கௌரவ் புன்னகையுடன் நிமிரவும் வெண்ணிலாவின் பார்வை கண்களுக்குள் பதிய, லேசாய் புருவம் சுருக்கியவன் விழிகள் மாற்றம் பெரும்முன் லிப்ட் மூடிக்கொண்டது.
“ப்பாஹ், பார்த்துட்டோமாம். பெரிய இவரு….” என்று தலையை உலுக்கிக்கொண்டு சென்றாள் வெண்ணிலா.
மேல்தளம் வரவும் கௌரவ்வும் இறங்கி ஷ்யாமளாவின் அறை நோக்கி நடந்தான்.
கையில் இருந்த மோதிரத்தினை மீண்டும் கார் சாவியின் தொகுப்பில் இணைத்தவன் முகம் இன்னுமே புன்னகையை குறைக்கவில்லை.
“செயின்ல கோர்த்து கழுத்துல போட்டுக்கோ கௌரவ்…” என ஆகர்ஷனுமே அன்று அவனிடம் கூறியிருந்தான்.
எங்கே? அதற்குள் தான் அவனின் பெண்ணரசி கௌரவ்வின் விரலுக்குள் மோதிரம் சேரவில்லை என்றதும் அவன் கார் சாவியின் தொகுப்பில் சேர்ந்திருக்கும் தாய் சேய் குருவி குஞ்சுகளோடு இதனையும் சேர்த்து கோர்க்க செய்துவிட்டாளே!
“கௌவாப்பா, க்யூட்டு. ல்ல…” என்று வேறு இரு கைகளையும் கட்டி தங்கமென பொங்கியிருந்த கன்னத்தில் வைத்தபடி கண் விரித்து கூறியிருக்க மாற்றிவிட முடியுமா கௌரவ்வினால்.
“கௌசல்யாம்மா க்யூட்…” என்று அவளின் நெற்றியில் முத்தமிட்டு அந்த சாவிக்கொத்தினை பார்த்தான்.
தாய், சேய் குருவி குஞ்சுகளின் உருவ அமைப்பில் பிளாட்டினத்தினாலான கீ செயின் அது.
அதனை பிரத்யேகமாய் தயாரிக்க செய்து வாங்கியிருந்தவனின் சாவிக்கொத்தில் தங்க கிரீடமாய் அந்த குட்டி மோதிரம்.
இப்போதும் அதனை உயர்த்தி பார்த்தவன் கண்களுக்குள் அதன் வேலைபாடுகளை தாண்டிய ஒரு உணர்வு.
தாய் குருவி குஞ்சு குருவியை அணைத்து பிடித்திருக்க, இரண்டின் நடுவினில் சேர்ந்தாடும் பிஞ்சுவிரல் மோதிரம்.
இரு கௌசல்யாக்களின் நடுவில் பிள்ளையாய் அவன் பிள்ளை மனம். முன்பெல்லாம் இந்த ஒப்பீடு தோன்றியதில்லை.
தாய்க்காகவே அதனை வாங்கியிருந்தவன். என்றைக்கு தன் பிறப்பும், அதன் சூட்சமமும் தெரிந்ததோ, அன்றிலிருந்து ரசித்து வாங்கியதன் மீதான உணர்வுகள் வேறாய், அதன் வேராகவே மாறியிருந்தது.
பெருமூச்சுடன் நடந்தபடி சாவிக்கொத்தை மீண்டும் பத்திரமாய் சரிபார்த்துக்கொண்டவன் மனதின் நிம்மதியை மீட்டு தந்த அந்த பெண்ணின் முகத்தை யோசித்து பார்க்க, மீண்டும் எங்கோ பார்த்த ஞாபகம்.
எங்கென்று தான் சட்டென பிடிபடவில்லை. அதனை யோசிக்கும் பொழுதுகளில் எல்லாம் ஏதாவது ஒருவித இடையூறு.
இதோ இப்போது மீண்டும் மானசீகமாய் அந்த பெண்ணுக்கு இன்னொரு நன்றியை நினைத்துக்கொண்டவன் கதவினை திறந்து உள்ளே நுழைந்தான்.
ஷ்யாமளாவும் கௌசல்யாவும் ஒருசேர திரும்பி பார்த்தனர். அவன் வரவும் கௌசல்யா புன்னகைக்க, ஷ்யாமளா முறைத்தார்.