அத்தியாயம் 12
ராஜேஸ்வரி டாக்டர் என்று கத்தவும், கண்கள் சொருக மெல்ல மெல்ல தாயின் கைகளிலேயே மயங்கி சரிந்தாள் மாதுரி. உடல் பலவீனம், திடீர் அதிர்ச்சி, ஆகியவை எல்லாம் அவளின் மயக்கத்திற்குக் காரணமானது.
அதே நேரம், உணவு அருந்தும் இடத்தில் இருந்து அறைக்கு வந்து கொண்டிருந்த சித்தார்த்தும், சுதர்ஷனும், ராஜேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு, பதறியடித்துக்கொண்டு அறைக்குள் ஓடினர்.
சுதர்ஷன் உள்ளே நுழையவும் அவன் கண்ட காட்சி, மாதுரியின் கண் இமைகளை மெல்ல மூடியதை!
“என்ன ஆச்சு ம்மா?! எதுக்குக் கத்துனீங்க?!” சித்தார்த் தாயிடம் கேட்க,
அவரோ, “பப்..பப்புக்கு ஏதோ ஆகிடுச்சு டா…எனக்கு பயமா இருக்கு…..அவளுக்கு ஏதோ ஆகிடுச்சு..” என்று புலம்ப ஆரம்பிக்க,
“அம்மா!! தெளிவா சொல்லுங்க. அவளுக்கு என்ன ஆச்சு?” தாயை போட்டு உலுக்கினான்.
“அவ..அவ ஏதோ ஊமை மாதிரி…..” அதற்கு மேல் சொல்ல முடியாமல், மகனின் நெஞ்சில் சாய்ந்து கதறி அழ ஆரம்பித்துவிட்டார்.
சுதர்ஷனோ, “நீங்க பார்த்துக்கோங்க. நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன்.” சொல்லிவிட்டு விறுவிறுவென அறையை விட்டு வெளியேறினான்.
கதறி அழும் தாயையும், கண்மூடி படுத்திருக்கும் தங்கையையும் குழப்பத்துடன் மாறி மாறி பார்த்தான் சித்தார்த். ஏனோ தாயின் அழுகை அவனையும் பாதித்து, நெஞ்சை கனமாக்கியது.
அதற்குள் மருத்துவருடன் அங்கு வந்து சேர்ந்தான் சுதர்ஷன்.
“என்ன ஆச்சு? கண்முழிச்சு எதாவது பேசுனாங்களா?” கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த மருத்துவர், மாதுரியின் அருகில் சென்று அவளைப் பரிசோதிக்க, நடந்ததை அழுகையுடன் சொன்னார் ராஜேஸ்வரி.
“திடீர்ன்னு கண்ணு முழிச்சா டாக்டர். அப்புறம் ஏதோ பேசுனா….ஆனா அவ வாயில இருந்து வார்த்தை வரல….ஏதோ ஊமை ஆளுங்க எழுப்புற மாதிரி சத்தம் தான் அவ வாயில இருந்து வந்துச்சு.”
தாய் சொல்லவும் அதிர்ந்து போன சித்தார்த், அவரின் தோள்களைப் பற்றி, “என்னம்மா சொல்ற? நீ சொல்றது எல்லாம் உண்மையா? அவ…அவளுக்கு…..” தாய் சொல்வது உண்மையாக இருக்கக்கூடாது, தங்கைக்கு அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு இருக்கக்கூடாது என்ற பதற்றமும், பயமும் அவனது வார்த்தைகளில் தெரிந்தது.
பின்னே, வார்த்தை ஜாலத்தால் எதிரிகளை மண்ணைக் கவ்வ வைத்து, வழக்குகளைத் தன்வசப்படுத்தும் வழக்கறிஞர் ஆயிற்றே அவன் தங்கை. அப்படிப்பட்டவளுக்குக் குரல் போய்விட்டது என்றால்?
