“இல்ல, இல்லைங்க…” என்று பதறியவர் அவருக்கு பரிமாற, ஒருவார்த்தை கேட்கவில்லை உண்டுவிட்டாயா என்று.
அதனை கௌசல்யாவின் மனமும் எதிர்பார்க்கவில்லை. ராம்நாத்தின் பேச்சுக்கள் தன்னிடம் இல்லாதவரை நிம்மதியென்றே நின்றிருந்தார்.
ஆனால் இப்போது இதனை பேசித்தானே தீரவேண்டும். மகனின் எதிர்காலம். தனக்குமே அதில் சந்தோஷம்.
ஆனால் வரன் ஷ்யாமளாவின் மூலம் வந்தது என்று தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற அச்சம் நெஞ்சை கவ்வியது.
பயந்துகொண்டே இருந்தால் கௌரவ்வின் எதிர்காலம்? ஒருவாறு தைரியத்தை திரட்டிக்கொண்டு ராம்நாத்தை பார்க்க, அவரின் பார்வை மொத்தமும் கௌசல்யாவின் முக மாறுதல்களில் தான் நிலைத்திருந்தது.
அந்த பார்வையிலேயே கௌசல்யா சுருண்டுவிட்டார். ஆற்றாமையும், வேதனையும் தோன்றினாலும் ஜீரணித்து பழக்கப்பட்டுவிட்டாரே.
அதற்குள் ராம்நாத்தும் உண்டு முடித்துவிட்டு எழுந்தவர் கௌசல்யாவிடம் நெருங்கினார்.
“என்ன கௌசி, யோசனை எல்லாம் பலமா இருக்கு? என்கிட்ட எதுவும் பேசனுமா?…” என்றார் நயமாய்.
கணவன் தான். ஆனால் இந்த பார்வை, பேச்சு, அணுகுமுறை என்று கௌசல்யாவின் மனதில் வெறுப்பையே உண்டு பண்ணியது.
“ஹ்ம்ம், பேசனும்…” என்றார் மெல்லிய குரலில்.
“சரி வா. உள்ள போய் பேசலாம்…” என்றழைத்து,
“இன்னும் ஏதும் விரதம் இருக்கியா நீ?…” என்றார் சட்டென குரலை உயர்த்தி கோபத்துடன்.
“ஆமா, ஆமா. விரதம் தான்….” என்று சொல்ல, ராம்நாத்தின் முகம் ஜிவுஜிவுத்தது.
“உன்னை கட்டி என் வாழ்க்கையில முக்காவாசி வாழ்நாள் உன்னை தூர நின்னு பாக்கறதுலையே போயிருச்சு. இதுக்கா உன்னை கட்டினேன் நான்? என்ன சந்தோஷத்த கண்டேன் நான்?…” என்று எரிந்து விழுந்தவரின் ஆவேசம், அங்கிருந்த கண்ணாடி தண்ணீர் ஜக்கில் அடங்க, தூக்கி வீசினார் தரையில்.
பதறிப்போய் கௌசல்யா பின்னோடு செல்ல, தலையில் அடித்துக்கொண்ட ராம்நாத்,
“என்ன எழவு இங்க குறைச்சல்ன்னு அந்த சாமியே கதின்னு கெடக்கற? எனக்கு வர்ற கோவத்துக்கு…” என்று கழுத்தை நெரிப்பதை செல்ல,
“கௌரவ், கௌரவ் கல்யாணம் நல்லபடியா…” என திக்கி திணறி கௌசல்யா கண்ணீருடன் கூற,
“அவனுக்கென்ன? அத்தனை பொண்ணு பாத்துட்டேன். இனி உன் அப்பன் வீட்டு பக்கம் தான் பிச்சைக்கார குடும்பமா பாக்கனும் போல. உன்னை மாதிரி ஒருத்தியை திரும்ப கொண்டுட்டு வர முடியுமா என் மகனுக்கு?…” என்றார் எரிச்சலாய்.
கண்ணீர் பொங்கிக்கொண்டு வர மௌனமாய் உதட்டை கடித்தபடி உணர்வுகளை மென்று கொன்றுகொண்டிருந்தார் கௌசல்யா.
“என்னமோ சொல்லி தொலையனும்ன்னியே. அதையாச்சும் சொல்லு…” என்றதும், கண்ணீரை துடைத்தபடி,
“தெரிஞ்சவங்க மூலமா கௌரவ்க்கு ஒரு வரன் வந்திருக்கு….” என்று சொல்ல,
“உனக்கு தெரிஞ்சவங்க மூலமாவா?…” என யோசனையானார் ராம்நாத்.
கௌசல்யா அமைதியாய் நிற்க கண்டு, இன்னும் சந்தேகமாய் பார்த்தவர் இங்குமங்குமாய் நடந்துக்கொண்டே,
“இந்த கண்ணாடியை கூட்டி குப்பையில போட்டுட்டு வா…” என்று கூறி சோபாவிற்கு சென்றார்.
உடைந்த கண்ணாடி துண்டுகளை எல்லாம் அள்ளி ஒரு ஈரத்துணியில் கட்டி, அவ்விடத்தை சுத்தம் செய்துவிட்டு தானும் ராம்நாத்தின் எதிரில் வந்து நின்றார்.
“உன்னை வேடிக்க பார்க்கவா கட்டிட்டு வந்தேன்…” மீண்டும் முதலில் இருந்து துவங்க, ஜடம் போல் நின்றார் கௌசல்யா.
