நாதனின் வீட்டு கூடத்தில் தீபிகாவின் மடியில் தலைசாய்த்து அழுகையில் கரைந்து கொண்டிருந்த கீர்த்தி வீட்டினுள் நுழைந்த ப்ரீத்தியை கண்ட மறுநொடி சீறிக்கொண்டு சென்றவள் அவளை பிடித்து கன்னம் கன்னமாக அறையத்தொடங்கி இருந்தாள்.
‘என்ன பண்ற கீர்த்தி விடு அவளை..’ என்று அலர் எழில் தடுக்க முற்பட,
‘விடுங்க மாமா’ என்று அவன் கரத்தில் இருந்து விடுபட்டவள் ‘ஏய் நீயெல்லாம் கூட பிறந்தவளாடி..?? என்கிட்டே என்ன சொல்லிட்டு போன அங்க மாமாகிட்ட போய் என்ன காரியம் பண்ணி இருக்க..?? என்று ப்ரீத்தியை மீண்டும் அறைந்தவள் முகத்தில் சொல்லென்னா வேதனையும் கண்ணீரும்..!!
‘ச்சை எப்படிடி எப்படி முடிஞ்சது உன்னால? கொஞ்சமும் அசிங்கமா இல்லையா..?? தங்கச்சியை காதலிக்கறவர்கிட்ட கீழ்த்தரமா நடந்துக்க உனக்கு கொஞ்சங்கூட கூசலை” என்று கேட்க,
மடை திறந்த வெள்ளமாக புரண்ட கண்ணீருடன் கீர்த்தியை பார்த்த ப்ரீத்தி கையெடுத்து கும்பிட்டு, “ப்ளீஸ் கீர்த்தி என்கிட்டே எந்த கேள்வியும் கேட்காத என்கிட்டே எதுக்குமே விளக்கமில்ல.. நா.. நானே எதிர்பார்க்காம என்னோட முடிவு வேற மாதிரி.. ப்ச் ஆனா ப்ளீஸ் நிச்சயம் நான் செய்தது மன்னிக்கவே முடியாத குற்றம் எதை சொல்லியும் அதைநியாப்படுத்தவே முடியாது… ப்ளீஸ் கீர்த்திஉன்னால முடிஞ்சா என்னை மன்னிச்சிடு” என்றாள் விண்டுபோன மனதுடன்.
‘எதுக்கும் விளக்கமில்லையா..?? மத்தவங்க பண்ணின தப்புக்கு எத்தனை கோணமும் வடிவமும் கொடுத்த உனக்கு நீ செய்த தப்புக்கு விளக்கம் சொல்ல முடியலையா..?? வேண்டாம் ப்ரீத்தி இதுக்கு மேலயும் என்னை ஏமாத்த நினைக்காத உன்னால நான் நிறைய இழந்துட்டேன்.. சொல்லு எதுக்கு கல்யாணம் செய்துட்டு வாழபோறேன்னு சொல்லிட்டு தேவையில்லாம என் மாமாவை நோகடிச்ச சொல்லுடி எனக்கு பதில் தெரியனும் சொல்லு..’ என்று வெடித்து கிளம்பிய கேவலுடன் கீர்த்தி ப்ரீத்தியை உலுக்கவும்,
தங்கையின் கண்ணீரில் உடைந்த ப்ரீத்தியும் குறையாத கண்ணீரோடு ‘ப்ளீஸ் இதுக்குமேல என்னை எதுவும் கேட்காத என்கிட்டே பதில் இல்லை’ என்று திக்கி திணறிட அவளை தாங்கிகொண்ட எழில்,
“கீர்த்தி உன்னோட ஆதங்கம் புரியுது ஆனா அவ இப்ப இருக்க நிலைக்கு கொஞ்சம் அமைதியா இரு”
“என்ன மாமா பெரிய நிலைமை” என்று எழிலிடம் சீறியவள்,
‘இந்த நிலைமைக்கு இவளே காரணமா இருக்கபோ நான் எதுக்கு அதை யோசிக்கணும்…?? போதும் மாமா அம்மா, அக்கான்னு இவங்க பட்ட கஷ்டத்துக்காக ஒருமுறை விட்டுகொடுத்து இப்போ என் வாழ்க்கையை இழந்துட்டு நிற்கிறேன்.. இன்னும் வேற ஏதாவது எனக்கு இவங்க பாக்கி வச்சிருக்காங்களா..??” என்று ஆக்ரோஷமாக கேட்க யாரிடமும் பதிலில்லை.
