“அப்படித்தான் பேசுவேன். என்னை என்ன இளிச்சவாயன்னு நினைச்சியா? அந்த குடும்பம் பொண்ணு பார்த்து, என் பிள்ளைக்கு நான் கல்யாணம் பன்றதா? இனிமே இந்த பேச்சு வந்துச்சு அவ்வளோ தான். நான் மனுஷனா இருக்கமாட்டேன். அந்த டாக்டரை முடிக்க கூட யோசிக்கமாட்டேன்…” என ராம்நாத் கூற,
“போதும் நிறுத்துங்க….” என்ற கௌசல்யாவின் உடலெல்லாம் நடுங்கியது.
ஆகர்ஷன் முகம் மனதினுள் மின்ன, அந்த புன்னகை முகம் தோன்றவுமே கதறிவிட்டார் கௌசல்யா.
அத்தனை அழுது கரைந்தவரை பார்த்த ராம்நாத்திடத்தில் கொஞ்சமும் இரக்கமில்லை.
“கௌரவ் கல்யாண விஷயம் பேச வந்தா இப்படியா பேசுவீங்க? உங்க மனசுல ஈரமே இல்லையா? சித்திரவதை பன்றீங்களே? நானும் பார்த்துட்டே இருக்கேன், இனிமே இந்தமாதிரி பேசினா நானே கௌரவ்கிட்ட சொல்லிருவேன்….” என்றதும் ராம்நாத் முகம் மாறியது.
அன்று ஆகர்ஷனின் திருமணத்தின் போதுமே இதையே தான் கூறி தன்னை அடக்கி வைத்தார் கௌசல்யா என நினைத்த ராம்நாத் மொத்தமாய் மிருகமாய் மாறி நின்றார்.
“சரி சொல்லு….” என்றுவிட்டார் ராம்நாத்.
இப்படி பேசுவார் என எதிர்பார்க்காத கௌசல்யா அதிர்ந்துபோய் அவரை பார்க்க, இதை தானே ராம்நாத்தும் எதிர்பார்த்தது.
“சொல்லுவேன் சொல்லுவேன்னு நீ என்ன சொல்றது? இன்னைக்கு கௌரவ் வரட்டும். நானே சொல்றேன்…” என்று கூற நெஞ்சே வெடித்துவிடும் போலானது கௌசல்யாவிற்கு.
“என்ன?…” என்று நடுங்கி போய் கௌசல்யா பார்க்க,
“ஆமா, கௌரவ்கிட்ட மட்டும் இல்லை. விக்ரம், சாருலதான்னு மூணு பிள்ளைங்கட்டையும் சொல்றேன். நீ கௌரவ்வ பெத்தவ இல்லன்னு சொல்றேன். அந்த ஆகர்ஷன பெத்தவன்னு சொல்றேன். விக்ரமும், சாருலதாவும் எனக்கு…” என்று முடிக்கும்முன்,
“ஐயோ…” என்று காதை மூடிக்கொண்டு இரைந்தவர், தாளமாட்டாமல் ஆவென்று அதிர்ந்து கத்த, குரூரமான சிரிப்போடு அதனை பார்த்தார் ராம்நாத்.
“இதை நான் சொன்னா என்ன நடக்கும் தெரியுமா? என் மூத்த பிள்ளை கௌரவ் அந்த அப்பனாத்தா இல்லாத ஆகர்ஷன வெறுப்பான். இந்த உண்மையை மறைச்ச உன்னை வெறுப்பான். உன்னால தான் இதை நான் அவன்கிட்ட மறைச்சேன்னு நான் சொல்லுவேன். என் பிள்ளைங்க என்னை நம்பும்ங்க. ஏனா இத்தனை வருஷம் அந்த உண்மையை மறைச்சு அந்த குடும்பத்தோட உறவாட விட்டுறுக்கியே நீ…”
ராம்நாத் பேச பேச ஏற்கனவே மனத்தால் மரித்த கௌசல்யா நிலைகுத்திய பார்வையோடு உணர்வற்று நின்றார்.
“எது எப்படியோ, எனக்கு இந்த விஷயம் பிள்ளைங்களுக்கு தெரியறதுல லாபம் தான். உங்களோட உறவும் அறுந்து போகும். உன் மேல நம்பிக்கையும் போகும். உன்னோட நிம்மதி, அந்த டாக்டர் குடும்பத்தோட நிம்மதி போகும். என்னை அவமானப்படுத்தின என் தங்கச்சி குடும்பத்தோட நிம்மதியும் போகும்….” என்ற மனித உருவில் இருக்கும் அந்த அற்பனை வெறுமையாய் பார்த்தார்.
தன்னுடலில் மொத்த ரத்தமும் சுண்டிவிட்ட உணர்வை கௌசல்யாவால் உணர முடிந்தது.
தான் கௌரவ்வின் தாய் இல்லை என்பதனை அவன் அறிந்துகொள்ளவே கூடாதென்னும் வேகம் அலையாய் எழும்பியது.
‘நீங்க என்னை பெத்தவங்க இல்லையாம்மா?’ என அவன் தன்னை ஒற்றை பார்வை பார்த்துவிட்டாலும் கூட அந்த இடத்திலேயே தன் உயிர் பிரிந்துவிடும் என்று தோன்றியது.
ஆனால் பரிதாபம், அவனுக்கு என்றைக்கோ தெரிந்து உணர்வுகளுடன் போராடுவதை தாயுள்ளம் உணரவில்லை.
தன்னை புரிந்துகொள்வான் என்றும் அவர் நினைக்கவில்லை. தன் பிள்ளைகள் தவிப்பதா? நிம்மதி இழப்பதா?
