ஷ்யாமளாவும், கௌசல்யாவும் மனம் நெகிழ இதனை கண்டுகளிக்க ஆகர்ஷன் வந்து சேர்ந்தான் பிரத்யூக்ஷாவுடன்.
“குட்டிக்கழுத என்ன ஓட்டம்?…” என்றாள் வந்ததும் மகளின் முதுகில் லேசாய் அடிப்பதை போல் கை ஓங்கி.
“கௌவாப்பா…” என்றதும் சட்டென கௌரவ் குழந்தையை காண்பிக்காமல் திரும்பி நின்று பிரத்யூக்ஷாவை முறைத்தான்.
“சூப்பர் வரவேற்பு தான் கௌரவ் த்தான்…” என்று அவனின் முறைப்பை சட்டை செய்யாதவள்,
“அப்பறம் என்ன மாமியாரே? மகனுக்கு கல்யாணம்ன்னதும் முகத்துல புதுசா ஒரு களை பொங்குதே?…” என்று கௌசல்யாவின் கன்னம் கிள்ளி கூறியவளின் நெற்றியில் கைவைத்து கன்னம் வருடினார் கௌசல்யா.
“ஆனாலும் உங்க பார்வை என்மேல இல்லை. சோ சேட். வாங்க ஷ்யாமாம்மா, நாம அப்படி போய் தனியா பேசுவோம்…” என்று ஷ்யாமளாவை கைபிடித்துபடி வம்பிழுத்தாள் பிரத்யூக்ஷா.
“எப்படி இருக்க கண்ணா?…” கண்களில் ஆகர்ஷனை நிரப்பியபடி கௌசல்யா நெஞ்சம் வலிக்க கேட்டார்.
“நான் நல்லா இருக்கேன் ம்மா. நீங்க எப்படி இருக்கீங்க?…” என கனிவுடன் கேட்டவன் விழிகள் சடுதியில் தாயின் ஆரோக்கியத்தை விழிகளால் ஆராய்ந்தது.
“ஹ்ம்ம்…” என்றவர், அடுத்து என்ன பேச என்று தெரியாமல் வழமை போல மௌனமாய் புன்னகைத்தபடி தவிப்புகள் தீராமல் பார்த்து நின்றார்.
“பாத்தி…” என்ற பேத்தியின் குரலில் கவனம் திரும்ப,
“குட்டிம்மா…” என அள்ளிக்கொண்டார் கௌசல்யா.
“ரெண்டு கௌசியும் ஒன்னு சேர்ந்துட்டாங்கப்பா…” என்று அலுத்துக்கொள்வதை போல பிரத்யூக்ஷா கூறியதோடு அந்த காட்சியை அப்படியே படம் பிடித்து தன் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் வைத்துவிட்டு, ராம்நாத்திற்கும் தனியாய் அனுப்பிவைத்தாள்.
‘எரியுதுடி மாலா’ என்று தீயுடனான கேப்ஷன் வேறு போட்டுவைக்க உண்மையில் பார்த்தவருக்கு உடலெல்லாம் பற்றி எரியும் உணர்வு தான்.
ஒருபக்கம் ஆகர்ஷன், மறுபக்கம் கௌரவ். நடுவில் குழந்தையுடன் கௌசல்யா முகம்கொள்ளா சந்தோஷ சிரிப்புடன்.
“எப்படி சிரிக்கிறா பாரு…” என்று பொங்கி பொங்கி பொருமத்தான் முடிந்தது.
போதாததிற்கு பிரத்யூக்ஷா பயர் இன்ஜின் சவுண்டுடன் ஒரு வீடியோவையும் அனுப்பிவைக்க, தாளமுடியவில்லை.
“கௌவாப்பா சாப்பிட்டியா? பாத்தி சாப்பிட்டியா? கௌவாப்பா பாபம். பாத்தி பாபம்…” என்று இருவரின் கன்னம் கிள்ளி உச்சுகொட்டி பிள்ளை முகம் வாட்டம் காண்பித்தது.
“கௌசிம்மா, என்னடா?…” என்றான் ஆகர்ஷன்,
“அப்பா…” என்ற குழந்தை கௌசல்யாவின் ஒற்றை கரத்தினை தூக்கி காண்பித்தது.
