எல்லாவற்றையும் சொல்லி முடித்தான் சித்தார்த். அனைத்தையும் மவுனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான் சுதர்ஷன்.
வெகு நேர அமைதிக்கு பிறகு, பேசினான் சுதர்ஷன்.
“அப்புறம் எப்படி உங்க தங்கை மெண்டல் ஹாஸ்பிட்டல்ல?” சற்றே தயக்கத்துடன் கேட்டான்.
நிமிர்ந்து சுதர்ஷனை பார்த்த சித்தார்த்தின் கண்களில் அவ்வளவு வலி. யாரெல்லாமோ தன் தங்கையைப் பைத்தியம் என்று நினைக்கும்பொழுது, என்ன செய்வான் அவன்?
ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், குரலை செருமிக்கொண்டான்.
“அவளை இங்க சேர்க்கிறதுக்கு முந்தின நாள், நந்தாகிட்ட இருந்து ஃபோன் வந்துச்சு, அவ குழந்தையை மாடியில இருந்து தூக்கிப்போட பார்த்ததாகவும், தான் எப்படியோ குழந்தையைக் காப்பாத்திட்டதாகவும் சொன்னவரு, இதுக்கு மேல மாதுரி கூட வாழ இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டு, இந்த ஹாஸ்பிட்டலுக்கு ஃபோன் செஞ்சுட்டார் போல. நாங்க வர்றதுக்குள்ள நிலைமை கைமீறி போய்டுச்சு. ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்து அவளைக் கூட்டிட்டு போயிருந்தாங்க. யாருக்கும் ஆபத்து இல்லாம அவளை எங்க கூட வச்சு ட்ரீட்மென்ட் கொடுக்கிறோம்ன்னு டாக்டர்ஸ் கிட்ட நாங்க எவ்வளவோ கேட்டு பார்த்தோம். அவங்க வெளிய விட முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதுக்கு அப்புறம் வேற வழியில்லாம தான் அவளை அங்க விட வேண்டியதா போச்சு.”
சித்தார்த் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனான் சுதர்ஷன். ‘குழந்தையைத் தூக்கி போடுற அளவுக்கு அவளுக்குப் பைத்தியமா?!’
“அவங்க திடீர்ன்னு அப்படிப் பிஹேவ் செஞ்சாங்களா இல்லை அதுக்கு முன்னாடி அவங்க அப்படி நடந்துகிட்டதை நீங்க பார்த்திருக்கீங்களா?”
“அடிக்கடி இல்லை. ரெண்டு மூணு தடவை பார்த்திருக்கோம். ஒரு தடவை அப்பா இறந்தப்போ, ரொம்ப அழுதா. அப்பாவை தூக்கிட்டுப் போகும்போது எல்லாரையும் தள்ளிவிட்டுட்டு பின்னாடியே ஓடிட்டா. அப்புறம் ரொம்ப மன உளைச்சலாகி ரோட்டுலயே மயக்கம் போட்டு விழுந்துட்டா. இன்னொரு தடவை, பேசிட்டு இருக்கும்போதே, திடீர்ன்னு கோபம் அதிகமாகி, சாப்பிட்டுட்டு இருந்த தட்டு, டைனிங் டேபிள் மேல இருந்த பாத்திரம் எல்லாத்தையும் விசிறி அடிச்சிட்டா. இன்னொரு தடவை, ஏதோ பேசப்போய்ச் சண்டை வந்துடுச்சு. திடீர்ன்னு கத்தியை எடுத்து கையை அறுத்துக்கிட்டா.” சொல்லிவிட்டு அன்றைய நாள் நினைவில், சிறு இடைவெளி விட்டவன், பின் தொடர்ந்தான்.