மாதுரியை பரிசோதித்த மருத்துவர், உடனடியாக அவளுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற மருத்துவப் பரிசோதனைகளை எடுக்க ஏற்பாடு செய்தார். ஏனெனில் விபத்தில் பின் மண்டையில் அடிப்பட்டதில் அவளுக்கு இந்தப் பிரச்சனை உருவாகி இருக்கலாம் என்று அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
பரிசோதனை முடிவுகள் வரும்வரை அனைவருக்கும் பதற்றமாக இருந்தது. பரிசோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டு, ராஜேஸ்வரியையும், சித்தார்த்தையும் தன் அறைக்கு அழைத்தார் தலைமை மருத்துவர்.
மருத்துவரின் முகம் கவலையாக இருப்பதைப் பார்த்ததுமே, இருவருக்கும் பதற்றம் கூடியது.
தீ விபத்தின்பொழுது நடந்தவற்றைக் கூறிய மருத்துவர், “அன்னைக்கு, உங்க பொண்ணோட பின் மண்டையில அடிப்பட்டதால, அவங்களோட மூளை பகுதி பாதிக்கப்படிருக்கு. அதனால…” சிறு இடைவெளி விட்டவர், “அவங்களுக்கு இப்போதைக்குப் பேச்சு வர்றது கஷ்டம்.” என்றார்.
அவளை யாரோ தாக்கி இருக்கிறார்கள் என்றதுமே, பதறி போன ராஜேஸ்வரி, இப்பொழுது மகளுக்குப் பேச்சு வராது என்றதுமே, அழ ஆரம்பித்துவிட்டார்.
சித்தார்த்துக்கோ, ஏற்கனவே சுதர்ஷன் மூலம் விபத்து நடந்த அன்றைய நிகழ்வு தெரியும் என்பதால், அந்த அதிர்ச்சி இல்லை என்றாலும், தங்கைக்குக் குரல் வருவது சந்தேகம் என்ற ரீதியில் பேசிய மருத்துவரின் பேச்சை கேட்டதும், மாதுரியை நினைத்து கவலை கூடி கொண்டே போனது.
தாயை தன் நெஞ்சில் தாங்கி கொண்டவன், டாக்டரிடம் திரும்பி, “டாக்டர் அவ பிற்காலத்தில பேச வாய்ப்பிருக்கா?” எனக் கேட்டான் ஆவலோடு.
“வரலாம், வராமலும் போகலாம். நிச்சயமா சொல்ல முடியாது சித்தார்த். இது திடீர்னு நடுவில ஏற்பட்ட ஒரு விபத்துன்றதால, நம்ம பக்கதில் இருந்து, குரலை வர வைக்கிறதுக்கு, பேச்சு பயிற்சு கொடுத்து ட்ரை செஞ்சு பார்ப்போம்.”
அதற்குள் நர்ஸ் ஒருவர் வரவும், ராஜேஸ்வரியும், சித்தார்த்தும் வெளியே வந்தனர்.
[the_ad id=”6605″]
“என்ன டா? இதெல்லாம்? என் பப்பு அவ்ளோ கணீர்ன்னு பேசுவாளே…இனி அந்தக் குரலை எப்போ கேக்க போறேன்? அந்தக் கடவுள் ஏன் நம்மளை இப்படிச் சோதிக்கிறான். சொத்து போச்சு, உங்க அப்பா போனாரு, இப்போ இவளுக்குக் குரலும் போய்டுச்சு….அடிக்கு மேல அடி விழுற அளவுக்கு, நாம யாருக்கு என்ன கெடுதல் பண்ணோம்? சத்தியமா என்னால முடியல டா….இதுக்கு மேல எதையும் தாங்குற சக்தி எனக்கில்லை டா…” தன் நெஞ்சில் சாய்ந்து கதறி அழும் தாயின் கண்ணீரை பார்கையில், அவனுக்குமே கண்கள் கலங்கியது. ‘கடவுள் ரொம்பவும் சோதிக்கிறாரோ?’ என்று நினைத்துக் கொண்டான். நடப்பவற்றை எல்லாம் பார்கையில், தனக்கே பயமும் வேதனையுமாக இருக்கும்பொழுது, பெற்ற தாயை என்ன சொல்லி சமாதானம் செய்ய? அவனால் கொஞ்சமும் யோசிக்க முடியவில்லை.
