மனநல மருத்துவமனை வளாகம். ஏக்கர் கணக்கில் பறந்து விரிந்து இருக்கும் மிகப் பெரிய மருத்துவமனை அது. அண்ணா பல்கலைகழக வாளகம் போல, அடர்ந்து வளர்ந்திருக்கும் புற்களும், ஆளுயுர மரங்களும், சருகுகள் நிறைந்த சிமென்ட் பாதையும் என, கிட்டத்தட்ட அடர்ந்த வணபகுதி போலக் காட்சியளிக்கும், அந்த மருத்துவமனை வளாகம்.
பெண் நோயாளிகள், ஆண் நோயாளிகள், மனநலம் முற்றிய நிலையில் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் நோயாளிகள், சிறைகைதிகள் எனத் தனித்தனி பகுதிகளாகக் கிட்டத்தட்ட பத்து வார்ட்கள் உள்ளது. வார்டு என்பது தனிக் கட்டிடத்தைக் குறிக்கும். ஒவ்வொரு கட்டிடமும் கூரையாக ஓடுகள் கொண்ட, பெரிய ஹால் போன்ற அமைப்பு.
ஒவ்வொரு வார்டும் தனித்தனி சுற்றுச்சுவருடன், கேட் போட்டு மூடப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட தனித்தனி தீவு போல!
குறிப்பிட்ட அந்தப் பெண் நோயாளிகள் வார்ட்! தீ விபத்து நடைபெற்றிருந்த காரணத்தால், அதைச் சுற்றிலும், திரும்பும் திசை எங்கும் கருப்பு நிறத்தில் காட்சி அளித்தது. கட்டிடத்தைச் சுற்றி உடைந்த ஓடுகள் சிதறி கிடக்க, புற்கள் எல்லாம் கருகி போயிருந்தது. மரங்களோ, பாதி உயரத்திற்குக் கருப்பாகக் காட்சி அளித்தது.
வெளியே அப்படி என்றால், ஹாலின் உள்ளே, கரிகட்டையைப் போலக் கருகிய நிலையில் உடல்கள் விரைத்துக்கொண்டு படுத்திருந்தது.
இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டே, மூக்கை கர்சீப்பால் மூடியபடி, சுற்றும் முற்றும் பார்வையைச் சுழல விட்டான், சுதர்ஷன்.
சுதர்ஷன், முப்பதுகளில் ஆரம்பத்தில் இருப்பவன், முதுகலை படிப்பை முடித்ததும், இரண்டு முயற்சிக்கு பிறகு, இந்திய ஆட்சி பணி தேர்வில் வெற்றி பெற்று, ஐ.பி.எஸ் பயிற்சி முடித்து, உதவி போலிஸ் கமிஷ்னராக வேலையில் அமர்ந்தவன், கடந்த ஏழெட்டு வருடங்களாக அப்பணியில் இருக்கிறான். கூடிய விரைவில் பதவி உயர்வு கிடைக்கும் என்று பேச்சுக்கள் அடிபடுகிறது.
பகவான் கிருஷ்ணரின் விரல் சொடுக்கை ஆணையாக ஏற்று, அடுத்த நொடி அவரின் எதிரிகளைப் பஸ்பமாக்கும் சுதர்ஷன சக்கிரத்தை போல, தன் உயர் அதிகரிகள் இடும் உத்தரவை கடமையாக ஏற்று, சமூக விரோதிகளைத் துவம்சம் செய்வதில் வல்லவன், இந்தச் சுதர்ஷன்!
போலீஸ் என்றால் பார்ப்பதற்கு இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எல்லோருக்கும் இருக்கும் கற்பனையைப் போலவே, கோதுமை நிறத்தில், உயரமாக, கம்பீரமாக இருப்பான். அவனின் உயரம் தான், இப்பணி கிடைப்பதற்குக் கூடுதல் மதிப்பெண்ணை அவனுக்குப் பெற்றுத் தந்தது.
அன்று அதிகாலை தீ விபத்து பற்றிச் செய்தி கிடைத்ததும், உயர் அதிகாரியிடம் விவரத்தை தெரியப்படுத்திவிட்டு, உடனடியாக ஸ்பாட்டுக்கு வந்தவன், இறந்தவர்களைத் தவிர, படுகாயம் அடைந்தவர்களை மீட்டு, அரசு ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு, இடத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அவனின் கைபேசி ஒலிக்கவும், எடுத்துப் பேசினான்.
