இருவரின் நிலை கண்டவளுக்கு வேறு ஒன்றும் ஓடவில்லை. எதுவும் பேசாமல் மீண்டும் தங்களின் அறைக்கு வந்தவள் வெகு யோசனைக்கு பிறகு நிலாவின் வாட்ஸ்ஆப்பிற்கு சிறு புள்ளியை மட்டும் வைத்துவிட்டு அன்று எடுத்த புகைப்படங்களை அனுப்பினாள்.
அந்தநேரம் அவர்களை தொந்தரவு செய்யவும் மனதில்லை. அதேநேரம் என்னவோ மனதும் சரியாய் இல்லை.
வெண்ணிலாவிடம் இருந்து தான் செய்தி. சங்கடமாய் இருந்தது பிரத்யூக்ஷாவிற்கு.
முதல்நாள் தான் திருமணமாகி இருக்க, புதுமண தம்பதிகளுக்கு இடையூறு செய்வதை போல இறக்கமாகிவிட்டது அவளுக்கே.
“என்னக்கா நீங்களும் இன்னும் தூங்கலையா?…” என அனுப்பியிருந்ததை திறந்து பாராமலே கண்டுகொண்டவள் பதில் அனுப்பவில்லை.
“அங்க எல்லாம் ஓகே தான? கௌசிம்மா எதுவும் வருத்தப்படலையே…” மீண்டும் அனுப்பியிருந்தாள் செய்தி.
அதற்குமேல் பதில் சொல்லாமல் இருப்பது நன்றாக இருக்காதென்று பிரத்யூக்ஷாவும் பதில் அனுப்பினாள்.
“இன்னும் தூங்கலையா நீ? நான் இப்பதான் வந்தேன். சரி போட்டோஸ் எல்லாம் ஷேர் பண்ணுவோமேன்னு பண்ணினா நீ என்னோட அரட்டையை ஆரம்பிக்கிற. போய் எங்கத்தானை கவனி…” என சில ஸ்மைலிகளை சேர்த்து அனுப்பிவைத்தாள் பிரத்யூக்ஷா.
“அவங்களை தான் கவனிச்சு தூங்க வச்சிருக்கேன். இதுக்கு மேல என்னவாம்?…” என்றவள்,
“ப்ச், ஓகே எதுவானாலும் சரியாகிடும். எனக்கு இதை நீங்க எப்படி எடுத்துப்பீங்களோன்னு ஒரு தாட். அவரையும் பிடிச்சு வாங்கிட்டேன் தான். ஆனாலும்…” என்று அனுப்ப,
“அவர் பேசினதெல்லாம் மைண்ட்ல ஏத்திக்கவே இல்லை இங்க யாரும். இதை நினைச்சு உங்களோட நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. அத்தான் வருத்தப்பட்டா நீ தான் சரி பண்ணனும்….” என அனுப்ப,
“அப்பபோ நான் போய் சரி பன்றேன். உங்களுக்கு குட் நைட்…” என்று அனுப்பிவிட்டு அவள் சென்றுவிட்டதன் அறிகுறி தெரியவும் பெருமூச்சுடன் எழுந்து மீண்டும் கிருஷ்ணக்குமாரின் அறைக்குள் நுழைந்தாள் பிரத்யூக்ஷா.
ஆகர்ஷன் கால் நீட்டி அமர்ந்திருக்க அவனின் மடியில் தலைசாய்ந்திருந்தார் கௌசல்யா.
அவள் வந்து என்னவென்று கேட்கும் முன்னரே சுட்டுவிரலை கொண்டு பேசாதே என்பதனை போல தலையசைத்தான் ஆகர்ஷன்.
கௌசல்யா உறங்க ஆரம்பித்திருப்பார் போலும். சீரான மூச்சுக்காற்றுடன் இதழ்கள் இன்னுமே எதையோ முணுமுணுத்தது.
‘கிருஷ்ணா’ என்னும் ஜபம் மந்திரம் போல. ஆழ்மனது இன்னுமே அவரின் வேண்டுதலை நிறுத்தவில்லை.
மனம் கனத்துவிட எதுவும் சொல்லாமல் ஆகர்ஷனுக்கு ஒரு தலையணையை கொண்டுவந்து முதுகிற்கு வைத்துவிட்டு கௌசல்யாவிற்கு போர்வையை போற்றிவிட்டாள்.
