திருமணம் சென்னையில் கோலாகலமாக நடந்தேறியது. ராம்நாத் என்ற ஒருவர் அங்கில்லாததில் ஒருவருக்கும் வருத்தம் இருக்கவில்லை.
அதனை நடத்துவதற்குள் தான் எத்தனை மனவுளைச்சல்களை தந்துவிட்டார் ராம்நாத்.
நினைக்கையில் ஒருவருக்கும் மனம் ஆறவில்லை. தன் மடியில் அமர்ந்திருந்த குழந்தையை வருடியபடி இறுக்கம் குறையாமலிருந்தான் கௌரவ்.
அவனருகில் வெண்ணிலா. குழந்தைக்கு உணவை ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தாள் கதை பேசியபடி.
திருமணம் முடிந்து மதிய உணவுநேரம் கடந்திருந்தது. வீட்டிற்கு கிளம்ப நல்லநேரத்திற்கு காத்திருந்து மண்டபத்திலேயே தான் அமர்ந்திருந்தனர்.
முழுமனதாய் என்னதான் சந்தோஷம் என்றாலும் அதையும் தாண்டிய கசப்பாய் ராம்நாத்தின் செய்கையும், நடிப்பும்.
முகம் இன்னுமே கசங்கி போயிருந்தது கௌரவ்விற்கு. கௌசல்யாவும் மற்ற குடும்பத்தினரும் வந்தவர்களை கவனிக்க கீழே இருக்க, கௌரவ்வுடன் வெண்ணிலா மாடி அறையில் அமர்ந்திருந்தாள்.
எத்தனை புன்னகையும், பூஞ்சிட்டாய் சந்தோஷத்துடன் வளையவந்த குழந்தை என்று பார்த்தபடி இருந்தனர் இருவருமே.
கதவு தட்டப்பட கௌரவ் எழுந்து சென்று திறந்ததும், உள்ளே நுழைந்தனர் ஆகர்ஷனும், பிரத்யூக்ஷாவும்.
பிரத்யூக்ஷா முகமெல்லாம் கலங்கி கண்கள் சிவந்துபோய் இருந்தது. இன்னும் அவள் சரியாகியிருக்கவில்லை.
ஆனாலும் எதையும் காண்பித்துக்கொள்ள கூடாதென முகத்தினை சாதாரணம் போல் வைத்திருந்தாள் புன்னகையுடன்.
“என்னடா லஞ்ச சாப்பிட்டாச்சா?…” என்று சிரிப்போடு மகளிடம் கேட்கவும், இருவரையும் பார்த்த குழந்தை கௌசல்யா கை நீட்டி இருவரையும் அழைத்தாள்.
“ஓஹ், எஸ். ரைட் ரைட்…” என்று அனைவரையும் பார்த்துவிட்டு குழந்தை சிரிக்கவும், பேசி பேசி பிள்ளைக்கு மருந்தை ஊட்டி மீண்டும் தட்டிக்கொடுத்து உறங்க வைத்தனர்.
சிலநிமிடங்கள் மௌனம் அந்த அறையில். கௌரவ் எதற்கும் வாய் திறக்கவில்லை.
காலையிலேயே அத்தனை கோபம். ஆனாலும் திருமணம் முடிந்து சற்றுநேரத்தில் குழந்தைக்கு காய்ச்சல் காணும்வரை அனைவருமே சாதாரணம் போல தான் இருந்தனர்.
திருமணம் முடிந்த சிலநிமிடங்களிலேயே பிள்ளை முகம் வாடி சோர்ந்துபோய் ஆகர்ஷனின் கைபிடித்ததுமே பிள்ளையின் சூட்டுலில் கண்டுகொண்டான் அவன்.
மற்றவர்களின் கவனத்தினை கவராதவாறு பிள்ளையை அள்ளிக்கொண்டு மாடிக்கு விரைந்துவிட, அவளை விசாரித்தவர்களிடம் ஆளுக்கொரு காரணம் கூறி சமாளித்தனர்.
