இத்தனை இருந்தும் உடல்நிலை மட்டும் தேறவில்லை. இன்னுமே அதே ஒடிசலான தேகம். பெற்ற மகன் அருகில் பார்க்க கிடைத்தும் அவரின் ஆன்மம் அமைதி பெறவில்லை.
தன் பார்வையிலிருந்து மறைந்த தாயை பற்றிய எண்ணங்களுடன் சோபாவிலேயே அமர்ந்துகொண்டான் கௌரவ்.
————————————
“நாளை மறுநாள் கல்யாணம். அதுக்கடுத்து பேமிலி, குழந்தைன்னு எல்லாத்துக்கும் எங்கப்பாட்ட பர்மிஷன் கேட்டு நிக்கிற மாதிரி, புருஷன்கிட்ட கேட்டு நிக்கனும். என்ன வாழ்க்கைடா சாமி?…” என்று சுனந்தா வெண்ணிலாவிடம் புலம்பிக்கொண்டிருந்தாள்.
இரண்டு கைகளிலும் மருதாணி வைத்துக்கொண்டிருக்க அவளின் திருமணத்திற்காக அன்று தான் வந்து சேர்ந்திருந்தாள் வெண்ணிலா.
“என்ன சின்னம்மா, சொந்த ஊருக்கு நிலா வர்றதே எப்பவாவது தான். வர்ற நேரமாவது கூட ரெண்டுநாள் இருக்கறாளா? வந்ததும் என் பொண்ணை ஒப்படைச்சுட்டேன்னு என் கையில புடிச்சு குடுத்துட்டு கையெடுத்து குடும்பிட்டுட்டு கிளம்பிட்டா. இப்படி இருந்தா சொந்தம்ன்னு எப்படி ஒட்டுதல் வரும்?…”
குமரன் சாவித்ரியிடம் புலம்பி தீர்த்துவிட்டார். மகளோடு புடவை எடுக்க சென்றுவிட்டு வந்த நிலா அங்கே அரைமணி நேரத்திற்கு மேல் நிற்கவில்லை.
நிச்சயம் பேருந்தை தவறவிட்டுவிட்டு தாங்கள் வந்ததை வைத்து ஒரு பஞ்சாயத்தை ஆரம்பிப்பார் என்று அப்படியே கழன்றுகொண்டாள் வெண்ணிலா.
சுனந்தாவிடம் கூறாதே என்று பாடம் படித்தால் அதற்காகவே அப்படியே போய் ஒப்பித்துவிடுவாள்.
அதனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. சாவித்ரியிடம் பேசியதற்கு இதோ, சொந்த ஊர் வேறு, கண்டிப்பாக வந்துதானே தீரவேண்டும் என்று திருமணத்திற்கு முதல்நாள் வருகிறேன் என்றவளை அதற்கும் முதல்நாள் அழைத்து வந்துவிட்டார் சாவித்ரி.
“எனக்கும் அங்க தான் வேலை இருக்கு. கல்யாணம் முடிஞ்ச மறுநாள் கிளம்பிடுவோம்…” என பேசியே கரைத்து கூட்டி வந்திருந்தார்.
வந்ததில் இருந்து வருவோர், போவோர் எல்லாம் அடுத்த திருமணம் நிலாவுக்கு என்று பேச துவங்க, பெரிதாய் நகைச்சுவையை கேட்டதை போல அப்படி ஒரு சிரிப்பு.
“மாப்பிள்ளை இருந்தா சொல்லுங்க. ஆனா இன்டர்வ்யூ வச்சு தான் நான் செலெக்ட் பண்ணுவேன்…” என்று கேலியாய் கூற,
“கல்யாணம் நடந்த மாதிரி தான்…” என்று முறைத்துவிட்டு சென்றனர்.
“ஏன்டா நிலா?…” என சாவித்ரி கவலையுடன் பேத்தியை பார்த்தார்.
“ப்ச், ஏன் சாவி இதுக்கெல்லாம் பீல் பண்ணனும்? வாழ்க்கையில கல்யாணம் மட்டும் தான் முக்கியமா? அதை தாண்டி லைஃப் இல்லையா?…” என்றவளை கண்டு மனம் திடுக்கிட்டது சாவித்ரிக்கு.
“அதுவும் கல்யாணம் பண்ணினவங்க எல்லாருமே நூறு வருஷம் வாழ்ந்துடறாங்களா என்ன?…” என்று வேறு கூறி குமரனை நெஞ்சை பிடிக்க செய்துவிட்டாள்.
“ஆத்தா, சின்னம்மா. இவளை இப்படியெல்லாம் நந்தாக்கிட்ட பேச சொல்லிடாதீங்க. புண்ணியமா போகும்…” என்று பதறிப்போய் சொல்லி செல்ல,
“நெருப்புன்னா சுட்டுடுமா? ப்ச்,..” என்றபடி சுனந்தாவிடம் வர அவள் ஒருபக்கம் புலம்பினாள்.
“உனக்கு சுனந்தான்னு பேர் வைக்கிறதுக்கு பதில் புலம்பல்ன்னு வச்சிருக்கனும். எப்ப பாரு குறை. எதையுமே பாஸிட்டிவா பார்க்கமாட்டியா நந்தா?…” என்று அவளருகில் நிலா வந்தமர,
“இவளுக்கும் வைங்க…” என்று நிலாவின் கையை எடுத்து மருதாணி வைப்பவரிடம் சுனந்தா நீட்டினாள்.
