சாருலதா இதனை எதிர்பார்க்கவே இல்லை. எப்போதும் ஒட்டி பிறந்த இரட்டையான விக்ரமை விட, எப்போதும் கௌரவ்வின் மீது தான் அவளின் அன்பு, பாசம் எல்லாம்.
எப்போதும் தன் அண்ணனின் மீது அத்தனை பிரமிப்பும் கர்வமுமாய் தான் அவளின் பார்வை இருக்கும்.
“சாரு…” என கௌசல்யா மகளின் தோளை தொட,
“போங்கம்மா. எனக்கு அவளை பிடிக்கவே இல்லை. எனக்கு விருப்பமும் இல்லை. இப்படி பண்ணிட்டீங்களே? எனக்கு அண்ணியா வரப்போறவங்க எப்படி இருக்கனும்ன்னு ஆசைப்பட்டேன் தெரியுமா?…” என்று கூற,
“அதே மாதிரி அண்ணனுக்கும் விருப்பம் இருக்கனுமே? நிலா நல்ல பொண்ணு. கௌரவ்க்கும் பிடிச்சிருக்கு…” என்றார் கௌசல்யா.
“உன் பையனுக்கு பிடிச்ச போக்கிமான் பிக்காச்சு வாய்ஸ் குடுக்கறது அண்ணி தான். தெரியுமா?…” என்று விக்ரம் சிரிக்க,
“போடா…” என்று சொன்னலும், அவளால் அதனை ஏற்கவே முடியவில்லை.
அந்தளவிற்கு ராம்நாத் மகளை உருவேற்றி இருந்தார். வெண்ணிலாவின் மீதான அபிப்பிராயத்தை விஷயமாய் மாற்றி வைத்திருந்தார்.
தான் சந்திக்காத ஒருவரின் மீது இத்தனை கோபத்தை வளர்த்திருந்தாள் சாருலதா.
அவளை சமாதானம் செய்து சாப்பிட வைத்து விக்ரமுடன் அனுப்பிவைத்தார் கௌசல்யா.
ராம்நாத்திற்கு அந்த வெடியும் நமுத்துபோக அடுத்து என்ன என்னும் யோசனை தான்.
யோசித்து முடியும் முன் ஒருவாரம் சென்றிருக்க இதோ பெண் பார்க்கும் படலம் என்று வந்து நின்றது.
அவரிடம் தகவலாக தான் இந்த விஷயமும் தெரிவிக்கப்பட வெளிப்படையாய் கோபிக்க கூட முடியவில்லை அவரால்.
ஷ்யாமளாவிடம் கௌசல்யா இதனை வருத்தத்துடன் பகிர்ந்திருக்க,
“அதெல்லாம் பார்த்துக்கலாம்…” என்றவர், இதனை ஆகர்ஷனிடமும் பகிர்ந்திருந்தார்.
“கௌரவ்க்கு பிடிச்சிருக்கு. கௌசிம்மா பார்த்த பொண்ணு. இதுல அந்தாள் எதுவும் கலாட்டா செய்யட்டும். இருக்கு…” என ஆகர்ஷன் அவரிடம் கூறி இருக்க,
“இந்த தாய்மாமா தொல்லை ஓவர் டோஸ்ல போகுது போல. நீங்க கூட இருந்து இந்த கல்யாணத்தை நடத்தி குடுங்கப்பா…” என்று தன் தகப்பன் ஸ்ரீவத்சனிடம் கூறியிருந்தாள் பிரத்யூக்ஷா.
இப்படியாக ஒவ்வொருவரும் இதனை நடத்திமுடிக்க ஆவலுடன் இருக்க, இதோ பெண் பார்க்கும் படலம் என்று கிளம்பி வந்திருந்தனர் குடும்பத்துடன்.
“சாவி, இப்ப இதெல்லாம் அவசியமா? அதான் பார்த்துட்டோமே?…” என வெண்ணிலா சாவித்ரியிடம் கூற,
“நாம பார்த்தா ஆச்சா? மத்த விஷயம் எப்படியோ? கல்யாணம். சொந்தங்கள் எல்லாம் சேர்ந்து தான் நடத்தனும். குமரனும், வளர்மதியும் வருவாங்க. சுனந்தாவுக்கு லீவ்ன்னா அவளுமே வருவா…”
“அதெல்லாம் லீவ் போட்டே வருவா அவ. கௌரவத்தை பார்க்கனுமே…” என்று கண் சிமிட்ட,
“உதைபடுவ ராஸ்கல், கௌரவம்ன்னு இதென்ன பேச்சு?…” என கண்டித்தாலும், அதனை கூறுகையில் வெண்ணிலாவின் முகம் பிரகாசிப்பதை கண்டு மனதார மகிழ்ந்தார் சாவித்ரி.
