“இப்ப இது ரொம்ப முக்கியமா?…” என்றான் கௌரவ் அவள் கேட்ட எதற்கும் பதில் கூறாமல்.
“என் சமத்து என் சீனியர்க்கிட்ட மட்டும் தான் செல்லும் போல…” என சலிப்பாய் சொல்லியவளை ஆகர்ஷிக்கும் புன்னகையுடன் அணைத்துக்கொண்டான் ஆகர்ஷன்.
“வாலு, வாய்க்கு மட்டும் குறையில்லை…” என்று அவளின் தலையில் லேசாய் குட்டிவிட்டு அவளோடு இணைந்துவர, ஷ்யாமளாவும் கௌசல்யாவும் பேசியபடி வந்தனர்.
“கௌவாப்பா…” என குழந்தை கௌரவ்வுடன் கதையளந்துகொண்டே வந்தது.
“நார் மேன் காணும்?…” முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே கேட்க,
“வரலை கௌசல்யாம்மா…” என்றான் கௌரவ்.
“நார் மேன் கௌவாப்பாக்கு நோ ஃபூட், நோ சாட், நோ ஸ்மைல், நோ லவ், நோ ஹக், நோ நோ நோ…” என்று ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே அடுத்து என்ன என்று கன்னத்தில் கை வைத்து யோசித்து ஒன்றும் தோன்றாமல்,
“நோ…” என்று அதற்குமேல் ஞாபகம் இல்லை என்பதை போல உதட்டை பிதுக்கி இரு கைகளையும் அழகாய் விரித்தது.
“கௌசல்யாம்மா…” என அணைத்து முத்தமிட்டவன், சட்டென திரும்பி பிரத்யூக்ஷாவை பார்த்தான்.
“குழந்தைட்ட என்ன சொல்ற நீ?…” என்று மெல்லிய குரலில் முறைப்புடன் கேட்க,
“உண்மையை சொன்னேன். இந்த மிரட்டல் எல்லாம் என்கிட்ட வேண்டாம்? கல்யாண மாப்பிள்ளையா சிரிச்ச முகமா இருங்க. சொல்லிட்டேன்…” என்றவள்,
“சீனியர், சொல்லுங்க…” ஆகர்ஷனை கௌரவ்வின் முன் இழுத்து நிறுத்தினாள்.
“பிரத்யூ…” என்ற ஆகர்ஷன், கௌரவ்வை பார்த்துவிட்டு,
“வெண்ணிலா கால் பண்ணலையா பிரத்யூ? பேசு…” என்றான் அவளிடம்.
“ஆமாமா, எனக்கு முக்கியமான வேலை இருக்கு…” என்று கூறி,
“கௌசிக்குட்டி, இங்க பாரு உன் கௌவாப்பா பீலிங்….” என்று சொல்லவும், குழந்தை மொத்தமாய் கௌரவ்வின் முகத்தை தன் பக்கம் திருப்பியது.
“கௌவாப்பா சேட். நமக்கு நார் மேன் வேணா. சரியா? ஸ்மைல் கௌவாப்பா…” என்று கன்னத்தை கிள்ளியபடி அவனின் தலையை அசைக்க செய்ய,
பேச்சுக்களோடு வெண்ணிலாவிற்கு அழைத்து பார்த்த பிரத்யூக்ஷா அழைப்பு செல்லவில்லை என்றதும் குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“ரெக்கார்டிங் தியேட்டர்ல இருப்பாங்க போல. மெசேஜ் பண்ணிட்டேன். எப்படியும் நாளைக்கு முகூர்த்த சேரி எடுக்க போறப்போ பார்ப்போமே…” என்றாள் ஆகர்ஷனிடம்.
“அனு அக்கா வர்றேன்னு சொன்னாங்க ஷ்யாமாம்மா? ஏன் ஏர்போர்ட் வரலை?…” என அனன்யாவை பற்றி பேசிக்கொண்டே பெண்களோடு பிரத்யூக்ஷா சேர்ந்துகொள்ள, கௌரவ்வின் அருகில் வந்தான் ஆகர்ஷன்.
“கௌரவ், எல்லாம் ஓகே தானே?…” என்று ஆகர்ஷன் கேட்க,
“ஹ்ம்ம், அப்படித்தான் நினைக்கறேன்….” என ஆமோதித்து.
“என்ன சொல்றார் மிஸ்டர் ராம்நாத்…”
“கல்யாணத்தை நிறுத்தறதை தவிர வேற என்ன சொல்லுவார்?…”
“ஓஹ், இன்னும் அந்த மைண்ட்செட் மாறலையோ?…” என்றவன்,
“மாத்திருவோம்…” என கண் சிமிட்டி புன்னகைத்தான் ஆகர்ஷன்.
“வில்லங்கமா என்னவோ?…” கௌரவ் கேட்க,
“டேய் நல்லவனே, நம்ம வில்லங்கம் எல்லாம் கொஞ்சநஞ்சம் இல்லையே. வாடா…” என்றான் ஆகர்ஷன் அவனை தோளில் தட்டி, தோளோடு அணைத்து நடந்தபடி.
