“இன்னு மாத்தனாடுவுக ஆகத்யவேல்லா. நனகே அர்த்தவாயிது…” (இனிமே பேச அவசியமில்லை. எனக்கு புரிஞ்சிருச்சு.) என்று அவளை போலவே கன்னடத்தில் பேசியவன்,
“புரிஞ்சதா?…” என்று சொல்லிவிட்டு நேராக சாவித்ரி, ஷ்யாமளாவிடம் வந்து நின்றவன்,
“பொண்ணுக்கு இஷ்டம் இல்லைன்னா ஏன் இந்த அரேஞ்ச்மேன்ட்?…” என்று கேட்டதோடு ஷ்யாமளாவை வர சொல்லிவிட்டு வெளியேறிவிட்டான்.
வெண்ணிலா சுத்தத்திற்கும் இதனை எதிர்பார்க்கவே இல்லை. தான் பேசியதை புரிந்துகொண்டது ஒருபுறம், அதனை போலவே பதில் கூறியதும் ஒருபுறம் என்று அவளை ஸ்தம்பிக்க செய்துவிட்டது.
கௌரவ் அவளை பார்த்துக்கொண்டே வெளியேறி செல்வதும் தெரிய திகைப்பில் இருந்தவளுக்கு ஒன்றும் பிடிபடவில்லை.
என்னவென்று கேட்கவும் முடியாமல் அப்படியே நின்றிருக்க, சாவித்ரி, ஷ்யாமளாவிடம் என்ன சொல்ல முடியும்?
இன்னுமே கண்ணாடியின் வெளியில் அவன் நின்றிருந்த விதம், நிச்சயம் தன்னை தான் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பதும் புரிந்தது.
“நான் இன்னும் கௌரவத்துட்ட எதுவுமே பேசலை சாவி…” என்றவள் ஷ்யாமளாவும் இருக்க கண்டு,
“சொதப்பறேனே…” என்று பார்த்தாள்.
“சரி உட்கார். முதல்ல என்னன்னு பொறுமையா சொல்லு…” என கேட்க, சுனந்தாவுடன் பேசியதையும், கௌரவ் பதிலையும் சேர்த்து சொல்ல இருவருமே தலையில் கைவைத்துவிட்டனர்.
“என்ன நிலா இது?…” என்றார் சாவித்ரி.
“அப்போ உனக்கு இஷ்டம் இல்லையா நிலா? வெளிப்படையா சொல்லு. நாங்க எதுவும் நினைக்க போறதில்லை. இது கல்யாணம். பரஸ்பரம் பிடித்தம் இருந்தா தான் வாழ்க்கையும் நல்லா இருக்கும்…” என ஷ்யாமளா கேட்க, வெண்ணிலாவின் விழிகள் வெளியில் நின்ற கௌரவ்விடம் நீண்டது.
“நான் எப்போ பிடிக்கலைன்னு சொன்னேன்?…” என்றாள் அவள் தன்னை போல.
ஷ்யாமளாவின் முகம் பளிச்சென்று மாற சாவித்ரிக்கு அது மட்டும் போதவில்லை.
“நிலா தெளிவா சொல்லு…” என்றார் அவளிடம் மீண்டும்.
“நிஜமா தான். கொஞ்சம் கோவம் தான். முன்னாடி அவங்க இருந்தது எல்லாம். நான் தான் உன்கிட்ட சொன்னேனே சாவி. நந்தா வேற கேலி பண்ணுவாளேன்னு சும்மா சட்டுன்னு ஓகே சொல்லாத மாதிரி பேசினேன். அது கவுத்துருச்சு…” என்று வெண்ணிலா கூற,
“கௌரவ்க்கு பிடிக்கலைன்னா மறைச்சு எல்லாம் பேசமாட்டான். சொல்லியிருப்பான். இப்பவுமே பொண்ணுக்கு இஷ்டம் இல்லைன்னா ஏன் இந்த ஏற்பாடுன்னு தானே கேட்டான். அவனுக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்லலையே…” என்றார்.
“ஓஹ்…” என்று மீண்டும் நிலா கௌரவ்வை பார்க்க, காரில் ஏறி அமர்ந்திருந்தான் அவன்.
சட்டென்று அந்த நிழலில் அவனின் உருவம் தெரியாமல் போக லேசாய் குனிந்து பார்த்து காருக்குள் அவன் இருக்க கண்டு பின் நிமிர, கௌரவ்வும் கவனித்தபடி தான் இருந்தான்.
“சரி நான் கிளம்பறேன். பேசிட்டு சொல்லுங்க…” என்று ஷ்யாமளா எழுந்து சென்றுவிட,
“கிளம்புவோமா நாமளும்?…” என்றார் சாவித்ரி.
