ஷ்யாமளா இருவரையும் விட்டு விலகி சென்றுவிட இன்னும் நெருங்கி நின்றான் ஆகர்ஷன்.
“ம்ஹூம், நான் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வர்றேன். நீ தூங்கு. வந்திருவேன் சீக்கிரம்…”
“போச்சு, வீரபாகுக்கு கரண்ட் ஷாக்கா? வாய்லையே வைங்க….” என கேலியாய் கூற,
“இந்த நேரத்துலயும் எவ்வளோ சேட்டை, வாலு…” என அவளின் கன்னம் கிள்ளியவன்,
“போய் சும்மா ஒரு பார்வை. என்ன பேசறாருன்னு கேட்போமே. ஹார்ட் பேஷன்ட் வேற…”
“டாக்டராம். இன்னைக்கு மனுஷன் பயத்துல போய் சேராம இருந்தா சரி…” என்று சிரித்தவள், அவனை அணைத்து இரவு வணக்கம் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
அவள் சென்றதும் ஆகர்ஷனின் மனதில் கௌரவ் கூறிய வார்த்தைகள் தான் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
உறவுகளின் மத்தியில் பேரவமானமாய் ராம்நாத். எத்தனை நாட்களுக்கு இந்த வேதனையோ என அவன் மனம் ஓலமிட்டது.
மீண்டும் மருத்துவமனைக்கு ஆகர்ஷன் வருகையில் நள்ளிரவை நெருங்கவிருந்தது நேரம்.
இரவுநேரம் நிசப்தத்தில் காலடி ஓசைகள் மட்டும் கேட்க, எதிர்ப்பட்டவர்கள் அவனுக்கு வைத்த வணக்கத்திற்கு பதில் வணக்கமும், புன்னகைத்து தலையசைப்பு தந்தான் அவன்.
அவன் வந்துவிட்ட செய்தி ராம்நாத் இருந்த அறையில் அங்கே பணிநேரத்தில் இருந்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தவனின் வேகத்தில் இன்னும் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தவர் திடுக்கிட்டு திரும்பி பார்த்தார்.
“டேய் உன்னை…” என வேகமாய் ஆகர்ஷனை நெருங்க,
“மெண்டலி இவர் சிக் போல டாக்டர். ரொம்ப வயலண்டா பிஹேவ் பன்றார்…” என்று அங்கிருந்த இன்னொரு மருத்துவர் கூற,
“நீங்க வெளில வெய்ட் பண்ணுங்க. நான் பேசிட்டு வர்றேன்…” அங்கிருந்த மற்றவர்களை அனுப்ப,
“இல்ல டாக்டர்…” என தயங்கினார் அந்த மருத்துவர்.
“நான் மேனேஜ் பண்ணிப்பேன். நோ ப்ராப்ளம்…” என்ற ஆகர்ஷன் அவர்களை வெளியேறும்படி கண்ணை காண்பிக்க, வேறு வழியின்றி வெளியேறினர்.
கதவை அடைத்துவிட்டு திரும்பியவன் இலகுவாய் உடலை தளர்த்திக்கொண்டு வந்து இருக்கையில் சாய்ந்தமர்ந்தான்.
“ஹ்ம்ம், அப்பறம், ரொம்ப சந்தோஷமா ரெஸ்ட் போல மிஸ்டர் கயல்விழி…” என்று கேட்க, அதுவரை கொந்தளிப்பாய் பார்த்து நின்றவர் சட்டென உடலளவில் ஒரு அதிர்வை காண்பித்தார்.
“நீங்க கயல்விழி ஹஸ்பண்ட் தானே? தப்பா எதுவும் சொல்லலையே?…” என்றான் வேண்டுமென்றே ஆகர்ஷன்.
“என்னடா வேணும் உனக்கு? அதுதான் நீ நினைச்சதை நடத்தி காமிச்சிட்டியே. அப்பறமும் என்ன?…” கோபமும், வேகமுமாய் ராம்நாத் கேட்க,
“பயமா இருக்கா ராம்நாத்?…” என்ற ஆகர்ஷன் கைகள் தான் அமர்ந்திருந்த இருக்கையில் தாளமிட்டது.
இருவர் மட்டுமிருக்கும் அறையில் மூச்சுக்காற்றின் சப்தம் தவிர்த்து இந்த ஓசை தான் இதயத்துடிப்பின் வேகத்தில் கேட்டுக்கொண்டிருந்தது.
தன்னை துளைத்து உருக்குலைக்கும் வெறியுடன் பார்த்தவன் பார்வையை ராம்நாத்தினால் எதிர்கொள்ள முடியவில்லை.
