“அவக்கிட்ட பேச முடியுமா? ஒரு ஆதங்கம். சொன்னேன். சரி, மறக்காம கல்யாணத்துக்கு வந்திருங்க சின்னம்மா…” என்று பேசி வைத்துவிட்டார் குமரன்.
பேசி முடித்ததும் நிலாவிடமிருந்தும் அழைப்பு வந்துவிட்டது அவருக்கு. குமரனிடம் பேசியதாக ஆரம்பிக்கத்தான் செய்தார் சாவித்ரி.
“என்ன, வழக்கம் போல ப்ளா, ப்ளா. ப்ளாவா? சியரப் சாவி. ஓகே, இந்த நந்தா எனக்கும் சேரி எடுத்திருக்காளாம். அதை ரூம்லயே வச்சிட்டா போல. சொல்ல சொன்னா. பார்த்துக்கோ சாவி. பை…” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள் வெண்ணிலா.
குமரனிடம் பேசியபொழுது இருந்த மனநிலை முற்றிலும் மாறிவிட, சாவித்ரியின் முகத்தில் புன்னகை.
வேகமாய் சுனந்தா தங்கி சென்ற அறைக்கு சென்று விளக்கை ஒளிரவிட்டு பார்க்க கட்டிலின் ஓரத்தில் இருந்த மேஜையில் அட்டைப்பெட்டி இருந்தது.
அதில் மெஜெந்தா நிறத்தில் ஓரங்களில் சிறிதாய் ஜரிகையிட்டு பார்ப்பதற்கு அத்தனை எளிமையும், அழகுமாய் ஜொலித்தது புடவை.
மூன்று ஆயிரங்களுக்குள் இருந்தாலும் நிறமும், கசகசவென்றில்லாத வேலைபாடுகளுடான அந்த புடவையை ஆசையாய் வருடினார்.
பூப்பெய்த நேரத்தில் கூட புடவையோ, பாவாடை தாவணி என்றோ நிலா அணிந்ததில்லை.
சாவித்ரியுமே எதற்குமே அவளை கட்டாயப்படுத்தியதோ, இல்லை வற்புறுத்தியதோ இல்லை.
அவருமே பேத்திக்காக நிறையவே சேமித்து வைத்திருக்கிறார் தான். இருந்தாலும் அதனை அணியும் நாள் தான் எப்போதோ என்னும் ஏக்க பெருமூச்சு பெரிதாய் வந்தது.
அதற்குள் வேலைக்கு வரும் பெண்ணும் வந்துவிட அவருக்கு வழிவிட்டு வந்தமர்ந்துகொண்டார்.
என்ன இல்லை தங்களுக்கு? ராணுவத்தில் பணிபுரிந்து ஒரு விபத்தில் மரணித்த மகனும், மருமகளும்.
அதே ராணுவத்தில் மருத்துவராய் பணிபுரிந்துகொண்டிருந்தவர் பேத்திக்காக மட்டுமே இப்போது வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
ஒவ்வொன்றும் நினைக்க நினைக்க கனத்த நினைவுகள் மட்டுமே எஞ்சியது அவருக்கு.
———————————————-
கௌரவ் கை கடிகாரத்தை பார்த்தவாரு தனது கைப்பேசியிலும் கவனமாய் இருந்தான் அந்த விமான நிலையத்தில்.
இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடுவார்கள் என நினைத்தபடி லேசாய் அவனை தழுவ முயன்ற உறக்கத்தை விரட்டி தள்ளியவன் விழிகளுக்குள் கௌசல்யா.
“கௌவப்பா…” என மழலையில் அவனோடு கொஞ்சும் கிளியாய் சங்கீதம் படிக்கும் குழந்தை.
நினைத்தமாத்திரம் புன்னகை அவனின் இதழ்களின் ஓரம் லேசாய் அரும்பி பூக்க விழிகள் மீண்டும் வாயிலை அடைந்தது.
காத்திருப்பு இருக்கையில் இருந்து எழுந்தவன் வந்து அங்கிருந்த காபி ஷாப்பில் ஒரு காபியை வாங்கி பருகிக்கொண்டு வேடிக்கை பார்த்திருந்தான்.
வாங்கி இரண்டு மிடறு விழுங்கியிருப்பான். அதற்குள் பூங்கொத்தாய் பிஞ்சு கரம் ஒன்று அவனின் கால்களை கட்டிக்கொண்டதுமே புரிந்துபோனது யார் என்று.
குடித்துக்கொண்டிருந்த காபி கப்பை அப்படியே வைத்துவிட்டு குனிந்தவன் தன் பின்னிருந்து அணைத்திருந்த குழந்தையை முன்னெடுத்து அள்ளி நெஞ்சோடு வாரி அணைத்துக்கொண்டான் கௌரவ்.
