பற்றிக்கொண்டு வந்தது ராம்நாத்திற்கு. ‘இவ வயித்துல பிறக்காதப்பவே இந்த போடா? உண்மை தெரிஞ்சா இருக்கு எல்லாருக்கும்.’ என இளக்காரமாய் இருவரையும் பார்த்துவிட்டு வெளியேறினார் ராம்நாத்.
அவரின் கார் கிளம்பி சென்றதும் தான் கௌசல்யாவின் இறுக்கம் உடலில் தளர, முகத்தில் தீரா துயரம்.
“ம்மா…” என்ற கௌரவ்வின் அழைப்பில் நிமிர்ந்தவர்,
“அது ஒண்ணுமில்லை கௌரவ். நீ சாப்பிட்டியா?…” என்றார் மகனிடம்.
“ம்ஹூம்….” என்று அவன் தலையசைக்க,
“இவ்வளோ நேரமா பசியோடவா இருந்த? வா சாப்பிட்டு…” என சோர்வுடன் கூறினாலும் அவரின் கைகள் அவனுக்கு தட்டை எடுத்து வைக்க அப்போது தான் அவரின் உள்ளங்கையை கவனித்தான் கௌரவ்.
“ம்மா, என்ன இது? கைல காயம்? எப்படி, என்னாச்சு?…” என வரிசையாய் அவன் கேள்வியை அடுக்க, மழுக்கென்று நீர் மீண்டும் கௌசல்யாவின் விழியில் நிறைந்துவிட்டது.
“இதுவா? இது?…” என தன் உள்ளங்கையை பார்த்தார்.
உடைந்த தண்ணீர் ஜக்கின் கண்ணாடி துண்டுகள் அவசரமாய் அள்ளியதில் அவரின் கையை பதம் பார்த்திருந்தது.
“என்னதிது?…” என்றான் அதனை எடுத்து பார்த்து.
அத்தனை கீறல்கள். அதில் ரத்தம் வேறு வந்து காய்ந்திருந்தது. கௌரவ் விழிகள் தாயின் முகத்தில் பதிய,
“தண்ணீ ஜக் கீழ விழுந்துருச்சு கௌரவ். அதான்…” என்றவருக்கு முழுதாய் எதையும் பகிரும் தைரியம் வரவே இல்லை.
‘என் மகன். என்றைக்கும் என் மகனாகவே தன்னுயிர் உள்ளவரை இருக்கட்டும்’ என்று அந்த தாயுள்ளம் பரிதவிப்புடன் வேண்டிக்கொண்டது.
தொண்டை அடைக்க பார்த்தான் அவன். கௌசல்யாவின் முகத்தினை கொண்டே எதுவோ சரியில்லை என்று புரிந்தது.
“என்ன பேசினார்?…” என நேரடியாக அவரிடம் கேட்க,
“கௌரவ்…” என்று திகைத்து பார்த்தார் கௌசல்யா.
“ப்ச், சரி வாங்க…” என்றவன் முதலில் அவர் உண்ண வேண்டும் என எழுப்பி சென்று கையை, முகத்தை கழுவ செய்ய,
“நானே….” என்றவரை அழுத்தமாய் பார்த்தான்.
“நான் இருக்கேன் தானே?…” என்ற கேள்வியில் மறுத்துவிட முடியுமா கௌசல்யாவினால்?
கை காயத்திற்கு மருந்திட்டு உணவு மேஜையில் அவரை அமர வைத்து தட்டில் உணவை பரிமாறியவன், பிசைந்து அவருக்கு நீட்டினான்.
“சாப்பிடுங்க…” என்றதுமே உடைந்து போனார் கௌசல்யா.
“ப்ச், ம்மா…” என்று சொல்ல மறுக்காமல் வாங்கிக்கொண்டார் அவர்.
விழிகள் கசிய மனம் நெகிழ்ந்துபோய் அவர் அமர்ந்திருக்க, கௌரவ்வின் மனதினுள் என்னவென்னும் கேள்விகள் ஓராயிரம் பெருகியது.
அதற்குள் ஆகர்ஷனின் அழைப்பும் ஞாபகம் வர, தலையை உலுக்கிக்கொண்டு அவனுக்கு அழைத்தான்.
“உங்க கண்ணாவுக்கு உங்களோட பேசனுமாம். போய் அம்மாவை பாருடான்னு விரட்டவும் தான் கிளம்பினேன்…” என்று மெல்லிய சிரிப்புடன் கௌசல்யாவிடம் அவன் கூறவும், அவரின் முகமும் கனிந்தது.
“கண்ணா தேடினானா?…”
“ஹ்ம்ம்…” அவரை பார்த்துக்கொண்டே கௌரவ் தலையசைத்தான்.
“கௌசல்யாவும் தேடினாளாமா?…” இந்த தாயின் முகத்திலும் புன்னகை மீண்டது பேத்தியின் நினைவில்.
“ஹ்ம்ம்…” அதற்கும் தலையசைத்து தாயின் முகமாற்றங்களை, அதன் சந்தோஷங்களை அவதானித்தான் கௌரவ்.
அதற்குள் ஆகர்ஷன் அழைப்பை எடுத்ததுமே அப்படியே மகளுக்கும் சேர்த்து கனெக்ட் செய்தான்.
மார்பின் குறுக்கே இரு கைகளையும் கட்டிக்கொண்டு அடிக்கண்ணால் கோபம் என காண்பித்து குழந்தை நிற்க, கௌசல்யா பேசும்முன் அடுத்த கவளத்தினை தாய்க்கு ஊட்டினான் கௌரவ்.
