காலை வந்ததில் இருந்து அவளுடன் தான் வாயடித்துக்கொண்டிருந்தாள் அவள்.
புசுபுசுவென்று பஞ்சு போன்ற பார்பி கவுனில் பஞ்சுபொதியாய் குழந்தை குண்டு கன்னங்கள் குழி விழ புன்னகைக்க கொள்ளை போனது அங்கிருந்தவர்கள் மனது.
“கௌவாப்பா பாபம். குட்-டா பாத்துக்கனும்…” என மழலை பொங்க கூறியதில் மனம் சந்தோஷத்தில் கலங்கியது.
“ஏனாம், உன் கௌவாப்பா என்னை பார்த்துக்கமாட்டாரா? நீ சொல்லமாட்டியா?…” நிலா கேட்க,
“கௌவாப்பா பாபம்…” மிரட்டலாய் தான் பார்த்தாள் கௌசல்யா.
“அநியாயம் பன்ற நீ. என் மாமியார் வாயில்லா பூச்சி. நீ குட்டி மாமியாரா இருப்ப போல?…” நிலா குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டே இருந்தாள் ஒவ்வொரு பேச்சிற்கும்.
“சரி எப்படி பார்த்துக்கனும்?…” எனவும் வெண்ணிலா கேட்க,
“பர்ஸ்ட் கிவ் ஃபூட்…” என பிஞ்சு விரலை ஒன்றென காண்பித்து கூற,
“இவ்வளோ நாளா பாஸ்டிங்ல இருந்தார் போல கௌரவம்?…” வெண்ணிலா கிண்டல் பேச,
“நோ கௌவம், கௌவாப்பா…”
“இந்த குவா குவா பாப்பா எல்லாம் உனக்கு. எனக்கு மிஸ்டர் கௌரவம் தான். உன் வேர்ல்ட்குள்ள நான் வரலைப்பா…” என்று பிள்ளையிடம் கூறியவள்,
“சாப்பாடு குடுத்தா மட்டும் போதுமா?…” என்றாள் குழந்தையிடம்.
“கிவ் பீஸ்…”
“அமௌன்ட் சொல்லலையே…” என கேலியாய் பேசினாலும், குழந்தை அமைதியை பற்றி கூறுகிறதென புரிந்தது.
குழந்தை வரை இது என்ன பேச்சு? என்ன விஷயம்? என்று உள்மனம் குறுகுறுத்தாலும் குழந்தையின் போக்கிலேயே தான் அவளும் பேச்சுக்கொடுத்தாள்.
“கிவ் லவ்…” மூன்றென மூன்றாம் விரலை காண்பித்து வெண்ணிலா கவனிக்கிறாளா தன்னை என்றும் கூர்ந்து தலை சாய்த்து பார்த்தது.
“அவ்வளோ தானா?…” என்றால் நிலா சிரிப்புடன்.
“ஸ்மைல், ஹக், சிட் சாட், சாக்கிஸ், எல்லாம் கௌவாப்பாக்கு…” என கையிரண்டையும் தன்னால முடிந்தளவு விரித்து காண்பித்து அத்தனையும் தரவேண்டுமென கூற வெண்ணிலாவின் முகத்திலும், மனதிலும் அத்தனை சந்தோஷம்.
“யூ க்நோ கோல்ட் மூன் கௌவாப்பா, சாஃப்ட். குட். பேபி. பாபம்…” என்று சொல்லி வெண்ணிலாவின் விரிந்திருந்த இரு கரங்களையும் அந்த ரோஜாப்பூவினை பத்திரமாய் பார்த்துக்கொள்வதை போல பொத்தி வைத்து,
“இப்பிடி பாக்கனும். ஓகே…” என தலையாட்டி கேட்டதும் நெக்குருகி பார்த்தாள் வெண்ணிலா.
“மம்மி, அப்பா பேபிய இப்பிடி தான் பாக்கும். அப்பா சொல்லுவா…” என்று பிள்ளை தனக்கு தெரிந்தவற்றை எல்லாம் யோசித்து பேசி கூறி, தன்னை தன் பெற்றோர் பார்த்துக்கொள்வதை போல கௌரவ்வை பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கேட்கும் குழந்தையை மெய்மறந்து தான் பார்த்தாள் நிலா.