ரிபோர்ட் வர தாமதாகும் என்று மருத்துவர் சொல்லி இருந்ததால், காலையில் தன் வேலைக்குக் கிளம்பி சென்றுவிட்ட சுதர்ஷன், அன்று மாலையே தன் வேலைக்கு மத்தியில், மருத்துவரை பார்க்க வந்தான். மாதுரியின் குடும்பத்திடம் சொன்ன விஷயத்தை அவனிடமும் பகிர்ந்து கொண்டார் மருத்துவர்.
“எப்படி டாக்டர்? ஒரு தடவை அடிச்சாலே, குரல் போய்டுமா?” அதிர்ச்சியுடன் கேட்டான்.
“அப்படின்னு சொல்ல முடியாது ACP சர். எத்தனையோ பேர் பல அடி உயரத்தில இருந்து கீழ விழுந்து பின்மண்டையில அடிபட்டும், உயிர் பிழைச்சவங்களும் இருக்காங்க. ஆனா மாதுரி கேசை பொறுத்தவரை, வேற ஒரு காரணமும் உண்டு.”
“வேற காரணமா?” கூர்மையானான் சுதர்ஷன்.
“ம்ம், அவங்க ஒரு மனநல பேஷன்ட்ன்றதால, மனநல காப்பகத்துல அவங்களுக்கு நிச்சயம் எலெக்ட்ரோ கன்வல்சிவ் தெரபின்னு சொல்லப்படுற, எலெக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருப்பாங்க. அது ஒரு நல்ல ட்ரீட்மெண்ட்தான்னு சொன்னாலும், நாள்படக் கொடுக்கப்படும் அந்த மாதிரி எலெக்ட்ரிக் ஷாக்னால, பல சமயம் பக்க விளைவுகள் ஏற்படும். முக்கியமா மூளை சம்பந்தப்பட்ட பிரச்சனை. உதாரணத்துக்கு, நியாபகங்கள் மறந்து போறது, மன குழப்பம், தலைவலி, மயக்கம், தசை வலி, இந்த மாதிரி. முக்கியமா இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறவங்களுக்குச் சில சமயம் விளைவுகள் இன்னும் மோசமாகவும் வாய்ப்பிருக்கு. உண்மையில மனநல பிரச்சனை இருக்கிறவங்களுக்கு ECT ரொம்ப நல்லது. ஆனா, நல்ல மனநிலையில இருக்கிறவங்களுக்கு ECT கொடுக்கும்பொழுது, அது பிரச்சனை.”
“பொதுவா வாரத்துக்கு ரெண்டுல இருந்து மூணு தடவைன்னு, ஒரு மாசம் வரைக்கும் ECT ட்ரீட்மெண்ட் கொடுப்பாங்க. அதுவும் நல்லா தெரிஞ்ச மெடிக்கல் பெர்சன் தான் கொடுப்பாங்க. ஒவ்வொரு முறையும், கிட்டத்தட்ட ஒரு நிமிஷம், எலெக்ட்ரிக் பல்ஸ் பேஷன்ட்டோட மூளைக்குள்ள செலுத்தப்படும். அதுக்கு அப்புறம் அஞ்சுல இருந்து பத்து நிமிஷம் வரைக்கும் தூங்க வைக்கப்படுவாங்க. அதுக்கு அப்புறம் சில மணிநேரத்துக்கு அவங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாது. அதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் கொஞ்சமா நியாபகத்துக்கு வரும். மாதுரியை பொறுத்தவரை, அவங்க நல்ல மனநிலையில இருக்கிற மாதிரி தான் தெரியுது. நல்ல மனநிலையில இருக்கிறவங்களுக்கு ECT கொடுக்கிறது கூடாது. ஒருவேளை அவங்களுக்கு அதிகமான ட்ரீட்மென்ட் கொடுக்கப் பட்டிருக்கலாம். அதனால கூட அவங்க மூளை மேலும் பாதிக்கப்பட்டிருக்காலாம். அந்தப் பாதிப்போட கடைசிக் கட்டமா கூட அவங்களுக்குப் பேச்சு போயிருக்கலாம்.”