அதை கண்ட அலர் எழிலின் சட்டையை பிடித்திழுத்து அமைதியா இரு மாமா எதுவும் பேசாத.. என்று தன்னருகே நிறுத்தி இருந்தாள்.
“இவ மாமாக்கே தெரியாம அவ..” என்று இதழ் மடித்து கேவலை கட்டுபடுத்தியவள் ப்ரீத்தியிடம் கலங்கிய விழிகளுடன், “உன.. உனக்கு நான் என்ன பாவம் பண்ணேன் ஏன் எனக்கு இப்படி ஒரு தண்டனையை கொடுத்த..?? உன்னால என்னைவிட மாமா அதிகமா காயப்பட்டு போயிருக்கார்.. இப்படி உன்னோட பழிவெறில அநியாயமா எங்களோட வாழ்க்கையையே அழிச்சிட்டியே நீ நல்லா இருப்….” என்றபோதே பதறிக்கொண்டு வந்த வசுமதி,
“வேண்டாம்மா வேண்டாம்” என்று கீர்த்தியிடம் கை கூப்பியவர்,
“தயவுசெய்து அவளை சபிச்சிடாத எல்லாமே நான் பண்ண தப்பு.., நான் ஒரு புத்தி கெட்டவ என்னாலதான் என் ரெண்டு பொண்ணுங்களோட வாழ்க்கையும் தடம் மாறி போச்சி, எதுவா இருந்தாலும் என்னை சொல்லு” என்று தலையில் அடித்து கொள்ள,
‘போதும் நிறுத்துங்க’ என்று அவரிடம் காய்ந்தவள்,
“இன்னொருமுறை என்னை உங்க பொண்ணுன்னு சொல்லாதிங்க எந்த அம்மாவும் ஒரு பொண்ணோட வாழ்க்கையை இன்னொரு பொண்ணு நாசமாக்குறதை பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டாங்க… ஆனா இவ மாமா வீட்டுக்கு முறை இல்லாம போனப்போ கைகட்டி வேடிக்கை பார்த்துட்டு இருந்தவங்க தானே நீங்க..?? உங்க வயித்துல பிறந்ததை தவிர நான் என்ன பாவம் பண்ணினேன் எதுக்கு எல்லாரும் சேர்ந்து என்னை நோகடிக்கிறீங்க” என்று தாளமுடியா வேதனையோடு முகம் திருப்ப.,
நடுங்கும் கரம் கொண்டு அவள் முகத்தை பற்றிய வசுமதி, “இல்லம்மா இல்ல எனக்கு எதுவும் தெரியாது இவ அந்த ஆளை பழி வாங்குறேன்னு தான் சொல்லிட்டு போனா ஆனா உன் வாழ்க்கையை தட்டி பறிக்க பார்த்தவ இப்போ அவ வாழ்க்கையையும் சேர்த்துஇழந்து நிற்பான்னு நான் நினைச்சுகூட பார்க்கலை, என்னை மன்னிச்சிடும்மா எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை ஒரு கண்ணுல வெண்ணை இன்னொரு கண்ணுல சுண்ணாம்பு வைப்பேனா..???
‘இவ பண்ண போற காரியம் தெரிஞ்சிருந்தா உயிரை கொடுத்தாவது அவளை தடுத்து நிறுத்திருப்பேன் ஆனா எனக்கு எதுவுமே தெரியாது..’ என்று விசும்பியவர் அப்போது தான் வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்த சரணிடம் சென்று,
‘ப்ரீத்தி பண்ணின தப்புக்காக நான் வேணும்னா உங்க கால்ல விழுறேன் ஆனா தயவுசெய்து கீர்த்தியை தண்டிச்சிடிடாதீங்க’ என்று கைகூப்பி மன்னிப்பை வேண்ட உணர்வற்று அவரை பார்த்தவன் பதிலளிக்காமல் அங்கிருந்த நாற்காலியில் சென்று தளர்ந்தமர்ந்து விழிகளை மூடிக்கொண்டான்.
