அறையில் நடக்கவும், சிறிதுநேரம் அமரவுமாக இருந்தவர் பார்வை கொலைவெறியுடன் ஆகர்ஷனை பார்த்தது.
“வயசானவனை அதுவும் ஹார்ட் பேஷண்டை இந்த பாடு படுத்துறியே?…” ராம்நாத் கேட்க,
“உன் உடம்பை பத்தி உன்னை விட எனக்கு நல்லா தெரியும் ராம்நாத். எதை செய்ய வச்சா உன் உயிர் போகாதுன்ற வரை தெரியும். நீ இருக்கனும்ய்யா, உயிரோட இருந்து என் அம்மாவை என்னோட அம்மாவா நான் எல்லாரும் பார்க்க சொந்தம் கொண்டாடற வரை நீ இருந்து பார்த்தே சாகனும். அதனால அதுக்குள்ள உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன். புரிஞ்சதா?…” என்றான் ஆகர்ஷன்.
அவன் தன்னை விடமாட்டான் என்பது புரிந்து போனது. வேறு வழியின்றி நடக்கவும் சிறிதுநேரம் அமரவுமாய் அவர் முழுதாய் தளர்ந்து விழும் வரை வெறித்த பார்வையுடன் பார்த்திருந்தான் ஆகர்ஷன்.
அத்தனை கோபம். ஒரு மருத்துவனான தன்னையே இப்படி இரக்கமின்றி செயல்பட செய்துவிட்ட ராம்நாத்தின் மீது குறையாத கோபம்.
“என்னால முடியலடா…” என படுக்கையில் விழுந்தவரை அசையாது பார்த்தவன் செவிகளுக்குள் அன்றைக்கு கௌசல்யா கதறிய கதறல் தான் எதிரொலித்தது.
“என்னாலையும் முடியலை. நீ எங்கம்மாவை அப்படி நடத்தியிருக்க கூடாது. கயல்விழி அம்மாவுக்கு பாவம் பண்ணியிருக்க கூடாது. எல்லாத்துக்கும் மேல காவேரி அத்தை, வெண்ணிலாவோட அம்மாப்பா…” என்றவன் வார்த்தைகள் அங்கே நிற்க,
“டேய்…” என்றார் உட்சபட்ச அதிர்ச்சியில்.
“நீயெல்லாம் என்ன ஜென்மம்? உன்னோட வாழ்க்கையில உனக்கு இரக்கம் காமிக்கிறவங்க கூட உன்னோட பாவத்துல பங்கு போட்டுக்கற அளவுக்கு நீ செஞ்சிருக்க. சுயநலம். அத்தனை சுயநலம்…” என்றவன் எங்கே அங்கே நின்றால் கழுத்தை பிடித்து கொன்றுவிடுவோமோ என்னும் அளவிற்கு உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் வெளியேறினான்.
விக்ரம்மை அங்கிருந்த ஓய்வெடுக்கும் அறையில் சென்று உறங்க சொல்லியிருந்தவன் நேராய் அங்கே செல்ல, கள்ளம் கபடமற்ற குழந்தை போல உறங்கிக்கொண்டிருந்தான் அவன்.
மெதுவாய் அவன் சிகை கோதிய ஆகர்ஷன், அவன் லேசாய் அசைந்ததும் நகர முயல, விழித்துவிட்டான்.
“ண்ணா, என்னண்ணா இந்தநேரம் இங்க? நீங்க கிளம்பிருப்பீங்கன்னு நினைச்சேனே?…” என நேரத்தை பார்த்தவன்,
“எல்லாம் ஓகே தானே?…” என்றான்.
“ஓகே தான்டா பெரியமனுஷா. உட்கார். வீட்டுக்கு தான் கிளம்பினேன். அப்படியே உன்னையும் பார்த்துட்டு போக வந்தா நீ முழிச்சிட்ட…” என வரவழைத்துக்கொண்ட இயல்போடு ஆகர்ஷன் பேசவும் விக்ரமும் புன்னகைத்தான்.
மேலும் அரைமணிநேரம் அவனுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு தான் வீடு திரும்பினான் ஆகர்ஷன்.
——————————————
வழக்கமான காலை தான். அயர்வுடனான சுகமான காலையாகவும் இருந்தது அன்றைய விடியல்.
வெண்ணிலா விழி திறக்கவுமே அவளின் பார்வை கௌரவ்வை தேடி துழாவ பால்கனியின் மறுபுறம் நின்றிருந்தவன் மீண்டும் உள்ளே வந்தான்.
