அத்தியாயம் 10
உருண்டு வந்த வேகத்தில், சாலையின் பக்கவாட்டில் இருந்த அந்தப் புதரில் குப்புற கிடந்தது நரசிம்மனின் கார். கதவு திறந்து கிடக்க, காருக்கு வெளியே கிடந்தார் அவர். முன்பக்க இருக்கையில் ஓட்டுனரும், அவரின் பி.ஏவும்.
அப்பொழுது அந்த இடத்திற்கு வந்தான் ஓர் இளைஞன். சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, நரசிம்மனின் அருகில் வந்தவன் குனிந்து அவரிடம் மூச்சு இருக்கிறதா என்று பரிசோதித்தான், இருந்தது. நல்ல மயக்கத்தில் இருந்தார். ஓர் அளவுக்கு ரத்த கசிவு தென்பட்டது. உடனே பின்பக்கம் திரும்பி யாருக்கோ சைகை கொடுத்தான். இன்னொரு இளைஞன் அங்கே ஓடி வந்தான். இருவரும் சேர்ந்து நரசிம்மனை தூக்கிக்கொண்டு அந்த இடத்தைக் காலி செய்தனர்.
கடையில் காத்திருந்தார் அம்பரீஷ். அவர் எதிர்பார்த்தது போலவே, அரை மணிநேரத்தில் அழைப்பு வந்தது. எடுத்து பேசினார்.
“சொல்லு..!”
“நீங்க சொன்ன மாதிரி, அந்த ஆளை நம்ம குடோனுக்குக் கொண்டு வந்துட்டோம் சர்.”
“சூப்பர்! ஆள் கண்டிஷன்?”
“ஆள் உயிர் இருக்கு சர். லேசா அடி, அவ்ளோதான். அதுக்கும் முதலுதவி கொடுத்துட்டோம்.”
“சரி. நீ அங்கேயே இருக்கு. நான் ஒரு மணி நேரத்தில அங்க வந்துடறேன்.”
சொன்னபடியே ஒரு மணிநேரத்தில் அவரின் குடோனுக்கு வந்து சேர்ந்தார் அம்பரீஷ். அந்த இருட்டு அறையின் நடுவில் ஒரு சேர் கிடைக்க, அதில் கயிறு கொண்டு, கட்டி வைக்கப்படிருந்தார் நரசிம்மன். இன்னும் கண் முழிக்கவில்லை.
நரசிம்மனின் அருகில் வந்தார் அம்பரீஷ். அவரின் தலை முடியை கொத்தாக பற்றி முகத்தை நிமிர்த்தினார்.
அப்படியே சில நொடிகள் பார்த்திருந்தவரின் வாயில் ஹிந்தி கெட்ட வார்த்தைகள் வேகமாக வந்து விழுந்தது.
“தேரி **** ***** என் பொண்ணு மேலையே கையை வைக்குறியா!! என்கிட்டே மோதுனா நான் பொறுத்துப்பேன். ஆனா என் பிள்ளைங்க மேல கையை வச்ச, கொன்னு பொதச்சுடுவேன்.” உருமியர், அவர் தலையை உதறினார்.
பின் தன் ஆட்களிடம் திரும்பியவர், “ஒரு வாரத்துக்கு இவனுக்குச் சோறு, தண்ணி எதுவும் கொடுக்காதீங்க. அப்புறம் வந்து நான் பார்க்கிறேன்.” சொல்லிவிட்டு விறுவிறுவென்று அந்த இடத்தில் இருந்து கிளம்பினார்.
அம்பரீஷ் சொன்னது போலவே ஒரு வாரம் நரசிம்மனுக்கு உணவு, தண்ணீர் எதுவும் கொடுக்கப்படவில்லை.
“டேய்! யார் டா நீங்க? எதிர்க்கட்சி காரனுங்களா? வாயத் துறந்து சொல்லி தொலைங்கடா? ரொம்பப் பசிக்குது டா, காஞ்சு போன பண்ணாவது தாங்கடா?! பெட்டி பெட்டியா பணம் தரேன். டேய்!” அவரின் எந்தக் கெஞ்சலுக்கும், மிரட்டலுக்கும், பேரத்துக்கும் அம்பரீஷின் ஆட்கள் அடி பணியவில்லை.