ஒருவழியாய் மணமக்களுக்கு ஓய்வு கிடைத்ததுமே கௌரவ் வெண்ணிலாவுடன் வந்துவிட்டான்.
“சாதாரண காய்ச்சல் தான் கௌரவ். முகத்தை இப்படி வச்சுக்காத…” என கௌரவ்வின் மௌனத்தை கலைக்க முயல,
“அத்தான், இதெல்லாம் ஒரு காய்ச்சலா? தூங்கி எழுந்ததும் குதிக்க ஆரம்பிச்சிருவா பாருங்க…” என பிரத்யூக்ஷாவுமே சமாளிப்பாய் புன்னகைத்தாள்.
ஆகர்ஷனிடம் மௌனம் காண்பித்தவன், பிரத்யூக்ஷா அழுகையை அடக்கிக்கொண்டு கூறியதில் அப்பட்டமாய் அவளை முறைத்தான்.
“இவ்வளோ சொல்றாங்களே, எதுக்கு நீங்க முறைக்கறீங்க? அந்தநேரம் சொல்லியிருந்தா மட்டும் அந்த காய்ச்சலை வாங்கிடுவீங்களா நீங்க? சும்மா…” என்ற வெண்ணிலா,
“பிரத்யூக்கா நல்லா சமாளிக்கறீங்க….” என்றாலும் அவளின் தவிப்பும் புரிந்தது.
“குழந்தைக்கு பெருசா உடம்புக்கு எதுவுமே வந்ததில்லை. காய்ச்சல் வந்தாலும் சுருண்டு படுத்திடவேமாட்டா நிலா. அதான்….” என்று கரகரத்த குரலை சரிசெய்தபடி பேச,
“ப்ச், பிரத்யூ…” என்றான் ஆகர்ஷன் ஒரு கையினால் மனைவியை தோளோடு அணைத்துக்கொண்டு.
அனைவரும் பேசிக்கொண்டிருக்க விக்ரம் வந்துவிட்டான் மாடிக்கு அவர்களை தேடி.
“அண்ணா இன்னும் அரைமணி நேரத்துல வீட்டுக்கு கிளம்பனுமாம். அம்மா சொல்லிவிட்டாங்க. முதல்ல ஆகர்ஷன் அண்ணா வீடு. அடுத்து அண்ணியோட வீடு…” என்று சொல்ல சட்டென ஒரு பரபரப்பு ஆகர்ஷனுக்கும், பிரத்யூக்ஷாவிற்கும்.
“ஓகே, நாம கிளம்புவோம். பாப்பாவை நீங்க தூக்குங்க….” என்று பிரத்யூக்ஷா கூற,
“இன்னும் நேரமிருக்கே. ஏன் அவசரப்படற பிரத்யூக்ஷா?…” என்றான் கௌரவ் அதட்டலுடன்.
“விடு பிரத்யூ, கிளம்பும்போது கீழே போயிப்போம்…” என ஆகர்ஷனும் சொல்லிவிட,
“சரி நான் கீழ இருக்கேன். நீங்க இருங்க…” என கீழே சென்றுவிட்டாள் அவள்.
“நானும் கீழ போறேனே…” என நிலாவும் கூற, இன்னும் அப்பட்டமான முறைப்பு கௌரவ்வின் முகத்தில்.
“ப்பாஹ், பையர் கௌரவம்…” என எழுந்தவள் மீண்டும் அமர்ந்துவிட்டாள்.
“சரி சரி சண்டை போட்டுக்காதீங்க. நான் போறேன். கிளம்பறதுக்கு பத்துநிமிஷம் முன்னாடி சொல்றேன். வாங்க…” என்று ஆகர்ஷன் விக்ரம்மை அழைத்துக்கொண்டு கீழே சென்றுவிட,
கௌரவ் வேஷ்டியை நன்றாக இழுத்துவிட்டபடி கால்களை நீட்டி கட்டிலில் அமர்ந்துவிட்டான் கௌசல்யாவின் அருகில்.