“நோ ஹெல்தி. ஸீ…” என்று தன் குண்டு கையையும், கௌசல்யாவின் தோல் ஒட்டிக்கிடந்த எலும்பான கையையும் காண்பித்து கௌசல்யாவின் கன்னத்தோடு கன்னம் வைத்து அவரின் கழுத்தை கட்டிக்கொண்டது.
“குட்டிம்மா…” என்று நெஞ்சோடு அணைத்துக்கொண்டார் கௌசல்யா.
“எங்கம்மாடா நீ…” என்றவர் உடனே,
“இல்ல, என் சாமிடா நீ…” என குழந்தையின் உடலெங்கும் தங்கமுத்தம் பதித்தார் கௌசல்யா.
அனைவருக்குமே நெஞ்சம் கனத்துவிட்டது அவர் கூறியதில். அம்மா என்று சொல்லி, சட்டென்று கசந்து பார்த்து, உடனே தெய்வத்தினை சரணடைவதை போல குழந்தையிடம் அவர் சேர, இன்னுமே அவரின் நெஞ்சத்தில் பெற்றோர் செய்ததன் விளைவு தீயாய் எரிவதை உணரமுடிந்தது.
கீழுதட்டை கடித்தபடி ஆகர்ஷன் அந்த உணர்வுகளை அடக்கி ஆள முயன்றான்.
அவனுக்கே ஒரு குழந்தை என்றாலும் அவனை பெற்றவருக்கு அவன் குழந்தையாகிற்றே.
தாயின் வேதனை என்னவென்று புரிந்து தொண்டையை இறுக்கி பிடிக்கும் அந்த உணர்வுனை தவிர்க்க முடியாமல் நின்றான்.
அன்றைக்கு மட்டும் கௌசல்யாவிற்கு ஆதரவாய் அவரின் பெற்றோர்கள் இருந்திருந்தால் இன்றைக்கு தன் தாயுடன் தான் என்று நினைக்கையில் மனம் திடுக்கிட்டது.
“கௌவாப்பா…” என்ற அழைப்பில் சுதாரித்து அவர்களை பார்த்தவன்,
“ஏதாவது சாப்பிடலாமே?…” என்றான் மகள் அடுத்து என்ன செய்வாள் என்று தெரிந்து.
“எஸ் எஸ். ஹங்ரி. கௌவாப்பா, பாத்தி, நா ஹங்ரி….” என்ற பிள்ளை கௌரவ்விடம் தாவியது.
“எப்படியும் வீட்டுக்கு போக ரெண்டுமணிநேரம் தாண்டிடும். சாப்பிட்டே போயிடலாம்…” என்றார் ஷ்யாமளாவும்.
“அம்மா எப்பவும் கரெக்ட்…” என ஆகர்ஷன் கூற,
“நான் உன் அம்மா ஆர்ஷ்…” என்றார் அவருமே.
அத்தனைநேரம் அவரும் இருந்தாலும் ஆகர்ஷன் முதலில் தன்னை வந்தடையவில்லை என்றெல்லாம் நினைக்கவே இல்லை.
தன்னை பார்த்ததும் அவன் புன்னகைத்தானே, அதுவே அவருக்கு ஆயிரம் அணைப்புகளுக்கு சமம்.
அவன் மனம் அறிந்தவராகிற்றே. ‘என் பிள்ளை, எப்பவும் என் பிள்ளை’ இதில் அவருக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.
கிஞ்சித்தும் பொறாமையும் இல்லை. இந்த கனங்கள் குறைந்து இவர்களின் வாழ்க்கை வெளிப்படையாக வேண்டுமென்ற வேண்டுதல் மட்டும் தான்.
கௌரவ்வின் வார்த்தைக்கிணங்க தான் இப்போதும் அவனுக்கு உண்மை தெரியும் என்ற விஷயத்தினை அவர் மறைத்து வந்தார்.
இப்போதுமே கௌரவ்வை பார்த்துக்கொண்டு அவனின் அருகிலேயே தான் நின்றிருந்தார்.
“என்ன ஷ்யாமளாம்மா போகலாமா?…” என்று கௌரவ் கேட்க,
“நான் என்னடா தனியாவா போறேன்? வரவர உனக்கு கலாட்டா ரொம்ப கூடி போச்சு…” என அவனின் தோளில் தட்ட,