சுட்டுவிரல் நீட்டி உள்ளே செல்லுமாறு பாவனை செய்தவள் திரும்ப, அந்த சத்தத்தில் குழந்தை குஷியாகிவிட மீண்டும் ஒரு ஓட்டம்.
“அடடா, இவளை. விழுந்திடாத கௌசிம்மா…” என ஓட்டமும் நடையுமாக தானுமே பின்னே சென்றாள்.
இன்னொரு அறையிலிருந்து கதவை திறந்துகொண்டு வெளியே வந்த ராம்நாத் மீது மோத முதலில் வேறு யாரோ என நினைத்தவர் குழந்தையை பிடித்தார்.
“பாத்து…” என்றவர், கௌசல்யாவின் முகம் பார்த்ததும் அப்படி ஒரு கோபம்.
“நார்மேன்…” என பிள்ளையின் சத்தம் கேட்கவில்லை என்றாலும் சொல்லியது புரிய, இருந்த ஆத்திரத்தை எல்லாம் குழந்தையிடம் காண்பித்துவிட்டார் ராம்நாத்.
பிடித்து நிறுத்திய குழந்தையை அதேவேகத்தில் சுவற்றில் ஒரே தள்ளு தள்ளிவிட அலறிக்கொண்டு விழுந்தது குழந்தை.
“சனியனே…” என்றவரின் சத்தம் அருகில் வந்துவிட்ட வெண்ணிலாவின் காதிலும் விழ,
“மனுஷனாய்யா நீ…” என்றவள் ராம்நாத்தை நெருங்கிய வேகத்தில் பிடித்து கீழே தள்ளிவிட்டு குழந்தையை தூக்கிக்கொள்ள, தூரத்தில் பார்த்துக்கொண்டிருந்தவனும் வந்துவிட்டான் கௌசல்யாவின் பெயரை சொல்லிக்கொண்டு.
அவனுடன் அறையில் இருந்த ஆகர்ஷனும், விக்ரமுமே வந்துவிட அவர்களும் பார்த்தது வெண்ணிலா ராம்நாத்தை கீழே பிடித்து தள்ளியதை தான்.
கௌரவ் ஓடி சென்று பிள்ளையை வாங்கிக்கொள்ள, நெற்றி லேசாய் புடைத்து சிவந்திருந்தது.
“கௌவாப்பா….” என அவனிடம் பயத்தில் நடுங்கிப்போய் ஒண்டிக்கொண்டது குழந்தை.
“ஒண்ணுமில்லடா, ஒண்ணுமில்லடா…” என தட்டிகொடுத்தவன் ஆவேசமாய் ராம்நாத் புறம் திரும்ப,
“என்னண்ணி ஏன் அப்பாவை தள்ளி விட்டீங்க?…” என்றான் விக்ரம் ராம்நாத்தை தூக்கி நிறுத்தியபடி.
அப்போதுதான் வெளியே வந்த ஷ்யாமளாவும், சாவித்ரியும் கௌசல்யாவுடன் வேற இதனை கண்டு நெருங்கிவிட்டனர்.
நடந்ததை கூறவுமே அனைவரின் முகத்திலும் அவ்வளவு வெறுப்பு.
“என்னதான் வேணும் உங்களுக்கு?…” என சாவித்ரி கேட்க,
“என்னம்மா ஒரு பெரியமனுஷனை, அதுவும் மாபில்லையோட அப்பான்னு பார்க்காம இந்த பொண்ணு கீழ புடிச்சு தள்ளிவிடறா. அதை தப்புன்னு யாரும் சொல்லலை. என்னை கேட்கறீங்க?…” என்ற ராம்நாத் மகனின் கோபத்தினை கண்டு ஒருகணம் சுருக்கென்றது.
சென்றவர்களை காணவில்லையே என பிரத்யூக்ஷாவும், அனன்யாவும் கூட வந்துவிட்டனர் அங்கே.
“என்னாச்சு?…” என்றவள் தன் குழந்தையை பார்க்க பிள்ளை தேம்பிக்கொண்டிருந்தது.
“என்னடா, கௌசிம்மா…” என பதறி வாங்க, முகமெல்லாம் ரத்தமாய் சிவந்திருந்தது குழந்தைக்கு.
