“ஹ்ம்ம், ரெண்டுபேருக்கும் ஆபீஸ் பக்கம்ன்னா இன்னும் வசதி…”
“ஆமா சின்னம்மா. நாமளும் போய் எல்லாம் ஒதுக்கி குடுத்துட்டு வாழ வச்சிட்டு வரனும். இத்தனை நாள் பிஜில தங்கியிருந்தவ. இனி என்னன்னு வீட்டை பார்த்துக்க போறாளோ?…” அவருக்கு அவர் கவலை.
“அப்பறம் குமரா. இந்த கேட்டுக்கு முன்னாடி இருக்கற லைட் நேத்துல இருந்து சரியாவே எரியலை. என்னன்னு பார்த்துடு…”
“அதெல்லாம் நல்லா பார்த்துடலாம் சின்னம்மா….”
“முடிஞ்சா எல்லா வயரிங் கனெக்ஷனையும் செக் பண்ண சொல்லிடு குமரா. இனி மழை பிடிச்சிட்டா சிரமம். அடுத்து எப்போ வந்தாலும் அந்தநேரம் நாம பார்த்துட்டு இருக்க முடியாதே…” என்று சொல்ல,
“ஆமா, செஞ்சிருவோம்…” என பேசிக்கொண்டிருந்தவரின் எண்ணிற்கு அழைப்பு வந்துவிட்டது.
“ஒருநிமிஷம் சின்னம்மா…” என்று வெளியில் சென்று பேசிவிட்டு வந்தவர்,
“சின்னம்மா நிலா எங்க?…” என்றார்.
“தூங்கறா குமரா. தலைவலி போல…” என கூற,
“சரி, அதுவும் நல்லதுக்கு தான். இருக்கட்டும். இப்ப நீங்க என்கூட நம்ம வீட்டுக்கு வாங்க…” என்றழைக்க,
“கிளம்பும்போது வர்றோம் குமரா. எல்லாம் எடுத்து வச்சா தான் கிளம்ப சரியா இருக்கும்…”
“இல்ல சின்னம்மா, வந்துடலாம். இப்ப என்ன? இங்க தான இருக்கும். நீங்க வாங்க. நிலா எந்திக்கமுன்ன வந்திருவோம்…” என்று வலுக்கட்டாயமாய் கூட்டி சென்றார் குமரன்.
சாவித்ரிக்கும் ஏன் என்று தெரியவில்லை என்றாலும், நிலா சம்பந்தமாக என்பது மட்டும் புரிந்தது.
அவர் நினைத்ததை போலவே இருவர் அமர்ந்திருந்தார்கள் குமரனின் நடுவீட்டினுள்.
குமரனின் மனைவி வளர்மதி அவர்களிடம் பேசிக்கொண்டிருக்க, இன்னும் ஓரிரு சொந்தங்கள் மட்டுமே அங்கே எஞ்சி இருந்தனர்.
திருமண வீட்டின் களை இன்னும் மிச்சமிருந்தது. அன்று காலை தான் தன் புகுந்தவீட்டுக்கு கிளம்பி சென்றிருந்தாள் சுனந்தா.
மொத்த உறவுகளும் அவளை அங்கே கொண்டுபோய் விட சென்றிருக்க வீட்டில் நடமாட்டம் குறைவே.
சாவித்ரியை கண்டதுமே அவர்கள் இருவரும் கைகூப்பி புன்னகைத்து பார்த்தனர்.
திருமணவீட்டில் அவர்களை பார்த்த ஞாபகம் தான். ஆனாலும் சட்டென்று பிடிபடவில்லை சாவித்ரிக்கு.
“நம்ம மாப்பிள்ளை பக்க உறவு தான் இவங்க. பெங்களூர்ல இருக்காங்க…” என்று குமரன் அறிமுகம் செய்வித்தார் அவர்களை.