“போதும் நிறுத்துங்க இப்போ நீங்க மன்னிப்பு கேட்கிறதால மட்டும் எல்லாம் மாறிட போகுதா..?? அங்க சொன்னது தான் இனிகாலம் பூரா நீங்களும் என்னை கண் குளிர பார்த்து சந்தோஷபடுங்க… உங்களுக்கு மகளா வந்து பிறந்த பாவத்துக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்” என்று தலையில் அடைத்துக்கொண்டு அழுதவளை ‘கீர்த்தி’ என்று உரத்த குரலில் தடுத்த தீபிகா மறுநொடி,
என்ன சொன்ன…?? என்று கீர்த்தியை ஆவேசமாக அறைந்திருந்தவர் அதற்கு நேர்மாறாக மகளை அணைத்து கொண்டு இன்னொரு முறை அப்படி சொல்லாதம்மா என்று கதற தொடங்கினார்.
“வேண்டாம்டா நீ எந்த பாவமும் பண்ணலை அப்புறம் உனக்கேன் இந்த தண்டனை.. யார் யாரோ உன் வாழ்க்கையை நாசமாக்கினதுக்கு நீ எப்படி பொறுப்பாவ..?? நான் இருக்கும் வரை உனக்கு எதுவும் நடக்கவிட மாட்டேன் என் பெண்ணை நான் வாழ வைப்பேன்” என்றவர் கண்களை துடைத்து கொண்டு சரணிடம் தான் சென்று நின்றார்.
சரணோ தீபிகாவை மட்டுமல்ல வேறு யாரையும் பார்க்கவும் தயாராக இல்லை..
கண்மூடி அமர்ந்திருந்தவனுக்கு தன் எதிரே நின்று தீபிகா பேசியவை காதில் விழுந்தாலும் எதற்கும் பதில் சொல்லவில்லை.. இப்போது கீர்த்தி மீது அவனுக்கிருக்கும் கோபத்திற்கு நிச்சயம் அவன் வார்த்தைகள் கட்டுக்குள் இருக்காது அதைவிட இனியும் தன் வாழ்வில் அவளுக்கு இடமில்லை என்று முடிவெடுத்த பின் அவளை பற்றி பேசுவது அவசியமற்றது என்பதால் கனத்த மௌனம் சரணிடம்.
ப்ரீத்தியின் செயலில் வளர்மதியும் வைதேகியும் ஒருபுறம் வாயடைத்து போயிருந்தனர் என்றால் மறுபுறம் “ஆபரேஷன் சக்சஸ் பட் பேஷன்ட் டெட்” என்று கூறுவார்களே அதுபோலதன் நோக்கத்தில் வெற்றி அடைந்தவள் வாழ்வில் தோற்று போய் நிற்பதை கண்டவர்களுக்கு ஆற்றாமை பெருக்கெடுத்தது.
ஆனால் அதில் தங்கள் தம்பியின் வாழ்வும் சின்னாபின்னமகியதில் அவளை மன்னிக்க அவர்கள் தயாராக இல்லை. சூழல் கருதி வளர்மதி அமைதியாக இருந்தாலும் வைதேகி அப்படி இல்லை ப்ரீத்திக்கு நன்றாக கொடுத்துவிட்டே வந்து அமர்ந்தார்.
ஒருகட்டத்தில் தீபிகாவின் மன்றாடல் நிற்காமல் போகவும் ‘போதும் நிறுத்துங்க..’ என்று சீறிய சரண் நீங்க எவ்ளோ பேசினாலும் என்னோட முடிவுல மாற்றமில்லை என்று தீபிகாவிடம் திடமாக தன் மறுப்பை தெரிவிக்க அதை கண்டு திடுக்கிட்டு போயினர் தமக்கைகள் இருவரும்.