“இதெல்லாம் எங்க கண்ணு முன்னாடி நடந்த சம்பவங்க. இது இல்லாம அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க அவ ரொம்ப வயல்ன்ட்டா பிஹேவ் பண்றதா நிறைய விஷயம் சொன்னாங்க. என் தங்கச்சி போல்ட் கேரக்டர் தான். எதுவா இருந்தாலும் அழுத்தம் திருத்தமா சொல்லிடுவா. அதுக்காக அவ அடமண்டோ, இல்லை. இந்த அளவுக்குக் காட்டுமிராண்டி தனமாவோ நடந்துக்க மாட்டா. சின்ன வயசில இருந்து எந்த ஒரு விஷயத்துக்கும் அடம்பிடிச்சது கிடையாது.”
“அவங்களைச் சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போனீங்களா?”
“ம்ம். கூட்டிட்டு போனோம். ஏதோ மன உளைச்சல் அதனால தான் இப்படிப் பிஹேவ் பண்றாங்கன்னு சொன்னாங்க. அவளை நல்லா பார்த்துகோங்கன்னு, நந்தா கிட்ட கூட நாங்க பேசி பார்த்துட்டோம். லவ் மேரேஜ்னாலே முன்ன இருந்த அன்பு இப்போ இல்லைன்னு ஒருத்தருக்கு ஓருத்தர் தோணும். அதனால சண்டையும் வரலாம். அவளைச் சந்தோஷமா வச்சுக்கோங்கன்னு, ஒரு அண்ணனா பேச கூடாத விஷயத்தைக் கூட, நான் நந்தா கிட்ட தனியா எடுத்து சொன்னேன். இருந்தும் குழந்தையைத் தூக்கி போடுற அளவுக்கு மோசமா நடந்துப்பான்னு நாங்க நினைச்சு பார்க்கல.” சொல்லும்பொழுதே குரல் கம்மி, கண்கள் கலங்கிவிட்டது சித்தார்த்துக்கு.
அவனின் மனநிலையைப் புரிந்து சிறுது இடைவெளி விட்டான் சுதர்ஷன். பின் சித்தார் தன்னைச் சரி செய்து கொண்டதும் தன் அடுத்தக் கேள்வியைக் கேட்டான்.
[the_ad id=”6605″]
“அவங்க குழந்தை..?”
“மூணு வயசுல ஒரு பெண் குழந்தை இருக்கா. பேர் தனிஷ்கா. மாதுரி மாதிரி அவ்வளவு அழகு. அவளை விட ரொம்பச் சேட்டை.” தங்கை மகளின் நினைவில், சித்தார்த் இதழில் புன்னகை அரும்பியது.
“பெண் குழந்தைன்றதால அம்மாகிட்டையோ இல்லனா அப்பாகிட்டையோ தான் இருக்கனுமாம். இவ இப்படி ஆகிட்டதால, டிவோர்ஸ்க்கு அப்புறம் தனுவை, அவங்க அப்பா கூட்டிட்டு போய்ட்டார்.
“ஹாஸ்பிட்டல் சேர்த்த பிறகு உங்க தங்கையை நீங்க பார்க்க வரலையா?”
“ம்ம், பல தடவை பார்க்க வந்தோம். ஒரு தடவை மட்டும் தான் பார்க்க முடிஞ்சுது. மத்த நேரம் எல்லாம் ஷாக் ட்ரீட்மெண்ட், தெரபி, அது இதுன்னு ஏதோ ஒரு ட்ரீட்மெண்ட்ல இருக்கிறதா சொன்னாங்க. ஒரு தடவை அவளைப் பார்க்க முடிஞ்சப்போ, எங்களைப் பார்த்து ரொம்ப வயலன்ட்டா கத்தினா. அம்மா உங்க மாப்பிளை என்னை ஏமாத்திட்டார், அப்படி இப்படின்னு. ஆனா இதை அதுக்கு மேல அவகிட்ட பேச முடியல. அதுக்கு அப்புறம் அவளைப் பார்க்கவே முடியல. அவ சொன்னதை வச்சு, ஏதோ இல்லீகல் அஃபயர்ன்னு நினைச்சேன். வெளிய விசாரிச்சு கூடப் பார்த்தேன். ஆனா அந்த மாதிரி எதுவும் இல்லை. இதை நந்தா கிட்ட கேட்க கூட முடியல. அந்த நேரம் பிசினஸ் ப்ராப்ளம் வேற, நாங்களும் கடையை வித்துட்டு சூரத் போய்ட்டோம். இப்போதான் சென்னைக்கு வரோம்.”
