்ககிட்ட எடுத்துக்க சொன்னாங்க…” என்று ஒரு பெட்டியை காண்பிக்க அதில் புது கைப்பேசி.
அந்த பெட்டியை வாங்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தவர் அதனை பிரித்தார்.
பாஸ்வேர்ட் கேட்க முதலில் அவர் வைத்திருந்த கைப்பேசியின் இலக்கங்களை தான் இதற்கும் பயன்படுத்த திறந்துகொண்டது.
அடுத்த ஆச்சர்யம் பழைய கைப்பேசியில் இருந்த அனைத்துமே இதில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
கணக்குவழக்குகள் எல்லாம் கௌரவ்வின் முழு பொறுப்பில் இருப்பதனால் ராம்நாத்தின் கைப்பேசி ரகசியங்களும், தனிப்பட்ட கணக்குகளும் கௌரவ்விற்கு அத்துப்படி.
அதனை எண்ணி மெச்சிக்கொண்டவர் இன்னுமே மனம் மகிழ்ந்து போனார் மகன் தனக்காக செய்திருக்கிறான் என்று.
இரவெல்லாம் கொண்டிருந்த புகைச்சல் மறைந்து மகனின் அன்பில் அகமகிழ்ந்து அவனுக்கு அழைக்கும் முன் எதிர்பாராத எண்ணில் இருந்து குறுஞ்செய்தி.
அந்த செய்தியை பார்க்க வாட்ஸ்ஆப்பை திறக்க முதலில் ஒரு புகைப்படம். நிகர் ஆனந்தராஜ் தன்னை தானே கண்ணாடியை பார்த்து துப்பிக்கொள்ளும் விதமான அந்த புகைப்படமும், அதன் கீழ அந்த செய்தியும். ரத்தம் கொதித்தது.
“தோத்துக்கிட்டே இருக்கியே வீரபாகு. எப்படியும் ஒத்துக்க போறதில்லை. அதான் நானே அனுப்பிட்டேன் மாம்ஸ். இதை உனக்கு நீயே டெடிகேட் பண்ணிக்கோ…” என அனுப்பியிருந்தாள் பிரத்யுக்ஷா.
கோபம் கட்டுக்கடங்காமல் பெருக, எத்தனை தைரியம் இருந்தால் இதனை செய்திருப்பாள் என்று உடனே அவளுக்கு அழைத்தார்.
“பார்ரா மாம்ஸ்க்கு மருமக நினைப்பை?…” என்று எடுத்ததுமே சீண்டலுடன் அவள் பேச,
“கொஞ்சமாச்சும் மரியாதைன்னு ஒன்னு தெரியுதா உனக்கு? என் தங்கச்சி மகளா நீ? அதுவும் மரியாதை இல்லாம. இரு இதை வச்சே உன்னை என்ன பன்றேன்னு பாரு…” என்று படபடவென்று பொரிய,
“என்ன பண்ணுவீங்களாம்? இதை எல்லாருக்கும் காமிக்க போறீங்களா? பயந்துட்டேன் நான். எனக்கொண்ணும் அசிங்கம் இல்லைப்பா. ஆர்ப்பாட்டமா அசிங்கமா போய் பேசிட்டு வந்து, கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம அர்த்தராத்திரில கதறிட்டு காலை புடிச்ச விஷயம் எல்லாம் நானும் சொல்லனும்ன்னு நினைக்கமாட்டேன்ப்பா…” என்றால் படுநக்கலாக.
“ஏய்…” என்றவருக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
‘அவமானம், அவமானம்’ என அவரின் மனம் காறி உமிழ்ந்தது அவரையே.
“அப்பறம் ஃபார் எ கைன்ட் இன்பர்மேஷன் வீரபாகு. என் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் நேரமிருந்தா பார்க்கலாமே?…” என்று கூற, வேகமாய் அதனை திறந்து பார்த்தவர் வயிறெல்லாம் எரிந்தது.
தனக்கு அனுப்பியிருந்த அதே புகைப்படத்தை பிரத்யூக்ஷா வைத்ததோடு டெடிகேட்டட் டூ வீரபாகு(மாம்ஸ்) என்று எழுதியிருக்க ஆத்திரம் அளவின்றி பெருகியது.
“நீயெல்லாம்…” என்று ராம்நாத் பேசும்முன்,
“எனக்கு நிறைய வேலை இருக்கு. வெட்டித்தனமா பேச நான் என்ன சால்ட் அன்ட் பட்டர் இல்லாத வீரபாகுவா?…” என்று அழைப்பை துண்டித்துவிட்டாள் பிரத்யூக்ஷா.
அவள் கைப்பேசியை வைத்ததுமே ஆகர்ஷன் மனைவியை கண்டு லேசாய் முறுவலிக்க,
“இன்னும் கொஞ்சநேரத்துல போன் வரும் பாருங்க. அந்த ஸ்டேட்டஸ எடுக்க சொல்லி. மனுஷன் மானத்துக்கு அஞ்சுரவராச்சே. நான் அதை அவருக்கு மட்டும் விஸிபிள் ஆகற மாதிரி வச்சது அவருக்கு தெரியாதே…” என்று கண் சிமிட்டியவள்,
“இன்னொரு கேம் விளையாடுவோம்…” என்று இன்னொரு மோட்டிவேஷன் ஸ்டேட்டஸ் ராம்நாத்திற்கு மட்டும் மறைத்து மற்றவர்கள் காணும் வகையில் வைத்திருந்தாள்.
“இப்ப மனுஷன் கதறுவாறு. நல்லா அனுபவிக்கட்டும், பொன்மேனி உருகுதேன்னு ஆல் டைம் தட் லுக்கோட சுத்துறதுக்கு இது தேவைதான். டர்ட்டி மைண்ட்…” என்றவள்,
“மிஞ்சிமிஞ்சி போனா எங்க மம்மிக்கிட்ட போன் போட்டு ஸ்டேட்டஸை எடுக்க சொல்லி, ரகளையாக போகுது…” என்றாள் பிரத்யூக்ஷா குதூகலமாய்.
அதுவே தான் நடந்தது. பிரத்யூக்ஷா ராம்நாத்தின் அழைப்பை ஏற்கவே இல்லை. அவள் அழைக்கவில்லை என்றதும் காவேரிக்கு அழைத்து,
“காவேரி, என்ன பொண்ணு வளர்த்து வச்சிருக்க நீ. இப்படி பன்றா…” என்று பேச, அழைப்பை ஏற்றதோ ஸ்ரீவத்சன்.
“ஹவ் டேர் யூ? என் பொண்ணோட வளர்ப்பை பத்தி நீங்க பேசறீங்களா மிஸ்டர் ராம்நாத்….” என்று கர்ஜிக்க, மொத்தமும் ஆஃப்.
“இதை நான் சும்மா விடமாட்டேன். என் பொண்ணு எதை செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும். அவ எந்த போட்டோவை வைச்சா உங்களுக்கு என்ன? அவ விஷயத்துல திரும்ப தலையிட்டீங்க அவமானப்பட்டு போவீங்க….” என்று கிழித்து தொங்கவிட்டுவிட்டார் ஸ்ரீவத்சன்.