‘நீ கொஞ்சம் பொறுமையா இரு தீபா.. கீர்த்தியை பாரு நான் தம்பிகிட்ட பேசுறேன்’ என்று தீபிகாவை சமாதானபடுத்தி அனுப்பிய வளர்மதி தம்பியின் அருகே அமர்ந்து பேச தொடங்கியும் கசங்கிய முகத்துடன் அமர்ந்திருந்தவன் அசைந்து கொடுத்தான் இல்லை வைதேகி எத்தனை போராடியும் சரணின் முடிவை மாற்ற முடியாததில் பெண்கள் அனைவரின் கண்களும் ஈரம் சுமக்க தொடங்கி இருந்தது.
************************************
நாதன் வீட்டினுள் நுழைந்தபோது அங்கு மயான அமைதி…
கீர்த்தியும் ப்ரீத்தியும் கூடத்தில் முறையே தீபிகா மற்றும் வசுமதி தோளில் சாய்ந்து மெளனமாக கண்ணீர் வடிக்க தாயம்மாளின் அறையில் இருந்த அலரும் எழிலும் கலைவாணியையும் தாயம்மாளையும் சமாதானப்படுத்தி தேற்றிக் கொண்டிருந்தனர்.
கீர்த்தியின் எதிரே இறுகிப்போய் அமர்ந்திருந்த சரணின் பார்வை என்னவோ எல்லையில்லா வஞ்சினத்துடன் கீர்த்தியை தான் கொன்று கூறு போட்டுகொண்டிருந்தது. அவனருகே கலங்கிய விழிகளுடன் அமர்ந்திருந்த வளர்மதியும் வைதேகியும் தம்பியை வேதனையுடன் பார்த்து கொண்டிருந்தனர்.
உள்ளே நுழைந்த நாதன் அனைவரின் கண்ணீரையும் கண்டு, “இங்க என்ன எழவா விழுந்துடுச்சு..!! எதுக்கு எல்லாரும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கீங்க இதுக்குமேல ஆக வேண்டியதை பார்க்கலாம்” என்றவாறே அங்கிருந்த நாற்காலியில் அமர அனைவரின் பார்வையும் அவர் மீது.
வயதான பெண்மணிகளுக்குஉண்ண கொடுத்து அவர்களை படுக்க வைத்த அலரும் எழிலும் அவர் குரலில் வெளியே வந்தனர். மகளை கண்டதும் “அமுலு காலண்டர் எடுத்துட்டு வா நாள் பார்க்கணும்” என்றார்.
அலரை தடுத்து ‘எதுக்கு’ என்ற கேள்வி எழிலிடம் இருந்து புறப்படவும்.,
அவனை முறைத்த நாதன் ‘சொன்னதை செய் அமுலு’ என்று மகளுக்கு கட்டளையிட்டு விட்டு வளர்மதியிடம்,
“உன் தம்பிக்கும் என் பெண்ணுக்கும் கல்யாணத்துக்கு நாள் குறிக்க போறேன்” என்று கூறவும் கண்ணீரை துடைத்தவாறு நாதனை பார்த்த வளருக்கும் வைதேகிக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி, புன்னகையுடன் அருகே இருந்த தம்பியை பார்க்க அவன் முகம் உணர்வுகள் துடைக்கபட்டிருந்தது.
இருக்கரங்களை மார்பின் குறுக்காக கோர்த்துக்கொண்டு கதவில் சாய்ந்து நின்றிருந்த எழில், “மாமி நாள் குறிக்கும் முன்ன பொண்ணு மாப்பிள்ளைகிட்ட சம்மதம் கேட்க சொல்லுங்க” என்றான்.
உடனே ‘எல்லா ஈர வெங்காயமும் எனக்கு தெரியும் யாரும் சொல்ல தேவையில்ல’ என்று எழிலை பார்த்தவாறு பல்லை கடிக்க,
அதற்குள் ‘முடியாது!!’ ‘வேண்டாம் பெரிப்பா’ என்ற இருவேறு குரல்கள் ஒன்றாக இணைந்து நாதனின் செவியை தீண்டியது.
