இப்படி யாருக்கேனும் நிகழ்ந்திருக்குமா என யோசித்து யோசித்து கடுப்பாகி மெல்லிய குரலில் கத்திக்கொண்டிருந்தாள் வெண்ணிலா.
அடக்கப்பட்ட புன்னகையுடன் மௌனமாய் அனைத்தையும் கவனித்தவன் விழிகள் மேலும் சீண்டலாய் பார்த்தது அவளை.
காலையிலிருந்து சிறு சிறு சஞ்சலமும், சந்தோஷமுமாய் இருந்தவளின் மனதில் இந்தநொடி முழுமையாய் அவர்கள் மட்டுமே.
அதிலும் கோபத்தில் மனைவி. தன் மீதான அவளின் கோபம் கூட அவனை அலையாட செய்ய, அசையும் மனதோடு விழிகளுக்குள் அள்ளிக்கொண்டிருந்தான் அவளின் அசைவுகளை.
சாதாரணமாகவா இந்த இரவு அவனுக்கு வேண்டும்? போதாத உணர்வுகள் எல்லாம் பொறுக்காமல் அலைமோதி அவர்களுக்குள் அடங்காமல் காதலாட காதலுடன் திமிற திமிற அள்ளி சுவைக்க காத்திருந்ததே.
நகைகள் அனைத்தும் கழற்றி வைக்கப்பட்டு விறுவிறுவென பாதங்கள் அழுத்தமாய் தரையை பதம் பார்க்க, டம் டம் என்ற நடையுடன் குளியலறை சென்றவள் பலமாய் கதவை சாற்றினாள்.
சட்டென்று வாய்விட்டே சிரித்துவிட்டான் கௌரவ். தன்னை கவனிக்கவில்லை, கவனிக்க தோன்றவில்லையே என்னும் ஆற்றாமையில் அவள் செய்யும் ஒவ்வொன்றும் அவன் கண்களுக்கு விருந்தாகிக்கொண்டிருந்ததை அவளால் அறியமுடியவில்லை.
ஆத்திரம் மட்டுமா கண்ணை மறைக்கும்? ஏமாற்றம், ஆற்றாமையும் கூட இதோ கண்ணை மறைத்திருக்க, ஆசையாய் தவித்து பார்த்திருந்தான் அவளின் அடுத்த செயல்பாடுகளை காண.
தலையசைத்து சிரிப்புடன் திரும்பியவன் பார்வை மீண்டும் அந்த குட்டி குழந்தையாய் புகைப்படத்திற்குள் அமர்ந்திருந்த தங்கவெண்ணிலவை வட்டமிட்டது.
“தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ…” மெல்லிய குரலில் அவனிதழ்கள் பாடலை முணுமுணுக்க,
“தொடாம கூட சுடும் போல?…” என இதழசைத்தவன் விரல்கள் கொள்ளை புன்னகை கொஞ்சிய குழந்தையின் கன்னத்தில் தொட்டு மீண்டது. அத்தனை சிரிப்பும், அழகும்.
அவனின் கவனம் அதிலிருந்தபோது கைப்பேசியில் குறுஞ்செய்தி வந்திருக்க, ஒளிர்ந்தது.
அதனை எடுத்து பார்க்க விக்ரம் தான் செய்தி அனுப்பியிருந்தான் கௌரவ்விற்கு.
புருவம் சுருக்கியபடி அதனை பார்த்தவன் சட்டென அழைப்பு விடுத்து பால்கனி கதவை திறந்துகொண்டு வெளியே வந்தான்.
“இல்லண்ணா, அப்பாவை பார்க்கனும்ன்னு சொல்லிட்டிருக்கா. இன்னும் பார்க்க அலோவ் பண்ணலை. கிருஷ்ணாப்பா இங்க தான் இருக்காங்க. ஆர்ஷ் அண்ணா யாரையுமே பார்க்க அலோவ் பண்ணக்கூடாதுன்னு இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்திருக்காங்களாம்….”
“ஹ்ம்ம், நல்லது….” என்றுமட்டும் கூறினான்.