மருத்துவர் சொல்ல சொல்ல, சுதர்ஷனுக்குள் முதல் முறையாக அந்தச் சந்தேகம் எழுந்தது.
நந்தாவின் கெஸ்ட் ஹௌஸ்…!
போடும் திட்டங்கள் எல்லாம் தோல்வியில் முடிவதில், மிகுந்த கோபத்தில் இருந்தான் நந்தா. கையில் மது நிரம்பிய க்ளாஸ்சுடன் அடிபட்ட சிங்கம் போல அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான்.
சாதாரணச் சிங்கத்தின் கர்ஜனையை விட, அடிப்பட்ட சிங்கத்தின் உறுமல், நம் முதுகெலும்பை சில்லிட வைக்குமாம்.
அப்படி ஒரு வெறியுடன் இருந்தான் அவன்.
மாதுரியின் தோழிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் கிட்டத்தட்ட தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அவளின் சமூகவளைத்தளக் கணக்கு, போன் டைரி, பள்ளி, கல்லூரி நட்பு வட்டம் எனப் பல இடங்களில் அலசி ஆராய்ந்து அவளின் நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்த சிலரின் வீட்டிற்குக் கெளஷிக்கை அனுப்பி, நேரடியாகவே விசாரித்துப் பார்த்தான்.
“நான் மாதுரி கூட ஒன்னா வொர்க் பண்றேன். ஒரு கேஸ் சம்பந்தமா அவங்க சில ஆதாரங்க வச்சுருந்தாங்க. இப்போ அதைக் காணோம். உங்ககிட்ட அவங்க எதுவும் கவர் கொடுத்தாங்களா? இல்லை கொரியர் எதுவும் செஞ்சாங்களா?” பல விதங்களில் கேட்டுப் பார்த்தான்.
“இல்லையே! அப்படி எதுவும் என்கிட்டே தரலையே!”
“நானே அவளைப் பார்த்து ஒரு வருஷத்துக்கு மேல ஆகுது.”
“முஹூம்! அவ கிட்ட இருந்து எந்தக் கொரியரும் வரலை.”
“அவ எப்படி இருக்கா? நான் கேட்டதா சொல்லுங்க. முடிஞ்சா எனக்கு ஃபோன் பண்ண சொல்லுங்க.”
இப்படியான பதில்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தது.
இதற்கு மேலும் எந்தச் சாதகமான பதிலும் கிடைக்கப் போவதில்லை என்று நிச்சயம் அவனுக்குத் தெரிந்து போனது.
அடுத்து என்ன செய்யலாம் என்று குழம்பி கொண்டிருந்தவனுக்கு அப்பொழுது தான், அன்று கௌஷிக் சொன்னது நியாபகத்திற்கு வந்தது.
“அன்னைக்கு யார்கிட்டையோ ஃபோன்ல பேசிட்டு இருந்தா டா. நான் நாளைக்கு எப்படியும் வெளிய வந்துடுவேன். நான் கொடுத்ததைப் பத்திரமா வச்சுருக்கத் தானே? சரி, அப்படியே வச்சுக்கோ. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, என்னைத் தவிர யார்கிட்டையும் இதைப் பத்தி மூச்சு விட வேண்டாம். இப்படின்னு சொல்லிட்டு இருந்தா…”
“அப்படியா?!”
“ஆமாம். நான் கிட்ட போறதுக்குள்ள, அவ ஃபோனை வச்சுட்டா. அந்த நேரத்தில தான் அவளை நான் அடிக்க வேண்டியதா போச்சு.”