“அங்க நின்னு என்ன பார்வை கௌரவம்?…” ஹஸ்கி வாய்ஸில் இன்னும் உறக்கம் குறையாத களைப்புடன் கேட்க,
“எப்போ எழுந்துப்பன்னு பார்த்திட்டிருந்தேன்….”
“ஹ்ம்ம், எழுந்தாச்சு…” என்றபடி இன்னொரு தலையணையை இழுத்து தனக்குள் அடக்கி அதில் மீண்டும் தலை சாய்க்க, கௌரவ் அவளருகில் அமர்ந்ததும் ஊஞ்சல் கட்டில் மெதுவாய் அசைந்தாடியது.
“ஹெவன் இல்ல…” என்றான் சிரிப்போடு அவளிடம்.
பட்டென்று விழி திறந்து பார்த்தவள் கண்கள் அவன் முகத்தினை ஆராய்ந்தது எதை கூறுகிறான் என்று.
“நல்ல தூக்கம். இந்த பெட் கூட ஹ்ம்ம்…” என்று இதழ் மடித்து ரகசிய பார்வை பார்க்க,
“கௌரவம், ஸ்டாப் இட்…” என்றாள் அவனை நோக்கி தலையணையை விசிறி எறிந்து.
இதற்கு அவனின் கைகளுக்குள் இருந்துகொண்டு அந்த இம்சையை தாங்கிக்கொள்ளலாம் போலிருந்தது.
தள்ளி நின்று பார்வையால் வதையாடல் புரிபவனை என்ன செய்துவிட முடியும்?
“ஸ்டாப் பண்ண நான் ஏதாவது ஆரம்பிக்கனுமே?…” என புன்னகைத்தவன்,
“ஓகே, கெட்அப். ரெடியாகிட்டா வெளில போகலாம்…”
“வெளில மீன்ஸ்?…”
“ஷ்யாமளாம்மா இன்வைட் பண்ணியிருக்காங்க. ஆர்ஷ் அண்ணா வந்திருவாங்க…”
“ஆமால்ல, ஓகே ஓகே….” என வேகமாய் எழுந்து குளியலறை வரை சென்றவள்,
“ஆமா, எல்லாருக்குமே நெக்ஸ்ட் டே மார்னிங் இப்படித்தான் இருக்குமா?…” என்று கேட்க,
“நிலா…” என்றான் அவன் சின்ன குரலில்.
“ஓகே ஓகே, இந்த டவுட் எல்லாம் சேர்த்து வச்சு கிளியர் பண்ணிடறேன்…” என்றவள்,
“நான் டப்பிங் தர்ற மூவிஸ்ல கூட அவ்வளோ வெக்கப்பட்டு அவ்வளோ டயலாக்ஸ். இங்க ஒண்ணுமே இல்லை…” என வேகமாய் சொல்லிவிட்டு குளிக்க சென்றாள்.
கௌரவ் அறையிலிருந்து வெளியே வர அந்தநேரமே ஆகர்ஷன் பிரத்யூக்ஷா வந்திருந்தனர்.
“கௌசல்யாம்மா, அனன்யா வரலையா?…” கௌரவ் கேட்க,
“இல்லடா, குட்டீஸ் எல்லாரையும் சமாளிக்கனுமே. அவ வீட்டுல இருக்கா…” என்ற ஆகர்ஷன் முழுதாய் கௌரவ் முகம் பார்த்தான்.
“ஹ்ம்ம்…” புன்சிரிப்புடன் ஆகர்ஷன் கேட்க,
“மூச்…” என்று ஆகர்ஷனின் வயிற்றில் லேசாய் குத்தினான் கௌரவ்.
“ஓகே, சாப்பிட்டு கிளம்புவோம். வெண்ணிலா ரெடியா?…” என்று கேட்க, பிரத்யூக்ஷா சாவித்ரியுடன் பேசிக்கொண்டிருந்தாள்.
சற்றுநேரத்தில் சுனந்தாவையும் அழைத்துக்கொண்டு அனைவரும் ஆகர்ஷனின் இல்லம் நோக்கி புறப்பட்டனர்.
செல்லும்வழியில் எல்லாம் வெண்ணிலாவும், பிரத்யூக்ஷாவும் சலசலத்துக்கொண்டே வர, சுனந்தா தான் திணறி போனாள்.
“ஹப்பா இதென்ன வாயா என்னது?…” என தலையை பிடித்துக்கொள்ள, சிரித்தபடி திரும்பியவள் பார்வையில் சட்டென கவனம்.
அதற்குள் ஆகர்ஷன் காரை ஒடித்து திருப்பி நிறுத்தியிருந்தான். நொடிநேரத்தில் நடக்கவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது.