அத்தியாயம் 1
வணக்கம்! இன்றைய முக்கியச் செய்திகள். சென்னையில் உள்ள அரசு பொது மனநல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவது பேர் உயிழந்தனர். இதுவரை பத்து பேர், கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. இது பற்றிய கூடுதல் விவரங்களுடன், நமது செய்தியாளர் மிதுன் களத்தில் உள்ளார். அவரிடம் இது பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்வோம்.
“வணக்கம் மிதுன்! இந்தச் சம்பவம் எப்போ நடந்துச்சு?! இதுவரை எத்தனை பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்?”
“வணக்கம்! தமிழ்செல்வி! இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் நடைபெற்றுள்ளதாகச் சொல்லப்படுது. இருவது பேர் சம்பவ இடத்திலையே உடல் கருகி உயிரிழந்துட்டாங்க. இதுவரை பத்து பேர் கவலைக்கிடமான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்காங்க.”
“காவல்துறை தரப்பில் இந்தச் சம்பவத்தைப் பற்றி என்ன சொல்றாங்க மிதுன்?”
“பெண் நோயாளிகள் தங்கி இருந்த வார்டில் இந்தத் தீ விபத்து நடைபெற்றுள்ளதாகக் காவல்துறை தரப்பில சொல்றாங்க தமிழ்செல்வி. இந்த விபத்துக்கு மின்கசிவு காரணமா இருக்கலாம் அப்படின்றது காவல்துறையோட சந்தேகம்.”
“காவல்துறையோட அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன மிதுன்?”
“தீ விபத்துச் சம்பந்தமாகக் காவல் துறை சார்பா வழக்குப் பதிவு செஞ்சு, விசாரிச்சுட்டு வராங்க. விசாரணை அதிகாரியா, ACP சுதர்ஷன் அவரை நியமிச்சு இருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில அவர் இந்த மருத்துவமனைக்கு வரலாம் அப்படின்னு எதிர்பார்க்கப்படுது.”
“தங்களோட விவரங்களுக்கு நன்றி மிதுன்! காவல்துறை அதிகாரி வந்ததும் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.” சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்த செய்தி வாசிப்பாளர், “இனி அடுத்தச் செய்திகளைப் பார்க்கலாம்.” என்றுவிட்டு அடுத்தச் செய்திகளுக்குச் சென்றுவிட, இங்கே மருத்துவமனை வளாகத்தில், அந்தப் பத்து மணி வெயிலில் வேர்த்துக்கொட்ட நின்று கொண்டிருந்த மிதுன், கேமராமேனும் தனது நண்பனுமான அஷ்வினிடம், ‘கட்’ என்பது போலச் செய்கையைக் கொடுத்துவிட்டு, தண்ணீர் குடிப்பதற்காகத் தங்களது வேனை நோக்கிச் சென்றான்.
மிதுன், இருபதுகளில் இறுதியில் இருப்பவன். படித்தது ஜர்னலிசம். பிடித்ததும் ஜர்னலிசம். களத்தில் இறங்கி செய்தி தேகரிப்பது அவனுக்குப் பிடித்த விஷயம் என்பதால், கடந்த பல வருடங்களாக ‘24×7நியுஸ்’ தொலைகாட்சியில், ரிப்போர்டராக வேலை செய்கிறான்.
அன்றைய தினம் விபத்து என்பதால், அவசர ஊர்திகள் வருவதும் போவதுமாக இருக்க, கூடவே அருகில் உள்ள காவல்நிலையத்தின் அதிகாரிகளும் வந்திருக்க, மருத்துவமனை வளாகம் சற்றே கூட்டமாக இருந்தது.
குனிந்தபடி கைபேசியில் எதையோ படித்துக்கொண்டே நடந்து வந்து கொண்டிருத்த மிதுன் மேல் நச்சென்று யாரோ மோத, அவன் கையில் இருந்த கைபேசி கீழே விழுந்தது. உடனே குனிந்து தனது பேசியை எடுத்துக்கொண்டு நிமிர்ந்தவன், “ஆள் வர்றது தெரியலையா?! இப்படியா வந்து மோதுவீங்க?!” என்று கோபத்துடன் கத்தப்போனவனுக்கு, எதிரில் நின்றிருந்தவளை பார்த்ததும், முகத்தில் ஒரு கேலி புன்னகை அரும்பியது.
“ஓஹ்! நீயா? என்ன இவ்ளோ லேட்?! எப்போவும் எங்களுக்கு முன்னாடியே ஸ்பாட்டுக்கு வந்துடுவ, இன்னைக்கு என்ன ஆச்சு? ஓஹ்! மேக்கப் போட லேட் ஆகிடுச்சோ!” என்று சிரிப்புடன் சொல்ல,
மிதுனை முறைத்தபடி அவனுக்கு எதிரில் நின்றிருந்தாள், சஞ்சனா!
[the_ad id=”6605″]
மிதுன், ‘24×7நியுஸ்’ தொலைகாட்சியின் செய்தி சேகரிப்பாளர் என்றால், சஞ்சனாவோ, அவனின் போட்டி தொலைக்காட்சியான, ‘குடியரசு’ தொலைகாட்சியின் செய்தி சேகரிப்பாளர். இருவருக்குமே எப்பொழுதும் முட்டிக்கொள்ளும். களத்திற்கு யார் முதலில் வருவது, ‘ப்ரேகிங் நியூசை’ யார் முதலில் சேகரிப்பது என இருவருக்குள்ளும் போட்டி நிலவி கொண்டே இருக்க, பார்க்கும் நேரம் எல்லாம் ‘சுடச்சுட நியுஸ்’ போலப் பற்றிக்கொள்ளும்.
எப்பொழுதும் களத்திற்கு முன்பே வந்துவிடும் சஞ்சனா, தமாதமாக வரும் மிதுனை வம்பிழுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்க, இன்று அவளுக்குப் பதில் கொடுக்கச் சந்தர்ப்பம் கிடைத்த மகிழ்ச்சியில், சற்று அதிகமாகவே கிண்டலடித்தான் மிதுன்.
பதிலுக்குச் சஞ்சனாவோ, “என்ன டா? கிண்டலா? நான் என்னைக்கு மேக்கப் போட்டு நீ பார்த்த? சும்மா சொல்ற!” என்று ஆக்ரோஷமாகக் கத்தியவள், “பொம்பளைங்களுக்கு இருக்கிற பிரச்சனை எல்லாம் உனக்கு என்ன தெரியப்போகுது.” என்று வாய்க்குள் முனங்க,
“ஷப்பா! கோபத்தைப் பாரு! இதே மாதிரி தான எங்களுக்கும் இருக்கும்.” மிதுனோ மேலும் அவளைக் கோபமாக்க, சட்டென்று அவனை நோக்கி எகிறிக் கொண்டு வந்தாள் சஞ்சனா.
அங்கே சண்டை வருவது போல இருக்கவும், “சஞ்சு! வா! நமக்கு வேலை இருக்கு.” என்றபடி அங்கிருந்து அவளை இழுத்துக்கொண்டு சென்றான் அவளின் கேமராமேன், தினேஷ்.
போகும் அவளைப் பார்த்தபடி, “போடி! போ!” என்று சிரிப்புடன் சொன்ன மிதுன், அவளின் முகத்தில் தெரிந்த சோர்வை கவனிக்கவும் மறக்கவில்லை.
தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்தவனின் கையில் சில்லென்று இடம் பிடித்திருந்தது மாம்பழச்சாரு குளிர்பானம். சஞ்சனாவின் ஃபேவரிட்!
சுற்றும் முற்றும் பார்வையை ஓட விட்டவனின் கண்களில், தூரத்தில் தினேஷுடன் பேசிக் கொண்டிருந்த சஞ்சனா தென்பட்டாள். சோர்வாக முகத்தை வைத்துக்கொண்டு அவள் ஏதோ சொல்ல, ‘இங்கேயே இரு!’ என்பது போலச் சைகை செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் தினேஷ். வயிற்றைப் பிடித்துக்கொண்டு சோர்வாக அங்கு இருந்த திண்டில் அமர்ந்தாள் அவள்.
விறுவிறுவென்று சஞ்சனா அருகில் சென்றவன், குளிப்பான பாட்டிலை அவள் முன் நீட்ட, நிமிர்ந்து பார்த்தாள் அவள். ஆனால் பதில் சொல்லாமல் முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக்கொள்ள, பாட்டிலின் மூடியை திறந்துவிட்டு, குனிந்து அவள் கையைப் பிடித்து அதில் பாட்டிலை வைத்த மிதுன், “குடி! ஸ்டமக் பெயின் கொஞ்சம் குறையும்.” என்று அழுத்தமாகச் சொல்ல, ஏனோ அந்த நேரம் அந்தக் கரிசனத்தில், சட்டென்று கண்களில் நீர் தேங்கியது அவளுக்கு.
சஞ்சனா தன்னையே பார்த்துக் கொண்டிருக்க, அவள் தலையைப் பிடித்துச் சற்றே பின்பக்கம் சாய்த்து, பாட்டிலை அவள் வாயில் கவிழ்த்தான் மிதுன். மறுப்பேதும் தெரிவிக்காமல், கடகவெனக் குடிக்க ஆரம்பித்தாள் அவள். முள்ளாய் குடைந்து கொண்டிருந்த வயிற்று வலிக்கு, சில்லென்று உள்ளே போன குளிர்பானம், இதமாக இருந்தது. வலியும் சற்றே மட்டுப்பட்டது.
சஞ்சனா குடித்து முடித்ததும், “ரொம்ப முடியலனா, சொல்லிட்டு வீட்டுக்குப் போ! இல்லனா இங்க ஹாஸ்பிட்டல்ல டேப்லட் எதுவும் வாங்கிட்டு வரட்டுமா?!” கரிசனமாகக் கேட்டான் மிதுன்.
“இல்ல வேண்டாம். டேப்லட் பேக்ல வச்சுருக்கேன். கொஞ்சம் டயர்டா இருக்கு, அவ்ளோதான்.” குனிந்தபடி அவள் சொல்ல, சில நொடிகள் நின்று அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த மிதுன், பின் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்றான்.
போகும் அவனைப் பின்தொடர்ந்தது, சஞ்சனாவின் கண்கள்.
அதற்குள் அவள் அருகில் வந்திருந்த தினேஷ், சஞ்சனாவின் கையில் இருந்த குளிர்பான பாட்டிலை பார்த்துவிட்டு, “வந்துட்டு போயிட்டானா! வரும்போதே இது தான் நடக்கும்ன்னு நினைச்சேன். அதே மாதிரியே நடந்துடுச்சு. ஒவ்வொரு தடவையும் இதே வேலையா போச்சு, புருஷனுக்கும், பொண்டாட்டிக்கும்.” என்றபடி அலுத்துக்கொள்ள, லேசான புன்னகை அரும்பியது சஞ்சனாவின் முகத்தில்.
அவள் முன் மண்டியிட்டு அமர்ந்த தினேஷ், “அவன் சொல்றதை தான் கேக்ககூடாதா டி?!” என்று நூறாவது முறையாகக் கெஞ்ச,
“வீட்டில டாக்டருக்குப் படிக்கச் சொன்னப்போ, எனக்கு இது தான் பிடிக்கும்ன்னு அடம்பிடிச்சு, அவர் மட்டும் ஜர்னலிசம் படிச்சு ரிப்போர்டரா வேலை பார்க்கலாம். நான் எனக்குப் பிடிச்சதை செய்யக் கூடாதா தினேஷ்?! எனக்கும் பேஷன் இருக்காதா டா?!”
