“என் பேத்திக்கு பைக் ரைடிங்னா ரொம்ப புடிக்கும்…” என்றார்.
“ஸ்கூட்டி ஓட்டுவாளா? இந்த காலத்துல ஸ்கூட்டி, கார் ட்ரைவிங் தெரிஞ்சு வச்சுக்கறது பொண்ணுங்களுக்கு நல்லது தானே? அதுவும் நாங்க வீட்டோட இருக்கனும்ன்றதா சொன்னதை நீங்க தவற புரிஞ்சுக்கிட்டீங்கன்னு நினைக்கறேன்….” என்றவர்கள்,
“பொண்ணு ஸ்கூட்டி, கார் ஓட்டறது நல்லதுதான். பின்னால குழந்தைங்களை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய் வர்றது, எமர்ஜென்ஸிக்கு ஒரு ஹாஸ்பிட்டல், மத்த விஷயங்களுக்கு யூஸ் ஆகுமே….” என்றனர் பெருமிதமாய்.
“இப்பவும் நீங்க தான் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. பொண்ணுங்க ரைட் பண்ணுவாங்கன்னா ஸ்கூட்டி தான்னு எப்படி சொல்றீங்க? என் பேத்தியோட பைக் Harley Davidson. கேள்விப்பட்டிருக்கீங்களா?…” என்றதும் அவர்கள் யோசனையாக,
“அவ ஹிமாலையன் ரைடர். தனியாவே ஹிமாச்சல் வரை பைக்ல போவா. அவளோட ஹாபி, பேஷன்ல இதுவும் இருக்கு…..” என்றதும் வாய் பிளந்து பார்த்தனர் அவர்கள்.
“அப்பறம் இன்னொரு விஷயமும் சொல்றேன். எதிர்பார்ப்போட நீங்க காத்திருக்க வேண்டாம் பாருங்க. அதுக்காக தான் இப்பவே சொல்றேன். நீங்க வேற பொண்ணை தேடலாம். இப்ப கிளம்புங்க…” என்ற சாவித்ரி, குமரனை ஒரு பார்வை பார்த்தார் அழுத்தமும், கோபமுமாய்.
“என்ன குமரன் ஸார்? இப்படி ஒரு பொண்ணு…” என அவர்கள் வாய் திறக்க,
“ஷட்அப் அன்ட்…” என்ற சாவித்ரி வாசலை நோக்கி கை காண்பித்துவிட்டார்.
வந்தவர்கள் அதற்குமேல் அமரமுடியாமல் கோபத்துடன் அங்கிருந்து எழுந்து செல்லவும் சாவித்ரியும் எழுந்துகொண்டார்.
“என்ன சின்னம்மா இப்படி பேசிட்டீங்க? பொறுமையா சொல்லியிருக்கலாமே? நல்ல இடம்…” என்று குமரன் ஆதங்கப்பட,
“எது, என் பேத்தி கல்யாணத்துக்கு அப்பறம் அவங்களுக்கு நான் சுமையாகிடுவேனா இல்லையான்னு இப்பவே கன்பார்ம் பண்ணிக்கிறாங்களே, இவங்க நல்ல இடமா? பொண்ண வாழறதுக்கு தான் கல்யாணம் பண்ணி தர்றோம். அடிமையா இருக்கறதுக்கு இல்லை…” என்றவர் வளர்மதியையும் முறைத்துவிட்டு வெளியேற திரும்பினார்.
“இப்ப இவங்க நந்தாவோட வீட்டுல போய் எதுவும் சொல்லுவாங்களோ? என்ன சின்னம்மா இப்படி பண்ணிட்டீங்க? இப்பத்தான் பொண்ணை அனுப்பி வச்சோம். இவங்க மாப்பிள்ளைக்கு நெருங்கின சொந்தம் வேற…” என்று குமரன் வருந்த,
“உன் சம்பந்திக்கு வேணா மரியாதை குடு குமரா. அவங்க சொந்தத்துக்கும் அஞ்சனும்ன்னு என்ன இருக்கு? அப்படி நீ நினைச்சா இனி நாங்க சொந்தமா இல்லை. உன் சம்பந்திட்ட வேணா சொல்லிடு…” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று வெளியேறிவிட்டார் சாவித்ரி.
அவர் வருகையில் வாசலில் நிலாவும் நின்றிருக்க அதுவரை திடமாய் இருந்தவரின் முகத்தில் பெரிதாய் ஒரு கலக்கம் வியாப்பித்தது.
அதிலும் பேத்தியின் புன்னகை முகம் சட்டென்று கண்ணில் நீர் துளிர்க்க செய்ய,
“அச்சோ என்ன சாவி நீ?…” என வந்து அணைத்துக்கொண்டாள் நிலா.
“நிலாம்மா…” என குரலே உடைந்துவிட்டது.
