“ரூம் லாக்ல இல்லையே த்தை. நீங்க வாங்க முதல்ல…” என கதவை திறந்து இருவரையும் உள்ளே அழைத்து அந்த அறைக்கு வெளிச்சத்தை கூட்டினாள் பிரத்யூக்ஷா.
கிருஷ்ணக்குமாரின் புகைப்படம் அவர்களை கனிவுடன் பார்வையால் அரவணைத்துக்கொண்டது.
“கொஞ்சநேரம் இருந்துட்டு போயிடுவேன்…” என உள்ளே வந்ததுமே ஓரிடத்திற்கு சென்று அமர்ந்துகொண்டார் கௌசல்யா.
உள்ளமெல்லாம் மரண வேதனை. ஆகர்ஷன் துடிப்புகள் ஒவ்வொன்றும் தாயின் தவிப்பில் வலு பெற்றுக்கொண்டே இருந்தது.
பிரத்யூக்ஷாவிற்கு தான் மனதெல்லாம் கனம். இப்படி உணர்வுகளால் பினைக்கப்பட்டிருப்பவர்களை நினைத்து நெஞ்சம் விம்மியது.
கௌரவ்வின் வேதனைகளை அவன் கூறாமலே ஆகர்ஷன் உணர்ந்து நெருங்குவதுண்டு.
“உனக்கு தெரியாதா? கௌரவ் அவன் பீலிங்க்ஸ் எதையும் எக்ஸ்ப்ரெஸ் பண்ணவே மாட்டான் பிரத்யூ. ஆனா என்னால எப்படி அதை உணரமுடியுது பாரேன்? என் தம்பி அவன். என் அம்மாவோட பிள்ளை…” என்று சொல்லும்பொழுதெல்லாம் நெகிழ்ந்துபோய்விடுவாள்.
ஆனால் இன்று இந்தநொடி உடைந்து போய் நின்றாள். கௌசல்யா சுவற்றில் சாய்ந்து தரையில் அமர்ந்திருந்தவர் தெய்வத்திடம் முறையிடுவதை போல கிருஷ்ணக்குமாரிடம் முறையிட்டுக்கொண்டிருந்தார்.
‘என் பிள்ளைக்கு நிம்மதியை தந்திடுங்க’ என்னும் வேண்டுதல் மட்டுமே. அவரின் தாயுள்ளம் மகனின் தாளாத துயரத்தினை உணர்ந்தாலும் இன்னதென்று கண்டறிய முடியாமல் தவித்தது.
ஆகர்ஷனும் கௌசல்யாவின் அருகில் வந்தமர்ந்துகொண்டான். மனமெல்லாம் பாரமேறிய உணர்வு.
‘தனியா என்னவோ நினைக்கிற கௌரவ். ப்ளீஸ், உடைஞ்சுடாத. நாங்க எல்லாரும் இருக்கோம்டா.’ என மானசீகமாய் அவனை ஆற்றுப்படுத்திக்கொண்டிருந்தான் ஆகர்ஷன்.