“என்னமோ பொண்ணுன்னு சொன்னியே. சொல்லி தொலை. என்ன லச்சணத்துல பாத்திருக்கன்னு பார்ப்போம்…” என அத்தனை இகழ்ச்சி அவரின் குரலில்.
“பொண்ணுக்கு சொந்த ஊர் கோலார்…” என்று சொல்லியவர் அடுத்த வார்த்தை ஆரம்பிக்கவில்லை, அமர்ந்திருந்த ராம்நாத் அத்தனை வேகமாய் எழுந்து நின்றார்.
“கர்நாடகா, கோலார்?…” என்று விழிகள் சிவக்க எழுந்ததும் அதில் கௌசல்யா அரண்டு போனார்.
“யார் இந்த வரனை சொன்னது?…” என்று கேட்க, எதற்கு இத்தனை கோபமும், ஆத்திரமும் என்று புரியாமல் பார்த்தார் அவரை.
“உன்னை தான் கேட்கறேன் கௌசி. யார் இந்த பொண்ணை பத்தி சொன்னது?…” என்றான் மீண்டும்.
“வந்து,, தெரிஞ்சவங்க….” என்று கௌசல்யா பின்னோடு செல்ல,
“நில்லுடி, ஊமைக்கொட்டான் மாதிரி இருந்துட்டு என்னை எடை போட்டு பார்க்க நினைக்கிறியா நீ? அந்த டாக்டர் குடும்பம் தான?…” என்று பல்லை கடித்துக்கொண்டு கேட்க, கௌசல்யாவின் அதிர்ந்த முகமே ஆமாம் என காண்பித்து கொடுத்தது.
“நினைச்சேன், அவங்க தான் இந்த கீழ் வேலை எல்லாம் செய்வாங்கன்னு…” என்று அந்த குடும்பத்தை வசைபாடியவர்,
“எப்பருந்து இப்படி ப்ரோக்கர் வேலை பாக்க ஆரம்பிச்சாங்களாம்? என் தங்கச்சி மகளை மயக்கி அந்த எடுபட்டபய கட்டிக்கிட்டான்…” என்றதும் கௌசல்யாவின் கண்கள் கனலை காண்பித்தது.
“ஓஹ், அவன சொன்னா இங்க எரியுதோ? உனக்கு கோவமா எல்லாம் பார்க்க வருதே?…” என்றவர் கௌசல்யாவின் கையை பிடித்துவிட,
“விடுங்க….” என்றார் அவரிடம் அகப்பட்டுக்கொண்ட கையை உருவ முயன்று.
அதன் முயற்சியில் ராம்நாத் இன்னுமே உக்கிரமாக, மெலிந்த கரத்தை இன்னுமே அழுத்தம் கூட்டி பிடித்தார்.
“உன்கிட்ட என் புள்ளை மேல சத்தியம் சத்தியம் வாங்கியும் நீ அடங்கலைல. என்ன சொக்குபொடி போட்டானோ கௌரவ்வும் அவன் கூட சொந்தம் கொண்டாடிட்டு இருக்கான்…” என்றவர்,
“அப்பறம் என்ன சொன்ன? அன்னைக்கு அவன் விக்ரம் பக்கத்துல நிக்கும்போது என் தங்கச்சி காவேரி அவங்க ரெண்டுபேரும் பார்க்க கூட பிறந்தவங்க மாதிரி இருக்காங்கன்னு சொல்லவும் அம்புட்டு பூரிப்பு. விக்ரம்க்கு அப்பன் நான் தான?…” என்று கேட்க, அதுவரை அழுதபடி நின்ற கௌசல்யா கையை பலம் கொண்டமட்டும் உதறி விலகி நின்றார்.
“நீங்க என்ன மனுஷன்? இப்படியெல்லாம் பேச வெக்கமா இல்லயா?…” என்றார் உதடு துடிக்க தீனமான குரலில்.
குரல் கூட எழும்பவில்லை அவருக்கு. மனமும், உடலும் ரணப்பட்டு போயிருந்தது.
“நான் தாலி கட்டின பின்னாடியும் என்னை விட்டு இன்னொருத்தனை நினைச்சிட்டு இருக்கிற உனக்கே வெக்கமில்லை. அவன் மகனோட நான் பெத்தவனை சேர்த்து பேசினா சந்தோஷமா பார்க்கிற உனக்கு தான் வெக்கமில்லை. அதை கேட்டப்ப எனக்கு எம்புட்டு அத்திரம் இருக்கும்…”
“அம்மாவும், மகனும் என்னமோ பட்டமே குடுத்தமாதிரி என்ன ஒரு ஆனந்தமா பார்த்தீங்க. கொன்னு புதைச்சிருவேன் பார்த்துக்கோ…” என்று கூறவும் தான் கௌசல்யாவிற்கு விஷயமே பிடிபட்டது.
இதனை மனதில் வைத்துக்கொண்டு தான் இத்தனை நாள்கள் விக்ரமை வார்த்தைகளால் வறுத்து எடுத்தாரா என்று நினைத்து விக்கித்து போனார்.
“இந்தமாதிரி பேசாதீங்க…” கண்ணீர் வற்றிவிட வார்த்தைகள் வலிமையாய் வந்தது கௌசல்யாவிற்கு.