பஸ் டிப்போவில் எஃப்சி முடிந்து வந்த பேருந்துகளை எல்லாம் கணக்கில் வைத்துவிட்டு அடுத்து அனுப்பவேண்டிய வாகனங்கள் எதுவென்று மேனேஜரிடம் விவாதித்துக்கொண்டிருந்தான் கௌரவ்.
“டூரிஸ்ட் வீகிள்ஸ் எல்லாம் பிராப்பரா இருக்கா? அதுல என்னென்ன வண்டி எஃப்சி போகனும்?…” என தன் முன்னிருந்த கணினியில் பார்த்துவிட்டு கேட்க, அதற்கு மேனேஜர் பதில் கூறிக்கொண்டிருக்கையில் கௌரவ்வின் எண்ணிற்கு அழைப்பு.
ஆகர்ஷன் தான் அழைத்திருந்தான் அந்தநேரம். மணியை பார்த்தான். இரண்டே முக்கால் என்றிருந்தது.
“ஓகே, போங்க…” என்று மேனேஜரை அனுப்பிவிட்டு தன் கைப்பேசியை எடுத்தான் கௌரவ்.
“கௌரவ்…” என்ற ஆகர்ஷனின் அழைப்பில்,
“என்ன இந்தநேரம்? இன்னைக்கு உங்களுக்கு ஷிப்ட்டாச்சே?…” என வினவினான் கௌரவ்.
ஆகர்ஷனின் பணி முதற்கொண்டு கௌரவ்விற்கு அத்துப்படி தான். உபயம் குழந்தை கௌசல்யா.
இந்தநேரம் சிட்னியில் அவன் மருத்துவமனைக்கு புறப்பட்டிருக்கவேண்டும். இப்பொழுது அங்கே மணி ஏழரையை நெருங்கிக்கொண்டிருக்கும்.
“கௌரவ் அம்மா என்ன பன்றாங்க?…” என ஆகர்ஷன் கேட்க,
“வீட்டுல தான்….” என்றவன்,
“என்னாச்சு?…” என்றான் தன் கணினியை அணைத்துவிட்டு, கார் சாவியை எடுத்துக்கொண்டவனாக.
ஆகர்ஷனின் குரலில் என்னவோ சிறு சஞ்சலம். தானுமே தாய்க்கு அழைத்து பின் மீண்டும் அழைக்கவே இல்லை.
இந்தநேரம் அவருமே அழைத்திருக்க வேண்டுமே என்று மீண்டும் தன் கை கடிகாரத்தை பார்த்துக்கொண்ட கௌரவ்வின் நடை வேகப்பட்டது.
“சுசீ, பார்த்துக்கோங்க….” என்று மேனேஜரிடம் சொல்லிவிட்டு தன் காரை நெருங்கிவிட்டான்.
“கௌசிம்மாவுக்கு கால் பண்ணுனேன். பாப்பாவும் பண்ணியிருக்காங்க. ரிங் போய்ட்டே இருக்கு. இப்பவும் நான் ஹாஸ்பிட்டல் கிளம்பிட்டேன். பாப்பா கூப்பிட்டும் அட்டன் பண்ணலை போல…” என்றவன் குரலில் பதட்டம்.
கௌசல்யா அந்த மாத பரிசோதனை என்று மருத்துவமனைக்கு வந்துசென்ற அன்றே ஆகர்ஷன் அழைத்து அவரின் உடல்நிலையை தெரிந்துகொள்ள கேட்டிருக்க,
“என்ன சொல்ல ஆர்ஷ்? இன்னும் உடல் மெலிஞ்சுட்டே தான் போறாங்க. எவ்வளவோ விட்டமின்ஸ் எடுத்துக்க வச்சாச்சு. ஆனாலும்…” என்று சொல்லி வருந்தியிருந்தார்.
என்னவோ அதிலிருந்தே ஆகர்ஷனின் மனது ஒரு நிலையில் இல்லை. நித்தமும் அவரோடு ஒருமுறையேனும் மகளை வைத்துக்கொண்டு பேசிவிடுவதுண்டு.
இப்போதுவரை பேசாமல் இருப்பவர் இல்லையே என்று தான் கௌரவ்விற்கே அவன் அழைத்தது.
“நான் வீட்டுக்கு தான் போய்ட்டிருக்கேன். பார்த்துட்டு கூப்பிடறேன்…” என்று கௌரவ் அவனை சமாதானம் செய்ய,
“பார்த்துக்கோடா…” வேறு எந்த வார்த்தையும் வரவில்லை.
ஆகர்ஷனின் நாவண்ணம் தழுதழுத்திருக்க அந்த குரலே சொல்லியது அவனின் வலியை.
“பார்த்துப்பேன். போனதும் நானே கால் பன்றேன்…” என்று சொல்லி வைத்தவன் கார் வேகமெடுக்க பத்தேநிமிடத்தில் வீடு வந்து சேர்ந்திருந்தான் கௌரவ்.
வீட்டின் கேட்டின் அருகில் காவலாளியை தவிர்த்து வீட்டினுள் பணிப்பெண்ணும் இல்லாதிருக்க,
“அம்மா…” என்றான் கௌரவ் சத்தமாய்.
