கோபமாய் வீட்டிற்கு கிளம்பிய ராம்நாத் வந்து சேரும்பொழுது சரியாய் கௌரவ்வின் செரோகியும் உள்ளே வந்து நின்றது.
ராம்நாத் ட்ராவல்ஸ் காரில் தான் வந்திறங்கியிருந்தார். அதனை கண்டுமே மகன் எதுவும் கேட்காமல் பார்த்துவிட்டு வீட்டினுள் செல்ல, இன்னுமே கொதித்துக்கொண்டு வந்தது.
யாரின் மீதாவது மொத்தத்தையும் இறக்கிவிடும் வேகம் பிறக்க அதற்கும் வாய்ப்பில்லை இப்போது.
ஊருக்கு இளைத்தவன் ஆண்டி என்பதை போல அவர் கொட்ட கொட்ட வாங்கிக்கொண்டு அமைதியாய் இருக்கும் கௌசல்யாவிடமும் இப்போது எதையும் பேசிவிட முடியாது.
கௌரவ் வரும் முன்பே ஷ்யாமளா அழைத்து பேசிவிட்டது கௌசல்யாவின் முகம் பார்க்கையிலேயே தெரிந்தது.
அத்தனை மலர்ந்து கண்களும் சேர்ந்து சந்தோஷத்தை வெளிப்படுத்த, மகனுக்கு பின்னே உள்ளே வந்தவர் கோபமெல்லாம் ஒருபக்கம் ச்நேற்று, கௌசல்யாவின் புன்னகை முகத்தில் தான் அவர் பார்வை நிலைத்தது.
‘என்னை ஒருதடவையாச்சும் இப்படி சிரிச்சு பார்த்திருப்பாளா? எப்படி சிரிக்கிறா. மெலிவா இருந்தாலும் இன்னும் அழகு குறைஞ்சிருக்கா முகத்துல’ என பார்த்துக்கொண்டே நடக்க, அதனை எல்லாம் எங்கே தாயும் மகனும் கண்டனர்.
“கௌரவ்,…” என்று கௌசல்யா அழைக்கவும்,
“இப்ப சந்தோஷமா?…” என்றான் அவன் சோபாவில் வந்தமர்ந்து.
“நீ விரும்பி சம்மதம் சொல்லியிருந்தா எனக்கு முழு சந்தோஷம் தான்…” என்றார் மகனிடம்.
“அப்பா இந்த வீட்டுல நான் யாரு…” என்று கோபத்துடன் டீப்பாயை அவர் எடி உதைக்க,
“என்ன பழக்கம் இது?…” என்றான் கௌரவ் கண்டனப்பார்வையுடன்.
“நீ தான் புதுசு புதுசா பண்ணிட்டிருக்க கௌரவ். உனக்கு என்ன ஆச்சு?…” என ராம்நாத் கேட்க,
“என்ன பண்ணேன்?…” என்றான் எதிர்கேள்வியாய்.
“கௌரவ்…” என்றவர்,
“சரி விடு, மத்ததை பேசவேண்டாம். இப்ப இந்த வரனுக்கு நீ எப்படி சரின்னு சொல்லுவா? எனக்கு இஷ்டம் இல்லை. அந்த பொண்ணும் வேண்டாம். அவளும் அவ பேச்சும். மூஞ்சியும்…” என்று சொல்ல விருட்டென்று கௌரவ் எழுந்து நிற்க, அதை எதிர்பாராதவர் அருகிலிருந்த குஷனில் பொத்தென்று விழுந்தார்.
“வார்த்தைகள் கவனம் வேணும். அடுத்த வீட்டு பொண்ணை பேசுவீங்களா?…” என்று அவருக்கே புத்திமதி சொல்ல,
“உன்னை விட பெரியவன் நான். என் அனுபவம் தெரியுமா உனக்கு? அவ என்ன பேசினா தெரியுமா என்கிட்ட?…” என்றதும் கௌரவ்வின் புருவங்கள் சுருங்கியது.
“நீங்க என்ன பேசுனீங்க?…” என்றான் அவரிடம்.
“நான்,,,, நான் என்ன பேசுவேன்? ப்ச், அதை விடு. அது தேவை இல்லை. பொம்பளை புள்ளையா லச்சணமா இல்லாம மாப்பிள்ளை பார்க்க வந்தேன்னு சொல்றாளே…”
“என்னை பார்க்க வந்திருக்காங்க. வேற என்ன சொல்லுவாங்க?…” என்றவன்,
“இத்தனை வயசாகியும் உங்களுக்கு பேச தெரியலை. அதை யார் சொல்ல?…” என்று கேட்க, கௌசல்யாவுமே மகனை திகைப்புடன் பார்த்தாள்.
“என்னையே கேள்வி கேட்பியா நீ? கௌரவ் இது சரியில்லை…”
“இன்னொரு பொண்ணையும் இப்படி பேசாதீங்க. அதுவும் இந்த வீட்டுக்கு வரப்போற பொண்ணு…” என்றான்.
“அதுக்கு சம்மதிக்கமாட்டேன் நான்…”
“கல்யாணம் பண்ணிக்க போறது நான். என் சம்மதம் போதும். என் அம்மா இருக்காங்க…” என்று பட்டென்று உடைத்து கூற,
“அப்போ நான், என்னோட விருப்பம் வேண்டாமா?…”
“என்னோட விருப்பத்தை சொல்லிட்டேன்…” என்றவன்,
“என் வாழ்க்கை. என் முடிவு. இஷ்டம்ன்னா கல்யாணத்துக்கு வாங்க. இல்லைன்னா…” என்றவன் தோளை குலுக்கிக்கொண்டான்.
