யார் யாரெல்லாம் அந்த புகைப்படத்தினை பார்த்தார்களோ என்று ஒருபக்கம், கௌரவ் அதனை பார்த்துவிட்டு நிச்சயம் அவளை கண்டிப்பான் என்று ஒருபக்கம் நினைக்க, அனைத்தும் நமத்து போன பட்டாசாய் போனது.
யாரும் எந்தவித எதிர்வினையையும் காண்பிக்கவில்லை. பேசிக்கொள்ள கூட இல்லை அதனைப்பற்றி.
——————————————————
தேசிய நெடுஞ்சாலையின் ஒருபக்கத்தில் இரு கைகளையும் கட்டியபடி வெண்ணிலா நின்றிருக்க,
“பத்திரம் விக்ரம். நிலா கூடவே இருக்கனும். இது உனக்கு பர்ஸ்ட் ரைட். புரியுதா?…” என்று மீண்டும் விக்ரம்மிற்கு கூறிக்கொண்டிருந்தான் கௌரவ்.
இன்னுமே விக்ரம்மினால் நம்பமுடியவில்லை. நிகழ்வு நடந்து அந்த வார இறுதியில் Harley Davidson பைக் அவன் வீட்டு வாசலில் நின்றது.
வெண்ணிலாவின் அதே மோட்டார்சைக்கிள் மாதிரி இன்றி, Harley Davidson வண்டியின் இன்னொரு மாடல்.
அவளை போன்ற அந்த பைக்கை வாங்க கௌரவ்வின் மனம் இடமளிக்கவில்லை.
அதற்காகவே அதே பிராண்டில் வேறொரு பைக்கை வாங்கி தந்திருந்தான் கௌரவ்.
ராம்நாத் அதற்கு எதுவும் பிரச்சனை செய்ய கூடுமா என்று விக்ரம் பார்க்க கௌரவ்வின் பார்வையில் அவர் அடங்கியிருந்தார்.
எவ்வளவு தூரம் செல்கிறது என்னும் வஞ்சகத்துடன் கடந்திருந்தார் அவர்.
வெண்ணிலாவுக்குமே கௌரவ் காத்திருக்க கூறியதன் காரணம் விக்ரம் பைக்குடன் வந்து நிற்கவும் புரிந்தது.
உண்மையில் மெச்சித்தான் பார்த்தாள் அண்ணன் தம்பி இருவரையும். அத்தனை சந்தோஷமும் கூட.
“பார்த்துக்கோ நிலா….” என அவளிடம் கூற,
“ஹ்ம்ம், கண்டிப்பா…” என்றவள்,
“என்னை பார்த்து போன்னு சொல்லமாட்டேங்களா?…” என்று கேட்க, மெல்லிய புன்னகை அவனிடம்.
இன்னுமே கௌரவம் என்று இப்போதுவரை அழைக்கவில்லை அவனை. உணர்ந்தும் கேட்கவில்லை.
‘அழுத்தம் அழுத்தம்’ என்று உள்ளுக்குள் அவனை வசைபாடினாள் வெண்ணிலா.
அவனின் எதிர்பார்ப்பினை அவ்வப்போது அவளால் கண்டுகொள்ள முடிந்தது. முதலில் கோபத்தில் அழைக்காமல் இருந்து பின் விளையாட்டாய் அழைக்காமல் விட, இப்போது வீம்பும் பிடிவாதமும் அவனே கேட்கட்டும் என்று.
விக்ரம் இருவரும் பேசிக்கொள்ளட்டும் என்று பைக்கில் சாய்ந்தபடி அதனை பெருமையாய் தடவிக்கொடுத்தான்.
“பார்த்துப்ப. பார்த்து இருப்ப. பத்திரமா. போய்ட்டு வா…” என்றவன்,
“இன்னும் ஒன் மந்த்ல வெடிங்…” என்றும் ஞாபகபடுத்தினான்.
“ரொம்ப பூரிச்சு பார்க்கவேண்டாம். நான் அவுட். நீங்க சரியான அழுத்தம்….” என்றவள் இன்னும் நெருங்கி அவனின் கன்னம் பற்றி கண்ணில் ஒற்றி எடுத்து,
“கண்ணெல்லாம் கலங்கிருச்சு. ப்ச்…” என்னவோ மனம் பிசைய பார்த்தாள் அவனை.
அவனின் கலங்கிய கண்கள் அவளுக்கும் மனதினை கலங்கடித்தது. சிறு முகச்சுளிப்பை கூட பொறுக்கமாட்டாமல் மீண்டும் கேட்டாள்.
“சரியாகிடுச்சா? வெய்ட் பண்ணுங்க….” என்றவள்,
“இந்த லாரிகாரங்களே இப்படித்தான். யார் எப்படி போனா என்னன்னு உயிர் போக, உயிரை எடுக்கற வேகத்துல போறது…” என்று கண்ணை விட்டு மறைந்த லாரியை ஆவேசத்துடன் பார்த்து கத்தியவள்,
“இன்னும் உறுத்தலா இருக்கா?…” என்றாள் அவனிடம்.
“ஹ்ம்ம், உறுத்துது…” உணர்வை காண்பிக்காத விழிகள் புதிதாய் ஒன்றை காண்பிக்க,
“வலிக்குதோ? இன்னும் டஸ்ட் உள்ள இருக்குமோ?…” என்று அவனின் கண்களை பார்த்து, தண்ணீர் பாட்டிலை எடுத்துவந்து முகம் கழுவ செய்து என்று கவனிக்க, விக்ரம் அருகில் செல்லமுடியாமல் சங்கடத்துடன் ஒதுங்கியே நின்றான்.
“கொஞ்சநேரம் இருங்க. சரியாகவும் கிளம்பலாம்…” என்று அங்கிருந்த திண்டில் அமரவைத்துவிட்டாள்.