“ஸ்பீக்கர்ல போட்டு கூட பேசுவேன். மிஸ்டர் கௌரவம் பேசறதை தனியா கேட்டா என்ன? எல்லாரோட கேட்டா என்ன? சரியான ஒன்வேர்ட் ஆன்ஸர் பேப்பர்…” என்றாள் நிலா.
“நீ தான் தைரியமான ஆளாச்சே. எங்க போடு…” என்ற அனன்யா பிரத்யூக்ஷாவோடு ஹைபை அடித்துக்கொள்ள,
“அப்படி சொல்லுங்க அனுக்கா…” என்றாள் பிரத்யூக்ஷா.
மறுபக்கம் இணைப்பில் இருந்த கௌரவ்வின் இதழ்களில் அடக்கப்பட்ட புன்னகை அழுத்தமாய் அமர்ந்திருந்தது.
“ஹலோ என்ன லந்தா? அதுக்காக எல்லாம் ஸ்பீக்கர்ல போட்டு உங்களையும், அ, ஆ, இ, ஈ கேட்க விடமாட்டேன். அதுவும் எனக்கே எனக்கு தான்….” என்று அலட்டிக்கொள்ளாமல் பேசிய நிலா,
“அப்பறம் சொல்லுங்க பாஸ், என்ன பன்றீங்க?…” என்று சத்தமாவே கேட்க,
“என்ன பண்ணனும்?…” என்றான் கிசுகிசுப்பான குரலில்.
அதுவரை கலகலப்பாய் பேசிக்கொண்டிருந்தவள் அவன் கேட்டதிலும், கேட்டவிதத்திலும், அந்த ரகசிய குரலின் பின்னிருந்த மெல்லிய மயக்கத்திலும் அலமலந்து போனாள்.
“அவன் இதுக்கும் மேல பேசுவான்னு நான் சொன்னா யார் நம்பறா?…” என்றான் ஆகர்ஷன் சிரிப்புடன்.
“எல்லாரும் என்னை ஓட்டறாங்க. உங்களால…” நிலா அவனிடம் வெட்கத்தை மறைத்த கடுப்புடன் கூற,
“நான்…” என்று கௌரவ் ஆரம்பிக்க,
“ஹப்பா போதும் கௌரவம். நீங்க வரலையா? உங்களை பார்க்கனும் போல இருக்கு. இப்போ சந்தோஷமா? ஸாருக்கு பூரிப்பு வந்திருச்சா? நான் தேடறேன். வர்றீங்களா?…” என்று படபடவென்று வெண்ணிலா பேச,
“மெதுவா பேசு நிலா…” என்றான் அவன்.
“இங்க நான் வாயசைச்சா கூட எனக்கே டப்பிங் குடுக்கறாங்க. நான் எங்க மெதுவா பேச?…” என்று அலுத்துக்கொண்டாள்.
“கௌசல்யாம்மா என்ன பன்றாங்க?…” என்றான் குழந்தையை விசாரித்து.
“இவ்வளோ நேரம் என்னோட தான் பேச்சு. கார்ல ஏறினதும் தூங்கிட்டா….” அவள் பேசியதை எல்லாம் வெண்ணிலா கூற, ‘ஹ்ம்ம்’ என்ற சத்தத்துடன் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தான் கௌரவ்.
“ஓகே, கோவிலுக்கு வந்துட்டோம். சர்ப்ரைஸ் எதுவும் குடுக்கனும்னா இங்கயே…” என்று சொல்லிக்கொண்டே திரும்ப அவளை உரசிக்கொண்டு வந்து நின்றது கௌரவ்வின் கருப்பு வர்ண கிராண்ட் செரோகி.
“நிலா பார்த்து…” என பதறிபோய் வளர்மதி கூற, அவள் அசையாது நின்றாள்.
அது கௌரவ் என்றதும் தான் மற்றவர்களுக்கு நிம்மதியானது. கூடவே சந்தோஷமும்.
வாகனத்திலிருந்து இறங்கியவன் மற்றவர்களை பார்த்து சம்பிரதாய புன்னகை புரிந்துவிட்டு வெண்ணிலாவை பார்த்து, நொடிபொழுதில் புருவமுயர்த்தி ஒரு ஸ்பெஷல் வரவேற்பு அவளுக்காக.
“ஓஹ் வாவ்…” என்றாள் சுனந்தா அவனை பார்க்கவுமே.
“இவ ஒருத்தி…” என தலையில் கை வைத்துக்கொண்ட வெண்ணிலாவும் கௌரவ்வை பார்த்து வாவ் மனநிலையில் தான் இருந்தாள்.
‘இப்படி இருக்கபோய் தான் இவ்வளோ கொழுப்பும், இவ்வளோ ஆணவமும். கௌரவம், கௌரவம்.’ என மனதினுள் திட்டிக்கொண்டவள் பேசிக்கொண்டே பிரத்யூக்ஷாவினுடன் சேர்ந்து நடந்தாள்.