கௌரவ்விடம் மாற்றம் இருந்தது தான். சின்னவயதிலிருந்தே என்னதான் திமிராய் விரைப்பாய் நடந்துகொண்டாலும் அவனிடம் கௌசல்யாவின் குணநலன்களும் இருக்கத்தான் செய்தது.
இப்போது அது இத்தகையை மாற்றத்தை தந்திருக்கும் என்று நம்பமுடியாமல் பார்த்தார் ராம்நாத்.
இத்தனை தூரம் தன்னையே எடுத்தெறிந்து பேசும் அளவிற்கு மகன் வந்துவிட்டானா என வெறித்து நின்றவர்,
“நில்லு கௌரவ்…” என்றதும் அவனும் நிற்க,
“இன்னைக்கு சென்னைல மூணு பழைய பஸ் விலைக்கு வருதுன்னு எடுக்க போறியாம்…” என்றார் அடக்கப்பட்ட கோபத்துடன்.
“ஆமா, நிஜம் தான்…” என்று கை கட்டியபடி அவரை நேர்பார்வை பார்த்து நின்றான் கௌரவ்.
“என்கிட்ட சொல்லவே இல்லை நீ. வாங்கறதுக்கு முன்னாடி கேட்கவேண்டாமா?…”
“ஓஹ், கேட்கனுமா? எல்லாமே கேட்டே தான் எப்பவும் செய்யனுமா? நீங்க இல்லைன்னா?…”
“ஓஹ், எனக்கு ட்ரை பண்ணுனியா? ஹ்ம்ம். அதானே பார்த்தேன்…” என்றார் கௌச்லயாவை மிதப்பாய் ஒரு பார்வை பார்த்துக்கொண்டு.
ஆனால் ஆமாம், இல்லை என்னும் எந்த வார்த்தையும் கௌரவ்விடம் இருந்து வரவில்லை.
“என்ன பார்த்துட்டே நிக்கிற. போய் சாப்பிட எடுத்து வை…” என்று கௌசல்யாவை விரட்ட,
“ம்மா, உங்களோட பேசனும். எனக்கு இப்ப வேண்டாம். வாங்க…” என்று சொல்லி தன் அறைக்குள் அவன் செல்ல, பின்னோடு வந்ததுவோ ராம்நாத்.
“கௌரவ் இங்க பாரேன்….” என்றதும் அவரை திரும்பி பார்த்தவன், தாயை தேடினான்.
அவர் வாசலில் நிற்க கண்டு இடுங்கிய பார்வையுடன் தகப்பனை காண, ராம்நாத் இன்னும் நெருங்கி வந்தார்.
“அப்பா சொல்றேன்னு நீ எதுவும் நினைக்காத. எல்லாம் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்…”
“இன்னும் நீங்க நல்லதை சொல்லலையே?…” என அவனுமே அவரை போலவே தாழ்ந்த குரலில் கேட்க,
“அந்த பொண்ணு வேண்டாம்…” என்றார் மீண்டும்.
அவரின் முகத்தினருகே என்னவென்ற பார்வையுடன் நின்றவன், மீண்டும் திரும்பி தலையசைப்புடன் முகம் கழுவ டவலை எடுத்தான்.
“இரு இரு. என்னன்னு கேளு. அந்த குடும்பத்துக்கானவ மாதிரி தெரியலை…” என்ற ராம்னாத்திற்கு மகனின் முகத்தின் மாற்றம் புரியவே இல்லை.
“எம்மாம்பெரிய பைக் தெரியுமா? ஆம்பளை மாதிரி அதை ஓட்டிட்டு வித்தை காமிக்கிரா எங்கிட்ட. இதெல்லாம் சரிவருமா? மாப்பிள்ளை பார்க்க வந்தேன்னு திமிரா சொன்னவ, நாளைக்கு தாலியை நான் தான் கட்டுவேன்னு சொன்னா?…” என்று கேட்டார் மகனின் ஈகோவை சீண்டும் விதமாய்.
“ஸோ?…” கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அவன் கேட்க,
“நான் சொன்னேனே?…”
“அதுல உங்களுக்கு எதுவும் கஷ்டமா?…” என்றானே பார்க்கலாம்.
மகனின் பதிலில் ஆணியடித்ததை போல அப்படியே அசையாது நின்றுவிட்டார் ராம்நாத்.
அவரின் அதிர்ச்சியை எல்லாம் கண்டுகொள்ளாதவன் டவலுடன் குளியலறை சென்றுவிட, அறைந்து சாற்றிய கதவின் சத்தத்தில் தான் தெளிந்தார் ராம்நாத்.
“என்ன இவன் இப்படி பேசறான்? விட்டா இவனே கட்ட சொல்லுவான் போல? ம்ஹூம். என்னை மீறி என்ன நடக்குதுன்னு நானும் பார்க்கறேன்…” என்று சூளுரைத்தபடி வெளியே வர கௌசல்யா நின்றிருந்தார்.
“என்னடி என்ன நினைச்சிட்டிருக்கான் இவன்? என்ன விளையாடறீங்களா?…” என ரகசிய குரலில் ராம்நாத் கேட்க பதிலேதும் கூறாமல் நின்றார் கௌசல்யா.
“எல்லாத்துக்கும் சேர்த்து வைக்கறேன் ஆப்பு. அப்ப தெரியும் இந்த ராம்நாத் யாருன்னு…” என்று கூற, குளியலறை கதவு திறக்கப்படும் சத்தம்.