“நீ போய் படு பிரத்யூ…” என ஆகர்ஷன் கிசுகிசுப்பாய் கூற, பிரத்யூவின் முகத்தில் அத்தனை கோபம்.
‘கொன்னுடுவேன்’ என விரல் நீட்டி எச்சரிக்கவும் மெலிதாய் சிரித்தவன், வா என தலையசைத்து தன் இடதுகரம் நீட்ட அவனருகில் வந்தமர்ந்தாள் அவள்.
“தாச்சு…” என்றதும் அவன் தோளில் சாய்ந்தவள், மனம் வெண்ணிலா பேசியதில் தான் இருந்தது.
அந்தநேரம் துருவி கேட்கமுடியாதே? மறுநாள் பேசிக்கொள்ளலாம் என்னவென்று என ஆகர்ஷனிடமும் அதனை வெளிப்படுத்தவில்லை.
அங்கே அவனுமே ஏதோ ஒரு அலைக்கழிப்பில் தான் இருக்கிறான் என்று புரிந்தது. மௌனமாகிவிட்டாள்.
ஏற்கனவே இருவரும் வருந்திக்கொண்டிருக்க மேலும் மேலும் வருந்த செய்ய மனமில்லை.
ஆகர்ஷன், பிரத்யூக்ஷா இருவருமே உறங்கவில்லை. ஆனால் பெற்ற மகனின் மதி சாய்ந்ததாலோ என்னவோ இதயத்தின் கனம் குறைந்து மெல்ல கண்ணயர்ந்திருந்தார் கௌசல்யா.
தன் இறைவனான கிருஷ்ணக்குமாரிடம் அனைத்தையும் ஒப்படைத்த நிம்மதியோ, ஆதுரமாய் அவரை உறக்கம் தழுவியிருந்தது.
———————————————-
“இந்த நேரம் என்ன மெசேஜ்?…” கௌரவ்வின் திடுமென்ற குரலில் தூகிவாரிபோட்டுவிட்டது வெண்ணிலாவிற்கு.
“நீங்க தூங்கலையா கௌரவம்?…” என்றவளின் பார்வையில் மெலிதாய் சிரித்தவன்,
“சாப்பிடுவோமா பசிக்குது…” என பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க,
“வா…” என்று எழுந்தான்.
உறங்கினான் தான். ஆனால் உறக்கமும் இல்லாது, விழிப்பும் இல்லாத ஒரு மந்தநிலை.
தாயை இனம் காணமுடியாத அழுத்தமோ, அந்த முகம் அவனுக்கு உணர்த்த முயல்வதை புரியமுடியாத சஞ்சலமோ அவனிடம் உறக்கம் முழுதாய் அடையவில்லை.
இதில் வெண்ணிலாவின் எண்ணிற்கு வந்த குறுஞ்செய்தியின் சப்தம் மொத்த உறக்கத்தையும் விரட்டியிருக்க படபடவென்று அவள் செய்தியனுப்பும் வேகத்தில் நன்றாகவே விழித்துவிட்டான்.
“லைட்டா சாப்பிடலாம். மிட்நைட்டாகிடுச்சு. செம்ம பசி. நீங்களும் சாப்பிடலையா…” என்று அவனுக்கு எடுத்துவைத்து தானும் வைத்துக்கொண்டாள்.
“பிரத்யூக்கா தான் மெசேஜ் பண்ணியிருந்தாங்க. இன்னைக்கு எடுத்த போட்டோஸ் எல்லாம் அனுப்பியிருந்தாங்க. அதான் அப்படியே பேசிட்டிருந்தேன்…”
“பிரத்யூக்ஷாவா? இந்த நேரமா?…” உணவை எடுத்தவன் விழுங்காமல் நிமிர்ந்து பார்த்தான்.
“ஆமா, முதல்ல ரெண்டு டாட். அடுத்து போட்டோஸ் வந்தது. அப்பறம் நான் தான் மெசேஜ் பண்ணினேன்…” என சொல்லிக்கொண்டே கௌரவ்வின் முகத்தை ஆராய்ந்தாள் வெண்ணிலா.
கௌரவ்வின் முகம் அத்தனை யோசனையையும், கவலையுடனான கனிவையும் சேர்த்தே சுமந்திருந்தது.