அதற்குள், தமிழக அரசியலில் நரசிம்மன் காணாமல் போனது லேசாகப் புகையை ஆரம்பித்து, நாட்கள் ஆக ஆகப் பற்றிக்கொண்டு எரிய ஆரம்பித்தது.
சிலர் எதிர்கட்சி மேல் குற்றம் சாட்டினார்கள். சிலரோ நரசிம்மனின் கட்சி தலைவரை குறை சொன்னார்கள். வேறு சிலரோ, அவரின் அரசியல் எதிரியோ அல்லது எதிர் கோஷ்டியோ தான் இந்த வேலையயை செய்திருப்பார்கள் என்று நம்பினர்.
ஏதோ ஒன்று, ஆனால் அப்போதைக்குக் கட்சி தலைவருக்குப் பயம் உண்டானது. “இந்த ஆள், எவனுக்காவது பயந்து போய் உண்மை எதையும் உளரி கொட்டிடக் கூடாது.” அவர் கவலை அவருக்கு.
கட்சி தலைவர் இங்கே பணத்தை நினைத்து பயந்து கொண்டிருக்க, அங்கே நரசிம்மனோ உயிரை நினைத்து நடுங்கி கொண்டிருந்தார்.
இந்தக் கலவரங்கள் எல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, நந்தா அழைத்ததின் பெயரில் வீட்டில் அனுமதி வாங்கிக் கொண்டு, கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த அந்த ரிசார்ட்டுக்கு கிளம்பி வந்தாள் மாதுரி.
கடற்கரையை ஒட்டிய விடுதி அது. தனித் தனிக் குடில்கள் உள்ளே இருந்தாலும், விடுதியின் பின்புறம் இருந்த பார்டி ஹால் பார்க்க அழகாக இருந்தது. அழகான குடிலுக்கு அடியில், கேக் வைக்கப்பட்டிருந்த டேபிள், சுற்றிலும் பார்வையாளர்கள் அமர டேபிள், சேர், திரும்பி பார்க்கும் தூரத்தில் கடல் அலை எனப் பார்க்க ரம்மியமாக இருந்தது.
வாசலுக்கே வந்து வரவேற்றான் நந்தா.
“ஃபைல்ஸ் பார்க்கிற வேலை எதுவும் இல்லையா உங்களுக்கு?!” மாதுரி கேட்க,
“எல்லாம் பி.ஏ கிட்ட கொடுத்துட்டு வந்துட்டேன்.” சிரித்தான் அவன்.
சின்ன அளவிலான பார்டி அது. நந்தாவின் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே வந்திருந்தனர். பலர் அவனுடன் பள்ளியில், கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். வேறு சிலர், அவனின் ஐ.ஏ.எஸ் பேட்சை சேர்ந்தவர்கள்.
“ஒரு சிலருக்கு இந்த விழா எதுக்குன்னு தெரியும். ஆனா சிலருக்குத் தெரியாது. அவங்களுக்காகச் சொல்லிடறேன். இன்றைய நாள், நான் செர்வீஸ்க்கு வந்து அஞ்சு வருஷம் கம்ப்ளீட் ஆகுது. சோ அதுக்கான ஸ்பெஷல் பார்ட்டி இது. எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க. ஹேவ் எக் கிரேட் டே!” கேக்கை வெட்டிவிட்டு, நந்தா இவ்வாறு கூற அப்பொழுது தான் மாதுரிக்கு இந்தப் பார்டி எதற்கென்று தெரிந்தது. கூடவே நந்தாவை நினைத்து ஆச்சரியமும். “செர்வீஸ் சேர்ந்து அஞ்சு வருஷம் ஆகுதா?!” அசிதியத்துடன் உதட்டை வலைத்தாள்.
[the_ad id=”6605″]
எல்லோரிடமும் பேசிவிட்டு, மதுரியின் அருகில் வந்தான் நந்தா.
“என்ன அப்படிப் பார்க்குறீங்க?!”