தற்பொழுது அந்தப் பேச்சு நியாபக வர இது நாள் வரை, முதலில் மனைவியைக் கொன்று விட்டு பின்பு ஆதாரங்களைக் கண்டுபிடிப்போம் என்று திட்டம் போட்டிருந்தவனுக்கு, இனி அத்திட்டம் நிறைவேறுவது கஷ்டம் என்று தெரிந்ததும், அடுத்த இலக்கை நோக்கி காயை நகர்த்தினான்.
இருட்டுப் பாதையில் வழி தெரியாமல் குழம்பி தவித்தவனுக்கு, டார்ச் கிடைத்தது போல இருந்தது, இந்தத் திட்டம்.
ஆனால் இதை நாமே நேரடியாகக் களத்தில் இறங்கி செய்தால் தான் வெற்றி அடைய முடியும் என்று முடிவெடுத்தவன், கெளஷிக்கை தொலைபேசியில் அழைத்தான்.
“ஹலோ! கௌஷிக்!”
“சொல்லு டா! என்ன விஷயம்?’
“அன்னைக்கு அவ யார்கிட்டையோ ஃபோன்ல பேசிட்டு இருந்தான்னு சொன்னியே..”
“ஆமாம், அதுகென்ன இப்போ?”
“எனக்கு அந்தப் போன் நம்பர கண்டுபிடிச்சு அனுப்பு. கால் ரிகார்ட்ஸ் வேணும்.”
“டேய்! அது ஹாஸ்பிட்டல் லேண்ட்லைன் நம்பர் டா! அது எப்படிக் கிடைக்கும்?!”
[the_ad id=”6605″]
சில நிமிடங்கள் யோசித்த நந்தா, “நீ நம்பரை சொல்லு. மத்ததை நான் பார்த்துக்கிறேன். பிஎஸ்என்எல் ஆஃபீஸ்ல எனக்குத் தெரிஞ்ச ஒருத்தன் இருக்கான். நமக்கு வேண்டப்பட்டவன். அவன் கிட்ட மாதுரி பேசுன எக்ஸ்டென்ஷன் நம்பரை சொன்னா போதும். அஞ்சே நிமிஷத்தில கால் ரிகார்ட்ஸ பிரிண்ட் அவுட்டை கொண்டுவந்து கொடுத்துடுவான். யாருக்கும் தெரியாம வாங்கிட்டு வந்துடலாம்.”
“கேட்டா கொடுப்பானா டா?”
“அதெல்லாம் காசை விட்டெறிஞ்சா போதும், என்னவேணா செய்றதுக்கு ஆளுங்க இருக்கு டா. பணம் பாதளம் வரைக்கும் இல்லை, பக்கத்துக்கு நாடு வரைக்கும் பாயும்.” சொல்லிவிட்டுச் சிரித்தான் நந்தா.
உண்மை தான், பணக் கட்டை விசிறி அடித்தால், தாய்நாட்டை வேவு பார்த்து காட்டிக் கொடுக்கவும், பெற்ற தாயை கொல்லவும், கட்டிய மனைவியை வேறொருவனுக்கு விட்டுக் கொடுக்கவும், பெற்ற மகனை தாரை வார்க்கவும், கூட ஆட்கள் இருக்கும் காலம் இது.
“சரி நீ நாளைக்கு டியூட்டிக்கு போறியா?”
“ஆமா டா. அந்த டீன் வேற ACP சர் கேட்கிறார்ன்னு ஃபோன் மேல ஃபோன் போட்டுட்டு இருக்கான்.”
“ACP யா? அவன் எதுக்கு உன்னைக் கூப்பிடறான்?”
“ஏதோ பிங்கர்பிரிண்ட் சம்பந்தமா பார்க்கணும்னு சொன்னானாம்.”
கௌஷிக் சொன்னதும் தான் நந்தாவிற்குச் சட்டென்று அந்த யோசனை தோன்றியது.
அதைக் கேட்டதும் அதிர்ந்து போனான் அவன்.
“டேய்! என்ன விளையாடுறியா?!”