“இப்போ இல்லைன்னு யார் சொன்னா? உனக்குன்னு எந்த ஆசையும் பேஷனும் இருக்கக் கூடாதுன்னு, என்னைக்காவது அவன் உன்கிட்ட அப்படி நடந்திருக்கானா சொல்லு?! ட்ரெஸ்ல இருந்து, இதோ இந்த வேலை வரை, எல்லாமே உன் இஷ்டப்படி தானே விட்டிருக்கான். என்னைக்காச்சும் ‘நான் அம்பள, என் இஷ்டப்படி தான் நீ நடக்கணும்’ அப்படின்னு உன்கிட்ட பிகேவ் செஞ்சிருக்கானா? அந்த உரிமையைக் கூட அவன் எடுத்துக்கிட்டது இல்லையே சஞ்சு. என்னைக்காச்சும் உன்னை அவனுக்குக் கீழன்னு நினைச்சு இருக்கானா?”
பதில் சொல்லாமல், அமைதியாக இருந்தாள் சஞ்சனா.
“பொம்பளைங்கள எப்போவும் புரிஞ்சிக்கவே மாட்டேங்குறீங்கன்னு குத்தம் மட்டும் சொல்றீங்களே, நீங்க மட்டும் என்னைக்காச்சும், ஆம்பளைங்க பயத்தைப் புரிஞ்சுகுறீங்களா டி? சொல்ல சொல்ல கேட்காம இஷ்டத்துக்கு நடந்துகிறது. ஆரம்பத்தில உன்னைப் போக வேண்டாம்ன்னு சொன்னானா? இல்லைல. அன்னைக்குக் கடத்தல்காரங்கள பிடிக்கப்போறேன்னு போய், அவனுங்க கையில மாட்டிக்கிட்டு…..ஷப்பா! அன்னைக்கு நீ பிழைச்சு வந்ததே பெரிய விஷயம்ன்னு ஆகிடுச்சு. அதுக்கு அப்புறம் தானே, இந்த வேலை வேண்டாம்ன்னு சொல்றான். அதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்குற?”
மீண்டும் அவளிடம் மவுனம்!
[the_ad id=”6605″]
“போதும் டா சாமி! இத்தோட என்னை விடுங்க. உன்கிட்ட சொல்லி சொல்லி, எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும் போலவே! இப்போ கூடப் பாரு, தூரத்தில இருந்து நம்மளை தான் பார்த்துட்டு இருக்கான் உன் புருஷன். உனக்குச் சாப்பாடு வாங்கிக் கொடுக்கச் சொல்லி, அங்க இருந்தே கண்ணாலையே மிரட்டுறான் பாரு.”
தினேஷ் சொன்னதும், நிமிர்ந்து பார்த்தாள் சஞ்சனா. ஆம்! தினேஷ் சொன்னது போலவே, அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தான், அவளின் கணவன் மிதுன்.
‘முக்கூம்! இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை!’ என்று மனதுக்குள் நினைத்தவள், கணவனைப் பார்த்து வாயை சுளித்திவிட்டு தினேஷுடன் உணவருந்த சென்றாள்.
மிதுன், சஞ்சனா இருவரும் ஒரே கல்லூரியில் தான் இதழியல் படித்தனர். படிக்கும்பொழுதே அவர்களுக்குள் நெருக்கமான நட்பு மலர, படிப்பை முடிக்கும்பொழுது அது காதலாக மலர்ந்திருந்தது.
கல்லூரி இரண்டாம் ஆண்டு முடியும் தருவாயில், நண்பர்களுடன் சேர்ந்து இருவரும், சின்ன அளவில் பத்திரிகை ஒன்றை நடத்தினர். அது சம்பந்தமாகச் சின்னச் சின்னச் செய்தி சேகரிப்பிலும் ஈடுபட்டு வந்தனர்.
படிப்பை முடித்ததும், வீட்டில் பெரியவர்களின் சம்மதத்துடன் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள, அதன் பின்பே, தொலைக்காட்சியில் செய்தி சேகரிப்பாளர் வேலை கிடைத்தது மிதுனுக்கு.