“ஒண்ணுமில்லை, அஞ்சு வருஷம் செர்வீஸ் முடிஞ்ச மாதிரி இல்லை. அதான் பார்க்கிறேன்.”
“ஹா…ஹா…அதுக்காக டேக்கா மாட்டிகிட்டு சுத்த முடியும்.”
பதிலுக்கு அவள் சிரிக்க, அவளைப் பார்டி ஹாலுக்கு வெளியே, பின்புறம் அழைத்து வந்தான்.
தூரத்தில் கடல் அலைகள் அழகாக வீசிக் கொண்டிருக்க, அதை ஒட்டிய மணல் பரப்பில், சிறிய மேடையில் நாலு பக்கமும் வெள்ளை துணி கட்டப்பட்டு, லைட்கள் தொங்கி கொண்டிருக்க, மேடையின் நடுவே, ஒரு டேபிளும், எதிர் எதிர் திசையில் இரண்டு சேரும் போடப்பட்டிருந்தது. டேபிளின் நடுவே, அழகழகான மெழுகுவர்த்திகள் ஒளிர்ந்து கொண்டிருந்தது. நடுவே தட்டுகளில் சில உணவுகள்.
‘என்ன இது?’ என்று தயங்கியவளை கை பிடித்து அங்கே அழைத்துச் சென்றவன், அவளை இருக்கையில் அமர சொல்லிவிட்டு, எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
“எல்லாரும் அங்க இருக்காங்க. நம்ம மட்டும் இங்க…?”
“இது நமக்கான ஸ்பெசல்.” சொன்னவன் அவளைச் சாப்பிடச் சொன்னான்.
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி சாப்பிட, நந்தா ஏதோ சொல்ல போகிறான் என்பதை ஓர் அளவுக்கு யூகித்த மாதுரியின் இதயம் சாப்பிட்டு முடிக்கும் வரை படபடவென அடித்துக்கொண்டது.
சிறிது நேரத்தில் இருவரும் சாப்பிட்டு முடிக்க, சில நிமிடங்கள் அமைதியாக இருந்த நந்தா, எழுந்து எங்கோ சென்றுவிட்டு திரும்பியவனின் கையில் ஒரு பாக்ஸ் இருந்தது.
தன் இருக்கையில் வந்து அமர்ந்தவன், அந்தப் பாக்சை மாதுரியிடம் கொடுத்து திறக்க சொன்னான்.
நடப்பவற்றை எல்லாம் ஒரு வித இனிமை கலந்த பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மாதுரி, அவன் சொன்னதும் அந்தப் பெட்டியை திறந்தாள்.
உள்ளே, ஒரு பெட்டியும், ஒரு சாவியும் இருந்தது. அந்தப் பெட்டியின் மேல், ‘insert the key and twist’ என்று போட்டிருக்க, இரண்டையும் எடுத்துக் கையில் வைத்து பார்த்தவள் அடுத்து என்ன செய்ய என்றபடி நந்தாவை நிமிர்ந்து பார்க்க, அவனோ, ‘go ahead!’ என்று கண்களால் சைகை செய்தான்.
நந்தா சொன்னது போலவே, அந்தச் சாவியை, பெட்டியின் மேல் இருந்த துவாரத்தில் நுழைத்து, திருகினாள். அடுத்த நொடி பட்டென்று அந்தப் பெட்டி திறந்துகொள்ள, உள்ளே இருந்து பஞ்சால் அடைக்கப்பட்ட இதய வடிவ தலையணை மேலே எழும்பியது. அதன் மேல், ‘you are the key to my soul, life and happpiness’ என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.