“அப்பா கௌவாப்பா…” என குழந்தை கௌரவ்வின் தோளை தடவிக்கொடுத்து முத்தம் வைத்து,
“பெய்ன் போச்சா கௌவாப்பா…” என்றாள் கௌரவ்விடம்.
“ஆமான்டா கௌசல்யாம்மா…” என்றவன்,
“ஹலோ ப்ரோ, பார்த்து கை வைங்க…” என்று ஆகர்ஷனிடம் கண் சிமிட்டி புன்னகைக்க,
“சரிங்க தம்பி….” என்றான் கும்பிடுவதை போல ஆகர்ஷன்.
மறுநாள் காலையே சென்னையிலிருந்து அனைவரும் காஞ்சிபுரம் வந்துவிட்டனர் திருமணத்திற்கென பட்டு எடுப்பதற்கு.
ராம்நாத், சாருலதா இருவரை தவிர்த்து மற்றவர்கள் காஞ்சிபுரத்தில் இருக்கும் ஸ்ரீவத்சன் வீட்டிற்கு வந்துவிட கௌரவ் நேராக கடைக்கு வருவதாய் தெரிவித்துவிட்டான்.
“ஆர்ஷ் நாத்தனார் இல்லாம எப்படி? இந்த சாருலதா என்ன இப்படி பண்ணுது? குழந்தைக்கு முடியலைன்னு எவ்வளோ பெரிய பொய். தீம் பார்க் போய்ருக்கு…” என்றார் ஷ்யாமளா.
“ஏன் பிரத்யூ நாத்தனார் இருந்தா தான் கல்யாண புடவை எடுக்கனுமா?…” என்ற ஆகர்ஷன்,
“உன் அண்ணனுக்கு சரியான மருமகப்பொண்ணு. நல்ல பொண்ணும் கூட….” என்றார் ஸ்ரீவத்சன் காவேரியிடம்.
காலை உணவை முடித்துக்கொண்டு கிளம்புவதாய் பேசிக்கொண்டிருக்க கைப்பேசியுடன் தனியே வந்தான் ஆகர்ஷன்.
ராம்நாத்திற்கு தான் அழைப்பு விடுத்தான். இப்படியே விட்டால் சரிவராது என்று அழைத்தாகிற்று.
“நீ எதுக்குடா எனக்கு கூப்பிடற? அதான் கும்பல் கூடிட்டீங்களே? அப்பறம் என்ன?…” என எடுத்ததும் அவர் கத்த,
“கோளாறான மனுஷன்ய்யா நீ…” என்றான் ஆகர்ஷன் அழுத்தம் திருத்தமாய்.
“டேய்…”
“இந்த சத்தமெல்லாம் கூடாது. நாங்க புடவை எடுக்க வர்றதுக்கு முன்னாடி எங்களை கையெடுத்து கும்பிட்டு வரவேற்க நீ அங்க இருக்கனும் ராம்நாத்…” என்றான் உத்தரவு பிறப்பிக்கும் குரலில்.
“என்னடா நினைச்சிட்டு இருக்கீங்க? மாத்தி மாத்தி மிரட்டிட்டு. அதுக்கெல்லாம் நான் மசியமாட்டேன். அதுவும் கையெடுத்து கும்பிடனுமாம்ல. என் தலை முடி கூட அசையாது…”
“மொட்டையே போட்டுடுவோம்…” என்ற ஆகர்ஷன்,
“நீ வருவ. வர்ற…” என்றான் மீண்டும்.
“டேய் பொடிப்பயலே…” என்றவரை இடைமறித்தவன்,
“ஆமா, தமிழ்நாட்டுல பொண்ணே கிடைக்காதுன்னு தான் கோலாருக்கு போய் பொண்ணு எடுத்தியோ?…” என்று அலட்டிக்கொள்ளாமல் ராம்நாத்தின் அடிமடியில் வெடி வைத்தான் ஆகர்ஷன்.
“டேய்….” குரலே ஆடிவிட்டது ராம்நாத்திற்கு.
“கயல்விழி…” என்றான் அடுத்ததாய்.
சர்வாங்கமும் ஒடுங்கி போக மொத்தமாய் அரண்டு நின்றார் ராம்நாத். இதனை எதிர்பார்க்கவே இல்லை அவர்.
“இப்ப வருவ தான? வருவ. அதுவும் சும்மா கும்பிடக்கூடாது. சாவித்ரி பாட்டிக்கிட்ட சாஷ்டாங்கமா, ப்ச், வேண்டாம் அது இப்ப வேண்டாம். நல்லா குனிஞ்சு நின்னு கும்பிட்டு போட்டு திரும்பவும் ஒரு மன்னிப்பு, கேட்கனும்…” என்று சொல்லியவன் அழைப்பை துண்டித்துவிட்டு திரும்ப பிரத்யூக்ஷா நின்றிருந்தாள் அவனருகில்.
“கயல்விழி?…” கேள்வியாய் அவள் கேட்கவும், பெருமூச்சுடன் வேதனையாய் பார்த்தான் அவளை.
“கௌரவ் அம்மா கயல்விழி…” என்றான் ஆகர்ஷன்.
வினையாய் பாவத்தை இரக்கமின்றி விதைத்தவனுக்கான அறுவடையாய் அவன் நிம்மதியை அறுக்க துவங்கியது.