“இப்போ உன்னால செய்ய முடியுமா? முடியாதா?” நந்தாவின் குரலில் மிரட்டல் தெரிந்தது.
“மாட்டுனா, செத்தேன் டா!”
“அதெல்லாம் மாட்டமாட்ட. எதாவதுனா நான் பார்த்துக்கிறேன்.”
ரொம்பவே தயங்கினான் கௌஷிக்.
“நீ சொல்றது சின்ன விஷயமில்லை. யாரோனா பரவாயில்லை. நான் எப்படி…? வெளிய தெரிஞ்சுது, என்னோட டாக்டர் வேலையே காலி ஆகிடும்.”
“அதெல்லாம் ஒன்னும் நடக்காதுன்னு சொல்றேன்ல. முடிஞ்சா செய், இல்லனா என்ன பண்ணணுமோ நான் பார்த்துக்கிறேன். அதுக்கு அப்புறம் உன் இஷ்டம்.” விட்டேரியாக அவன் பதில் சொன்னாலும், அதில் ‘நீ செய்தே ஆக வேண்டும்.’ என்று ஒரு கொக்கி இருந்தது. அதைக் கௌஷிக் நன்றாக அறிவான்.
வெகு நேர யோசனைக்குப் பிறகு, “சரி, ட்ரை பண்றேன். காரியம் முடியலனா, அப்புறம் என்னை ஒன்னும் சொல்லக்கூடாது.”
“அதெல்லாம் உன்னால முடியும். டாக்டர் தானே நீ?!…”
“ம்ம். சரி.” சொல்லிவிட்டு கௌஷிக் ஃபோனை வைத்துவிட, நந்தாவின் முகத்தில் பளீர் சிரிப்பு.
இப்படி ஒரு வழி இருக்கும்பொழுது, பாதை தெரியாத வழியில் பயணித்துக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தோமே என்று நினைத்துச் சிரித்துக் கொண்டான்.
“எப்படியும், அந்த நம்பர் யாரோடதுன்னு கண்டுபிடிச்சாகனும். அந்த நம்பருக்கு சொந்தகாரங்க, ஒன்னு எவிடென்ஸ் வச்சிருக்கிற ஆளா இருக்கணும். இல்லை அது இருக்கிற இடம் தெரிஞ்ச ஆளா இருக்கும். ஏதோ ஒன்னு, கூடிய சீக்கிரத்தில எவிடென்ஸ் நம்ம கையில இருக்கும்.” இப்பொழுதே வெற்றிக் களிப்பில் மிதந்தான்.
ஆனால், அந்தத் தொலைபேசி எண்ணுக்கான நபரை அடையாளம் காணும்பொழுது அவனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது என்பதை இப்பொழுது அவன் அறிய மாட்டான்.
அப்பொழுது அவனது ஃபோன் அடிக்க எடுத்துப் பார்த்தான். வீட்டில் இருந்து வழக்கம் போல வரும் அழைப்பு. ஆன் செய்து பேசினான்.
“டேய்! நந்தா! எங்க டா இருக்க?” அவனது தாய் கேட்டார்.
“இதோ வந்திடறேன் மா. கொஞ்சம் வேலை.”
“என்ன வேலையோ போ…இப்படியா ராத்திரி பகல்ன்னு பாக்காம வேலை செய்வ….உன் பொண்ணு உன்னை ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கா…” அவர் சொல்லி கொண்டிருக்கும்பொழுதே, “அப்பா!…அப்பா!” என்ற அழைப்புப் போனில் கேட்டது.
“பாப்பா இன்னும் முழிச்சிட்டு இருக்காளா மா?” ஆசையுடன் கேட்டான்.
“ஆமா டா. உனக்காகத் தான் ரொம்ப நேரமா காத்திட்டு இருக்கா. இன்னும் அவ சாப்பிடல.”
“கொஞ்சம் அவ கிட்ட ஃபோனை கொடுங்க மா.”