“…”
“குட் மார்னிங் சர்!”
“…”
“எஸ் சார்! ஸ்பாட்ல தான் இருக்கேன்.”
[the_ad id=”6605″]
“…”
“மொத்தம் இருபது பேர் இறந்து போயிருக்காங்க சர். பத்து பேர் சீரியஸ் கண்டிஷன்ல இருந்ததால, ஜி.எச்க்கு அனுப்பி இருக்கேன். இன்னும் நாலு பேருக்குக் கொஞ்சம் லேசான காயம், அதனால டாக்டரை வரவழைச்சு ட்ரீட்மென்ட் கொடுத்து இருக்கேன் சர்.”
“…”
“டீடைல்ஸ் கேட்டு இருக்கேன் சர். இன்னும் கொஞ்ச நேரத்தில கிடைச்சிடும்.”
“…”
“ஒகே சர்!” பேசிவிட்டு அவன் போனை வைக்கவும், அவன் அருகில் வந்தார், மருத்துவர்.
“நான் கேட்ட விவரம் கிடைச்சுதா டாக்டர்?”
“கிடைச்சுது சர். எங்க ரிகார்ட்ஸ் படி, அந்த வார்டுல நேத்து நைட் மொத்தம் முப்பத்தஞ்சு பேர் இருந்திருக்காங்க.”
“வாட்?! முப்பத்தஞ்சு பேரா?! ஆனா இது வரை முப்பத்தி நாலு பேரை தான் மீட்டிருக்கோம். அப்போ அந்த மிஸ்ஸிங் பெர்சன் எங்க? ஆர் யு ஷுயூர் டாக்டர், மொத்தம் முப்பத்தஞ்சு பேர் தானா?!”
“ஐயம் ஷுயூர் சர். மொத்தம் முப்பத்தஞ்சு பேர் இந்த வார்டுல அட்மிட் ஆகி இருக்காங்க. நேத்து நைட் தூங்க போகும்பொழுது கூட, முப்பத்தஞ்சு பேர் இருந்தாங்க. நைட் டியூட்டி பார்த்த நர்ஸ் கூட இதையே தான் சொன்னாங்க.”
“அந்த நர்ஸ கொஞ்சம் கூப்பிடுங்க டாக்டர்.”
“ஒன் செகண்ட் சர்.” என்று சொல்லிவிட்டு அந்த மருத்துவர் நகர்ந்துவிட, சுதர்ஷனுக்கு யோசனையாக இருந்தது.
‘முப்பத்தஞ்சு பேர்ன்னு டாக்டர் சொல்றார். இறந்தவங்க இருபது பேர், பத்து பேர் ஜி.எச்ல இருக்காங்க, இங்க நாலு பேர். மொத்தம் முப்பத்தி நாலு பேர் தானே வராங்க. அப்போ அந்த முப்பதஞ்சாவது ஆள் எங்க?’ வேகமாக அவனின் மூளை கணக்கிட்டது.
அவன் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே, மருத்துவர் அந்தச் செவிலியருடன் அங்கே வர, சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான் சுதர்ஷன்.
“சர், இவங்க தான் நேத்து நைட் டியூட்டில இருந்த நர்ஸ்.”
உடனே அந்தப் பெண், சுதர்ஷனை பார்த்து வணக்கம் சொல்ல, தலை அசைப்பில் அதை ஏற்றுக் கொண்டவன்,
“மொத்தம் முப்பத்தஞ்சு பேர் இந்த வார்ட்ல இருந்தாங்கன்னு உங்களுக்கு நிச்சயமா தெரியுமா?”
“தெரியும் சர். இந்த வார்ட்ல மொத்தம் முப்பத்தஞ்சு பேர் இருந்தாங்க. தினமும் வழக்கமாகத் தூங்க போறதுக்கு முன்னாடியும் கணக்கெடுத்துட்டு தான் கேட்டை லாக் பண்ணுவோம். நேத்து நைட் தூங்கும்போது கூடக் கௌன்ட் பண்ணேன் சர். எல்லாரும் இருந்தாங்க. மிட்னைட் ஒரு மணிக்கு ரௌண்ட்ஸ் போகும்போது கூடப் பார்த்தேன் சர். முப்பத்தஞ்சு பேர் இருந்தாங்க.”