‘என் கல்யாணத்தை எப்போ எப்படி நடத்தனும்னு நான் முடிவு பண்றேன் நீங்க இதுல தலையிடாதீங்க’ என்று சரண் கூறவும், ‘டேய் தம்பி இவ்ளோ நேரம் எடுத்து சொல்லியும் புரிஞ்சிக்காம என்ன பேசுற நீ..?’ என்று பதறிக்கொண்டு வந்த வைதேகியும், வளரும் சரணிடம் காணப்பட்ட கடுமையை கண்டு அவனிடம் மீண்டும் மன்றாட தொடங்க,
இங்கு கீர்த்தியோநேற்றைய சரணின் ஆக்ரோஷத்தில் பயந்து போயிருந்தவளுக்கு அவனுடனான ஒருநாளே புயலில் சிக்கிய நிலையை உணர்ந்தவளுக்கு திருமணத்திற்குபின் அவனை எதிர்க்கொள்ளும் திடம் சுத்தமாக இல்லை, மேலும் தன்னை காணும் போதெல்லாம் அவன் மறக்க நினைப்பவைநினைவு வர ஒவ்வொரு நிமிடமும் அவனுக்கு அது நரகமே என்பதை உணர்ததாலேயே அவனை மறுக்கிறாள்.
‘சொல்லு கீர்த்தி‘ என்றார் நாதன்,
அச்சத்துடன் சரணை ஒருமுறை பார்த்தவள், “வேண்டாம் பெரியப்பா மாமாக்கு நான் வேண்டாம்” என்றாள் அழுகையினூடே..
‘என்ன முட்டாள்தனமான பேச்சு கீர்த்தி’ என்று மகளை கண்டித்த தீபிகா..,
“அவ சின்ன பொண்ணு ஏதோ புரியாம பேசுறா அதை பெருசா எடுத்துக்காதிங்க நீங்க கல்யாணத்துக்கு நாள் பாருங்க மாமா..” என்றவருக்கு நிச்சயம் நாதனின் வார்த்தைக்கு சரணிடம் மதிப்பிருக்கும் அவர் பேசினால் சம்மதித்து விடுவான் என்ற நம்பிக்கை.
இங்கு கீர்த்தியின் பதிலில் ஒற்றை புருவத்தை ஏற்றியவாறு சரணின் பார்வை அவள் மீது காட்டத்துடன் படிந்தது..அதை உணராமல், ‘இல்ல பெரியப்பா அம்மா சொல்றதை கேட்காதீங்க.. நா.. நான் நிச்சயம் மாமாக்கு வேண்டாம் ப்ளீஸ் நான் இல்லாம மாமா நிம்மதியா இருக்கட்டும்’ என்று மீண்டும் அதே பல்லவியை பாட,
மகளின் அச்சத்தை கண்ட நாதன் என்ன நினைத்தாரோ, “அப்போ உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா..?” என்று கேட்க கனத்த அமைதி அவளிடம்..!!
“அமைதியா இருந்தா என்ன அர்த்தம் கீர்த்தி! அப்போ சரணுக்குவேற பொண்ணு பார்த்து கட்டி வைக்க உனக்கு சம்மதமா..??” என்று கேட்க அவர் கேள்வியை எதிர்பாராதுதிகைத்த கீர்த்திக்கு என்ன முயன்றும் கண்களில் இருந்து வெளியேறும் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை.
நாசி விடைக்க துடிக்கும் இதழ்களை அழுந்த பற்றியவாறு சரணை பார்த்தவள், “எனக்கு சம்மத….” எனும் முன்னமே அவள் கழுத்தில் தன் கரத்தை பதித்து அழுத்தி இருந்தான் சரண்,
“சரண்” என்ற அதிர்ந்த குரலுடன்சுற்றி இருந்த அனைவரும் பதறிக்கொண்டு வர,
தகிக்கும் விழிகளுடன் அவர்களை பார்த்தவன்,“இன்னொரு வார்த்தை வெளியில வந்தது யோசிக்கவே மாட்டேன் மூச்சை நிறுத்திடுவேன்டி” என்று அவள் விழிகளில் ஊடுருவியவாறே மேலும் அழுத்தம் கொடுக்க,
“டேய் என்னடா பண்றே..? வேண்டாம் சரண் அவளை விடு” என்று எழில் அவன் கரத்தை அகற்ற முயன்றான்.