“உங்க அப்பாவுக்கு என்ன ஆச்சு? உங்க கடை எல்லாம்..?” மேத்தா ஜூவலர்ஸ் பத்தி கேள்விப்பட்டிருப்பதால், அவர்களின் தற்போதையை நிலைமை சுதர்ஷனை ஆச்சரியத்துகுள்ளாக்கியது. அதனாலையே இப்படி ஒரு கேள்வி.
“பப்புக் கல்யாணம் முடிஞ்சு கொஞ்சம் வருஷத்துக்குப் பிறகு, எங்க நகை கடையில திடீர்ன்னு திருட்டு நடந்துச்சு. அதுல மொத்த சரக்கும் காணாம போய்டுச்சு. நாங்க எப்போவும் சரக்கு வாங்கும்போது, பாதிப் பணம் தான் கொடுப்போம். மீதி அடுத்தப் பர்ச்சேஸ் பண்ணும்போது கொடுப்போம். ஒரு சைக்கிள் மாதிரி போயிட்டு இருக்கும். இப்போ நகை எல்லாம் கொள்ளை போனதும், சரக்கு வாங்குனவங்க எல்லாம் பணத்தைத் திருப்பிக் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. போலீஸ், ப்ரைவேட் டிடெக்டிவ்ன்னு நாங்களும் எவ்வளவோ ட்ரை செஞ்சு பார்த்தோம். காணாம போன நகைங்க திரும்பக் கிடைக்கல. ஏதோ நார்த் சைட் திருடங்கன்னு சொன்னாங்க. ஆனா இதுவரை அவங்களைக் கண்டுபிடிக்கல. அந்த நேரத்தில தான், துணிக்கடையில தீ விபத்து நடந்து மொத்த துணி மணியும் எரிஞ்சு போச்சு. அப்புறம் திடீர்ன்னு ஒரு நாள்…வாக்கிங் போன அப்பா….அப்பாவை….யாரோ சுட்டுட்டாங்கன்னு நியுஸ் வந்துது.” சொல்ல முடியாமல் துக்கம் அவன் தொண்டையை அடைக்க, குனிந்து கண்களைத் துடைத்துக் கொண்டான் சித்தார்த். உடனே குடிக்கத் தண்ணீர் எடுத்துக் கொடுத்தான் சுதர்ஷன்.
தண்ணீரை குடித்துவிட்டுத் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்ட சித்தார்த் மேலும் தொடர்ந்தான்.
“நகை திருட்டு, ஃபையர் ஆக்சிடென்ட், அப்பா இறப்புன்னு, அடிக்கு மேல அடி விழுந்துச்சு. இந்த நேரத்தில புது, புதுக் கடைங்க, சேல்ஸ் டவுன்னு, பிசினெஸ் சைட்ல இருந்தும் பிரஷருக்கு மேல பிரஷர். வேற வழியில்லாம, இருக்கிறதை வித்து எல்லாருக்கும் செட்டில் செஞ்சுட்டு, கிடைச்ச மிச்ச பணத்தை எடுத்துகிட்டு நானும் அம்மாவும் குஜராத்துக்கே போய்ட்டோம்.”
எல்லா நிகழ்வும், ஏதோ விபத்து என்று நம்பி கொண்டிருக்கிறான் சித்தார்த். ஆனால்…?
இவர்கள் இங்குப் பேசிக் கொண்டிருக்க அறைக்குள், மகளின் கைக்குள் தன் முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருந்த ராஜேஸ்வரி, ஏதோ அசைவை உணர்ந்து சட்டென்று நிமிர்ந்து மகளைப் பார்த்தார்.
