“கல்யாணத்துக்கு வரலையா?…” என கௌசல்யாவும் சாவித்ரியின் இலகுவான பேச்சில் இயல்பானார்.
“அந்தநேரம் என் பேத்திக்கு ஒரு ஆக்ஸிடென்ட். இல்லைன்னா அவளுமே வந்திருப்பா. அதான் ரிசப்ஷனுக்கு மட்டும் வந்துட்டு நான் கிளம்பிட்டேன். அப்போ பார்த்திருந்தாலும் இப்போ ஞாபகம் இருக்காது தான்….” என்றார் சாவித்ரி.
“ஓஹ், என்னாச்சு?…” கௌசல்யா கவலையுடன் கேட்க,
“ஹிமாச்சல்க்கு பைக்ல போய்ட்டிருக்கும்போது நாக்பூர் ஹைவேஸ்ல ஆக்ஸிடன்ட் ஆகிடுச்சு. இப்போ எல்லாம் ஓகே தான்…” என சாதாரணமாய் கூற கௌசல்யாவிற்கு தான் மனம் பதைபதைத்தது இப்போது நடந்ததை போல.
எத்தனை அழகாய் பேசி, சிரித்துவிட்டு சென்ற பெண். பாவம் என நினைத்தார் மனதிற்குள்.
இப்படியாக சிலநிமிடங்கள் இந்த பேச்சில் கழிந்தது. ஷ்யாமளா சாவித்ரியையும் கௌசல்யாவிடம் அறிமுகம் செய்துவைத்தார்.
வெண்ணிலா வந்து சாவித்ரியை அழைத்து சென்றதும் கௌசல்யாவிடம் திரும்பிய ஷ்யாமளா,
“வில் பவர்ன்னா இப்படி இருக்கனும் அண்ணி. இப்ப பார்த்தீங்களே சாவித்ரி அம்மா, அவங்க வெறும் டாக்டரா தான் தெரியும். உங்ககிட்டையும் முழுசா சொல்லலையே….” என்ற ஷ்யாமளா விவரங்களை கூறினார்.
———————————————–
அன்று மதியஉணவிற்கு கௌரவ் வரவில்லை. விக்ரம்மையும் வேறொரு வேலையாக வெளியூர் அனுப்பியிருந்தான் கௌரவ்.
அன்று காலை தான் தன் இளையமகள் சாருலதா வந்துவிட்டு கிளம்பியிருந்தாள்.
மதியஉணவிற்கு கூட அவள் இருக்கவில்லை. கோவிலுக்கு அவளின் குடும்பத்துடன் வந்துவிட்டு வந்தவேகத்தில் தாய் தகப்பனை பார்த்துவிட்டு ஒரு காபியுடன் கிளம்பிவிட்டாள் அவள்.
“அம்மா உனக்கு பிடிச்சதா செய்யறேன் சாரு…” என்ற கௌசல்யாவிடம்,
“அதெல்லாம் எதுவும் வேண்டாம் ம்மா. எல்லாரும் வர்றோம். அவங்க பக்க சொந்தமும் வர்றாங்க. சும்மா எல்லாரையும் கூப்பிட்டு உபசரிச்சிட்டு இருப்பீங்களா? போதும் போதும். நானும் அவரும் மட்டும் தான் வீட்டுக்கு வருவோம்…” என்று சொல்லிவிட அத்தனை வருத்தம் அவருக்கு.
சொந்தபந்தம் என்று இருப்பது நல்லதுதானே என மகளிடம் வலியுறுத்தினால் அது ராம்நாத் வரை செல்லும் என்பதனால் மௌனமாகிவிட்டார்.
மகள் வரவும் மகள் வயிற்று பேரனை அள்ளி கொஞ்சியதும் சிலநிமிடங்களில் தான்.
கனவு கண்டதை போல வந்து இருந்து கிளம்பியிருந்தாள் சாருலதா. ராம்நாத்தின் பிரதிபிம்பமாக அவளுமே அவளின் உறவுகளுடன் அவரை போலவே தான் ஒட்டுதலில்லா ஒரு பந்தத்தில் இருந்தாள்.
அதனை பற்றிய யோசனையுடன் கௌசல்யா அமர்ந்திருக்க கௌரவ்விடம் இருந்து அழைப்பு.
“சாப்பிட்டாச்சா ம்மா?…” என்றான் தாயிடம்.
“இன்னும் இல்ல கௌரவ். இனிமே தான். நீ?…” என்று மெல்லிய குரல் வர,
“நானும் இதோ சாப்பிடனும். சரி, நீங்க சாப்பிடுங்க. இன்னும் கொஞ்சநேரத்துல கால் பன்றேன்…” என்று சொல்லி வைத்துவிட்டான்.
மகன் வைத்ததும் உதவிக்கு இருக்கும் பணிப்பெண்ணும் வீட்டிற்கு கிளம்ப, அந்த பெரிய வீட்டில் தனியாய் ஒரு நிம்மதியை உணர்ந்தார்.
ஆசுவாசத்துடன் மூச்சை ஆழ இழுத்துக்கொண்டவர் உணவுண்ண நினைக்க, வெளியே ராம்நாத்தின் கார் சத்தம்.
மௌனமாய் அமர்ந்த இடத்திலிருந்து எழுந்து வர ராம்நாத்தும் உள்ளே நுழைந்தார்.