“எப்படி விழுந்தா? ஓடினாளே? கீழ விழுந்துட்டாளா நிலா?…” என வெண்ணிலாவிடம் கேட்க, விஷயம் வேறுவிதமாய் மாறுவதை கண்ட ராம்நாத்திற்கு வேறு வழியும் இருக்கவில்லை.
“விக்ரம்…” என்று லேசாய் அவன் மீது சரிந்தபடி தன் நெஞ்சை பிடித்துக்கொண்டவர்,
“என்னப்பா? என்ன சொல்றீங்க?…” என உண்மைக்கும் தந்தைக்கு நெஞ்சுவலியோ என அவன் பதற,
“இவ கீழ தள்ளி விட்டுட்டாளே. எனக்கு வலிக்குதேடா. விக்ரம்…” என்றவர்,
“கௌரவ், என் பையன் கல்யாணத்துல…” என்று திக்கி திணறி பேசுவதை போல் பேச,
“எமர்ஜென்ஸி, ஹாஸ்பிட்டல் போயிடலாம்….” என சட்டென சாவித்ரி ஒரு மருத்துவராக தான் யோசித்தார்.
ஆனால் ஆகர்ஷனும், கௌரவ்வும் கண்டுகொண்டனர். அதிலும் அப்போதுமே வெண்ணிலாவை கை காண்பித்து பேசியவரை அதற்குமேல் அங்கே நிறுத்தி வைப்பதில் விருப்பமில்லை.
“ஆமா, கண்டிப்பா எமர்ஜென்ஸி தான். அட்மிட் பண்ணிடுவோம்…” என்றான் ஆகர்ஷன்.
இதுதான் வாய்ப்பென்று சட்டென கௌரவ்வின் கைகளை பிடித்துக்கொண்ட ராம்நாத்,
“அப்பாவை விட்டு போய்டாதப்பா. கௌரவ், அப்பா உன்னை விடு போயிருவேன் போல இருக்கு…” என்றார் அவனை விட்டுவிடாமல்.
சாருலதாவும் தயாராகி அப்போதுதான் அங்கே வர, வந்ததுமே அழுகை போங்க, அத்தனை ஆர்ப்பாட்டம்.
“முதல்ல ஹாஸ்பிட்டல் போகனும். என்ன வேடிக்கை பார்த்துட்டிருக்கீங்க?…” என்றாள் கோபத்துடன்.
“அப்பாவை விட இப்ப இந்த கல்யாணம் முக்கியமா? முதல்ல அப்பாவை பார்ப்போம்…” என்று பேச, ஏற்கனவே ராம்நாத்தின் செய்கையில் திகைத்திருந்த வெண்ணிலாவிற்கு, சாருலதாவின் பேச்சும் அதிர்வை தந்தது.
வார்த்தைகளின்றி பார்த்தவள் கௌரவ்வின் அருகிலிருந்து விலகி நகர, கை பிடித்து வன்மையாய் இழுத்து அவளை தன்னருகில் நிறுத்தினான் கௌரவ்.
“நகர்ந்த கொன்னுடுவேன்….” என்று அவளிடம் மெல்லிய குரலில் மிரட்டியவன்,
“அவரோட ஆசையே இந்த கல்யாணம் தான். அதை நிறுத்த முடியாது. அவருக்கும் எதுவும் ஆகாது. இன்னும் எவ்வளோ பார்க்கவேண்டியதிருக்கு…” என கௌரவ் கூற,
“அண்ணா என்ன?…” என்றவளை,
“சாருலதா, உங்கப்பாவுக்கு எதுவும் ஆகாது. ஹாஸ்பிட்டல்ல ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் கயல்விழி இருக்காங்க. அவங்க பார்த்துப்பாங்க….” என்றான் ஆகர்ஷன் ராம்நாத்தை பார்த்தபடி.
விக்ரம்மின் கைகளில் துவண்டதை போல சரிந்திருந்தவர், ‘இவனுங்க பேசிட்டே இருக்கானுங்களே?’ என எரிச்சலில் பார்த்திருக்க, ஆகர்ஷன் கூறியதில் அரண்டு போனார்.