“ஆனா இப்போ மொத்தம் முப்பத்தி நாலு பேர் தானே இருக்காங்க?! அப்போ மிஸ்ஸான அந்த ஒருத்தர் எங்க?”
“தெரியல சர். பாடிஸ் வேற கருகி போயிருக்கிறதால, யாரு மிஸ்ஸிங்ன்னு கண்டுப்பிடிகிறது கஷ்டம்.” சற்றே பயத்துடன் அவள் சொல்ல, அவளை அங்கிருந்து அனுப்பிய சுதர்ஷன், தன்னுடன் வந்திருந்த கான்ஸ்டபிள் இருவரை அழைத்து, அந்த இடம் முழுவதும் தேடச் சொல்லிவிட்டு, தானும் தேடுதலில் ஈடுபட்டான்.
முதலில் அவர்கள் நினைத்தது, அந்த விடுபட்ட நபர் இறந்தவர் என்று தான். அப்படி நினைத்துக்கொண்டு தான் தேட ஆரம்பித்தனர்.
வார்டை சுற்றி தேடிக் கொண்டே வந்த சுதர்ஷன், ஒரு கட்டத்தில் கட்டிடத்தின் பின்பக்கம் வர, அவன் கண்களில் தென்பட்டது அது.
ஓடுகள், மரக்கிளைகள் எல்லாம் விழுந்து கிடக்க, அந்தக் குவியலின் நடுவில் ஏதோ வெள்ளையாகத் தெரிந்தது. உடனே அதன் அருகில் சென்று பார்த்தான். பெண்ணின் பாதம் போலத் தெரிந்தது. அடுத்த நொடி, மடமடவென மறைத்திருந்த மரக்கிளைகள், ஓடுகள் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டுவிட்டு பார்க்க, பார்த்தவன் அதிர்ந்து போனான்.
பச்சை நிற கௌனில், கண்களை மூடி மயங்கி கிடந்தாள் அவள்!
அவளின் ஆடையைப் பார்த்ததுமே புரிந்தது, அவளும் அந்த முப்பத்தி ஐந்து பேரில் ஒருவள் என்று.
[the_ad id=”6605″]
உடனே சுதாரித்தவன், உயிர் இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ள, அவள் நாசியில் விரல் வைத்துப் பார்த்தான். இதயத் துடிப்பு இருந்தது.
அவளை ஒரு முறை, தலை முதல் பாதம் வரை ஆராய்ந்து பார்த்தான். கணுக்கால் வரை நீளம் இருந்த அந்தக் கௌன், முட்டிக்கு மேல் ஏறி இருந்தது. தோள் பட்டை பக்கம் ஆடை சரிந்து, அவளின் உள்ளாடையின் பட்டை தெரிந்தது. உடல் முழுவதும் கருப்பு புகையும், அழுக்கும் படிந்திருந்தது. நெற்றியில் காயம் இருக்க, நெற்றி பொட்டு வழியே தாடை வரை ரத்தம் வழிந்திருந்தது.
அவளின் இந்தக் கோலத்தைப் பார்த்ததும் அவளுக்கு ஏதாவது அசம்பாவீதம் நடந்திருக்குமோ என்று பயம் வந்தது சுதர்ஷனுக்கு. ஒருவேளை, யாரேனும் அவளை அறையை விட்டு கடத்தி சென்றிருப்பாரோ? அதன் காரணமாகத் தான் வெளியே கிடக்கிறாளோ? என்று பல கேள்விகள் அவனைக் குடைந்தது.
அதற்கு எல்லாம் இப்பொழுது நேரம் இல்லை என்பதால், அப்போதைக்கு அந்த நினைப்பை தள்ளி வைத்துவிட்டு, அவளின் ஆடைகளைச் சரி செய்தான். பின், கான்ஸ்டபிள் ஒருவருக்கு ஃபோன் செய்து விவரத்தை கூறியவன், ஆம்புலன்ஸ் எதுவும் நிற்கிறதா என்று கேட்க, இல்லை என்று பதில் வந்தது.
