சாவித்திரி வந்ததும் அவரை அறிமுகம் செய்துகொண்டதோடு தங்கவெண்ணிலாவை பற்றி கூறியதுமே கௌரவ்விற்கு பொறிதட்டியது.
இந்த பெண் அவளாக இருக்குமோ என மனதோரம் யோசனை தான். நிச்சயம் இல்லை என்று கூறிவிட முடியாது.
அவர் கூறிய காலகட்டமும், அந்த விபத்தான பகுதியும் சந்தேகத்திற்கு இடமின்றி அவனுக்கு காண்பித்துக்கொடுத்துவிட்டது.
அத்தனையை கேட்டுமே அவன் முகத்தில் எந்தவித மாறுதல்களும் இல்லை. வேண்டுமென்று நிகழவில்லையே.
அப்படி நிகழ்த்தவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. யாருக்கோ குறிவைத்து இந்த பெண்ணும் இடையில் வந்து சிக்கிக்கொள்ளும் என்று நினைக்கவில்லையே.
விபத்து ஏற்படுத்தி இருந்தாலும் தாமதமின்றி துரிதமாய் அவளின் உயிரையும் காப்பாற்ற செய்துவிட்டதை நினைத்துக்கொண்டான்.
தலையசைப்புடன் மௌனமாய் பார்த்தபடி கேட்டுக்கொண்டிருந்தவன் என்ன நினைக்கிறான் என்றே ஷ்யாமளா, சாவித்ரிக்கு புரியவில்லை.
“இட்ஸ் ஓகே…” என்று தோளை குலுக்கி அது ஒரு விஷயமா என்பதை போல கடந்துவிட்ட அவனின் பேச்சில் சாவித்ரிக்கு இன்னுமே சந்தோஷம்.
ஷ்யாமளாவின் வார்த்தைகளை தாண்டியா அவர் யோசிக்க போகிறார். ஆனாலுமே அவனை பற்றிய எல்லா விவரங்களையும் அவர் அறிந்திருந்தார்.
எல்லாம் என்பதில் கௌசல்யா அவனை பெற்றவர் இல்லை என்பது முதற்கொண்டு.
மற்றபடி ஆகர்ஷன், கௌசல்யாவின் பந்தத்தினை அங்கே சொல்லவில்லை ஷ்யாமளா.
அது அவசியமற்றது என்று நினைத்தார். அதனை ஆகர்ஷனுமே விரும்பமாட்டான் என்பதனால் கூறவில்லை.
ஒருவழியாய் பெரியவர்களுக்கு பிடித்திருக்க, இன்னும் ராம்நாத்திற்கு தெரியவில்லை மகன் பெண் பார்க்க சென்றிருக்கு விஷயம்.
“உன்னோட அப்பாட்ட சொல்லிட்டு பார்க்கலாமே கௌரவ்…” என கௌசல்யா கூற,
“இப்பவே சொல்லவேண்டாம்…” என்றுவிட்டான் அவன்.
முதலில் தான் பார்த்து அனைத்தும் சரியாக சேர்ந்துவந்த பின்னர் அவரிடம் பேசிக்கொள்ள நினைத்தான்.
சாவித்ரி சொல்லியதும், வெண்ணிலா வந்து சேர்ந்ததும் என்று நூறு சதவிகிதம் இது அவள் தான் என்று உறுதியானது.
அன்றைக்கு மோதிரத்தையும் அவள் தான் எடுத்து தந்தது என்று ஞாபகம் வர, அன்றே கௌசல்யா வெண்ணிலாவோடு சாவித்ரியை சந்தித்திருக்க கூடும் என்றும் புரிந்துபோனது.
வெண்ணிலாவுடன் தனித்து விட்டுவிட்டு பெரியவர்கள் இருவரும் கடந்து செல்லவும்,
“நான் தங்கவெண்ணிலா…” என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள் அவள்.
அவள் முகத்தில் முழுமையாய் மகிழ்ச்சியோ, எதிர்பார்ப்போ இல்லை. ஆராய்ச்சியும், யோசனையும் மட்டுமே இருக்க கண்டுகொண்டவனும் தலையசைப்புடன் பார்த்தான்.
“கௌரவ்…” என்றுமட்டும் கூற,
“ஹ்ம்ம், தெரியுமே. ராம்நாத் ட்ராவல்ஸ் கௌரவ். பேசஞ்செர்ஸ்கிட்ட பயங்கர ஸ்ட்ரிக்ட் ஆபீசர்…” புன்னகையுடன் கூறுவதாக நினைத்து அவனுக்கு குட்டுவைக்க,
“தட்ஸ் மை எத்திக்ஸ்…” அலட்டிக்கொள்ளவே இல்லை அவன்.
உண்மைக்கும் வெண்ணிலாவிற்கு சுறுசுறுவென்று பொங்கியது. சாவித்ரி இதனை பற்றி கூறவுமே, எந்தவித யோசனையும் இன்றி அவன் முகம் சட்டென மனக்கண்ணில் வந்து நின்றது.
“சரியான ஆட்டிடியூட். எப்படி சாவி?…” என்று மறுக்கத்தான் செய்தாள்.
“பேசி பாரு. அதுக்கு மேல உன் விருப்பம் தான் நிலா. பிஸ்னஸ் வேற. பேமிலி வேற. உன்கிட்ட ஆட்டிட்யூட் காமிக்காம இருக்கனும்ன்னு நீ ஏன் எதிர்பார்க்கிற? இதுவும் ஒருவித ஆட்டிட்யூட் தான்…” என்றவர்,
“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதுக்காக நீ சரின்னு சொல்லனும்ன்னு நான் நினைக்கலை. உன் விருப்பம் தான். ஜஸ்ட் ஒரு மீட்டிங். பேசி பாரு. அப்பாவும் ஒத்துவரலைன்னா வேண்டாம்…” என்று சொல்லிவிட்டார்.