“கௌவாப்பா…” என குழந்தை கௌசல்யாவும் கிளுக்கி சிரித்தபடி அவனின் கைகளில் துள்ளிகொண்டு பொங்கி சிரிக்க,
“ஹப்பா, இனி நாம கிளம்பற வரைக்கும் இந்த வாண்டை கைல பிடிக்க முடியாது…” என்றாள் பிரத்யுக்ஷா.
தன் சொந்த அத்தை மகளின் பேச்சை கேட்டதும் அவளை ஒரு பார்வை பார்த்தவன், அவளருகில் நின்ற ஆகர்ஷனை கண்டு தலையசைத்தான்.
“என்ன கௌரவ், வந்து ரொம்ப நேரமாச்சா?…” என்று ஆகர்ஷன் அவனின் தோள் தட்டி கேட்டு புன்னகைக்க, பதில் கூறாமல் தோளை மட்டும் குலுக்கிக்கொண்டான் கௌரவ்.
“பதில் சொல்லிட்டாலும்…” அதற்கும் பிரத்யுக்ஷா நொடித்துக்கொள்ள, மனைவியின் தலையில் லேசாய் தட்டிய ஆகர்ஷன்,
இருவரும் கிளம்புவதை புன்னகையுடன் பார்த்தவன் இன்னும் தன்னோடு பேசாமல் நின்ற ஷ்யாமளாவை பார்த்து புன்னகைத்தான்.
“ஷாமா கோவம்…” என்றாள் குழந்தை.
கௌரவ்வின் கைகளுக்குள் தன் குட்டி கைகளை விரித்து கண் அகற்றி பயம் காண்பிப்பதை போல கூறி, ரகசிய பாஷையில்.
“அப்படியா? எவ்வளோ?…” என தானுமே குழந்தையின் நெற்றியில் முட்டிக்கொண்டு அவளை போலவே ரகசியமாய் கேட்க,
“இவ்வளோ இவ்வளோ…” என்றது பிஞ்சு கையை கொஞ்சமாய் மட்டும் விரித்து, குவித்து காண்பித்து.
“அச்சச்சோ. அவ்வளோவா?…”
“ஆங். அவ்வளோ…” என்ற குழந்தை ஷ்யாமளாவை பார்த்து,
“கௌவாப்பா பாபம், பயந்து போயி…” என்று அவனின் கன்னம் பிடித்து காண்பித்து, உச்சு கொட்டி குழந்தை கூறவும், முறைப்பை விட்டுவிட்டு ஷ்யாமளா சட்டென சிரித்துவிட்டார்.
“நல்லா நடிக்கிறீங்கடா ரெண்டுபேரும்….” என்று இருவரின் காதையும் திருகிய ஷ்யாமளா,
“வந்தா நேரா வீட்டுக்கு வரமாட்டியோ நீ? இங்க வந்திருக்க?…” என்றார் உரிமையாய் கௌரவ்வின் தோளில் ஒரு அடி வைத்து.
“ரெஸ்ட்ல இருந்தேன்….” என்றான் கௌரவ் அவரிடம்.
எந்தவித மழுப்பலான பேச்சோ எதுவுமோ இல்லை. வந்தால் நேரமாகும், சுற்று என்று எதுவும் கூறாமல் தனக்கும் ஒய்வு தேவை என்று நேரடியாக கூற, அந்த தன்மை இப்போதும் அவன் மீதான மதிப்பை கூட்டியது ஷ்யாமளாவுக்கு.
“உன் பொண்ணு தான் கேட்டுட்டே இருந்தா. அப்பா காணும், காணும்ன்னு…” என்றவர்,
“கௌசிம்மா, நீ சொல்றியா? நான் சொல்லவா?…” என்றார் பேத்தியிடம் ஷ்யாமளா.
“ஆங், நானு நானு. பேபி பர்ஸ்ட்…” என்று கௌரவ்வின் கழுத்தை கட்டிக்கொண்டு சிணுங்கிய குழந்தை கை கால்களை உதைக்க,
“சரிடா. அதுக்குன்னு அவனை இப்படியா பண்ணுவ?…” என்றார் ஷ்யாமளா.
அதற்குள் ஆகர்ஷனும், பிரத்யுக்ஷாவும் வந்துவிட்டனர் அங்கே. வரும்பொழுதே இந்த ரகளை.
“ம்மா என்னாச்சு?…” என்றான் தாயிடம் ஆகர்ஷன்.
“உன் பொண்ணை நீயே கேளு. வந்ததுல இருந்து கதை சொல்லிட்டு இப்ப என்னன்னா நான் பர்ஸ்ட் சொல்லுவேன்னதுக்கு அவன் கழுத்தை கட்டிட்டு ஒரு ஆட்டம்…” என்றார் மகனிடம் ஷ்யாமளா.