“ண்ணா இன்னொருமுறை விடுன்னு சொன்னா மொத்தமா விட்டுட்டு போயிடுவேன் உங்களுக்கு சம்மதமா..??” என்று அடிக்குரலில்கேட்க, அவன் வார்த்தைகளில் பொதிந்துள்ள வேதனையில் தன் முயற்சியை கைவிட்டவனாக எழில் அங்கிருந்து அகன்றான்.
எழில்செல்லவுமே, ‘என்னை என்ன இளிச்சவாயன்னு நெனச்சியா..?? அவ்ளோ ஈசியா என்கிட்டே இருந்து நீ தப்பிக்க பார்க்கிறியா..??’ என்றவன் குரலில் இருந்த கடுமையில் கீர்த்தியின் முதுகு தண்டுவடம் சில்லிட்டு போனது.
“ஏய் நல்லவனா இருக்க நினைச்சவனை குடும்பமா சேர்ந்து ஏறி மிதிச்சிட்டு இப்பவும் திருந்த மாட்டியாடி நீ..??” என்று தன் கரத்தில் மேலும் அழுத்தம் கூட்ட, கீர்த்தியின் விழிகளில் நீர் திரண்டு விட்டது.
‘மா..மா…’ என்று இறைஞ்சுதலாக பார்க்கஅதற்குள் “மாமா என்ன பண்றீங்க விடுங்க அவளை..!!” என்று அலர் முன்னே வர,
“உனக்கு சம்பந்தமில்லாத விஷயம் தலையிடாத” என்று கடுமையான குரலில் எச்சரித்தவன்,
“இனிதான் இந்த சரண் யாருன்னு பார்க்க போறடி..!!” என்று கீர்த்தியிடம் அடிக்குரலில் சீறியவன்தன் கரத்தை அகற்ற இருமிக்கொண்டே தடுமாறிய கீர்த்தி விழும் முன் அவளை பிடித்திருந்தாள் அலர்..!!
சரண் கீர்த்தியின் நிலையை கண்ட ப்ரீத்திக்கு யாரோ விஷம் தோய்த்த கத்தியை அவள் மனதில் சட்டென்று இறக்கியது போல துடிதுடித்து போனாள்.
“என்னைக்குதாலி கட்டணும்னு சொல்லுங்க வந்துகட்டுறேன்” என்று சுற்றியிருந்தவர்களிடம் ஏதோ சந்தையில் மாடு வாங்க போவதை போல கூறியவனை மற்றவர்கள் திகைத்து பார்க்க அவனோ யாரையும் திரும்பியும் பார்க்காமல் வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தான்.
அங்கிருந்த அனைவருக்குமே அவன் பதில் பேரதிர்ச்சி தான்!
உட்சபட்ச அதிர்ச்சியில் இருந்த கீர்த்தியோ நம்பமுடியாமல் அவன் சென்ற வழியையே பார்க்க நாதன் மீண்டும் “இப்போ என்னம்மா சொல்ற..??” என்றார்.
“அவ சொல்றதுக்கு என்ன இருக்கு மாமா அதான் மாப்பிள்ளை தாலி கட்டுறேன்னு சொல்லிட்டாரே வேற என்ன வேணும்..?? அந்த ஆள் பண்ணின பாவத்துக்கு என் பொண்ணு வாழ்க்கை பலியாகிடக்கூடாது நீங்க கல்யாண வேலையை ஆரம்பிங்க.., இவளுக்கு புத்தி கெட்டு போயிருக்கு அதான் தேடி வர சொர்க்கத்தை எட்டி உதைக்க பார்க்கிறா.., நான் சொன்னா புரிஞ்சிப்பா” என்றவர் மகளை அழைத்து கொண்டு பின்கட்டிற்கு சென்றார்.