ஷ்யாமளாவுமே அதை தான் கூறியிருந்தார். உண்மைக்கும் பிடிக்கவில்லை சொல்வதற்கு இந்த காரணங்களை தவிர வேறு எதுவும் இல்லை.
சாவித்ரி கூறியதில் இருக்கும் நியாயத்தையும் அலசி ஆராய்ந்தவள் குழப்பத்துடன் இருக்க, கிளம்பும் சமயம் நந்தாவிடமிருந்து அழைப்பு.
“உன் சைட்ட தான் மாப்பிள்ளை பார்க்க போறேன்….” என்று கௌரவ்வை பற்றி கூற,
“இது எப்போ? சொல்லவே இல்லை. உனக்கு தான் புடிக்காதே. ஓகே சொல்ல போறியா நீ?…” என்று நந்தா ஒருபுறம் கேட்க,
“பாவம் உன் புருஷன். உன் சைட்டுன்னு உன்கிட்ட சொல்றேன். நீ அதுக்கு அப்ஜெக்ட் பண்ணாம என்னென்ன கேட்கிற?…” என்று பேசிக்கொண்டே வந்து சேர்ந்திருந்தாள் அவள்.
இப்போதுமே அவன் அமர்ந்திருந்த தோரணை, பார்வை, உடை, அதன் தேர்வு என்று அனைத்தும் பிடித்திருந்தது.
அலையலையாய் கேசமும், அடர்ந்த புருவங்களும், இரு புருவங்களுக்கு மத்தியில் சின்னதாய் ஒரு சுழிப்பும், இமை உயர்த்தி பார்த்ததில் நெற்றியில் வரிவரியாய் இரு கோடுகள்.
‘எப்படி பார்த்தாலும் ஸ்டெய்லிஷ் கௌரவம் பார்க்க வைக்கிறானே?’ என்று நினைத்தவள் தன்னையும் ஒருமுறை கவனமெடுத்து பார்த்துக்கொண்டாள்.
பேகி ஜீன்ஸ், டை அன்ட் டை மல்டி கலர் டிஷர்ட், அதில் மிக்கிமௌஸ் பொம்மை படம். தூக்கி போடப்பட்ட போனி டெய்ல். ஹெல்மெட்டினால் வியர்த்திருக்க, கலைந்த கூந்தல் கற்றைகள் காதோரம் சுருண்டிருந்தது.
யாரேனும் பெண் பார்க்கும் படலம் என்று கூறினால் நிச்சயம் நம்ப முடியாது. அப்படியிருந்தது.
“ஹ்ம்ம், வெல்…” என்றவள் வேறு என்ன என்று கேட்கும் முன், அவளின் எண்ணிற்கு மீண்டும் சுனந்தாவிடமிருந்து அழைப்பு.
“எக்ஸ்க்யூஸ்மீ…” என்று கூறவும், அதற்கும் தலையசைத்து தன் வலதுகருத்தினை விரித்து காண்பித்து பேசும்படி பாவனை செய்ய, ‘காட்’ என அதனை கவனித்தவள் காதில் கைப்பேசியை வைத்தாள்.
“என்னாச்சு? பேசியாச்சா?…” என சுனந்தா ஆர்வமாக கேட்க,
“ஈகா மாத்ரா பந்திதே…” (இப்ப தான் வந்தேன்) என்றாள் கன்னடத்தில்.
அவள் பேசிக்கொண்டே கௌரவ்வை பார்க்க அவன் அப்போதும் அதே போல் தான் அமர்ந்திருந்தான்.
பார்வை வெளிப்புறம் கண்ணாடியின் பின் பதிந்திருக்க, பாவனை என்னவோ வேடிக்கை பார்ப்பதை போலிருந்தது.
“நீ கிளம்பி போய் எவ்வளோ நேரம். ப்ச், அதை விடு. பேசியாச்சா? பாட்டி கன்பார்ம் பண்ணிடுவாங்களோ?…” என சுனந்தா கேட்க,
“நிவ்வு நன்னா மாட்தன்னு எல்லி கேலபஹது?…” (எங்க என் பேச்சை கேட்காங்க?) என கன்னடத்திலேயே பதில்கள்.
“பார்றா புள்ளை கன்னடத்துல மாத்தாடுது. என்ன ஐகானுக்கு தெரிய கூடாதுன்னா? நீ நடத்து. சரி அப்டியே ஒரு ஸ்நாப் எடுத்து அனுப்பேன். நானும் பார்த்துக்கறேன்…” என்றாள் சுனந்தா.
“சும்’மனே நோடுவுதுக்கே பந்திதே…” (நானே சும்மா பார்த்துட்டு போக வந்தேன்) என்று பல்லை கடித்தவள்,
“ஓகே, பை…” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவள் கைப்பேசியை டேபிளில் வைத்துவிட்டு கௌரவ்வை பார்க்க, இப்போது அவளை தான் பார்த்தபடி இருந்தான் கௌரவ்.
“ஹ்ம்ம், நீங்க சொல்லுங்க. எத்திக்ஸ் முக்கியம் தான். எமோஷன்ஸ் கூட ரொம்ப முக்கியம் இல்லையா?…” என்றாள் வெண்ணிலா.
அவள் கேட்கவும் தன்னிரு கைகளை சேர்த்து தேய்த்துக்கொண்டவன் கையிலிருந்த காப்பை நன்றாய் தள்ளி போட்டுக்கொண்டே எழுந்துவிட்டான்.