சந்தோஷத்திற்கு குறைவின்றி தான் நடந்தது திருமணம். ஆனாலும் இந்த சிறு சங்கடம் திருஷ்டி போல் அமைந்துவிட்டது.
“இது என்னாலையும் தான் இல்ல?…” என வெண்ணிலா கேட்க அவளை இமை உயர்த்தி பார்த்தவன் எதுவும் வாய் திறக்கவில்லை.
“நான் தான் மார்னிங் உங்களை பார்க்க வந்தேன். கூட பாப்பாவும் வர இப்படி நடந்திருச்சு….” என்றவள் முகம் கசங்கிவிட்டது.
அப்போதும் கௌரவ்விடம் மௌனம் தான். ஆனால் வார்த்தைகள் சொல்லாததை அவன் விழிகள் கூறியது.
அன்று வெண்ணிலா இல்லை என்றாலும் அவர் ஏதேனும் நிச்சயம் செய்திருக்க கூடும் தான்.
ஏன் தாலியை கட்டவிருக்கும் நேரத்தில் கூட செய்திருக்கலாம். செய்யக்கூடியவர் தானே?
நினைக்க நினைக்க ஆறவில்லை இருவருக்குமே. ஒரு மனிதனிடம் துளியளவு கூட மனிதாபிமானமின்றி இருக்குமா என இபோதும் வெண்ணிலாவிற்கு தாளவில்லை.
அதிகாலை முகூர்த்தம். நள்ளிரவிலேயே தயாராக ஆரம்பித்துவிட்டனர் அனைவருமே.
பட்டெடுத்து இடைப்பட்ட நாட்களில் ராம்நாத் என்னும் ஒருவரோடு எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை வெண்ணிலாவிற்கு.
செய்யவேண்டிய அனைத்தையும் பெண் வீட்டினரை போலிருந்து எடுத்து செய்ததெல்லாம் ஆகர்ஷன் குடும்பத்தினர் தான்.
ஏன் ஸ்ரீவத்சன், காவேரி கூட வெண்ணிலாவின் பக்கம் போல் தான் தெரிந்தனர் இந்த திருமணத்தில்.
அதில் ஏக கோபம் சாவித்ரியின் அக்கா மகனான குமரனுக்கு. தன்னை எதற்கும் தேடாமல் செய்கிறாரே என்று.
“என்னவோ அவன் தான் பொண்ணுக்கு தகப்பன் மாதிரி வந்து நிக்கறான். அப்பாம்மா ஸ்தானத்துல நின்னு நாம தான் கை பிடிச்சு குடுக்கனும் தெரியும்ல…” என்று வேறு வளர்மதியிடம் ஒரு மிரட்டு மிரட்டியிருந்தார்.
“நீங்க இதை சொல்லி கோவிச்சிக்கிட்டா அதையும் கூட அவங்களையே தான் செய்யவைப்பாங்க சாவித்ரி பாட்டி. சரியாப்பா?…” என சுனந்தா அதற்கும் அடக்கிவைத்தாள்.
இவ்வாறாக திருமண வேலைகள் எதற்கும் எங்கேயும் யாருக்காகவும் தேங்கி நில்லாது நடந்து இதோ ஆகர்ஷனின் ரிசப்ஷன் நடந்த மண்டபத்தில் நிலா, கௌரவ்வின் திருமணம்.
சொந்தங்கள் ஒருவரையும் விடவில்லை. மறைமுகமாகவே ராம்நாத் தன் பிடித்தமில்லாமையை முகத்தில் வைத்துக்கொண்டே சுற்றினார்.
கேட்பவருக்கெல்லாம் உடல்நிலை என்னவோ சரியில்லை என்பதாக சொல்லப்பட்டது அவரால்.