“என்ன கைல காயமா? எங்க? எப்படி? கௌசிம்மா. கை காமிங்க…”
பிள்ளை மனம் அருகில் இருந்து பார்க்க முடியாமல் தவிக்க, கௌசல்யா ஏன் என்பதை போல கௌரவ்வை பார்த்துவிட்டு, தன் உள்ளங்கையை ஆகர்ஷனுக்கு காண்பித்தார்.
“என்னடா கௌரவ்? என்னம்மா. என்ன இவ்வளோ கீறல்?…” என ஆகர்ஷன் துடித்து போய் கேட்க,
“நீங்க ஏன் உடைஞ்சதை இப்படி அள்ளி இருக்கீங்க த்தை?…” என பிரத்யுக்ஷாவும் திரையில் மகளருகில் வந்தமர்ந்து சத்தம் போட்டாள்.
“பாட்டி கௌசி உங்க பேச்சு கா…” என்ற குழந்தை,
“தட் ஓல்ட் மேனை எடுக்க சொல்லனும். பாட்டி கௌசி வலிக்கும்…” பிள்ளை தன் உள்ளங்கையை காண்பித்து, திரையில் தெரிந்த கௌசல்யாவின் கையை தொட்டு பார்த்து,
“உப்பா தர்றா…” என்று முத்தமிட்டது தொடுதிரையில்.
அந்த ஈரத்தின் குளுமையை ஒவ்வொருவருமே நெஞ்சில் கசியும் பாசத்துடன் உணர்ந்தனர்.
“பாட்டிக்கு சரியா போச்சுடா குட்டி கண்ணா…” என்றவர் கண்கள் கலங்கிவிட்டது.
“நாற் மேன் வரட்டும். பாப்பா அடி, அடி….” என்று இடுப்பில் இருபக்கமும் கை வைத்து ராம்நாத்தின் பெயரை சொல்லி பேச,
“ரெண்டே அடியா? பத்தாதே…” என்றாள் பிரத்யூக்ஷா.
“பிரத்யூ. குழந்தைக்கு என்ன சொல்லி குடுக்கற நீ?…” ஆகர்ஷன் கேட்க,
“இவ்வளோ நேரம் கண்ணீரும் கம்பலையுமா இருந்தது நீங்க தான சீனியர்? கேள்வியை பாரு. கௌசல்யாவுக்கு எல்லாம் தெரியும். கௌசல்யாவை பார்த்துக்கவும் தெரியும். நாற்றை நார் நாரா பிரிக்கவும் தெரியும்…” என்றவள் கௌரவ் இருக்க கண்டு,
“சும்மா ஃபன், என் தாய்மாமாவாச்சே. எனக்கு உரிமை இருக்கே பேச…” என்றும் சமாளித்தாள் பல்லை கடித்துக்கொண்டு.
நிச்சயம் ஆகர்ஷன் தாங்கமாட்டான் என்று தெரியும். மனம் சஞ்சலப்பட கோபத்தை அடக்கமாட்டாது சொல்லி, கௌரவ் எதுவும் நினைப்பானோ என பேச்சை மாற்றினாள் பிரத்யூக்ஷா.
“கௌரவ் என்னடா?…” என்ற ஆகர்ஷனால் அதற்கு மேலும் அவனிடம் கேட்க முடியவில்லை.
போதாததிற்கு குழந்தை வேறு நடப்பவற்றை உன்னிப்பாய் கவனித்துக்கொண்டிருக்க அனைவரிடத்திலும் சிறு தேக்கம்.
“மம்மி…” என்ற குழந்தை பிரத்யூக்ஷாவின் காதில் என்னவோ கூற,
“உன் கண்ணா டாடியும், கௌவாப்பாவும் சரின்னு சொல்ல சொல்லு. இப்பவே கனெக்ட் பன்றேன்…” என்று பிரத்யூக்ஷா கூற,
“பிரத்யூ…” என்ற ஆகர்ஷனுக்கு புரிந்து போனது.
“கௌவாப்பா…” என குழந்தை அவனிடம் கேட்கும்முன்,
“கௌரவ், நான் நாளைக்கு பேசறேன். பார்த்துக்கோ…” என்று மகளின் இணைப்பை மட்டும் துண்டித்தவன்,
“கௌசிம்மா…” என்றான் கரகரத்த குரலில்.
“ஒன்னும் இல்லை கண்ணா. சரியாகிரும்…” என்ற கௌசல்யா,
“சரியாகிரும் என்ன கௌரவ்?…” என்றார் மகனிடமும்.
ஹ்ம்ம், ஆமா. சரி பண்ணிடலாம்…” என கௌரவ் சொல்ல ஆகர்ஷன் பார்வை கௌசல்யாவிடம் தான்.
அழைப்பை துண்டிக்க மனம் வரவே இல்லை. மீண்டும் மீண்டும் அவரின் அழுது சிவந்த விழிகளையும், கதறி களைத்த முகத்தையுமே பார்த்துக்கொண்டிருக்க, ராம்நாத்தின் மீது கொலைவெறி உண்டானது.
அவரில்லாமல் வேறு யாரும், எந்த காரணமும் கௌசல்யாவின் கண்ணீருக்கு காரணகர்த்தாவாக இருக்க முடியாதே.
“கண்ணா…” என கௌசல்யா அழைக்க,
“ம்மா, கௌசிம்மா…” என்றவன் விழிகள் கலங்கிவிட்டது.
தொண்டையை கவ்வி பிடிக்கும் உணர்வுடன் மூவரும் பார்த்திருக்க, ஆகர்ஷனின் வேலை வேறு அவனை இருக்கவிடாமல் செய்தது.
“கௌரவ்….” என்றதும் அவன் தலையசைக்க, பெருமூச்சுடன் தானுமே கண்ணமர்த்தி தலையசைத்து விடைபெற்றான் ஆகர்ஷன்.