“கொன்னுடுவேன் சாவி. இவ்வளோ நேரமும் உள்ள சும்மா டமால், டுமீல்ன்னு பவர்ஃபுல் பாமா வெடிச்சிட்டு இப்ப வந்து அழற நீ. ராஸ்கல்…” என்று அவரின் காதை பிடித்து திருகியவள்,
“சாவி ப்யூட்டி, ஒரு ரைட் போவோமா?…” என்றாள் கண் சிமிட்டி.
“இப்பவா?…”
“ஆமா, வேணாமா? இல்லைன்னா ஓகே…” என நிலா தோளை குலுக்க,
“சரி, வா போவோம்…” என்றார் சாவித்ரியும்.
“இப்படி அழுதுட்டே சொல்லுவாங்களா என்ன? சிரிச்சிட்டே சொல்லு பார்ப்போம்…” என கண் சிமிட்ட,
“சரி போலாம்…”
“இப்ப நாம எங்க போறோம்?…” என கார்ட்டூனில் பேசுவதை போல குரலை மாற்றி நிலா கேட்க,
“எங்க போறோம்?…” என்றார் சாவித்ரியும் அவளை போலவே மழலையாய்.
“டுர்ர்ர், ரைட் போறோம்…” என்று கையை வைத்து பைக்கில் செல்வதை போலவே காண்பிக்க,
“லக்கேஜ்?…” என்றார் சாவித்ரி.
“ட்ரைவர் அங்கிள்ட்ட சொல்லிட்டேன். அவங்க கொண்டு வந்திருவாங்க ஏர்போர்ட்க்கு. அதுவும் நம்ம கூடவே வருவாங்க. உனக்கு முடியலைன்னா நீ காருக்கு மாறிக்கோ…” என்று அதுவரை எடுத்து தயாராய் வைத்திருந்ததை மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டனர்.
சாவித்ரிக்கு ஏற்பாடு செய்திருந்த காரில் உடமைகளை போட்டுவிட்டு தன்னுடன் அவரை ஏற்றிக்கொண்டாள் நிலா.
“சின்னம்மா, இதென்ன விளையாட்டுத்தனம்? அவ தான் சின்னப்பிள்ளை, விவரம் புரியாம கூட்டிட்டு போனா நீங்களும் இப்படி செய்யறீங்களே?…” என பதறினார் அவர்.
“டேய் போடா…” என்றுவிட்டார் சாவித்ரி.
குமரனுக்கு தான் தாங்க முடியவில்லை. கோபித்துக்கொண்டு கிளம்பும் சாவித்ரியையும் அவரால் விடமுடியாது.
அதேநேரம் இன்னும் பக்குவமாக பேசியிருக்கலாமோ என்றும் தோன்றாமல் இல்லை.
அவரின் கோபத்தை பார்த்தாலும் எப்படியும் இரண்டொரு நாளில் அவரே பேசுவார் என சாவித்ரியும் பெரிதாய் கண்டுகொள்ளவில்லை.
இதோ காற்றை கிழித்துக்கொண்டு சாவித்ரியின் உடல்நிலைக்கேற்ப அவளின் வேகமிருந்தது.
அரவமற்ற சாலையில் ‘ஊஹூ’ என்னும் சத்தத்துடன் சாவித்ரியை உற்சாகப்படுத்தியபடி பெங்களூரை நோக்கி கிளம்பினாள் வெண்ணிலா.
——————————–
ஏகே மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் பிரமாண்டமாய் வீற்றிருந்தது சென்னையின் பிரதான சாலையின் முன்னிலையில்.
“ஹ்ம்ம், வந்திடறேன். செக்கப் முடிஞ்சதும் ஒரு கால் பண்ணுங்க…” என்றான் கௌரவ் தன் கைப்பேசியில்.
“நீ எதுக்கு தப்பிச்சு போறன்னு நல்லாவே தெரியுது கௌரவ். இது வேற விஷயம். இப்படியா ரூம்ல உக்கார வச்சிட்டு கிளம்புவ?…” என ஷ்யாமளா கேட்க,
“தப்பிக்க விடுவீங்களா?…” மெலிதான புன்னகை அவன் இதழ்களில்.
“நீ இன்னும் ஹாஸ்பிட்டல் விட்டு போகலையே. பேசாம மேல வா கௌரவ்…” என்றவரின் அதட்டலில்,
“ஸ்ஸ் விடமாட்டீங்களே?…” என்றபடி வெளிவாயில் வரை வந்து தன் செரோகியை நெருங்கிவிட்டவனை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தார் ஷ்யாமளா.
மறுக்கமுடியாமல் வேறு வழியின்றி கௌரவ்வும் மீண்டும் மருத்துவமனைக்குள் சென்றான்.
கௌசல்யாவை மாதாமாதம் பரிசோதனைக்கு என்று அழைத்து வருபவன் அன்றும் வந்திருக்க, இதோ வந்ததோடு ஷ்யாமளாவின் அறையில் விட்டுவிட்டு கிளம்பிவிட்டான்.
நிச்சயம் தன் திருமண பேச்சுக்களை தான் அவர்கள் ஆரம்பிக்க கூடும் என்று தெரியும்.