இதைப் பார்த்தும், மாதுரியின் முகம் குப்பென்று வேர்க ஆரம்பிக்க, கன்னமோ வெட்கத்தைப் பூசிக்கொண்டது. அதற்குள் அவள் அருகில் எழுந்து வந்திருந்த நந்தா, அவள் முன் மண்டியிட்டு, மாதுரியின் சில்லிட்ட கையை எடுத்து தன் கைக்குள் வைத்து பொத்திக் கொண்டவன், “இதை உன்கிட்ட ரொம்ப நாளா சொல்லனும்னு நினைச்சிட்டு இருந்தேன் மாதுரி. ஆனா ஏனோ தைரியம் வரல. இன்னைக்கு அந்தத் தைரிய வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்.” சொல்லிவிட்டு ஒரு நொடி இடைவெளி விட்டவன், அவள் கழுத்தில் கிடந்த அந்தச் சங்கிலியை தூக்கி பிடித்து, “இது என் பாட்டி நியாபகார்த்தமா போட்டிருக்கேன். எப்போவும் கழட்ட மாட்டேன்னு சொல்லி இருக்கியே. இதே மாதிரி, என்னோட நியபகமாவும், இதைப் போட்டுக்கிறியா?!” என்றவன், தன் பாக்கெட்டில் இருந்து தங்க மணிகளும், கருப்பு மணிகளும் ஒன்றாகக் கோர்த்திருந்த, அந்தச் சங்கிலியை எடுத்துக் காண்பித்தான்.
அந்தச் சங்கிலி, பொதுவாக வட இந்திய பெண்கள் அணியும் தாலி. ‘மங்கல்சூத்ரா’ என்பார்கள்.
நந்தாவின் கையில் அதைப் பார்த்ததும், மாதுரியின் உடல் அந்தத் திடீர் இன்ப அதிர்ச்சியில் நடுங்க ஆரம்பிக்க, கண்களில் கண்ணீர் தேங்கியது. கண்ணீர் கண்களை மறைக்க, நிமிர்ந்து நந்தாவின் முகத்தைப் பார்த்தாள். அப்பொழுது அவள் கண்ணில் இருந்து வெளியேறி, அவன் கையில் வந்து விழுந்தது, நீர் துளி.
“ச்சு! எதுக்கு இப்போ இந்த அழுகை!” என்றவன் அவளின் கண்ணீரை துடைத்துவிட்டு, “பிடிச்சிருக்கா?!” என்றான் கேள்வியாக.
[the_ad id=”6605″]
அழுகையும் சிரிப்புமாக, அவள் ‘சரி’ என்பது போலத் தலையை ஆட்ட, “அப்போ கட்டிபிடிச்சிக்கவா?!” என்றான் அதிரடியாக. அவள் பேயறைந்து பார்க்க, நந்தாவோ, மாதுரியை இறுக அணைத்துக் கொண்டான். அவளும் சிரிப்புடன் அவன் அணைப்புக்குள் கட்டுண்டாள்.
சிறிது நேரம் அவளின் உணர்வுகள் மட்டுபடடட்டும் என்று விட்டவன் பின், “தேங்க்ஸ் ரசகுல்லா!” என்றான் அவள் காதில் கிசுகிசுப்பாக.
சட்டென்று அவனிடம் இருந்து விலகியவள், “ரசகுல்லாவா!” என்றாள் கண்களை விரித்து.
“அது வந்து….வந்து….உன்னை பார்க்கும்போது, எனக்கு அந்த ரசகுல்லா ச்வீட் தான் நியாபகம் வரும். நல்லா வைட்டா, ஸ்வீட்டா…..” அவன் சொல்லிக்கொண்டே போக, பதிலுக்கு மாதுரி முறைக்கவும், எழுந்து ஓட ஆரம்பித்து விட்டான். மாதுரியும் எழுந்து அவனைத் துரத்த ஆரம்பித்தாள்.
நிலவு தன் முழுப் பிராகசத்துடன் ஒளி வீசிக் கொண்டிருக்க, இதமான தென்றல் காற்றுடன் கடல் அலைகள் மீண்டும் மீண்டும் கரைகளைத் தொட்டுக் கொண்டிருக்க, கடற்கரையின் தூரத்தில் ஒற்றைப் புள்ளியாய், நந்தாவும், மாதுரியும்!
இங்கே இப்படி ஒரு அழகான காட்சி நடந்து கொண்டிருக்க, அங்கே அம்பரீஷின் குடோனில், தன் எதிரில் அமர்ந்திருந்த நரசிம்மனை ரௌத்திரதுடன் முறைத்துக் கொண்டிருந்தார் அவர்.