திருமணத்திற்குப் பின்பு சில மாதங்கள் வீட்டில் இருந்த சஞ்சனா, தன் படிப்பை வீணாக்க விரும்பாமல், தானும் தொலைகாட்சிக்கு வேலைக்குச் செல்வதாக மிதுனிடம் கேட்க, உடனே சம்மதம் சொல்லிவிட்டான் அவன்.
ஆனால் அவர்களின் துரத்ரிஷ்டம், சஞ்சனாவுக்கு மிதுனின் தொலைகாட்சியின் பிஸினஸ் விரோதியான குடியரசு தொலைகாட்சியில் வேலை கிடைத்தது. சஞ்சனா தான் யோசித்தாளே தவிர, மிதுன் தடையேதும் சொல்லவில்லை.
ஆரம்பத்தில் இருவருக்கும் பிரச்சனை இல்லாமல் தான் சென்று கொண்டு இருந்தது அவர்களின் வேலை. இருவருமே வெறும் நியுஸ் ரிபோர்டராக இல்லாமல், சில சமயம் செய்திக்குத் தேவையெனில் ஆபத்தான புலனாய்வையும் மேற்கொள்ள வேண்டி வரும்.
அப்படித் தான், ஒரு தடவை போதை பொருள் கடத்தல்காரர்கள் பதுங்கி இருக்கு இடம் தெரியவரவும், அவர்களைப் பற்றிய ஃபூட்டேஜ், தங்களது தொலைகாட்சியில் தான் முதலில் வரவேண்டும் என்று நினைத்த சஞ்சனாவின் குழு, அவளுடன் அங்கே செல்ல, இவர்களின் வருகை தெரிந்து கடத்தல்காரர்கள், துப்பாக்கிச் சூடு நடத்த, அதில் பலத்த காயம் அடைந்தாள் சஞ்சனா.
[the_ad id=”6605″]
செய்தி கேள்விப்பட்டுத் துடித்துப் போனான் மிதுன். மருத்துவர்கள் முதலில் பிழைப்பது கடினம் என்று சொல்லிவிட, மனதால் இறந்து போனான். ஆயினும் எல்லோரின் வேண்டுதலின் பலனாக, உயிர் பிழைத்தாள் சஞ்சனா. கிட்டத்தட்ட இரண்டு மாதம், மனைவியின் அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டான் மிதுன்.
அதன் பின்பே ஆரம்பித்தது அவர்களுக்குள் பிரச்சனை. மருத்துவமனையில் இருந்து வந்த சில மாதங்களிலேயே வேலைக்குப் போவதாக அவள் சொல்ல, இனி வேலைக்குப் போக வேண்டாம் என்று திடமாக மறுத்தான் மிதுன்.
ஆனால் சஞ்சனாவோ, “ஆபத்துனா எல்லா வேலையிலும் தான் ஆபத்து இருக்கும். இதுக்கு எல்லாம் பார்த்துட்டு இருக்க முடியுமா? ஏன் நீங்க தினமும் வேலைக்குப் போயிட்டு வர்றதில்லையா? நான் போனா என்ன? ஒன்னும் செத்துகித்துப் போய்ட மாட்டேன்!” என்று வார்த்தையை விட, தன்னையும் மீறி அவளை அறைந்திருந்தான் மிதுன்.
அதன்பின் அவர்களுக்குள் ஒவ்வொரு நொடியும் சண்டை தான். மிதுன் எவ்வளவோ சொல்லி பார்த்தும் கேட்காத சஞ்சனா, ஒரு கட்டத்தில், மிதுனை பிரிந்து அவளின் பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டாள்.
தற்பொழுது இது நடந்து, சில மாதங்கள் ஆகிறது.
வீட்டில் நேருக்கு நேர் பார்க்க முடியாவிட்டாலும், வேலையின் பொருட்டு, தினமும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபின்பே அவர்களுக்கு அன்றைய பொழுது நகரும். அவர்களின் வேலை அப்படி!