“கௌசிம்மா…” ஆகர்ஷன் மகளின் முகம் நோக்கி குனிந்து பார்த்து கேட்க,
“பேபி பர்ஸ்ட் விஷ்…” என்றாள் குழந்தை.
“ஷ்யர், கண்டிப்பா கௌசிம்மா தானே எப்பவும் பர்ஸ்ட் விஷ்…” என்ற ஆகர்ஷன்,
“என்ன கௌரவ், கரெக்ட்டா?…” என்றான் கண் சிமிட்டி புன்னகையுடன்.
“ஆமா, அம்மாவோட விஷ் தான் பர்ஸ்ட். கௌசல்யாம்மா விஷ்…” கௌரவ் கூற,
“கௌவாப்பாக்கு பேபி அம்மா…” என குழந்தை அதனை கேட்டு எப்போதும் போல உடல் குலுங்க அண்ணார்ந்து பார்த்து முத்துப்பற்கள் மின்ன அப்படி ஒரு குதூகல சிரிப்பு கொள்ளை அழகோடு.
அனைவருமே நெகிழ்ச்சியுடன் இதனை பார்த்திருக்க கௌரவ்வின் முகமும் வெகுவாய் கனிந்திருந்தது.
“கௌவாப்பா அம்மா சொல்லு…” என்று வாய் பொத்தி கண்கள் சுருக்கி பிள்ளை கேட்க,
“ஹ்ம்ம், கௌசல்யா என் அம்மாடா….” என்றான் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு.
பிரத்யுக்ஷாவிற்கு தான் உள்ளமெல்லாம் கசங்கியது அவனின் வார்த்தையில் தொனித்த கரகரப்பில்.
“ஆன்ட்டி நீங்க உங்க கிப்ட்டை குடுங்க பர்ஸ்ட். இல்லைன்னா ப்ளைட் வர்ற வரை இப்படியே தான்…” என்று பிரத்யூக்ஷா சொல்லி முடிக்கும்முன்,
“கௌவ்வாப்பா ஆப்பி பர்த்டே, ஆப்பி பர்த்டே கௌவாப்பா….” என்று அவசரமாய் கத்தி வாழ்த்து கூறிய குழந்தை, கௌரவ்வின் கன்னங்களில் மாற்றி மாற்றி முத்தமிட்டது.
அந்தநேரம் காபி ஷாப்பில் அருகில் இருந்தவர்களும் மெலிதாய் கை தட்டி வாழ்த்து கூறினார்கள் கௌரவ்விற்கு.
“நா பர்ஸ்ட் விஷ். பேபி கௌவாப்பா…” என்று கழுத்தை இன்னும் கட்டிக்கொள்ள, கௌரவ்வும் பூவாய் அணைத்துக்கொண்டான் பிள்ளையை.
அதன்பின்னர் தான் ஆகர்ஷனும், பிரத்யுக்ஷாவும் வாழ்த்து கூற, ஷ்யாமளாவும் வாழ்த்தினார் கௌரவ்வை.
“பிறந்தநாள் முடியிறப்போ விஷ் பன்ற ஒரே குடும்பம் நம்மதா தான் இருக்கும். இது குடும்பம், இதுவும் குடும்பம் தான். நம்பனும்…” என குறும்பாய் பிரத்யுக்ஷா பேச,
“வாலு, அடங்கமாட்ட நீ…” என்றான் மனைவியின் தலையில் தட்டிய ஆகர்ஷன்.
“சரி, நீங்க போய் உக்காருங்க. நானும் கௌசல்யாம்மாவும் ஒரு ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு வர்றோம்…” என்று குழந்தையை வாகாய் கையில் ஏந்தியபடி விமானநிலையத்தினை வலம் வர துவங்கினான் கௌரவ்.
“கௌரவ் அத்தானை நான் இப்படி பார்த்ததே இல்லை. இப்பவும் ஆச்சர்யமா இருக்கு. அதுவும் உங்க பொண்ணு கூப்பிடவும் மிட்நைட்ல செண்டாஃப் பண்ண வந்திட்டாங்க பாருங்க…” என்றாள் பிரத்யுக்ஷா.
“இல்லைன்னா உன் பொண்ணு ப்ளைட் ஏறமாட்டாளே. அதுதான்…” என ஷ்யாமளா பேச,
“அப்பட்டமான பெருமை தான் இது….” என்றாள் கிண்டலாய்.
ஒன்றும் பேசாது ஆகர்ஷன் இதழோரம் வீற்றிருந்த புன்னகையுடன் தன் மகளையும், அவளுக்கு தாயுமானவன் போலிருக்கும் தன் தம்பியானவனையும் தான் பார்த்திருந்தான்.
இறுக்கம் தளர்ந்து கண்கள் சிரிக்கும் அளவான புன்னகை கௌரவ்விடத்தில். அது அவனின் கௌசல்யாவின் அருகில் மட்டுமே.