“ஆமாமா, குழந்தை திட்டறது தெரியாம, உனக்கு ரைம்ஸ் சொல்ல வேற நேரங்காலமே இல்லையான்னு காமெடி பண்ணிட்டிருந்தாரே மிஸ்டர் வீரபாகு. இதுல இதெல்லாம் என்கிட்ட வச்சுக்காதன்னு வேற ஒரு மிரட்டல். பேசாம பேரை ராம்நாத்க்கு பதிலா வீரபாகுன்னு மாத்திருங்க…” என்று கூறிய பிரத்யூக்ஷா,
“எப்ப பாரு என் பிள்ளையோட, என்னோட மல்லுக்கு நிக்கிறது. இந்ததடவை நேர்ல சிக்காம தப்பிச்சிட்டார். அடுத்து நானே தேடி போறேன்…” என்று பல்லை கடித்துக்கொண்டு கூற,
“ப்ச், பிரத்யூ…” ஆகர்ஷன் அதட்டினான்.
“ஓகே, காம் டவுன்…” என தனக்கு தானே சொல்லிக்கொண்டு நேரம் பார்க்க பேச்சுக்களிலேயே அரைமணிநேரம் கடந்திருந்தது.
தானும் எழுந்து நின்றவன் குழந்தையை வாகாய் தூக்கி பிடித்துக்கொண்டான். உறங்கும் பிள்ளையின் நெற்றியில், கன்னத்தில் முத்தமிட்டு அவள் தலையை வருடியவன்,
“பத்திரமா பார்த்துக்கோங்க…” என்றான் அவர்களிடம் கௌரவ்.
“ஹ்ம்ம், நீ சொன்னா கண்டிப்பா பார்த்துக்காமலா?…” ஆகர்ஷன் எப்போதும் போல் அவனுக்காக பேச, குழந்தை கௌசல்யா கை மாறினாள்.
“கௌசிம்மாக்கிட்ட சொல்லிடு கௌரவ். ஊருக்கு போனதும் பேசறேன் நான்…” ஆகர்ஷனுக்கும் தொண்டை அடைத்தது.
கிளம்பும் நேரம் பெற்றவளை பார்த்து அணைத்து விடைபெறும் பாக்கியமில்லையே.
இருவரும் ஒரேவித உணர்வில் தான் தள்ளாடினர். ஆனால் வழிகளும் வேறு. வலிகளும் வேறு.
இருந்தும் இன்மை. இன்மையிலும் தேடல். தேடலின் தீரா தவிப்பு. அன்பும், அரவணைப்பும் வெவ்வேறுவித தாக்கங்களை தந்துகொண்டே தான் இருந்தது.
அத்தனையும் ஒற்றை புன்னகை கொண்டு ஒருவருக்கொருவர் மற்றவர்களுக்காக உணர்வுகளை உள்ளோடு மறைத்தனர்.
இதோ கௌரவிற்காக ஆகர்ஷன், ஆகர்ஷனுக்காக கௌரவ், பிள்ளைகளுக்காக தாய், அவர்களுக்காக அவர்களின் குடும்பங்கள் என்று உறவுகள் கைகோர்த்திருக்கும் அன்றில் பறவைகளின் அன்பெனும் ஆகாயம்.
மீண்டும் ஆகர்ஷனை அணைத்து விடுத்த கௌரவ் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு, கன்னம் வருடினான்.
“எழுந்ததும் தேடுவா. சண்டை போடுவா…” என்றான் கண்ணில் மின்னும் அன்பும், பெருமிதமுமாய்.
வார்த்தைகளின் பற்றாக்குறையோ என இருவருமே சட்டென்று மௌனத்தின் பக்கம் நின்றுகொள்ள, விழிகள் கலங்க ஒரு விடைபெறுதல்.
அவர்களின் தலை மறையும்வரை கௌரவ்வும், கௌரவ்வை திரும்பி பார்த்துக்கொண்டே அவர்கள் மூவரும் மறைந்தனர்.
ஒரு பெருமூச்சுடன் நின்றிருந்தவன் மனம் சமன்பட மறுத்தது. அங்கேயே நின்றுகொண்டிருக்க முடியாமல் மெல்ல நடை போட்டவன், மீண்டும் தன் இயல்பு திரும்ப பாதச்சுவடு அழுத்தம் கூட்டியது.
நடையின் வேகம் கூடியதுமே, பார்க்கிங்கை நோக்கி சென்றவன் தனது செரோகியின் முன் வந்ததும் அதனை லேசாய் ஒரு தட்டு தட்டிவிட்டு காரில் ஏறி அமர்ந்தான்.
மீண்டும் காஞ்சிபுரம் நோக்கி அவனின் பயணம். ஆழ்ந்த உறக்கமின்றி தன் தாய் தனக்காக காத்திருக்க கூடும் என்று அறிந்தவனாகிற்றே.
எங்கும் ஓய்வெடுக்க மனமில்லை. அதற்காகவே தான் நேராக விமானநிலையம் வந்ததும் கூற.
அந்த சிறிதுநேர ஓய்வு அவனுக்கு போதுமானதாக இருந்தது. விமானநிலையம் தாண்டி கார் பிரதான சாலையில் நுழைந்து காஞ்சிபுரம் பாதையில் பயணத்தை துவங்கியது.
எப்போதுமான நேரத்தைவிட அரைமணிநேரத்திற்கு முன்னதாகவே காஞ்சிபுரம் வந்தடைந்திருந்தான் கௌரவ்.
நடந்ததை அறிந்துகொள்வதற்காகவே தன் தாய் காத்திருக்க மகனை பார்த்ததுமே புன்னகையும், எதிர்பார்ப்புமாய் அந்தநேரமே எழுந்துவிட்டார் அவர்.
விரதநாட்கள் என்று அவர் பூஜை அறையின் அருகிலிருக்கும் அறையில் வந்து தங்கிக்கொள்வதுண்டு.
வாழ்க்கையின் முக்கால்வாசி நாட்கள் விரதம், பூஜை என்று அவர் ஒளிந்துகொள்ளும் அவலம் அவனால் சமீபமாக தானே உணரவும் முடிந்தது.
இப்போதும் அந்த அறையிலிருந்து தான் வந்திருந்தார். கௌரவ்வை பார்த்ததும்,
“உக்காரு கௌரவ். அம்மா காபி கொண்டு வர்றேன்….” என்று அந்த நேரத்திலும் மங்களகரமான முகமும், புன்னகையுமாய் தெய்வீக லட்சணம்.