சென்னை விமானநிலையத்தில் கண்கள் இங்குமங்குமாய் அலைபாய அமர்ந்திருந்தார் கௌசல்யா.
அவருடன் கௌரவ், ஷ்யாமளா சேர்ந்திருக்க, இருவரின் பார்வை கௌசல்யாவிடம் தான் நிலைபெற்றிருந்தது சின்ன புன்னகையுடன்.
தாங்கள் கவனிப்பதை அவர் கவனிக்காமல் கவனமாய் இருந்துகொள்ள, அதனை கவனிக்கும் நிலையில் கௌசல்யா இல்லையே.
இரண்டொருமுறை மட்டுமே விமானநிலையம் வந்திருந்தார் ஆகர்ஷனுக்காக. அதன்பின் இதோ இப்போதுதான்.
அதுவும் சென்றமுறையும், அதற்கு முன்பும் சிட்னியிலிருந்து வருகையில், கிளம்புகையில் என்று எதற்கும் அவர் வந்திருக்கவில்லை.
இந்தமுறை கௌரவ் சொல்லியே அழைத்து வந்திருந்தான் அவரை. அதுவும் ராம்நாத்தின் முன்பு.
“ஆகர்ஷன் அண்ணா வர்றாங்கம்மா. போய் ரிசீவ் பண்ணிட்டு வரலாம், கிளம்புங்க…” என்றதும் ராம்நாத்தின் கண்கள் தெறித்துவிடும்போல் ஆனது.
“என்ன?…” என அவரின் பார்வையை கண்டு கௌரவ் கேட்க,
“எனக்கு காலைல இருந்தே நெஞ்சை கரிச்சிட்டு இருக்கு. இப்படி ஒத்தையில விட்டுட்டு போனா யார் பார்க்க?…” என்று சட்டென கையை நெஞ்சில் வைத்துக்கொண்டு ராம்நாத் கண்களை சொருகுவதை போல கூற,
“நீங்களும் கிளம்புங்க. உங்களை ஷ்யாமாம்மா ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிட்டு நாங்க ஏர்போர்ட் போறோம்…” என்று சொல்லி கையை கழுவிவிட்டு எழுந்தவன்,
“ம்மா, ரெடியாகுங்க….” என்றான் கௌசல்யாவிடம்.
“கௌசி…” என்று ராம்நாத் அழைக்க,
“சாப்பிட்டாச்சே. போய் ரிபோர்ட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வாங்க…” என்றான் விடாப்பிடியாய்.
எங்கே தன்னை கொண்டுபோய் அங்கே அடைத்துவிடுவானோ என பதறிக்கொண்டு பார்த்தார் ராம்நாத்.
அதுவும் இருந்திருந்து அந்த ஆகர்ஷன் வருகையிலா அங்கே போய் நிற்பது? பீதியில் கண்கள் வெளிவந்துவிடும் அளவிற்கு பிதுங்கி போய் பார்த்தார்.
வெண்ணிலாவுடனான திருமணத்தை நிறுத்திய அன்று சாவித்ரி, ஆகர்ஷனை அழைத்து பேசிவிட்டு வைத்த மறுநாளே ஆகர்ஷனிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது.
அப்போதுதான் பிரத்யூக்ஷா ஒரு புகைப்படத்தினை வைத்து ஆட்டம் காண்பித்து, ஸ்ரீவத்சனிடம் வாங்கிக்கட்டியிருக்க, அடுத்தமுறைக்கென ஆகர்ஷன்.
“வயசான காலத்துல ஒழுங்கா இருந்தோமா போறோமான்னு இல்லாம எதாச்சும் திருகுதாளம் செஞ்சீங்க, ஒன்னும் இல்லை. நான் வருவேன். என் தம்பி இவன். என் அம்மாவோட பிள்ளைன்னு பெருசா பங்க்ஷன் வச்சு எல்லாருக்கும் தெரியப்படுத்தி அவங்க கல்யாணத்தை நடத்துவேன்…” என்று கூறியிருக்க,
“என் பிள்ளைடா அவன்…” என்ற கொந்தளிப்பிற்கு இகழ்ச்சியாய் ஒரு சிரிப்பு தான் பதிலாய் கிடைத்தது.
இப்போது நினைத்தாலும் எங்கே தான் இன்னும் இழுத்துப்பிடித்தால் அவனும் வெளிப்படுத்திவிடுவானோ என்னும் அச்சம் தான்.
இப்போதுவரை ஓரளவு அனைவரும் ஒரு கட்டுக்குள் இருக்கும் காரணம் இந்த ரகசியம் ஒன்றே.
கௌரவ்வின் பிறப்பு, கௌசல்யா ஆகர்ஷனின் பந்தம் இதை வெளிச்சத்தில் காண்பித்துவிட்டால் தான் செல்லா காசு என்பதும் புரிந்திருக்க, அதனை வெளிவராமல் செய்துகொண்டே தன்னால் என்ன நகர்த்தமுடியுமோ அதனை நகர்த்த நினைத்தார்.
அதனைகொண்டே அவ்விடம் அமைதி காத்தவர் மகளுக்கும் பதில் கூற முடியவில்லை.