அவரிடம் விளையாட்டாய் பேசினாலும், இன்னும் கௌரவ் தனது பெயரை அவனின் கைப்பேசியில் பதியவில்லை என்று தெரிந்தது.
“வேணும்னே பன்றான். சரியான பிரஸ்டீஜ். ஸோ வாட்? இதுக்காக தான மேன் பன்ற. பண்ணிக்கோ…” என்று தோளை குலுக்கிக்கொண்டாள் அவள்.
பெண் பார்ப்பது என்று கசகசவென்று கூட்டத்தை கூட்டவில்லை அவர்கள். சாவித்ரியின் வீட்டில் குமரன், வளர்மதி, சுனந்தா.
இத்தனைக்குள் பேசி முடித்துக்கொண்டு நிச்சயம், திருமணத்தை பார்த்துக்கொள்ளலாம் என்றிருந்தனர்.
“கௌவாப்பா பாப்பா இல்ல…” என குழந்தை கேட்டதிலேயே அவன் சொல்லிவிட்டான், நிச்சயத்தை திருமணத்துடன் சேர்த்தே வைத்துக்கொள்ளும்படி.
“இது ஜஸ்ட் பார்மாலிட்டீஸ் தான். மத்த எல்லாம் ஆகர்ஷன் வரட்டும்…” என்று சொல்லிவிட்டான் முடிவாக.
“ரொம்பத்தான் பன்றீங்கடா ரெண்டுபேரும். அவனும் நாங்க வந்த பின்னாடி மத்ததை செய்ங்கன்னு சொல்றான். நீயும் பிடிவாதம்ன்னா, பொண்ணு வீட்டுல அவங்க என்ன நினைப்பாங்க?…” என ஷ்யாமளா தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டார்.
“அண்ணனுங்க சொன்ன மாதிரி செய்ங்கம்மா. இல்லைன்னா உங்க பேத்தியே சண்டைக்கு நிப்பா…” என்று ஷ்யாமளாவின் மகள் அனன்யா வேறு எச்சரித்திருந்தாள்.
“யார் யாருக்கெல்லாம் பயப்பட வேண்டியதிருக்கு…” என சுகமாய் அலுத்துக்கொண்டு, பெண்ணை மட்டும் பார்த்து பூ வைத்து உறுதிபடுத்த வந்துவிட்டனர்.
ராம்நாத் வெண்ணிலாவை பற்றி சாதாரணமாய் நினைத்திருக்க வீட்டை பார்த்ததுமே திகைத்துவிட்டார்.
“கீழ் வீட்டை எல்லாம் வாடகைக்கு விட்டுட்டு மாடில ஒண்டு குடித்தனமா? கொஞ்சமாவது நம்ம தகுதிக்கு வேண்டாமா?…” என அதற்கொருபாடு பேசியிருந்தவரின் முகத்தில் கரியை பூசுவதை போலிருந்தது அந்த வீட்டின் அமைப்பு.
மிகப்பெரிய வீடு. கீழே தளத்திற்கு நான்கு வீடுகள் வாரியாக ஐந்து தளங்கள். அதில் ஆறாவது தளம் முழுவதும் ஒரே வீடாக அவர்களின் சொந்த உபயோகத்திற்கும், ஏழாவது பென்ட்ஹவுஸ்(penthouse) எனப்படும் வகையிலான வீடு அது.
புதுமையாக பார்க்கவே அத்தனை அழகாய் கவரும்படி இருந்தது அந்த இல்லம்.
வியப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்க ராம்நாத் தான் கொஞ்சம் சிரமப்பட்டுவிட்டார்.
“ஹ்ம்ம், வீடு ஓகே தான். இருந்தாலும் நம்ம வீடு இன்னும் பெருசே…” என சாருலதா கௌசல்யாவிடம் கூற,
“குறையா பார்த்தா எல்லாமே குறையா தான் தெரியும் சாரு. ரசிக்க பழகு…” என்று சொல்லிவிட்டார்.