“ஓகே. ஸே ஓகே…” மீண்டும் இரு பிஞ்சுக்கைகளின் கட்டை விரல்களை காண்பித்து கௌசல்யா கேட்க,
“அச்சோ, க்யூட்டுடி குட்டி மாமியாரே…” என்று அள்ளி கொஞ்சியவள், தன் கையில் இருந்த ரோஜாப்பூவினை காண்பித்து,
இப்படியாக குழந்தை கௌசல்யாவின் பேச்சுக்களில் எல்லாம் கௌரவ்வை பார்த்துக்கொள்ள வேண்டும் என்னும் வார்த்தைகள் தான்.
அவனுக்கு என்ன பிடிக்கும் என்றெல்லாம் குழந்தை கூற சலிக்காமல் கேட்டுக்கொண்டாள் வெண்ணிலா.
முன்பே தொலைதொடர்பில் அத்தனை நெருக்கமாகி இருந்தவர்கள் இப்போது இன்னும் நெருங்கியிருக்க சுனந்தாவிற்கு வேடிக்கை பார்ப்பதுதான் வேலையானது.
“இப்படி என்னையும் கூட்டிட்டு வந்து படமா காண்பிக்கிறீங்க? இதை பார்க்கவா நான் வந்தேன்?…” என்று அவள் ஒருபுறம் புலம்ப,
“நீ யாரை பார்க்க வந்தன்னு எனக்கும் தெரியும்? அதான் இந்தபக்கமே தலை காமிக்கலையே உன் சைட்டு…” என்று குழந்தைக்கு கேட்டுவிடாமல் பேசியவள் அப்போதுதான் அங்கே இருந்த ஆகர்ஷனை கவனித்தாள்.
அருகில் பிரத்யுக்ஷாவும் இருக்க இருவரின் முகமுமே சரியில்லாததை போலிருந்தது.
ஆகர்ஷன் மேலோட்டமாக விஷயத்தை விவரித்திருக்க அதற்கே அடிநெஞ்சம் வரை கலங்கி போனாள் பிரத்யூக்ஷா.
இப்படியும் ஒரு ஜென்மம் இருக்க கூடுமா என ராம்நாத்தை துளியிலும் துளியளவு கூட மிச்சமின்றி வெறுத்து, மனதிற்குள் எரித்து சாம்பலாக்கிக்கொண்டிருந்தாள்.
தங்களுக்கே இப்படி இருக்க கௌரவ்விற்கு தெரிந்தால்? ஆகர்ஷன் அதற்கு அனுமதிக்கவில்லை.
‘எனக்கு கௌரவ் நிம்மதி முக்கியம் பிரத்யூ. விதிவசம் அவனுக்கா தெரியவரும்போது தடுக்கமுடியாது. நாமளா தெரியப்படுத்தி அவனோட மொத்த வாழ்க்கையையும் பொசுக்க முடியாது. என்னால அவன் சந்தோஷத்தை மட்டும் தான் பார்க்க முடியும்’ என்றிருந்தான் ஆகர்ஷன்.
ஒரு குழந்தைக்கு தாயாய், தானும் ஒரு பெண்ணாய் கயல்விழிக்கு நடந்ததை எண்ணி கொதிக்காமல் இருக்கமுடியவில்லை.
எத்தனை பாடுபட்டிருப்பார்? எவ்வளவு கொடுமை அனுபவித்திருப்பார்? அதிலும் பிள்ளை பிறந்து ஒருமாதத்தில் அந்த உயிர் பிரிகையில் என்னவெல்லாம் எண்ணி தவித்ததோ?
தொண்டையை கவ்விப்பிடித்தது துக்கம். பிரத்யூக்ஷாவினால் நிதானமாக இருக்க முடியவில்லை.
கௌசல்யாவிற்கு நடந்ததில் கூட ஓரளவிற்கு நிதானத்துடன் இருந்தவளால் கயல்விழியை நினைக்கையில் அத்தனை சக்தியும் வடிந்து போனதை போல் அவ்வளவு துயரம்.
அதில் பிரத்யுக்ஷா முகம் கன்றி சிவந்து கண்களில் ஈரம் படர்ந்திருக்க, யோசனையாய் பார்த்தாள் வெண்ணிலா.
“நீங்க எப்போ வந்தீங்க?…” என ஆகர்ஷனிடம் கேட்ட நிலா,
“என்னாச்சு பிரத்யுக்கா. எல்லாம் ஓகே தானே?…” என்றாள்.