ஒரு வார பட்டினியால், பாதி உயிர் போய், சோர்வாக அமர்ந்திருந்தார் நரசிம்மன். அவருக்கு அமப்ரீஷை யாரென்று அடையாளம் தெரியவில்லை.
“யாரு டா இவன், என்னை எதுக்குக் கடத்தி வச்சிருக்கான்னு குழப்பமா இருக்குமே! என்னை யாருன்னு உனக்குத் தெரியாது. ஆனா உன்னை எனக்குத் தெரியும். ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி, உன்னோட மினரல் வாட்டர் கேன் பாக்டரி கேஸ் சம்பந்தமா, ஒரு லாயரை கொல்ல சொன்னியே நியாபகம் இருக்கா?!” பற்களைக் கடித்தபடி அழுத்தமாகக் கேட்டார் அம்பரீஷ்.
சில நிமிடங்கள் குழம்பி யோசித்த நரசிம்மனுக்கு, அம்பரீஷ் சொன்ன விஷயம் நியாபகம் வர, அவர் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது. ‘அதுக்கு இப்போ என்ன?’ என்ற ரீதியில் பதில் பார்வை பார்த்தார்.
“நியாபகம் வந்துடுச்சா! அந்த லாயர் யார் தெரியுமா?”
நரசிம்மன் முகத்தில் எந்த ரியாக்க்ஷனும் இல்லை.
“மேத்தா ஜூவலர்ஸ் தெரியுமா?” அடுத்தக் கேள்வி அவரிடம் இருந்து வந்தது.
‘தெரியும்’ என்பது போலத் தலை அசைப்பு நரசிம்மனிடம். பின்னே, எத்தனை முறை பொண்டாட்டி நச்சரித்தாள் என்று அக்கடைக்கு வந்து போயிருக்கிறார்.
“அந்தக் கடை ஓனர், அம்பரீஷ் மேத்தாவோட பொண்ணு தான் நீ கொல்ல சொன்ன லாயர்.”
அம்பரீஷ் சொன்னதும், திடுக்கிட்டார் நரசிம்மன். அம்பரீஷ் மேத்தாவின் சொத்து மதிப்பு, வியாபார செல்வாக்கு எல்லாம் அவருக்கு ஓர் அளவுக்குத் தெரியும். வைர வியாபாரத்தில், டாப் லிஸ்டில் இருப்பவர் தான் அம்பரீஷ்.
“அந்த அம்பரீஷ் மேத்தாவை பார்த்திருக்கியா, இப்போ பார்த்துக்கோ!” சொன்னவர் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு துப்பாக்கியை எடுத்தார்.
நரசிம்மனுக்குத் தன் முன் நிற்பது யார் என்று புரிந்ததில், சர்வமும் ஆட்டம் கண்டது. உடல் வெடவெடக்க, முகம் வேர்த்துக்கொட்ட ஆரம்பித்தது.
“சார், உங்க பொண்ணுன்னு தெரியாம….” தெரிந்தே செய்த தப்பிற்கு என்ன சமாதனம் சொல்வது என்று தெரியாமல் மேற்கொண்டு பேச வார்த்தைகளின்றி, நரசிம்மனின் வாய் தந்தியடிக்க, பேசக்கூடத் தெம்பில்லாமல் கஷ்டப்பட்டார்.
ஆனால் நரசிம்மனின் எந்தச் சமாதானத்தையும் காது கொடுத்து கேட்கவில்லை அம்பரீஷ். “யாரோ வந்ததால அன்னைக்கு என் பொண்ணு உயிர் தப்பிச்சா, இல்லனா……” சொல்லிவிட்டு இடைவெளி விட்டவர், “வைரத்தையே அறுக்கிறவன் நான். உன்னைச் சும்மா விடுவேனா….” சொன்னவர், நரசிம்மனின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து அழுத்தினார்.
துப்பாக்கியின் முனை அழுத்தியதில், பயத்தில் பட்டென்று கண்களை மூடிக் கொண்டார் நரசிம்மன். கழுத்து நரம்புகள் புடைக்க, வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்தது அவரின் உடல்.