அவர்களே பேசிக்கொள்ளட்டும் என்று வந்தவனை விடுவதாய் இல்லை ஷ்யாமளாவும், கிருஷ்ணகுமாரும்.
லிப்ட்டின் பட்டனை அழுத்திவிட்டு காத்திருந்தவன் கதவு திறக்கப்படவும் அதில் நுழையும்முன்,
“ஹலோ எக்ஸ்க்யூஸ்மீ…” என்ற சத்தம்.
வலதுகையை லிப்ட் மூடிவிடாமல் நீட்டிவிட்டு திரும்பி பார்க்க வந்து கொண்டிருந்தாள் வெண்ணிலா.
அவன் திரும்பி பார்க்கவுமே கௌரவ்வை கண்டுகொண்டாள் அவள். அதிலும் பார்த்த நொடி, அவன் நின்றவிதம் மனதில் அப்படியே பதிந்தது அன்றை போலவே.
ஒற்றை கையை பேண்ட் பாக்கெட்டினுள் விட்டிருந்தவன், ஒரு கையை லிப்டின் முன் நீட்டியிருக்க, லேசாய் தலைசாய்த்து திரும்பி பார்த்தவிதம் என்று அவனை கண்டுகொண்டாள்.
‘அட, ஸ்டெய்லிஷ் கௌரவம். எப்பவுமே இப்படியா. இல்ல இப்படித்தான் எப்பவுமேவா? மாடல் மாதிரியே போஸ் குடுக்கறது’ என அவனை நெருங்கும் முன் இத்தனை நினைத்து உள்ளுக்குள் சொற்பொழிவினை ஆற்றிவிட்டாள்.
‘என்ன?’ என்று கூட அவளிடம் கேட்கவில்லை. அவன் புருவங்கள் மட்டுமே உயர்ந்து வளைந்தது கேள்வியாய்.
“இது உங்க கீச்செயின்ல இருந்து விழுந்தது. உங்களோடது தானே?…” என்று மறைக்க முடியா முறைப்புடன் அவனிடம் காண்பித்தாள் நிலா.
“ஹ்ம்ம்…” என்றான் அவள் நீட்டியதை கண்டதும்.
கௌரவ்வின் கார் கீயினோடு இணைத்திருக்கும் சிறிய மோதிரம் அது. அந்த வருட பிறந்தநாளுக்கு குழந்தை கௌசல்யா அவனுக்காக பரிசளித்தது.
தனக்கு எடுத்ததை போலவே தான் கௌரவ்விற்கும் எடுக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து குட்டியாய் எடுத்து தந்திருக்க அவனின் சுண்டுவிரல் நுனியில் கூட நுழையவில்லை அது.
இப்போது எப்படி விழுந்திருக்குமோ என மனதினுள் ஒரு பதட்டம் நிலவினாலும் கிடைத்துவிட்டதில் நிம்மதி பெருமூச்சு.
அதன் உணர்வுகள் நிலாவின் விழிகளில் பதிய வாய்ப்பில்லை. அவள் தந்ததும் வாங்கிக்கொண்டவன் தன் உள்ளங்கையினுள் வைத்துக்கொண்டான்.
“தேங்க்ஸ் யூ…” என்று மெல்லிய குரலில் கூற, அந்த நன்றியும் அவள் காதுகளை எட்டவில்லை.
சொல்லிவிட்டு அவன் லிப்ட்டின் உள்ளே நுழைய, ‘எத்தனை திமிர், ஒரு நன்றியும் இல்லாமல்?’ என்று பார்த்து நின்றாள் வெண்ணிலா.
உள்ளே சென்று அவன் செல்வதற்கான தளத்தின் எண்ணை அழுத்தியவன் வெண்ணிலா நிற்க கண்டு,
“வர்றீங்களா?…” என்றான் அவளிடம்.
அவளுமே மேலே செல்லவேண்டும் என்பதனால் அவனுக்கு பதில் எதுவும் அளிக்காமல் உள்ளே வந்து நின்று தான் இறங்கவேண்டிய எண்ணை அழுத்தும்பொழுது தான் அவன் செல்லவேண்டிய தளத்தின் நம்பரை பார்த்தாள்.
‘இது டீன் இருக்கிற பர்சனல் ஃப்ளோராச்சே’ என மனம் நினைத்தாலும் தோளை குலுக்கிக்கொண்டவள் தன் தளத்திற்கு காத்திருக்க, சரியாய் வந்து நின்றது.
அவளை முன்பு பார்த்தோம் என்னும் எந்தவித அறிகுறியும் இல்லை அவனிடம். ஞாபகமும் இல்லை.
லிப்டிலிருந்து வெளியேறும்பொழுது தன்னிச்சையாக நிலாவின் விழிகள் உள் நின்றவனை கவனித்தது.
அவள் நகர்ந்ததும் தன் உள்ளங்கையில் இருந்த மோதிரத்தை பார்த்துவிட்டு நிமிர்ந்தவன் முகத்தில் சின்னதாய் ஒரு புன்முறுவல். அசைவற்று பார்த்தாள் வெண்ணிலா.