“பாருங்க அவரே மயங்கிட்டாறு. விக்ரம், என் கார்லயே கிளம்பு. நான் சொல்லிடறேன். நீ போகும்போதே எல்லாம் தயாரா இருக்கும். இங்கருந்து உனக்கு ஹெல்ப்க்கு ரெண்டுபேர் வருவாங்க…” என்று ராம்நாத் யோசிக்கும் அவகாசம் இன்றி வேகமாய் செயலாற்றினான் ஆகர்ஷன்.
அதற்குமேல் தனக்கொன்றுமில்லை என்று கூறவும் முடியாமல், கயல்விழி என்னும் பெயரிலேயே அடங்கியிருந்தவர் மருத்துவமனையில் என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தார்.
“விக்ரம் நீ போய்ட்டு வந்திடு. அங்க எல்லாம் பார்த்துப்பாங்க…” என்று சொல்லி அனுப்ப, மருத்துவமனையும், மண்டபமும் அருகில் என்பதால் விக்ரமும் வந்துவிட்டான்.
“கேஸ்ட்ரிக் ப்ராப்ளமா இருக்கும் போலன்னு சொன்னாங்க. மத்தபடி ஒண்ணுமில்லை…” என்று விக்ரம் கூறியும்,
“கல்யாணத்துல அப்பா இல்லை. என்னண்ணா, உங்களுக்கு வருத்தமில்லையா?…” சாருலதா கேட்க,
“சாரு பேசாம அப்பா கூட நீயும் போய் இரேன். உனக்கு ரொம்ப வருத்தம் வேற…” என்று விக்ரம் கூறிவிட்டான் அவளிடம்.
“ரொம்ப ஃபீல் பண்ணாதடா. உன் அப்பா ஆக்ட் பன்றார். நானும் சொல்லவேண்டாம்ன்னு நினைச்சேன். ஆனா நீ ரொம்ப பிழியறியே…” என விக்ரம் வருந்த கண்டு ஆகர்ஷன் ராம்நாத் நடந்துகொண்டதை கூறியிருக்க, அதில் கோபமான கோபம்.
அதற்கே சாருலதா வருந்தி பேசுகையில் எல்லாம் எரிந்து விழுந்தான் விக்ரம்.
“நீயல்லாம் என்னடா மகன்? இப்படி இருக்க? என்னை போய் போக சொல்றியே? கல்யாணம் நடத்த போறீங்க. தாலி கட்டும்போது நாத்தனார் நான் இருக்க வேண்டாமா?…” என்றும் அவள் பேச,
“எதாச்சும் ஒரு பேச்சுல நில்லு. இப்படியும் பேசற. அப்படியும் பேசற. நீ வேணா கிளம்பி போ…” என விக்ரம் பேச, கௌரவ்வின் முகத்தில் அத்தனை அமைதி.
ராம்நாத்தை அழைத்து சென்றதுமே பிரத்யூக்ஷாவிடம் நடந்ததை விவரிக்க, கோபமான கோபம்.
ராம்நாத் இருந்திருந்தால் பீஸ் பீஸாக கிழித்திருப்பாள். இப்போது ஒன்றும் செய்ய இயலவில்லை.
கௌசல்யா உள்ளுக்குள் இறுகி போனார். மகனின் திருமணத்தை நடத்துவதற்குள் எத்தனை இடர்பாடுகள்?
அதிலும் குழந்தையை தள்ளிவிட்டு, நெஞ்சுவலி போல் நடித்து அந்த பழியை வரவிருக்கும் மருமகள் மீது சுமத்த நினைத்து என நினைக்கையில் வெறுத்து போனது.
அதிலும் சாவித்ரியை வெண்ணிலாவை நிமிர்ந்து கூட பார்க்கமுடியவில்லை. அத்தனை அவமானமாய் உணர்ந்தார் கௌசல்யா.
“சங்கடப்படாதம்மா. இதுக்குமேல யோசிக்கவேண்டாம். எங்க நிலா சமாளிப்பா…” என சாவித்ரி தான் அவரை தேற்றினார்.
ஒருபுறம் கௌரவ் முறைத்துக்கொண்டே தான் இருந்தான் வெண்ணிலாவை.
‘எத்தனை தைரியம் இருக்கனும் இவளுக்கு? உடனே விலகி போறா.’ என பார்த்திருக்க அவனின் முறைப்பை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை வெண்ணிலா.