அனைவரும் கோவிலுக்குள் நுழைய, வந்ததுமே கௌரவ் குழந்தை கௌசல்யாவை கையில் வாங்கிக்கொண்டான்.
அனைவரும் சந்நிதிக்குள் செல்லவுமே இயல்பாகவே வெண்ணிலா கௌரவ்வின் அருகில் சேர்ந்து நிற்க வைக்கப்பட ஆகர்ஷனுக்கு அவனை குடும்பமாய் பார்த்ததில் நெஞ்சம் நிறைந்துவிட்டது.
கௌரவ், வெண்ணிலா அவர்களுடன் குழந்தை கௌசல்யா. பாந்தமான ஒரு அமைப்பு.
கைப்பேசியில் அவ்வளவு பேசியவர்கள் கோவிலில் வைத்து எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
பூஜை முடிந்ததும் புடவை எடுக்க செல்லவேண்டும். துரிதமாய் அதற்கு செல்ல கௌரவ்வுடன் ஆகர்ஷன் சேர்ந்துகொண்டான்.
“என் கார் இங்க நிக்கட்டும். விக்ரம் வந்து எடுத்துப்பான்…” என்று சொல்லிவிட அவர்கள் அப்படியே செரோகிக்கு மாறினார்கள்.
இதில் யாருமே எதிர்பாராதது புடவைக்கடை வாசலின் முன் ராம்நாத் பேயறைந்த முகத்துடன் நின்றிருந்ததை.
கௌசல்யா தான் இன்னுமே பயந்துபோனார். எதற்கு இவர் வந்திருக்கிறாரோ என்று.
வரவில்லை என்று சொல்லியதற்கு அத்தனை நிம்மதியடைந்தார் கௌசல்யா. இப்போது பிரச்சனை எதுவும் செய்வாரோ என்று பயந்த பார்வை பார்க்க,
ஒன்றுபோல் தன் பிள்ளைகள் கூறியதில் அவர்கள் தன்னை எந்தளவிற்கு கவனிக்கின்றனர் என்று மனமகிழ்ந்து போனார்.
ஆனாலும் யாருக்கும் எந்தவித வருத்தமோ, அவமதிப்போ நடந்துவிட கூடாதென்று வேண்டுதலுடன் ராம்நாத்தை நெருங்க அவரின் பார்வை எல்லாம் ஆகர்ஷன் மீதுதான்.
கண்களில் ஒருவன் இத்தனை கொலைவெறியை காண்பிக்க முடியுமா என்று மிரளும் வண்ணம் இருந்தது ஆகர்ஷன் அவரை பார்த்த பார்வை.
அதுவரை தன்னை கட்டுக்குள் வைத்திருந்தவன் மனமெல்லாம் எரிமலையென வெடிக்க துவங்கியிருந்தது ராம்நாத்தை கண்டதும்.
புஜங்கள் இறுக தாடை நெறிபட தன்னை முயன்று கட்டுக்குள் வைத்தபடி அவரை நெருங்க அதிலேயே ஆடிப்போனார் ராம்நாத்.
சட்டென அவன் பார்வையை தவிர்த்து கூட்டத்தினுள் சாவித்ரியை பார்த்தவர் வேகமாய் அவரருகில் வந்தார்.
கௌசல்யா, கௌரவ் என்னவென்று அவரை தடுக்கும் முன், வெண்ணிலா சாவித்ரியை தன்னருகில் இழுத்துக்கொள்ள, வந்தவேகத்தில் ராம்நாத் சாவித்ரியின் கையை பற்றிக்கொண்டார்.
“என்னை மன்னிச்சிடுங்கம்மா. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க. என்னவோ வேற ஒரு கோவத்துல அறியாம செஞ்சுட்டேன். என்னை மன்னிச்சிருங்க…” என்று கைகூப்பிக்கொண்டு உடலில் அப்படி ஒரு பவ்யமும், குழைவையும் கொண்டுவந்து பேச கௌரவ்வின் விழிகள் இடுங்கியது.
அத்தனை சுலபத்தில் இவர் இப்படி ரோட்டில் வைத்து மன்னிப்பு கேட்கக்கூடியவர் இல்லையே என்ற சுதாரிப்புடன் பார்த்தான் அவன்.
“நீயும் மன்னிச்சிடும்மா என்னை. மாமா அன்னைக்கு வேற ஒரு கோவத்துல புத்திகெட்டுபோய் பேசிட்டேன்…” என்று வெண்ணிலாவிடமும் கேட்க,
“மன்னிப்பு கேட்டுட்டா பேசின எல்லாம் மறைஞ்சு போய்டுமா? அன்னைக்கு நாளை இல்லைன்னு செஞ்சிடமுடியுமா உங்களால?…” என்றும் அவள் கேட்க, ராம்நாத்திற்கு முகத்தை எங்கே கொண்டுபோய் வைப்பதென்று தெரியவில்லை.