பெற்ற மனம் பிள்ளைகளை முன்னிறுத்தி தான் பார்த்தது. இந்த விஷயத்தினால் அனைவருக்குமே நிம்மதி போய்விடுமே?
கௌசல்யாவை மொத்தமாய் அவர் செயலற்று நிற்க வைத்துவிட்ட அகம்பாவத்தில் ராம்நாத் வாய்விட்டு சிரித்தார்.
“பொட்டக்கோழி அடங்கி ஒடுங்கி இப்படி இருக்கனும். என்னையேவா ஆட்டி பார்க்க நினைக்க? உன்னோட தகுதிக்கு இதுதான், இப்படித்தான் இருக்கனும். உனக்கெல்லாம் நான் போட்டது வாழ்க்கை பிச்சை. ரெண்டாந்தாரமா கட்டிட்டு வந்து இவ்வளோ அந்தஸ்தான வாழ்க்கை குடுத்திருக்கேன். அதுக்கு நன்றியோட இருக்க பழகு. புருஷனை சந்தோஷமா வச்சுக்க துப்பில்லை. பேச வந்துட்டா…” என்றவர்,
“இப்படி நீ நிக்க பார்க்கும்போது எவ்வளோ சந்தோஷமா இருக்கு. இப்பவும் உன்னை அந்த குடும்பத்தோட பழகவே விடாம நிப்பாட்ட முடியும். அதுவுமே போனா போகுதுன்னு உனக்கு நான் போடற…” என பேசி முடிக்கும்முன்,
“பிச்சை. அப்படின்னா நீங்க நினைக்கறீங்க?…” என்று கேட்டார் கௌசல்யா.
“ஆமா, எதுவுமே இல்லை. உங்களுக்கு மனசாட்சி மட்டுமில்லை, மனுஷனா இருக்க எந்த தகுதியுமே இல்லை. இப்படி மிரட்டி ஜெயிச்சிட்டதாவா நீங்க நினைக்கறீங்க?…” என்ற கௌசல்யா மறுப்பாய் தலையசைத்தார்.
“இப்பவும் இங்க ஜெயிச்சது நானும், என் தாய் பாசமும் தான். பிள்ளைங்க நிம்மதி போனாலும் பரவாயில்லைன்ற உங்க குரூர புத்தியோட கேவலமான எண்ணம். என்னை பலவீனப்படுத்தினதா நீங்க நினைக்கிறது தான் என்னோட பலம்….” என்றவர்,
“என்னாலையும் எல்லாம் சொல்ல முடியும். இப்பவும் சொல்லுவேன்…” என்றதும் ராம்நாத் திடுக்கிட்டு பார்க்க,
“இதோ இந்த பயம். இது சொல்லுதே உங்களோட ஆணவம் எல்லாம் என் கால் தூசுக்கு சமம்…”
“ஏய், கௌசி….” என்று ராம்நாத் அவரை நெருங்க வர, விலகி பின்னால் சென்றார்.
“ஆமா, உங்களை என்னைக்குமே நான் சந்தோஷபடுத்த நினைச்சதில்லை. நினைக்கவும் மாட்டேன். வாழ்க்கை குடுத்தேன்னு சொல்லி என்னோட வாழ்ந்த அந்த நேரத்துல ஒரு நிமிஷமாவது உங்களோட நினைப்பை எனக்குள்ள தந்தீங்களா?…” என்றவர்,
“முன் வாழ்க்கையோட ஒப்பிட்டு பேசி பேசியே…” என்றவரின் முகம் அருவருத்து போனது.
“இப்பவும் என் பிள்ளைங்களுக்காக அவங்க நிம்மதிக்காக அமைதியா போறேன். அது நீங்க ஜெயிச்சதா காமிக்குதுன்னா, இப்ப நான் சொல்றேன், அந்த பொய்யான சந்தோஷம் கூட உங்களுக்கு நான் போட்ட பிச்சை….” என்று சொல்லியவர் ராம்நாத்தை தீயாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு பூஜை அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டார்.
நெருப்பில் நின்றால் கூட இத்தனை தகித்திருக்குமா என்று தெரியாது. உயிரோடு வெந்துகொண்டிருந்தார் கௌசல்யா.
எதிரில் அவருக்கு காட்சியளித்த தெய்வம் கூட வேடிக்கை பார்ப்பதை போலிருக்க தாங்க முடியவில்லை.
“நான் என்ன பாவம் பண்ணுனேன்? எனக்கு ஏன்ம்மா இப்படி?…” என தனக்கெதிரே வீற்றிருந்த பெண் தெய்வத்திடம் முறையிட்டார் கௌசல்யா.
அம்மனின் முன் விளக்கில் எரிந்துகொண்டிருக்கும் ஒற்றை ஜோதியை மட்டுமே அவரின் விழிகள் உள்வாங்கியது.
அந்த அக்கினிக்கு இணையான ஜூவாலை அவரின் மனதையும் எரிக்க, அதற்குள் அவரின் உணர்வுகள் எல்லாம் பொசுங்கி கொண்டிருந்தது.
எப்போதும் அந்த பூஜை அறைக்குள் அமைதியை வேண்டி நிம்மதிக்காக வந்தமரும் கௌசல்யாவின் மனது மொத்தமாய் விட்டு போயிருந்தது.
இன்னும் எத்தனை எத்தனை உயிர்வதைகளை தாங்க இந்த உயிர் இன்னும் மிச்சமிருகிறது என்று தன் பிறப்பை நொந்தபடி உயிர் மடிந்து பார்த்திருந்தார் விழிகளில் ஜீவனற்ற விதமாய்.