அப்போதுதானே திருமண நேரம் தான் செய்யவிருக்கும் நாடகத்தில் அனைவரும் பதறக்கூடும் என்று நெஞ்சில் கை வைத்தபடி சோர்வுடன் அனைவரையும் வரவேற்றார்.
இப்படியாக முதல்நாள் நிச்சயதார்த்தம் முடிந்து திருமண முகூர்த்தத்திற்கு தயாராகி இருக்க அந்த நல்லிரவிற்கும் அதிகாலைக்குமான இடைப்பட்ட பொழுதில் மணப்பெண்ணின் அறையில் சலசலப்பு.
“என் ட்ரெஸ் தான் சூப்பர்….” என குழந்தை ஆரம்பிக்க,
“அப்போ என் ட்ரெஸ்? இன்னைக்கு நான் தான் ஹீரோயின் குட்டி மாமியாரே…” என்று வம்பிற்கு நின்றாள் வெண்ணிலா.
கௌரவ் குழந்தைக்கும் வெண்ணிலாவின் புடவை நிறத்தில் தான் உடை எடுத்திருந்தான்.
வெண்ணிலாவும் சேர்ந்தே எடுத்தது தான். ஆனாலும் திருமணத்தில் கலாட்டாக்கள் இன்றி எப்படி?
கௌசல்யா புன்னகையுடன் இதனை பார்த்திருக்க, குழந்தை அப்படி இருப்பதில்லையே.
“ம்ஹூம், என் ட்ரெஸ்…” என இடுப்பில் கை வைத்து குழந்தை மல்லுக்கு நிற்க,
“என்னோட ட்ரெஸ் தான். அதுவும் வெடிங் சேரில உன்னை நானா பீட் பண்ணிடுவேன் பாரு…” என்று வெண்ணிலா கண்ணடிக்க,
“கோல்ட் மூன், கௌவாப்பாட்ட கம்ப்ளைண்ட்…”
“நானும் கௌரவத்துக்கிட்ட டபுள் கம்ப்ளைண்ட்…” என்று அவளின் உயரத்திற்கு அமர்ந்துகொண்டு வெண்ணிலாவும் பேச,
இருவரும் அத்தனை பாந்தமாக இருந்தனர் பார்ப்பதற்கு. குழந்தைக்கும் அதிகம் கணக்காமல் குட்டியாய் ஜடையாரம் வைத்து பூ சுற்றப்பட்டு நெற்றிச்சுட்டி, ஒட்டியாணம் முதற்கொண்டு பூட்டப்பட்டிருக்க, தத்தி நடக்கும் தேவதையாய் கண்ணை பறித்தாள் குழந்தை.
“ஓகே உன் கௌவாப்பாக்கிட்ட கேட்போமா? யார் சூப்பர்ன்னு…” என நிலா சொல்லி முடிக்கும் முன் குடுகுடுவென அறையிலிருந்து வெளியேறினாள் குழந்தை.
“அச்சோ போச்சு…” என அனன்யா சத்தமிட,
“என்னவும் செய்ங்க. நான் ரெடியாகனும். நீங்களே போய் பாருங்க…” என்றுவிட்டாள் பிரத்யூக்ஷா.
“நானே போய் கூட்டிட்டு வர்றேன்…” என வெண்ணிலாவும் பிள்ளையின் பின்னால் சென்றாள்.
“ஹேய் நிலா…” என அப்போதுதான் வந்த சாவித்ரி அவள் செல்வதை கண்டு அழைக்க,
“விடுங்க விடுங்க. பொண்ணுக்கு மாப்பிள்ளையை பார்க்கனுமாம்….” என்றாள் பிரத்யூக்ஷா கண் சிமிட்டியபடி.
“என்ன விளையாட்டு இது? இன்னும் கொஞ்சநேரத்துல மேடைக்கு போகனும். வாத்தியம் ஆரம்பிக்க உக்கார்ந்துட்டாங்க…” என ஷ்யாமளாவும் வந்துவிட்டார்.