சரி என்றுவிட்டு ஃபோனை வைத்தவன், தனது கார் டிரைவருக்கு அழைத்துக் காரை தயார் நிலையில் வைத்திருக்கும்படி சொல்லிவிட்டு, தூக்குவதற்காக அவளின் தலையை மெல்ல நிமிர்த்த, கையில் எதுவோ பிசுபிசுவெனப் பட்டது. உடனே அவளைப் படுக்க வைத்துவிட்டு, உள்ளங்கையைப் பார்க்க, உறைந்தும் உறையாத ரத்தம், கருஞ்சிவப்பு நிறத்தில் படர்ந்திருந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ந்து போனான்.
அவளுக்கு எதுவோ ஆகி இருக்கிறது என்ற அவனின் எண்ணம் வலுத்தது. யாரோ அவளைப் பின் மண்டையில் தாக்கி இருக்கின்றனர், இல்லையேல் எது மீதோ அவள் மோதி இருக்கிறாள்.
ரத்தத்தின் திடத்தைப் பார்த்தால், காயம் ஏற்பட்டு வெகு நேரம் ஆகி இருக்காது. மிஞ்சி மிஞ்சி போனால், சில மணி நேரங்கள் தான் ஆகி இருக்கும். அப்படி என்றால், இந்தத் தீ விபத்திற்கும் இவளுக்கும் ஏதாவது சம்பந்தம்?
ஒரு பக்கம் அவனின் போலிஸ் மூளை, அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொக்கி நிற்கும் புள்ளிகளை இணைக்க முயற்சிக்க, அவனோ நிலைமையின் வீரியத்தைப் புரிந்து, தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த கர்சீப்பை எடுத்து, அவளின் தலையைச் சுற்றி கட்டிவிட்டு, மெல்ல அவளைத் தூக்கிக் கொண்டு, விறுவிறுவென்று வாசலை நோக்கி ஓடினான்.
வரும் வழி முழுவதும் அவளின் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டே வந்தான். நோய்வாய்ப்பட்டு மெலிந்து போயிருந்தாலும், அவளின் முகம் பார்ப்பதற்குக் கலையாக இருந்தது. அந்தக் கலையில் ஒரு கவலையும் குடி கொண்டிருந்தது.
‘யாரடி நீ?! உனக்குப் பின்னாடி ஏதோ மர்மம் இருக்கிற மாதிரி என் மனசுக்கு தோணுதே! ஏன்?!’
மயங்கத்தில் இருக்கும் அவளிடம் கேள்வி கேட்டால், என்ன பதில் கிடைக்கப் போகிறது?
[the_ad id=”6605″]
———————————–
கைபேசி அடிக்கவும் எடுத்துப் பேசினான் அவன்.
“என்ன டா? காரியம் முடிஞ்சுதா? அவ செத்து போயிட்டாளா?” கைபேசியின் அந்தப் பக்கம் வேகவேகமாகக் கேள்விகள் வந்து விழ,
“சாரி டா! காரியம் சொதப்பிடுச்சு…” என்று பதில் சொன்னவன், நேற்று இரவு நடந்ததைச் சொல்ல, கோபம் கொண்டான் அவன்.
“என்ன டா நீ? வார்ட்ல அவ இருக்காளா இல்லையான்னு பார்க்க மாட்டியா? இப்படிச் சொதப்பி வச்சுருக்க! சரி இப்போ அவ எப்படி இருக்கா? பிழைக்கச் சேன்ஸ் இருக்கா?”
“தெரியல டா…போலிஸ் இப்போ தான் அவளை ஜி.எச்க்கு கூட்டிட்டு போயிருக்காங்க.”
“எவ்ளோ நாள் ப்ளேன்! இப்படிச் சொதப்பிட்டியே டா!” – கோபத்தில் அவன் கர்ஜிக்க,
“சாரி டா!” குரலில் சற்றே நடுக்கம்.
“சாரி சொல்ற அளவுக்கு ஈசியான காரியமா இது?! அவ மட்டும் உயிர் பிழைச்சு எல்லா உண்மையையும் சொல்லிட்டா, அப்புறம் என்னோட கதி அவ்ளோதான்.” கோபத்தில் அவன் பற்கள் நரநரத்தது.
கோபத்தில் பட்டென்று அழைப்பை துண்டித்து, கைபேசியைத் தூக்கி வீசியவன், “நீ உயிரோட இருக்கிறது எனக்கு ஆபத்தாச்சே! இப்போ என்ன பண்ணலாம்?!” என்றான் கண்கள் மின்ன!