“சாஆஆஆர்!” பேச வாயில் வார்த்தை வரவில்லை. காற்று தான் வந்தது.
நரசிம்மனின் நெற்றிப்பொட்டில் இருந்த துப்பாக்கியை லோட் செய்த அம்பரீஷ், அதன் ட்ரிக்கரை மெல்ல இழுத்தார். மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டார் நரசிம்மன். ஒன்று…இரண்டு…மூன்று….நொடிகள் கரைந்து கொண்டிருக்க, ஐந்தாவது நொடி, ‘க்ளக்’ என்ற சத்தம் கேட்டது.
பட்டென்று கண்களைத் திறந்து பார்த்தார் நரசிம்மன். துப்பாக்கி தற்பொழுது அவர் நெற்றிப்பொட்டில் இல்லை. அம்பரீஷின் கையில் இருந்தது. அதிலேயே தனக்கு எதுவும் ஆக வில்லை என்று புரிந்தது அவருக்கு.
“என்ன பார்க்கிற? உன்னை இப்போதைக்குக் கொல்ற ஐடியா எனக்கில்லை. என்னோட பவர் என்ன, என்னால என்ன செய்ய முடியும், உன்னை எவ்ளோ தூரம் நெருங்க முடியும்னு காட்டத்தான் உன்னை இப்போ கடத்திட்டு வந்தேன். உன்னைக் கொல்ல, நான் வரணும்னு அவசியம் இல்லை. லோக்கல் ரவுடி, பாம்பே தாதா, மலேசியா டான், அமெரிக்கன் ஸ்னைப்பர்ஸ் இவங்கள்ல யாராவது ஒருத்தருக்குக் கண்ணைக் காமிச்சேன்னா போதும். உன்னை இருந்த இடம் தெரியாம அழிச்சிடுவாங்க.” கர்ஜித்தார்.
இவ்வாறு சொன்ன அம்பரீஷின் கைகள், நரசிம்மன் பக்கத்தில் இருந்து கொல்ல முடியாமல் போன ஆத்திரத்தில், துப்பாக்கியை இறுக பிடித்தது. அவரின் நினைவுகள் அன்று காலைக்குப் போனது.
கடைக்குக் கிளம்பி கொண்டிருந்தார் அமப்ரீஷ். ஃபோன் அடிக்கவும் எடுத்து பார்த்தார். திரையில் கமிஷ்னரின் பெயர் ஒளிர்ந்தது. ஆன் செய்து பேசினார்.
[the_ad id=”6605″]
“ஹலோ! அம்பரீஷ் ஜி?!’
“சொல்லுங்க கமிஷ்னர் சர்.”
“நரசிம்மனை ஒரு வாரமா காணோம்…..நீங்க அவரை எதுவும்…..” சொல்லாமல் தயங்கினார்.
“என் பொண்ணு மேல கைய வச்சவனைச் சும்மா விடச் சொல்றீங்களா கமிஷ்னர் சர்?”
“அப்போ அவனை என்ன பண்ண போறீங்க?!” அதிர்ச்சியுடன் கேட்டார்.
“கொல்ல போறேன்.”
“அம்பரீஷ் ஜி, எனக்கு உங்க கோபம் புரியுது. அதுக்காக அவனை நீங்க கொலை செஞ்சீங்கனா, அப்புறம் அதோட பின்விளைவு வேற மாதிரி இருக்கும்.”
“என்ன கமிஷ்னர் சர், மிரட்டுறீங்களா?!”
“ச்சே! ச்சே! நான் போய் உங்களை எதுக்கு மிரட்டப் போறேன் அம்பரீஷ் ஜி. நான் சொல்றது, நரசிம்மன் கொலை செய்யப்பட்டா, அப்புறம் போலீஸ் சும்மா இருக்காது. அவன் ஒரு கட்சியோட முக்கியப் புள்ளி. எப்படியும் போலீஸ் மோப்பம் புடுச்சு வந்திடும்.”
“வந்தா வரட்டும் கமிஷ்னர் சர். எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை. கேஸ்ல இருந்து எப்படி வெளிய வரணும்னு எனக்குத் தெரியும்.”