அத்தனை சத்தமாய் அவன் அழைத்ததில்லை. உள்ளே இருந்த ராம்நாத் அறைவிட்டு வேகமாய் வெளியில் வந்து பார்க்க, அவரை ஒரு பார்வை பார்த்தவன் விழிகள் ஆராய்ச்சியாய் படிந்தது அவரின்மேல்.
“அவ எங்க இருப்பா? சாமி, குளம், குட்டைன்னு…” என இகழ்ச்சியாய் ஆரம்பித்தவர் மகனின் பார்வையில் வார்த்தைகளை மென்றார்.
“இன்னைக்கு லோட் கிளம்புதே. விக்ரம் வேற இல்லை?…” என அவரிடம் கேட்க,
“சாப்பிட்டேன். லேசா தலை சுத்துச்சு…”
“அப்போ ஹாஸ்பிட்டல் போயிருக்கனும்…” என்றதும்,
“ஏன்டா தலை சுத்தினா ரெஸ்ட் தான எடுப்பாங்க. எல்லாத்துக்கும் ஹாஸ்பிட்டலா?…” என்றவர்,
“இது என் வீடுடா. ஏன் இருக்கன்ற மாதிரியே கேட்கிற நீ?…” என மகனிடம் ராம்நாத் கேட்டுவிட கௌரவ்வின் முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
“வீடு வீடா இருக்கனுமே….” என நறுக்கென்று கூறிவிட்டு விழிகளால் அலச, பூஜை அறையின் கதவு ஒருபக்கமாய் சாற்றப்பட்டிருந்தது.
எப்போதும் அந்த கதவு இருபக்கமும் விரிந்தே திறந்திருக்கும். அதனை கௌசல்யா அடைக்கவேமாட்டார்.
இப்போது சாற்றி இருக்க இடுங்கிய பார்வையுடன் ராம்நாத்தை ஒரு பார்வை பார்த்துவிட்டு கௌரவ் அங்கே செல்ல அடைத்திருந்த கதவின் பின்னால் ஓய்ந்துபோய் தலை சாய்ந்து அமர்ந்திருந்தார் கௌசல்யா.
“ம்மா…” என்றவன் வேகமாய் அவரிடம் செல்ல மகனின் குரலிலும், அழைப்பிலும் பாதி கண்கள் மூடிய நிலையில் இருந்தவர்,
“கௌரவ்…” என்றதுமே அவரின் இதழ்கள் துடிக்க ஆரம்பித்தது அழுகையில்.
“ம்மா, என்னாச்சு? என்னம்மா?…” என்றான் அவன் பதறி போய்.
“கௌரவ், அப்பா. கௌரவ் கௌரவ்…” என மகனின் முகத்தினை நடுங்கும் கைகளாய் வருடியவர் நிமிர்ந்து அமர முடியாமல் போராட,
“ம்மா…” என்று அவரை தூக்கி அமர்த்தி, தானும் அங்கேயே அமர்ந்துவிட, மகனின் நெஞ்சில் சாய்ந்துவிட்டவர் விழிகள் கரகரவென கண்ணீரை பொழிந்தது.
‘என்னவோ நடந்திருக்கிறது’ என்று புரிந்துவிட்டவன் விழிகள் சிவந்து போனது தாயின் தேம்பலிலும், கண்ணீரிலும்.
“என் மகன், என் பிள்ளை. கௌரவ். அம்மா…” என முற்றுபெறா வார்த்தைகளாய் அவர் ஒவ்வொன்றாய் சொல்லி அழ, நெஞ்சோடு தாயை அணைத்துக்கொண்டான்.
“என்னம்மா? நான் எப்பவும் உங்க பிள்ளை தான். உங்க கௌரவ் தான்ம்மா…”
“நான் நான்…..” என்றவரால் பேச முடியவில்லை.
மயங்கி சரிவதை போல சாய்ந்தவரின் இதழ்கள் வறண்டு கிடக்க கண்டவன், பூஜையில் இருந்த துளசி தீர்த்தத்தை எடுத்தான்.
“இன்னும் சாப்பிடலையா நீங்க? இதை குடிங்கம்மா…” என்று அவருக்கு தர,
“இது சாமிக்கு….” தீனமாய் வந்தது அவரின் குரல்.
“உங்களை விட எனக்கு யாரும் முக்கியம் இல்லை. சாமி கூட….” என்றவன் அவர் மறுக்க மறுக்க தீர்த்தத்தினை புகட்டினான்.
குடித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் இன்னும் கலக்கம் மிச்சமிருந்தது. மகனின் முகம் பார்த்தவருக்கு ராம்நாத்தின் குரல் காதில் ஒலிக்க அவனின் கையை இறுக்கமாய் பற்றிக்கொண்டார் கௌசல்யா.
என்ன நடக்கிறது அங்கே என்று ராம்நாத் யோசித்தாலும் எட்டி சென்று பார்க்க நினைக்கவில்லை.
எப்படியும் கௌசல்யா எதையும் சொல்ல போவதில்லை என்று தெரியும். அந்த ஒரு அகம்பாவத்துடனே அறைக்குள் சென்று சட்டையை போட்டுகொண்டு வெளியே வர, கௌசல்யாவை தாங்கி பிடித்தபடி கௌரவ் டைனிங் டேபிளுக்கு வந்தான்.
“நான் மில்லுக்கு கிளம்பறேன் கௌரவ்…” என்று கூற, அவன் தலை கூட அசைக்கவில்லை அவருக்கு.