“கௌரவம் சும்மா பார்த்தாலே ஒன்னொன்னும் போட்டோ பேஸ் லுக் தான். இதுல ஸ்நாப் எடுக்கறது தெரிஞ்சா விடுவாரா?…” என முணுமுணுத்தவள் திரும்பி அவனை பார்த்தாள்.
கைப்பேசியை இறக்கிவிட்டு அவனை நோக்கி வேகமாய் நடைபோட, கௌரவ் தன்னை நெருங்கி வரும் பெண்ணை பார்த்ததோடு, உள்புறமும் திரும்பி பார்த்தான்.
விக்ரம் அவசரமாய் பேசவேண்டும் என்று அழைத்ததன் பெயரில் அவன் சத்தமின்றி பேச அவ்விடம் விட்டு மாடியின் ஒருபக்கம் வந்து நின்றவன், தோட்டத்தின் அமைப்பில் அங்கே வந்துவிட்டான்.
வந்த இடத்தில் தேவ தரிசனம் என்னும் விதமாய், எளிமையான அழகோடு தகதகத்தது தங்கவெண்ணிலா.
பார்த்தவன் பார்வையில் பாரிஜாத வாசம், நாசியில் நுழைந்து கிறங்கடிக்க, முகத்தில் எதையும் காண்பித்துக்கொள்ளவில்லை அவன்.
“ஹாய்…” என அருகில் வந்துவிட்டவளுக்கு தலையசைத்தவன்,
“அவ்வளோ தானடா?…” என்றான் போனில் விக்ரம்மிடம்.
“ஓகே, கூப்பிடறேன்…” என்று தன் கைப்பேசியை பேண்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டு வெண்ணிலாவை பார்த்தான்.
“செல்பி எடுத்தேன். பார்க்கறீங்களா?…” என வெண்ணிலா கேட்க,
“ஹ்ம்ம்…” என்று சிறு சத்தமும் தலையசைப்பும்.
புன்னகைக்கிறான் என்பதை அவனின் விழிகளின் அமைதியில், விழியோர சுருக்கத்திலும் தான் கண்டுகொள்ள முடிந்தது.
‘இப்படி உத்து உத்து பார்க்க வச்சே பார்க்க வச்சாச்சு. இந்த பிரஸ்டீஜ் குக்கர் என்னைக்கு விசிலடிச்சு. ஹப்பா’ என்று மனதில் நினைத்தவளின் பெருமூச்சு மட்டும் பெரிதாய் வந்தது.
நிலாவின் கைகள் அவனோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அவனிடம் காண்பிக்க, தன்னைப்போல அவனின் பக்கம் வந்து நின்றாள் அவள்.
உரசிக்கொள்ளாத தோள்களின் இடைவெளி காத்திருப்பின் கனத்தை கூட்டுவதை போலிருந்தது.
“நிலா, இங்க இருக்கியா?…” சுனந்தா அவளை தேடி வந்துவிட,
“வா நந்தா…” என்று திரும்பிய நிலா இன்னும் கௌரவ்வின் அருகில் நெருங்கி நிற்க, பேவென்று பார்த்தாள் சுனந்தா.
“இல்ல, அங்க உன்னை அழைச்சிட்டு வர சொன்னாங்க. அதுக்குள்ள நீங்க…” என்று தயக்கத்துடன் பேசினாள் அவள்.
“எப்படின்னாலும் என்னை தான பார்க்க போறாங்க. இங்க பார்த்தா என்ன? உள்ளன்னா என்ன? இருந்தாலும் வந்ததும் வந்துட்ட, ஒரு பிக் கேட்ச் பண்ணேன்…” என தன் கைப்பேசியை அவள் பக்கம் தூக்கி போட்டவள்,
“ரெடி?…” என்றாள் கௌரவ்விடம்.
“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவன் சுவற்றில் சாய்ந்து நின்று இரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டினுள் நுழைத்துக்கொண்டு சரிவாய் நிற்க,
“வாவ்…” என்றாள் சுனந்தா.