“எப்படிப்பா நீங்க திரும்ப சரின்னு சொன்னீங்க?…” என்று சாருலதா ஒருபுறம் குதிக்க,
“போனா போகட்டும்ன்னு தான். எல்லாம் என் மகனுக்காக தான் சாரு. அவன் ஆசைக்காக சம்மதிச்சேன்…” என்றவர் கௌரவ் மிரட்டியதையும், தான் மன்னிப்பு கேட்டதையும் மகளிடம் கூறவில்லை.
“வயசான கிழம், இப்பவோ அப்பவோன்னு இருக்குது. அது கெஞ்சும்போது என்ன செய்ய?…” என்று சொல்லி,
“நீ இதை பத்தி பேசிக்கவேண்டாம். எல்லாம் நம்ம கௌரவ்க்காக…” என்றும் முன்ஜாக்கிரதையாக மகளின் வாயை அடைத்துவிட்டார்.
எங்கே இதனை பற்றி சபையில் இளக்காரமாய் மகள் பேசிவைத்து அது வேறொரு ரூபத்தில் பிரச்சனையை கிளப்பிவிட்டால்?
அந்த எண்ணத்தில் முதலிலேயே மகளிடம் சொல்லிவைத்துவிட்டார். கௌரவ் என்றால் சாருலதா அவனுக்காக பொறுமை காப்பதுண்டே.
“என்னவோ போங்கப்பா, உங்களுக்கெல்லாம் அவங்க சமமே இல்லை. உங்க மனசு யாருக்கு வரும்?….” என வேறு வழியின்றி தகப்பனுக்காக மௌனமானாள்.
அத்தனை பொறுமல் ராம்நாத்தின் மனதினுள். அவரை கேட்டு என்ன நடக்கிறது?
தான் அத்தனை சொல்லியும் விக்ரம்மிற்கு புது பைக், அவனை வெண்ணிலாவுடன் இமாச்சல பிரதேசத்திற்கு அனுப்பி வைத்தது என்று ஒவ்வொன்றும் நடந்தேறி அவரின் கட்டுப்பாடு தகர்ந்துகொண்டே இருந்தது.
ஒருபுறம் இப்படி இருக்க, அவர் இந்தபக்கம் சம்மதம் என்று சொல்லி முடித்ததும், கௌசல்யாவை அழைத்துக்கொண்டு சாவித்ரியை சந்திக்கவைத்து, சமாதானம் செய்து, திருமணத்திற்கும் கையோடு நாளை குறித்தாகிவிட்டதே.
ஒருமாதத்தில் திருமணம் என்றிருந்து இதோ இன்னும் இருபதுநாளில் என்று வந்து நின்றது.
ஆகர்ஷன் வருகிறான் பிரத்யூக்ஷா, குழந்தையுடன். குடும்பமே அத்தனை கொண்டாட்டத்துடன் இருந்தது.
“ஆமா, வரலை…” என்றதுமே சட்டென அவ்விடம் விட்டு நகர்ந்துவிட்டான் கௌரவ்.
“என்ன பட்டுன்னு விட்டுட்டு போய்ட்டான்? என் பிள்ளை தானா இவன்?…” என்று திகைத்து போய் முணுமுணுத்தவர்,
அவன் இருக்கிறானா எனவும் கவனமாய் பார்த்துக்கொள்ள, அந்த வரவேற்பறையின் ஒரு ஓரத்தில் நின்றபடி இவரை தான் ஆராய்ச்சி பார்வை பார்த்தான் கௌரவ்.
‘என்ன இவன் இப்படி பார்க்கிறான்?’ என உள்ளூர உருவாகும் அதிர்வினை காட்டிக்கொள்ளாமல் அசட்டுத்தனமாய் ஒரு சிரிப்பு முகத்தில் ஒட்டவைக்க, அதற்குமே பதில் புன்னகை எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.
‘இருக்கட்டும்டா மகனே. அவ இங்க தான வருவா. நான் படுத்தற பாட்டுல உன்னை வேண்டாம்ன்னு போவாளா இல்லையான்னு பார்க்கறேன். அப்பறம் என் வழிக்கு வருவ. ரெண்டு கட்டறது இந்த வீட்டுல புதுசா என்ன?’ என்ற கேவலமான எண்ணம் வேறு.
இப்படியாக அவரின் இருப்பை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தாயும் மகனும் கிளம்பி வந்திருந்தனர்.
இன்னும் சற்றுநேரத்தில் விமானம் தரையிறங்கிவிடும். இப்போதே கௌசல்யாவிற்கு கால்கள் இருப்புக்கொள்ளவில்லை.
“கௌரவ் அங்க…” என்று தூரத்தே யாரோ ஒருவரை கண்டவர்,
“அங்க வர்றது கண்ணா?…” என சொல்லிக்கொண்டே அவசரமாய் அவர் எழுந்துகொண்டு இரண்டடி முன்னால் வைத்துவிட்டார்.
அது ஆகர்ஷனில்லை. வேறு யாரோ ஒருவர் என்று தெரிந்ததும் மேலும் முன்னேறாமல் அப்படியே நின்றுவிட்டார் கௌசல்யா.