“ஒரே பையன். இஞ்சினியர் படிச்ச பிள்ளை. சொந்தமா ஆட்டோமொபைல் ஷாப் வச்சிருக்காரு. நல்ல சம்பாத்தியம் தான்….” என்று சாவித்ரியிடம் முணுமுணுத்தவர்,
“நம்ம நிலாவை பேசலாமான்னு கேட்டு வந்திருக்காங்க….” என்றார்.
என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை அவருக்கு. சட்டென்று பேசமுடியாமல் அமைதியாய் பார்த்தவர் முகத்தில் மெலிதான அறிமுக புன்னகை.
“என்ன குமரா திடீர்ன்னு சொல்ற…” என சாவித்ரி குமரனிடம் மெல்லிய குரலில் கேட்க,
“எனக்கே காலையில தான் தெரியும். கேட்டதும் ஒன்னும் புரியலை. நீங்க கிளம்பறதா சொன்னேன். உங்களை பார்த்து பேசறதுக்காக வந்திருக்காங்க….” என்றார் அவரிடம்.
“ஆமாங்க. உங்களை, உங்க பேத்தியை பார்த்தோம். ரொம்ப பிடிச்சு போச்சு. அதான் பொண்ணை அழைச்சுட்டு போக வந்ததோட உங்களையும் பார்த்து பேசிடலாமேன்னு தான் நாங்க மட்டும் இங்க இருந்தோம்…” என்றவர்கள்,
“இங்க எங்க ரிலேட்டிவ் வீட்டுக்கு போயிருந்தோம். போய்ட்டு வர கொஞ்சம் லேட்டாகிருச்சு. பொண்ணு, மாப்பிள்ளை கிளம்பும்போது நாம இதை பேச முடியாது பாருங்க…” என்றனர்.
மற்றவர்களுக்கு எப்படியோ. குமரனுக்கு இதில் அளவில்லா சந்தோஷமும், நிம்மதியும்.
குடும்பமும் நல்ல குடும்பம். கட்டுக்கோப்பாக இருக்க கூடிய குடும்பம். வெண்ணிலாவின் எதிர்காலம் இப்படி ஒரு குடும்பத்துடன் இருந்தால் தான் நிறைவாக இருக்கும் என நினைத்தார்.
“இவங்க பையனையும் நான் பார்த்தேன் சின்னம்மா. போட்டோ கூட இருக்கு. பார்க்கறீங்களா?…” என்றார் ஆர்வத்துடன்.
“இரு குமரா, முதல்ல பொறுமையா பேசுவோம். அவங்களுக்கு நம்மளையும் தெரியவேண்டாமா?…” என்று சொல்லியவரின் நிதானம் எல்லாம் குமரனிடம் இல்லை.
“இவங்க என் சின்னம்மா. உங்களுக்கே தெரியும். என் அம்மாவோட கூட பிறந்தவங்க. அவங்க மகன் பிள்ளை தான் தங்கவெண்ணிலா. எங்க பொண்ணு…” என்று கூற கேட்டவர்களிடம் புன்னகை.
“தாய் தகப்பன் இல்லாத பொண்ணு. ஆனா சொத்துபத்துன்னு ஏகப்பட்டது இருக்குங்க. பொண்ணு டிகிரி ஹோல்டர். வேலைக்கு போகவேண்டிய அவசியமில்லை. என் சின்னம்மாவும் ஹாஸ்பிட்டல் வச்சிருக்காங்க. ரெண்டு அப்பார்ட்மென்ட்ல இருந்து நல்ல வருமானம் வருது…”
“ரெண்டுலயுமே இருபது இருபது வீடு இருக்கு. லக்ஸுரி அப்பார்ட்மென்ட் தான். உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் இருந்தாலும் சொல்றேன். பொண்ணும் ஹாபியா இந்த கார்ட்டூன் சேனல்ல பொம்மைங்களுக்கு வாய்ஸ் குடுக்கறா. அதான், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்…”
“கல்யாணத்துக்கு அப்பறம் உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நிச்சயம் விட்டுடுவா. அப்பறம் என்ன? குடும்பம், குழந்தைன்னு ஆகிட்டா அதை எங்க செய்ய போறா?…” என வாய் ஓயாமல் அவராகவே அத்தனையும் ஒப்பித்துக்கொண்டிருக்க சாவித்ரிக்கே திக்கென்றது.