ஏற்கனவே இப்படி நடுவீதியில் வைத்து மன்னிப்பு கேட்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோமே என உள்ளுக்குள் கொந்தளித்துக்கொண்டிருந்தவருக்கு, வெண்ணிலாவின் இந்த பேச்சு இன்னும் எண்ணெயை ஊற்றுவதை போலிருந்தது.
இது தான் பணிந்து போகவேண்டிய நேரம், பதுங்கி போகவேண்டிய நேரம் என்று பல்லை கடித்துக்கொண்டு வெண்ணிலாவை பார்த்தார்.
“தப்புதான் ம்மா. ஒரு நாய் எனக்கு போன் பண்ணி தப்பு தப்பா பேசினதால வந்த வினை இதெல்லாம்…” என்று ஆகர்ஷனை ஓரக்கண்ணால் பார்த்தும் பாராமல் பேச, அது அவனுக்குமே தெளிவாய் புரிந்தது.
“அதான், இந்த கல்யாணம் நடக்கறது யாருக்கோ விருப்பம் இல்லை போல. அதுதான் எனக்கு பேசி, நானும் ஒருவேகத்துல வந்து பேசி. சரி விடுங்க….” என்று அவரே அதனையும் சமாளிக்க,
“யார் என்ன சொன்னாங்க?…” என்றாள் விசாரிப்பதை போல வெண்ணிலா.
“நிலா, இப்ப இது முக்கியமா? சேரி எடுக்கனும். நல்லவிஷயத்துக்கு வந்திருக்கும்போது இது என்ன?…” என்றார் வளர்மதி.
சாவித்ரி எதுவுமே பேசவில்லை. பொறுமையாய் தான் நின்றிருந்தார். அது நிச்சயம் ராம்நாத் மன்னிப்பு கேட்டதினால் அல்ல.
எத்தனைபேரை பார்த்திருப்பார் அவரின் வாழ்க்கையில். எதற்கோ கட்டுப்பட்டு அவர் இத்தனை மன்னிப்பு கேட்கிறார் என்று கண்டுகொண்டார் சாவித்ரி.
“ஆமா, உள்ள போகலாம். தேவையில்லாம எதுக்கு பேச்சு?…” என்ற ஷ்யாமளா ராம்நாத்தை உறுத்து விழித்துவிட்டு நகர்ந்துசெல்ல, மற்றவர்களும் நகர்ந்தனர்.
அனைவரும் செல்லும்வரை பிரத்யூக்ஷா இறுதியாய் தேங்கி நின்றவள், ராம்நாத்தின் முன் சொடுக்கிட்டு அழைக்க,
“ஏய் என்ன?…” என ராம்நாத் மொத்த கோபத்தையும் அவளின் மீது திருப்ப,
“ஒருநிமிஷம் இங்க பாரேன்…” என்ற பிரத்யூக்ஷா தன் பாதத்தினை காண்பித்தாள்.
“இதோ என் காலுக்கு கீழ, மண்ணும் குப்பையும். இது யார் தெரியுமா?…” என்று காலணியால் அளந்து காண்பித்தவள்,
“நீ, நீ தான். ராம்நாத்…” என்று கூற,
“என்ன?…” என்று கொதித்து போன ராம்நாத் பேசும்முன், காறி உமிழ்ந்தவள்,
“உன்னையும் ஒருத்தி பெத்துருக்கா பாரேன். அவளும் மனுஷியே இல்லை. நீயும் மனுஷனே இல்லை. என்ன ஜென்மங்கடா நீங்க? இவ்வளோ பாவமும் உன்னை சும்மா விடாது….” என்று அத்தனை ஆக்ரோஷமாய் கூறியவள் விழிகளில் நீர் கோர்த்து நின்றது.
எப்போதும் கோபமென்றாலும் தீயாய் பார்ப்பவள் கண்களில், கோபத்தை தாண்டிய அந்த கண்ணீரே கயல்விழியை பற்றி தெரிந்துகொண்டதை தெரியப்படுத்திவிட்டது.
“இனி உனக்கு நரகம் தான். எங்கம்மாவுக்காக கூட இனி உன்னை விடப்போறதில்லை…” என்று எச்சரித்துவிட்டு சீற்றத்துடன் அவள் உள்ளே சென்றுவிட ராம்நாத்தின் பார்வை பிரத்யூக்ஷா காண்பித்த அந்த புழுதி மண்ணிற்கு சென்றது.
முகமெல்லாம் அவமான உணர்வு விஞ்சிக்கிடக்க எப்படி எப்படி தெரிந்தது என தலையை பிய்த்துக்கொள்ளாத குறையாய் நின்றார் ராம்நாத்.