“இங்க பாரு, என்னதான் என் மகனுக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் இருந்தாலும் என்னை இப்படி பாடா படுத்தறன்னு நான் ஒருவார்த்தை சொன்னா அவன் உன்னை சிதைச்சிருவான் பார்த்துக்கோ…” என்றார் மிரட்டலாய்.
மௌனமாய் அடக்கப்பட்ட கோபத்துடன் பார்த்திருந்தவன் விழிகளில் ஏளனம் பிறக்க, அப்படி ஒரு சிரிப்பு ஆகர்ஷனிடம்.
என்னவாகிற்று இவனுக்கு என்பதை போல தான் ராம்நாத் பார்த்தார் அவனை.
“சொல்லேன். நீ சொல்லு. நானுமே சொல்ல நிறைய விஷயங்கள் வச்சிருக்கேன். எல்லாமே பேசி தீர்த்துடுவோம் ராம்நாத். அப்பறம் யார் யாரை சிதைக்கிறாங்கன்னு பார்த்திடுவோம்…” என்றவன்,
“கௌரவ் சந்தோஷம் எனக்கு அவ்வளோ முக்கியம்ன்னு சொல்லியும் என் பொண்ணையே காயப்படுத்தி என்னென்ன நாடகம் போடற நீ?…” என்றவன் வார்த்தைகளை அடக்க கீழுதட்டை மடித்து அழுத்தினான்.
“அவன் என் மகன், அவனுக்கு எது நல்லதுன்னு எனக்கு தெரியும். பொண்ணா பார்த்து வச்சிருக்கீங்க உங்க குடும்பத்துல? அதான் அப்படி பண்ணினேன். உனக்கென்னடா அக்கறை? அவன் என்ன உன்னோட ஒட்டி பிறந்தவனா? என் மகன், என் ரத்தம்…”
“ஷட்அப்…” என இரைந்த வேகத்தில் ஆகர்ஷன் எழுந்து நிற்க, நா வறண்டு போனது ராம்நாத்திற்கு.
பேச ஆயிரம் வார்த்தைகள். கொன்று போட கைகளும் ஆர்ப்பரிக்க முயன்று தன்னை கட்டுக்குள் வைத்தான் ஆகர்ஷன்.
“ஹ்ம்ம், உன் ரத்தம். அப்படியா? ஓவர் கொலஸ்ட்ரால் இல்ல?…” என்றவன் மீண்டும் அமர்ந்து,
“வயசான நேரத்துல வாக்கிங் ரொம்ப நல்லதாம். இன்னைக்கு முழுக்க வேற நீ பெட் ரெஸ்ட், இல்லையா? நட…” என்றான் ஆகர்ஷன்.
“டேய், என்ன சொல்ற?…” ராம்நாத் குழம்ப,
“அட நடய்யா, இப்போதைக்கு நடக்க தான் சொன்னேன். இல்ல தலைகீழா தொங்க விட்ருவேன்…”
“தெரிஞ்சா? என்ன பண்ணிடுவான் உன் புள்ளை? எங்க கூப்பிடு…” என தன் கைப்பேசியை அவரை நோக்கி வீசியவன்,
“ஹ்ம்ம், கால் பண்ணு. லாஸ்ட் டயல் கௌரவ் நம்பர் தான். பேசு…” என்றான் திமிராய்.
“இன்னைக்கு என்ன நாள்ன்னு தெரிஞ்சும், அதுவும் இந்தநேரம் கூப்பிட சொல்றியே?…” என்றார் சுதாரிப்புடன்.
“அப்படியா? உன் மகனை பத்தி நீயே கவலைப்படலை. கல்யாணத்தை நிறுத்த நினைச்ச நீ இப்ப மகன் வாழ்க்கையை பத்தி கவலையா? அதெதுக்கு எனக்கு? நீ கூப்பிடு. இல்லை நான் கால் பன்றேன். இப்பவே பேசிடலாம்…” என்ற ஆகர்ஷன்,
“நிறையவே அனுபவிச்சிட்டேன் ராம்நாத். அதுக்கெல்லாம் பதில் வேண்டாமா? இங்க நீ என்ன சொன்னாலும் என்னை மீறி யாரும் உன்னை நெருங்க முடியாது. நம்பவும் மாட்டாங்க. கிட்டத்தட்ட இப்ப நீ ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவன்ற அளவுக்கு நினைச்சிட்டாங்க….” என்றதும் ராம்நாத் முகம் வெளிறியது.
ஆகர்ஷன் சொல்வதை கேட்பதை தவிர்த்து வேறு எதுவும் செய்ய முடியாமல் மெல்ல நடக்க ஆரம்பித்தார் ராம்நாத்.