“அண்ணா இன்னொன்னு சொல்லனும். இப்ப சொல்லவான்னு தெரியலை…” என விக்ரம் கூற,
“என்னன்னு சொல்லு விக்ரம்…” என்றான் கௌரவ்.
“சாரு, சாரு பேசறது எதுவுமே சரியில்லைண்ணா….”
“என்னவாம்? என்ன சொல்றா?…”
“இந்த கல்யாணம் நடக்க போறதால தான் அப்பாவோட உயிருக்கு ஆபத்து, அண்ணியால தான் ஆபத்து அது இதுன்னு உளறிட்டு இருக்கா. இன்னும் குடும்பத்துல என்ன நடக்குமோன்னு எல்லாம் தேவையில்லாம பேசிட்டிருக்கா…” என்றவன்,
“பேசாம சொல்லிடவா, அப்பா நடிக்கத்தான் செஞ்சார். அவருக்கு எதுவும் இல்லைன்னு…”
“ம்ஹூம். நோ…”
“அண்ணா…”
“நீ சொன்னாலும் நோ யூஸ் விக்ரம். அதுக்கும் சாரு ஒரு காரணம் தேடுவாளே தவிர அந்த மனுஷனுக்காக தான் யோசிப்பா. எந்த உண்மையும் எப்போ தெரியனுமோ அப்போ தெரிஞ்சா தான் மதிப்பு…”
“அண்ணா, என்ன சொல்றீங்க?…”
“விக்ரம், நீ சாப்பிட்டாச்சா? இல்லைன்னா போய் முதல்ல டின்னர் எடுத்துக்கோ. அண்ணா வரவும் அவங்க டேக்கோவர் பண்ணிப்பாங்க. நீ எதையும் யோசிக்காத. மார்னிங் இங்க வா. புரியுதா?…” என வரிசையாய் கட்டளை பிறப்பிக்க,
“ஓகே அண்ணா. குட்நைட்….” என்றவன்,
“அச்சோ, நோ குட்நைட்…” என்றுவேறு கூறி அவசரமாய் இணைப்பை துண்டித்திருந்தான்.
அவனின் இறுதி பேச்சில் மெலிதான புன்னகை கௌரவ்வின் முகத்தில். ஆனாலும் ராம்நாத் அங்கே செய்யும் ரகளையை எண்ணி மீண்டும் ஆகர்ஷனுக்கு அழைத்தான்.
“டேய், என்னடா பன்ற?…” என எடுத்ததும் ஆகர்ஷன் ஆச்சர்யமாய் கேட்க,
“அந்தாள் உயிரோட, சுயநினைவோட இருக்கனும். எனக்கு அதுதான் வேணும்…” என்றுமட்டும் பேசினான் கௌரவ்.
அந்த வார்த்தைகளின் பின்னிருந்த வலியினை ஆகர்ஷனால் உணர முடிந்தது.
“போதுமா? இப்ப பாருங்க. இதுதான் என்னோட நைட் வியர். நீங்க சொல்ற மாதிரி நார்மலா இருக்கேன்…” பொட்டு வெடியாய் அவள் குரல் கீறிச்சிட்டு வெடித்தது அவனிடம்.
திரும்பி பார்த்தவன் உள்ளுக்குள் மூர்ச்சையாவதை போலொரு உணர்வினை தான் உணர்ந்தான்.
அதுவரையிருந்த அவன் மனதினுள் உணர்ந்த கனமான போராட்டம் எல்லாம் இறகாய் கலைந்திருக்க, மொத்தமாய் வெண்ணிலாவின் கௌரவமாய் திரும்பியிருந்தான்.
சர்ட்டின் வகை துணியில் முழங்கால் வரையிலான ஷார்ட்ஸ், தொளதொளவென்று கையில்லா ஷர்ட், ஒருபக்கமாய் மொத்தமாய் விரித்துவிடப்பட்ட கூந்தல் என்று அன்றொருநாள் நள்ளிரவில் கைப்பேசியில் அவளுடன் உரையாடிய பொழுது இருந்ததை போலவே நின்றாள்.