மாதுரியின் கருவிழிகள் அங்கும் இங்கும் அசைந்தது. ராஜேஸ்வரியின் கைக்குள் இருந்த அவளின் விரல்கள் லேசாக அசைய ஆரம்பித்தது.
மகளிடம் தெரிந்த மாற்றத்தை பார்த்ததும், ராஜேஸ்வரியின் உடல் முழுவதும் உற்சாகம் பரவ, எழுந்து மகளின் அருகே சென்றவர், “பப்பு! அம்மா வந்துருக்கேன் டா! கேட்குதா?! பப்பு! மாதுரி! நான் பேசுறது கேட்குதா டா? கண்ணைத் திறந்து பாரு டா! பப்பு?!” மகளின் கன்னத்தையும், நெற்றியையும் தடவிக் கொடுத்தபடி அவள் செவிகளில் கேட்கும்படி பேசிக் கொண்டே இருந்தார்.
வெகுநேர அழைப்பிற்குப் பிறகு, மெதுவாகத் தன் விழிகளைத் திறந்தாள் மாதுரி. முழுதாகக் கண்களைத் திறக்க முடியவில்லை. ஏதோ பல நாள் தூக்கத்தில் இருந்தது போல, கண்கள் வீங்கி போய் இருந்தது. காட்சிகள் எல்லாம் மங்கலாகத் தெரிய, அந்த அறையில இருந்த வெளிச்சம் வேறு கூச்சத்தைக் கொடுத்து, அவளின் கண்களை முழுதாகத் திறக்க முடியாமல் செய்தது.
[the_ad id=”6605″]
பல முறை கண்களைச் சிமிட்டிய பிறகே ஓர் அளவுக்குக் கண்களைத் திறக்க முடிய, சுற்றி இருந்த சூழலை ஆராய்ந்தாள் மாதுரி. வெள்ளை நிற கூரை, வெள்ளை நிற சுவர், பக்கவாட்டில் ஜன்னல், ஜன்னலுக்கு அந்தப் பக்கம் பச்சை பசேலன மரக்கிளைகள், என்று அலைபாய்ந்த அவளின் பார்வை, தாயின் பேச்சுச் சத்தம் கேட்டு, இறுதியாக ராஜேஸ்வரியின் பக்கம் திரும்பியது.
“பப்பு!! அம்மா டா? எப்படி டா இருக்கு?” அவர் பேசிக் கொண்டே போக, சுற்றிலும் இருந்த சூழலை கிரஹித்துக் கொள்ளவே அவளுக்குப் பல நிமிடங்கள் பிடித்தது. கண்களை விரித்துத் தாயை பார்த்தாள். மங்கலாகத் தெரிந்த அவரின் உருவம் மெல்ல மெல்ல தெளிவடைந்தது.
முதலில் ராஜேஸ்வரியை அவளுக்கு அடையாளம் தெரியவில்லை. எப்பொழுதும், பட்டுப்புடவையும், கழுத்து நிறைய நகையுமாகப் பார்த்தவரை, சாதாரணப் புடவையில் பார்க்கவும், யோசிக்க ஆரம்பித்தது அவளது மூளை. திருநீர் மட்டும் அணிந்திருந்த அவரின் வெற்று நெற்றி நடந்தவை எல்லாவற்றையும் நினைவூட்ட, விபத்து நடந்த முன்தின இரவு நிகழ்வு வரை அனைத்தும் நினைவுக்கு வந்தது மாதுரிக்கு. அடுத்த நொடி தரதரவெனக் கண்ணீர் வழிந்தது அவளின் கண்களில்.
சட்டென்று மகளின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பிக்கவும், பதறிப்போன ராஜேஸ்வரி, மகளை வாரி அணைத்துக் கொண்டார்.
“துர்கா மா!! என் பொண்ணை இப்படி அழ வச்சுட்டியே! உனக்கு நான் என்ன குறை வச்சேன்?! தேம்பி தேம்பி அழறாளே என் பொண்ணு, இதைப் பார்த்துட்டு இன்னும் நான் உயிரோட இருக்கேனே?! எதை நினைச்சு அழறாளோ என் பொண்ணு? என்ன கஷ்டத்தை எல்லாம் அனுபவிச்சாளோ?! பெத்தவ நான் உயிரோடு இருக்கும்போதே என் பொண்ணை இப்படிக் கஷ்டப்பட வச்சுட்டேனே!!”