‘இவன் என்ன செய்கிறான்?’ என்று தான் பார்த்துக்கொண்டே இருந்தார்.
மூன்றாம் மனிதர்கள் முன் அவரால் சட்டென எடுத்தெறிந்து குமரனை பேசிவிட முடியவில்லை.
அது மரியாதையாக இருக்காது என்று உணர்ந்தவரின் முகபாவனையே மாறிவிட்டது.
இயல்பாக இருந்தவரின் முகத்தினில் பார்த்ததும் பின்தங்க செய்யும் ஒரு பாவனையும், இறுக்கமும் வந்து ஒட்டிக்கொண்டது.
“ஒரு கல்யாணம் நடந்த வீட்டுல அடுத்த பேச்சு வந்தா சீக்கிரமே இன்னொரு நடந்திடும்ன்னு சொல்லுவாங்க. எங்க நிலாவுக்கு அது வாய்க்கப்போகுது. நல்ல பொண்ணு. நல்லா கலகலப்பா பேசுவா. மனசுல ஒன்னும் இருக்காது. பார்த்திருப்பீங்களே?…” என்று குமரன் கூற,
“ஆமாங்க. அதனால தான் பேச வந்தோம். எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. என் பையன் நாங்க என்ன சொல்றோமோ அதுதான். அதனால மேற்கொண்டு நாமலே பேசலாம். பொண்ணுக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டுட்டு சொல்லுங்க…” என்றவர்கள்,
“ஓஹ்…” என்ற சாவித்ரியின் பார்வை கூர்மை பெற, அவரின் அந்த ஒற்றை சத்தத்தில் குமரன் திடுக்கிட்டு போனார்.
“உங்க பொண்ணுக்கு இதை தான் செய்யனும்ன்னு நாங்க சொல்லமாட்டோம். அது உங்க விருப்பம். அதுதான் எல்லாமே குமரன் ஸார் சொல்லிட்டாரே. நீங்க உங்க பேத்தியை எப்போ பார்க்க வர்றதா இருந்தாலும் தாராளமா வரலாம். நாங்களும் எங்க பொண்ணுமாதிரி பார்த்துப்போம்…” என்று அவர்கள் பேச இன்னுமே முகம் மாறினார் சாவித்ரி.
“அப்பறம் குமரன் ஸார், கல்யாணம் முடிஞ்சதும் இவங்க தனியா சென்னைல இருந்துப்பாங்களா? ஏனா ஹாஸ்பிட்டல் வேற இருக்குன்னு சொன்னீங்க தானே? வயசானவங்க வேற…” என்று அக்கறையின் பேரில் அவர்கள் கேட்க வரும் அர்த்தம் குமரனுக்கே புரிந்துவிட்டது.
‘அடப்பாவிங்களா?’ என்று பார்த்தவருக்கு அது தன் பேச்சு கொடுத்த தைரியம் என்று புரிய, சாவித்ரியை பார்த்தார் யோசனையுடன்.
“நீங்க பொண்ணுட்ட பேசிட்டு சொல்லுங்க. நாம மேற்கொண்டு மத்த விஷயங்களை பேசிக்கலாம். இப்ப நாங்க கிளம்பறோம்…” என்று எழுந்துகொள்ள,
“உட்காருங்கம்மா….” என்றார் சாவித்ரி.
“இல்லைங்க, நேரமாகிடுச்சு. நாங்க உங்ககிட்ட பேசறதுக்காக தான் வெய்ட் பண்ணிட்டிருந்தோம். இடையில ஒரு வேலைன்றதால லேட்டாகிடுச்சு. இல்லைன்னா நாங்களும் கிளம்பிருப்போம்….”
“நீங்க பேசினீங்க சரி. நான் இன்னும் பேசவே இல்லையே….” என்ற சாவித்ரி,
“சிட் டவுன்…” என்றார் இன்னும் குரலில் அழுத்தம் கூட்டி.