“வந்துட்டோமே. சாஸ்திரத்துக்கு ஒரு காபி கூட வாங்கி தரலை இந்த மாப்பிள்ளை. என்ன மாப்பிள்ளையோ?…”
“அதுக்காக?…”
“நாம இருந்து செலிபரேட் பண்ணிட்டு போவோம் சாவி…” என்று சொல்ல, சாவித்ரி மறுக்க, வெண்ணிலா அவரின் பக்கம் எழுந்துவந்து கை போட்டு கொஞ்ச, இலகுவாய் ஒரு செல்ல சண்டை.
அவன் அந்த வளாகம் விட்டு நகரும் வரை ஒன்றுவிடாமல் தன் செரோகியை கிளப்பிக்கொண்டு சென்ற கௌரவ்வின் பார்வையிலும் விழுந்தது.
ஷ்யாமளா எதுவும் பேசவில்லை அவனிடம். ஆனால் கௌசல்யாவிடம் இதனை கூற,
“உனக்கு இஷ்டம் இல்லையா கௌரவ்?…” என்றார் மகனிடம்.
“உங்களுக்கு அவ்வளோ பிடிச்சிருக்கா?…” சிரிப்புடன் அவன் கேட்க,
“இது பெத்தவங்க பிடித்தத்துக்காக செய்யற விஷயம் இல்லை கௌரவ். கல்யாணம். உனக்கும் புடிச்சிருக்கனும். அந்த பொண்ணுக்கும் பிடிச்சிருக்கனும். ரெண்டுபேரும் மனமொத்து வாழ்ந்தா மட்டும் தான் அது வாழ்க்கை கௌரவ்…” என்றார் ஆழ்ந்த அர்த்தத்துடன் கௌசல்யா.
எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு எப்போதும் போலவே அவனிருக்க ஆயாசமாகி போனது ஷ்யாமளாவிற்கு.
“கல்லுளிமங்கன்டா நீ…” என்று சொல்லிவிட்டு மருத்துவமனையில் இறங்கிக்கொள்ள, என்றைக்கும் இல்லாத ஒரு விரிந்த புன்னகை அவன் முகத்தில்.
“அடேங்கப்பா. நல்லது…” என்றவர்,
“நல்ல பொண்ணு கௌரவ் நிலா. கொஞ்சம் படபடன்னு பேசுவா. இனிமே உனக்கும் சேர்த்தே பேசுவான்னு வச்சுக்கலாம்…” என்று சொல்ல அதற்குமே அளவான புன்னகை.
“போடா…” என்றவர் உள்ளே சென்றுவிட கௌரவ் காஞ்சிபுரம் நோக்கி கிளம்பி வந்தான்.
வருகையில் ஒரு வியாபார பேச்சு ஒன்றையும் முடித்துவிட்டு வந்திருக்க, மறுநாள் தான் அந்த விவரம் ராம்நாத்தின் காதுக்கு வந்து சேர்ந்தது.
கோபத்தில் கொந்தளிப்புடன் இருந்தவர் விஷயம் கேள்விப்பட்டதும் மகனை தேடி டிப்போவுக்கு விரைந்தார்.
———————————————
ராம்நாத் ட்ராவல்ஸ் அன்ட் டிப்போவில் நிற்கும் பேருந்துகளை எல்லாம் கழுவிக்கொண்டிருந்தனர்.
“சுசீ இன்னைக்கு ஈவ்னிங் போய் அந்த பஸ் மூணையும் எடுத்துட்டு வந்திருங்க. வரும்போது பக்காவா நம்ம கம்பெனி வண்டியா இருக்கனும். புரியுதா?…” என்று சொல்ல,
“ஓகே ஸார். நான் பசங்களை அனுப்பிடறேன். சர்வீஸ் இங்க வந்து பண்ணிடுவோம்…”
“ஹ்ம்ம், நீங்களும் அங்க போகனும். போனதும் எனக்கு கால் பண்ணுங்க…” என்று பேசிக்கொண்டே லெட்ஜரில் கவனமாய் இருந்தவனின் சிந்தையை கலைத்தது வாசலில் இருந்த செக்யூரிட்டியின் அழைப்பு.
“ஹ்ம்ம், அனுப்பிவிடுங்க…” என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.
“உள்ள வர சொன்னார்ங்கம்மா…” என அவர் கூறவும்,
“ஹ்ம்ம், வெல்…” என்றபடி பைக்கின் கைப்பிடியை முறுக்கியவள் கேட் திறந்ததும் உள்ள சென்றாள் வெண்ணிலா.
“வீடு பொண்ணுங்க கூட பூச நாள தவிர்த்து என்னிக்கும் இந்த டிப்போக்குள்ள வந்ததில்ல. இன்னிக்கு என்ன திருநாளாம் புதுசா ஒரு புள்ள?…” என்றபடி அவர் பேசிக்கொண்டமர்வது கௌரவிற்கு புலப்பட்டது.
என்னவென்று கேட்கவில்லை என்றாலும் அவள் வந்ததும், அவர் பேசியதும், பின் இப்போது பேசியதும் என்று அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.