“வளர் நாளை மறுநாள் நாள் நல்லா இருக்கு இனியும் தள்ளி போட வேண்டாம் நீயும் உன் தங்கச்சியும் முதல்ல நம்ம ஜோசியர்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு நேரம் குறிச்சிட்டு வந்துடுங்க” என்றவர் கதிரை அழைத்து மேளம், அலங்காரம், உணவு குறித்து பார்க்க சொன்னவர்சம்பத்திற்கு அழைத்து பட்டுப்புடவைகளை வீட்டிற்கு கொண்டுவருமாறு கட்டளையிட்டு திருமண ஏற்பாடுகளை தூரிதபடுத்தினார்.
“அமுலு மளிகையில் தொடங்கி கல்யாணத்துக்கு தேவையானதை எல்லாம் பட்டியல் போடு” என்று மகளிடம் கூறியவர் அங்கிருந்த எழிலை சட்டை செய்யாதவராகஇப்போது ப்ரீத்தியின் புறம் திரும்பினார்.
இருக்கரங்களையும் வயிற்றை சுற்றி படரவிட்டு வலிமிகுந்த விழிகளுடன் இலக்கற்ற பார்வையோடு மனதினுள் குழந்தை குறித்த எண்ணற்ற அச்சங்களுடன் அமர்ந்திருந்த ப்ரீத்தியை பார்த்த அவருக்குமே நெஞ்சம் கனத்து போனது, ஒரு பெண்ணின் வாழ்வு சீர்படும் அதேவேலை மற்றொரு பெண்ணின் வாழ்வு கேள்விக்குறியாகி இருப்பதை விரும்பாதவர் ப்ரீத்தி அருகே சென்று,
“என்னை அப்பான்னு சொன்னது உண்மைன்னா இப்பவாவது நான் கேட்கும் கேள்விக்கு நிஜம் சொல்லுவியா..??” என்றார்.
விழிகள் கலங்க தலையை மெதுவே சாய்த்து ப்ரீத்தி தன் சம்மதத்தை தெரிவிக்கவும்,
“உனக்கு தெரியாம இருக்காது இந்த குழந்தையோட அப்பா யாருன்னு அப்பாகிட்ட சொல்லும்மா எங்கிருந்தாலும் கண்டிப்பா அவரை தேடிபிடிச்சு உனக்கு கட்டி வைக்கிறேன்” என்று அவர் வீட்டிற்கு வரும் முன் அங்கு நடந்த எதுவும் தெரியாதவராக அவர் கேட்க அவளோ கலங்கிய விழிகளுடன் பதிலளிக்காமல் மெளனமாக அவரை பார்த்தாள்.
“எனக்கு தெரியும் கண்டிப்பா சரண் இந்த குழந்தைக்கு அப்பா இல்லை.. அதான் கேட்குறேன் சொல்லுடா நிச்சயமா அப்பா சொன்னதை செய்வேன்” என்று உறுதி அளிக்க அவர் வார்த்தைகளை கேட்ட வசுமதிக்கு நெஞ்சம் கனத்து போனது கண்ணீரை துடைத்தவர் உடனே மகளிடம் “கேட்குறாரே பதில் சொல்லு” என்று ப்ரீத்தியை உலுக்கினார்.
“சொல்லுமா உன் குழந்தைக்கு அப்பா யாரு..??” என்று கனிவுடன் கேட்க அப்போதும் அவளிடம் அசைவில்லை.
‘அவர் கையில காலில் விழுந்தாவது உனக்கு கட்டி வைக்கிறேன்.. அப்பா சொன்னதை செய்வேன் நம்புடாம்மா’ என்ற அதேநேரம் நாதனின் வீட்டு முன்பு உயர்ரக வெளிநாட்டு கார் வந்து நிற்க அதிலிருந்து கம்பீரமாக இறங்கிய விஷ்வதேவ் கூலர்சை கழற்றி சுட்டுவிரலில் அலட்சியமாக சுழற்றியவாறே உள்ளே நுழைந்தவன் ப்ரீத்தியை அழுத்தமாக பார்த்தவாறே,
“குழந்தைக்கு நான்தான் மாமா அப்பா” என்று நாதனின் முன் வந்து நின்றான்.