ஆகர்ஷனை அவன் அறிவானே. தனித்து அழுத்தங்களில் அல்லாடும் நேரம், தானே அழைத்து தகப்பனாய் தோள் கொடுப்பவன்.
உள்ளமெங்கும் சிலிர்த்தது எப்போதும் போல். இந்த பந்தமும், சொந்தமும் கிடைக்க எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும் தான் என்று.
அந்த எண்ணங்களில் கௌரவ்வின் முகம் பல உணர்வுகளை பிரதிபலிக்க வெண்ணிலா அவனை கண்ணெடுக்காது கண்டாள்.
எதற்கோ அவன் அழுந்துகிறான் என்று புரிந்தது. எதையும் வெளிப்படையாக கேட்க முடியவில்லை. அது இன்னும் அவனை வருந்த செய்யுமோ என்றே அதனை கைவிட்டாள் வெண்ணிலா.
அந்த முகத்தில் வேதனையை மட்டும் அவளால் காணவே முடியாததை போலிருந்தது.
மௌனமாய் அழுத்தமாய் இருப்பவன் விழிகள் அவளிடம் உயிரோட்டத்தினை எப்போதும் பிரதிபலிக்கும்.
அப்படியும் சிலசமயங்களில் அதீத வேதனையை அதையும் தாண்டிய ஒரு யாசிப்பை காண்பித்துக்கொண்டிருந்தது.
நெஞ்சம் பிசைய அதனை பார்த்தாலும் அவனாக கூறாமல் எதுவும் கேட்க முடியவில்லை.
திருமணத்திற்கு முன்பே அவனின் தாய் வேறு, கௌசல்யா அல்ல என்பது மட்டும் அவர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார் ஷ்யாமளா.
ஆனால் இத்தனை நாளில் அதனை பற்றி எந்த இடத்திலும் கௌரவ் வாய் திறந்து மனம் பகிர்ந்தான் இல்லை.
அப்படியிருக்க தானாக கேட்கவும் முடியாமல், அவனாக கூறும்பொழுது கேட்டுக்கொள்வோம் என்றும் இருந்துவிட இப்போது இன்றைய நிகழ்வு ஒருவேளை அதனை நினைத்தோ என்று யோசித்தாள் வெண்ணிலா.
“என்ன இவ்வளோ பலமா யோசனை?…” என்று கௌரவ் கேட்டவன்,
“என்னை தூங்க வைக்க எதுவும் பெட் டைம் ஸ்டோரி இருக்கா?…” என்றான் சிரிப்புடன்.
“ஏன் கேட்கமாட்டீங்க? பாவமேன்னு நானும் அசையாம என் மடில தூங்க வச்சேன்ல. இதுல கதை வேறையா உங்களுக்கு?…”
“அசையாம?…” நமுட்டு சிரிப்புடன் உணவை விழுங்க, வெண்ணிலாவின் உள்ளமும் நிறைந்துவிட்டது கண்களை எட்டியிருந்த அவன் புன்னகையில்.
“நிலா…” அவளின் அமைதியில் தலையை மட்டும் அவள் அசைக்க,
“சாப்பிடு…” என்று கூறி உண்டு முடித்து எழுந்துவிட்டான்.
“எனக்கு போதும். நீ ஏன் எழுந்த?…” தன்னோடு அவளும் எழுந்ததை கண்டு கேட்க,
“எனக்கும் போதும்ன்னு அர்த்தம். கேட்டீங்களே பெட் டைம் ஸ்டோரி. அதை சொல்லலாமேன்னு தான்…” என்று அவளும் கண் சிமிட்ட,
“ஹ்ம்ம், சொல்லலாமே…” என காந்தம் போல் அவளை இழுக்கும் குரலில் சொல்லிவிட்டு கட்டிலில் சென்றமர, வெண்ணிலாவும் வந்துசேர்ந்தாள்.
“இப்படி பார்க்க எப்படி இருக்கு? அதை விட்டுட்டு குட்டி பிள்ளையாட்டம் முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு…” என கௌரவ்வின் முகம் நிமிர்த்தி அவன் தலை கோதியவள் மீசையை நீவிவிட,
“இதுதான் அந்த பெட் டைம் ஸ்டோரியா?…” என்றவன் அவளை இன்னும் நெருக்கி பிடித்து அணைத்துக்கொண்டான்.