“ஹேய் வேண்டாம்…” என சொல்வதற்குள் அவர் புள்ளியை வைத்துவிட,
“ஓகே, உள்ளங்கைல மட்டும் வைங்க…” என்று சொல்லி கையை கொடுத்தவள்,
“இங்க பார் நந்தா, நீ ஏன் பர்மிஷன் கேட்கனும்ன்னு நினைக்கிற? நீ ரூல் பன்றதுக்கு ஒரு குடும்பம் வர போகுது. உன்னோட பொறுப்பும் அதிகமாக போகுது. இப்ப உன் அம்மா எப்படி ஒரு குடும்ப தலைவியோ, இனிமே நீ அப்படி…” என்று சொல்ல,
“அப்படியா சொல்ற?…” என்றாள் சுனந்தா.
“ஆமா, நீ மட்டுமே உன் ஹஸ்பன்ட் கிட்ட சொல்லிட்டு போனும்ன்னு ஏன் நினைக்கிற. அவர் எங்க போறதுனாலும் உன்கிட்ட சொல்லனுமே. உங்க குடும்பத்தை நீயும் அவருமா ரன் பண்ணுவீங்க. உங்களோட ப்யூச்சரை நீங்க டிஸைட் பண்ணுவீங்க….” என்றவள்,
“ஆனா எந்த முடிவுக்கும் முன்னாடி நல்லா யோசிச்சு முடிவெடுக்கனும். இப்ப மாதிரி சட்டுன்னு டிஸைட் பண்ண கூடாது. ஏனா நீ ஒரு குடும்பத்தலைவி. உன்னோட ரெஸ்பான்ஸிபிலிட்டியை நீ தான் பார்த்துக்கனும். அதனால புலம்பாம ஜாலியா கல்யாணம் பண்ணு…” என்று பேச, குமரனுக்குமே ஆச்சர்யம் நிலாவின் பேச்சில்.
“இந்த பொண்ணை எந்த வகையில சேர்க்கன்னே தெரியலை சின்னம்மா. ஆனா இவளுக்கு மாப்பிள்ளை எப்படி அமையுமோன்னு தான் எனக்கே கவலையா இருக்கு…” என்று சாவித்ரியிடம் பேசிக்கொண்டிருக்க நிலா வந்துவிட்டாள்.
“சாவி, இங்க பாரேன்…” என தன் வலதுகை உள்ளங்கையை காண்பிக்க அதில் அழகாய் மருதாணி கோலம்.
“நல்லா இருக்குல, பேசாம என் பைக்கை வரைய சொல்லியிருக்கலாம்…” என்று அவரிடம் காண்பித்துக்கொண்டிருக்க பேச்சிக்களிடையில் சற்றுநேரத்தில் லேசாய் மழை பிடிக்க ஆரம்பித்தது.
லேசாய் மழை பிடிக்க ஆரம்பித்தது.
“கோடை மழை…” என்றார் சாவித்ரி.
“ஹப்பா இந்த வெயிலுக்கு எப்படி இருக்கு. சாவி ஒரு ரவுண்ட் போய்ட்டு வர்றேன்…” என தன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெண்ணிலா வெளியேற,
“நிலா ரெக்கார்டிங்?…”
“நேத்து தான் பொக்கிமான் பேசி முடிச்சேன் சாவி. இன்னும் ஒன் வீக் லீவ் பிக்காச்சு…” என்று பைக் சாவியை விரலில் சுழற்றியபடி துள்ளிக்கொண்டு வெளியில் நின்ற தனது பைக்கில் ஏறி அமர்ந்தாள் வெண்ணிலா.
“நான் எங்க வீட்டுல இருக்கேன் குமரா…” என எழுந்து வெளியே சென்றுவிட்டார் சாவித்ரி.
அருகில் இருக்கும் தன்னுடைய சொந்த வீட்டிற்கு லேசான தூறலோடு அவர் வந்துவிட, அங்கேயே தான் வெண்ணிலாவும் பைக்கில் சுற்றினாள்.
மழை வலுவாக எல்லாம் பெய்யவில்லை. ஆனால் குறைவும் இல்லை என்பதை போல பெய்துகொண்டிருந்தது.
அதுவரை இருந்த அனலுக்கு இதமாய் ஒரு குளிர்மழை. கேட்டை பிடித்தபடியே நிலாவை பார்த்துக்கொண்டே நின்றார் சாவித்ரி.
பைக்கில் சுற்றிக்கொண்டிருந்தவள் தூரத்தில் இருந்தே அதனை நிறுத்துவதும், தன் உள்ளங்கையை பார்ப்பதும் ஆச்சர்யப்படுவதும், பின் தன்னை நோக்கி கை காணபிப்பதுமாக இருக்க மருதாணி பிடித்துவிட்டது என்று புரிந்தது.
இதனை போலவே சட்டென்ற ஒரு பிடித்தம் திருமணத்திலும் பிடிக்கட்டும் என வேண்டிக்கொண்டார் சாவித்ரி.