கௌரவ் வேறு இருப்பதனால் பொறுமையாகவே இருக்கவேண்டிய கட்டாயம் சாருவிற்கு.
இடமெல்லாம் பார்க்கமாட்டானே. அதட்டல் இல்லாது அடக்கி வைக்க பேசிவிடுவான்.
எதற்கு பேச்சை கொடுத்து வாங்கிக்கட்டவேண்டும் என்று பொறுமையாகவே இருந்தாள்.
ராம்நாத் அத்தனை தின்னக்கத்துடன் அனைத்தையும் ஆராயும் பாங்குடன் வந்தவர் மனதில் எதிர்பார்ப்பும் இருந்தது.
‘அன்னைக்கு என்னை யாருன்னு தெரியாம பேசினதுக்கு அந்த மோட்டார்க்காரி இன்னைக்கு மூஞ்சியை எங்க கொண்டுபோய் வச்சிக்கறான்னு பார்க்கறேன்’ என்று மகளிடம் சொல்லித்தான் வந்திருந்தார்.
வந்தவர்களை வரவேற்று அமர வைத்த சாவித்ரியும், வளர்மதியும் சுனந்தாவிடம் முதலில் குடிக்க தண்ணீர் கொடுத்தனுப்பினார்.
“செம்ம ஸ்மார்ட் தான் மிஸ்டர் மேன்லி ஸ்டெய்லிஷ் ஐகான்…” என இப்போதும் சுனந்தா கௌரவ்வை பார்த்துவிட்டு வெண்ணிலாவிடம் வந்து கூறியிருக்க,
“இதுக்குத்தான் உன் புருஷனை விட்டுட்டு வந்தியா நீ?…” என்றாள் வெண்ணிலா தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே.
“இதுக்கு பேர் அழகை ரசிக்கிறது. அதுக்கெல்லாம் வயசு, கல்யாணம் தடையில்லை தெரியுமா?…” என கலகலத்து பேசிக்கொண்டிருந்தனர்.
“இன்னைக்காவது புடவை கட்ட கூடாதா வெண்ணிலா?…” என வளர்மதி உள்ளே வந்து அவளிடம் கூற,
“பூவும் கொஞ்சம் வச்சிக்கலாம். இதெல்லாம் மெமரீஸ் நிலா. நான் தான் புலம்பிட்டே மிஸ் பண்ணிட்டேன். அதனால எனக்கு அதோட வேல்யூ தெரியுது…” என்று கூற,
“அப்படின்னா சொல்ற?…” என்ற வெண்ணிலாவும் யோசனையுடன் ட்ரெஸிங் டேபிளில் இருந்த முல்லை சரத்தை பார்த்தாள்.
“ஆனா அதிகமா இருந்தா ஓவரா இருக்குமே. வச்சு பாரு. சரியா இல்லைன்னா எடுத்துடு…” என்று கூறவும் தனக்கு வைத்து பார்த்தவள்,
“இரு செல்பி எடுத்து பார்க்கறேன்…” என கைப்பேசியை எடுக்க,
“நந்தா…” என்று வளர்மதி அழைக்கவும், அவள் சென்றுவிட்டாள்.
வெண்ணிலா தன் கைப்பேசியுடன் அறையிலிருந்து பால்கனி வழியாய் டெரெஸ்கார்டனுக்கு வந்து நின்று ஒவ்வொரு புகைப்படமாய் எடுத்து பார்த்தாள்.
“ஹ்ம்ம், நாட் பேட்…” என்று எடுத்து பார்க்க திருப்தி இல்லை என்றல் வேறு திக்கில் நின்று எடுக்க என்றிருந்தவள் மயில்மாணிக்கச்செடியின் பந்தலின் கீழ் வந்து நின்றாள்.
“வாவ் சீனரி…” என்றபடி கை நீட்டி புகைப்படத்தை எடுக்க, திரையில் அவளோடு, சற்று தள்ளி கௌரவ்.
கைப்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தவன் கவனமும் இப்போது அவளிடம் தான்.
வெண்ணிலாவின் இதழ்களில் குறுஞ்சிரிப்பு நெளிய, ரசனையான விழிகள் மெலிதான வெட்கப்படலத்தை சுமக்க, மீண்டும் மீண்டும் அவர்கள் இருவரையும் சேர்த்தே புகைப்படங்களாய் சேமித்துக்கொண்டிருந்தாள்.