“அது எனக்குத் தெரியாதா ஜி. நான் அதுக்காகச் சொல்லல. சொசைட்டில உங்களுக்குன்னு ஒரு பேர் இருக்கு, தொழில்ல உங்களுக்குன்னு ஒரு பாரம்பிரியம் இருக்கு, அந்தஸ்து இருக்கு. அப்படி இருக்கச்ச, நீங்க ஒரு கொலை கேஸ்ல மாட்டுனீங்கனா, அது உங்க பேருக்கு தான் அசிங்கம். எந்த வி.ஐ.பி கிடைப்பான், அவன் பேரை நாறடிக்கலாம்ன்னு ப்ரெஸ் காத்திட்டு இருக்கு. இதுக்கும் மேல, சோசியல் மீடியா வேற, மீம்ஸ், வீடியோன்னு போட்டு வறுத்தெடுத்துடுவாங்க. நாம போடுற மீம்ஸ்க்கு பின்னாடி உண்மை இருக்கா, என்ன காரணம்ன்னு எல்லாம் அவனுங்களுக்குத் தெரியாது.”
அம்பரீஷ் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
“இவனுங்களைக் கூட விடுங்க. நாளைக்கு உங்க பொண்ண நீங்க எப்படி ஃபேஸ் பண்ணுவீங்க? அவங்க ஒரு நியாமான வக்கீல். உங்க தொழில் வட்டாரத்தை எப்படித் தலை நிமிர்ந்து ஃபேஸ் பண்ணுவீங்க?”
கமிஷ்னர் பேச பேச, அம்பரீஷ் எல்லாவற்றையும் யோசிக்க ஆரம்பித்தார். வெகு நேர அமைதிக்கு பிறகு, “இப்போ என்ன பண்ண சொல்றீங்க கமிஷ்னர் சர்?” கோபத்துடன் கேட்டார் அம்பரீஷ்.
“இப்போதைக்கு அவனை நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம் அம்பரீஷ் ஜி. ஆட்சி மாறி இருக்கு. ஆளுங்கட்சிகாரனுங்க நரசிம்மன் மேல செம்ம காண்டுல இருக்கானுங்க. நாளைக்கு எப்படியும் எவனாவது கையில மாட்டுவான். அப்படியே இல்லனா கூட எங்க கிட்ட மாட்டுவான். அப்போ அவனை வச்சு செஞ்சுடலாம்.”
அம்பரீஷ் அமைதியாக இருக்க, “என்னை நம்புங்க ஜி. நான் பார்த்துக்கிறேன்.” நம்பிக்கையூட்டும் வகையில அழுத்தமாகச் சொன்னார் கமிஷ்னர்.
ஒரு பக்கம் அம்பரீஷின் நன்மையைக் கருதி கமிஷ்னர் சொன்னாலும், மறு பக்கம் அவருக்கு அவர் கவலை! பின்னே கொலை கேஸ், அதுவும் முன்னால் எம்.எல்.ஏ என்றால், தலைவலி தானே.
வெகு நேரம் யோசித்த பின், “உங்களை நம்பி அவனை இப்போ விடுறேன். ஆனா நிச்சயம் இன்னொரு சந்தர்ப்பம் கிடைச்சுது அதுக்கு அப்புறம் அவனை உயிரோட பார்க்க முடியாது.” சொல்லிவிட்டு கோபத்துடன் வைத்துவிட்டார்.
இப்பொழுது அந்த உரையாடலை நினைத்துப் பார்த்தவருக்கு, தன் முன் அமர்ந்திருக்கும் நரசிம்மனை பார்க்க பார்க்க ரத்த அழுத்தம் எகுரியது. இருக்கும் கோபத்தில் எங்கே அவனைக் கொன்றுவிடுவோமோ என்ற எண்ணத்தில், தன் ஆட்களை அழைத்து, அவனை எங்கையாவது குப்பைத் தொட்டியில் போட்டுவிடும்படி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
ஆனால் அடுத்தச் சில நாட்களில் அம்பரீஷ் செய்த காரியம் நரசிம்மனுக்குள் வஞ்சத்தை விதைத்தது.