நொடிக்கு நொடி அவரின் அணைப்பு இறுகியது. முடிந்தால் இப்பொழுதே மகளை எடுத்து தன் கருவறைக்குள் வைத்துக்கொள்வார். மகளின் இன்றைய நிலைமை அவரை அந்த அளவுக்குக் கசக்கி பிழிந்திருந்தது.
வெகு நேரம் கழித்து, மகளைத் தன்னிடம் இருந்து பிரித்தவர், தன் புடவை முந்தானை கொண்டு மகளின் முகத்தை அழுத்த துடைத்தார். “அம்மாடி! பப்பு. வேண்டாம் டா, அழாத. என் பொண்ணு அழறதை பார்க்கிற சக்தி எனக்கு இல்லை டா.” தன் கன்னத்தில் வழியும் கண்ணீரை பற்றி அவருக்குக் கவலை இல்லை. மகளின் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட அந்தத் தாயை சுக்குநூறாக உடைத்துவிடும்.
தேம்பி தேம்பி அழுத மாதுரி, “அம்மா, அந்த நந்தா…நந்தா…ரொம்ப மோசமானவன் மா. என்னை என்னவெல்லாம் செஞ்சிருக்கான் தெரியுமா? அது மட்டுமில்லை, அங்க மெண்டல் ஹாஸ்பிட்டல்ல…..அங்க….சொல்லவே அசிங்கமா இருக்குமா…..அங்க இருக்கிற டாக்டர் கூட இதுக்கு எல்லாம் உடைந்தமா…” வேகவேகமாக அழுகையூடனே சொன்னாள் மாதுரி.
ஆனால் ராஜேஷ்வைரியின் முகத்தில் அதிர்ச்சி.
“பப்பு?!!!” அதிர்ந்த விழிகளுடன், மகளின் முகத்தை ஆராய்ந்தார். “ஏன் டி ஒரு மாதிரி பேசுற?” அவரின் இதயம் பயத்தில் அதிகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
[the_ad id=”6605″]
தாய் பேசியது எதுவும் மாதுரியின் கருத்தில் பதியவில்லை. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னாள். “அந்தா நந்தா தான் அம்மா, என்னோட இந்த நிலைமைக்குக் காரணம். இப்போ கூட என்னைக் கொல்ல திட்டம் போட்டு இருக்கான் ம்மா. எப்போவேனா அவன் என்னைத் தேடி வரலாம். ஐயோ! என் பொண்ணு! என் பொண்ணை அவன் ஏதாவது செஞ்சிடுவான். அவன் கிட்ட இருந்து என் பொண்ணை வாங்கிட்டு வாங்கம்மா…..” சொல்லி கொண்டே போனவள் பயத்தில் தாயின் இடுப்போடு அனைத்துக்கொள்ள,
ராஜேஸ்வரியோ, மகளைத் தன்னிடம் இருந்து பிரித்தவர், “பப்பு! அடியே! உனக்கு என்ன டி ஆச்சு? ஏன் ஊமை மாதிரி பேசுற? உனக்கு என்ன ஆச்சு?!” சொல்லிவிட்டு மகளை உலுக்க, அப்பொழுது தான் மாதுரிக்கு உரைத்தது, தன் குரலுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று.
இருந்தும் ஏதோ நம்பிக்கையின்றி மீண்டும் பேசினாள். ஆனால் அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. மாறாக, “ஆஅ….ஆஆஅ…..ஆஆ…” என்ற ஊமை மொழி தான்.
அதிர்ந்து போனவள், அப்படியே ஸ்தம்பித்து அமர்ந்து விட்டாள்.
ராஜேஸ்வரியோ, “டாக்டர்!!!!!” என்று கத்திவிட்டார்.