“கொன்னுடுவேன் உன்னை….” என அங்கே அலங்காரத்திற்கு வைக்கபட்டிருந்த சிறிய கூழாங்கல் ஒன்றை அவள் மீது எரிய,
“ஸாரிப்பா…” என்று இருவரையும் புகைப்படம் எடுத்தாள்.
“எங்க?…” என்று வாங்கிய நிலா,
“நீ போ, நான் வர்றேன்…” என்று சொல்லி சுனந்தாவை தள்ளாத குறையாக அனுப்பிவிட்டு அதனை பார்த்தாள்.
“ப்ச், க்ளாரடிக்குது. தள்ளி எடுத்திருக்கனுமோ?…” என அந்த புகைப்படங்களை பார்த்தவள்,
“நான் எடுத்ததே பெட்டர்…” என்றாள் கௌரவ்விடம்.
எல்லாவற்றிற்கும் அவனிடம் மௌனம் மட்டுமே. அவளை போல் சட்டென்று பேச சுத்தமாய் வரவில்லை.
ஓரிரு வார்த்தைகளேனும் பேச நினைத்தாலும் அதையும் வேண்டுமென்றே விழுங்கிக்கொண்டான் அவன்.
“பர்பெக்ட் பிக்சர். கேண்டிட்….” என்று அதனை அவனிடம் காண்பிக்க, கௌரவ்வின் விழிகளிலும் இன்னும் சுவாரஸியம் கூடியது.
கௌரவ் அவளை பார்த்து சாய்ந்து நின்ற தோற்றமும், அவன் பின் நிற்பதை அப்போது தான் அவளும் கவனித்து லேசாய் புருவம் உயர்த்தி, இதழ் சுளித்து சந்தோஷம் பொங்க இயல்பாய் அமைந்திருந்தது அந்த புகைப்படம்.
“வாவ்…” என்றான் அவனுமே சத்தமின்றி.
“பிக்சர் ரொம்ப நல்லா இருக்கு. உங்களுக்கு அனுப்பலாம் தான். ஆனா என் நம்பர் தான் உங்ககிட்ட இல்லையே. சோ சேட், இல்ல?…” என கேலி போல அவள் சொல்லி காண்பிக்க,
“வெல்…” என்றவன் தலையை சாய்த்து ஒரு பார்வையுடன் தோளை குலுக்கிவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
“ஆட்டிட்யூட் கௌரவம்…” என்றவளுக்கும் அது அத்தனை பிடித்ததாய் இருந்தது தான் ஆச்சர்யம்.
அவனிடம் அவமதிக்கும் பார்வை இல்லை. அலட்சியபாவமும் இல்லை. எல்லை வகுத்து நின்றாலும் அந்த பார்வை, அவளை வாரி சுருட்டிக்கொண்டது என்னவோ முற்றிலும் நிஜம்.
கௌரவ் உள்ளே சென்றதும் அந்த மயில்மாணிக்க பந்தலின் கீழ் நின்றவள் முகத்தில் அப்பட்டமான குறும்பு புன்னகை.
“இன்னும் நீ வரலையா? மாப்பிள்ளையே வந்தாச்சு. எங்கப்பா வேற குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேட்டுட்டு இருக்கார். இதுல ஐகான் அப்பா வேற ஈமு கோழி மாதிரி எப்ப பாரு ராங்காவே பேசறது…” என கூற,
“அது ரிவெஞ்ச் மேக் போல. பார்த்துப்போம்…” என்றவள், நந்தாவுடன் பேசிக்கொண்டே இயல்பாய் கூடத்திற்கு வந்து நின்றாள்.
“வாங்க…” என்று அனைவருக்கும் பொதுவாய் சொல்லி புன்னகைத்தவள்,
“ஹாய் ஆன்ட்டி, எப்படி இருக்கீங்க?…” என்றபடி சாவித்ரியின் அருகில் வந்தமர்ந்தாள்.
ராம்நாத் நினைத்ததை போல அவரை பார்த்ததும் அதிர்ச்சியோ, இல்லை அன்றைக்கும் பேசிவிட்டோமே என்ற சங்கடமோ எதுவும் இல்லாது சாதாரண புன்னகை தான்.