“இதோ கொடுக்கிறேன். நீ சீக்கிரம் வீடு வந்து சேரு.” சொல்லிவிட்டு ஃபோனை பேத்தியிடம் கொடுத்தார்.
“அப்பா!” அவனின் மூன்று வயது மகளின் குரல் தேனாக வந்து விழுந்தது அவனின் காதில்.
“அப்புக்குட்டி! நீங்க இன்னும் சாப்படலையா டா?”
“இல்லை பா. நீ வந்தா தான் சாப்புவேன்.” மழலை மொழியில் அழகாகச் சொன்னாள் தனிஷ்கா.
“அப்பாக்குக் கொஞ்சம் வேலை இருக்கு டா அப்பு. நீ என்ன செய்வியாம் பாட்டி ஊட்டிவிடுறதை சாப்பிட்டிட்டு, சமத்தா தூங்கிடுவியாம். அப்பா உனக்குப் பிடிச்ச சாக்கலேட் வாங்கிட்டு வருவேனாம்….” குழந்தையாகவே மாறி பதில் சொன்னான் நந்தா.
“நோ ப்பா. நீ ஊட்டி விடு. அப்போ தான் சாப்புவேன். இல்லனா நான் சாப்ப மாத்தேன்.”
“அப்புக்குட்டி….நான்..”
அவன் சமாதனம் சொல்வதற்குள் அந்தப் பக்கம் அவள் மகள் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துவிட்டாள்.
“சரி…! சர்…! அப்பா ஒரு டென் மினிட்ஸ்ல வந்துடுவேன். ஒகே யா?”
“ஐ!! ஜாலி!” சொல்லிவிட்டு குதித்தாள் அவனின் அப்புக்குட்டி.
இந்தப் பக்கம் மகளை நினைத்துச் சிரித்துக் கொண்டான் நந்தா.
நந்தா பிடிப்பு வைத்திருக்கும் ஒரே ஜீவன், அவனின் மகள் தனிஷ்கா.
சிறி வயதில் பணமில்லாமல், அந்தஸ்து இல்லாமல் தான் கஷ்டப்பட்டது போல, தன் மகள் கஷ்ட்டப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.
ஆனால் அதற்கு அவன் தேர்ந்தெடுத்த வழி தான் தப்பாகியது. நேர் வழியாக இருந்திருக்கலாம். என்ன செய்ய, குறுக்கு வழியில் சென்றே பழக்கப்பட்டுவிட்டான்.
எப்பொழுதும் நேர் வழி, முட்கள், கற்கள் நிறைந்த கடுமையான பாதையாகத் தான் இருக்கும். ஆனால் அது சென்று சேரும் இடம், சொர்கமாக இருக்கும். ஆனால் குறுக்கு வழி, பூக்கள் நிறைந்த, பசுமையான, சுலபமான பாதையாகத் தெரிந்தாலும், அது சென்று சேரும் இடம் நரகமாகத் தான் இருக்கும்.
[the_ad id=”6605″]
மகளிடம் சொன்னது போலவே, பத்து நிமிடத்தில் கிளம்பி வீட்டிற்கு வந்தான் நந்தா. வராண்டாவிலேயே காத்திருந்தாள் அவனின் மகள்.
“அப்பா வந்தாச்சு!!!” கத்தியபடி காரில் இருந்து இறங்கிய தந்தையின் மேல் தாவினாள் தனிஷ்கா.
அந்த மூன்று வயது தேவதை, உருவத்தில் அப்படியே அவள் தாய், மாதுரியை கொண்டு பிறந்திருந்தாள். குணத்தில் இருவரையும் கொண்டு பிறந்திருந்தாள். தைரியத்தில், மாதுரியை போலவும், அடம்பிடிப்பதில் நந்தாவையும் நினைவு படுத்தினாள்.
தன் மேல் தாவியை மகளை வாரி அணைத்துக் கொண்டவன், “அப்புக்குட்டி இன்னும் சாப்பிடலையா?” என்று கேட்டுக் கொண்டே மகளைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.
“டைனிங் டேபிள்ல ரெண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன். சாப்பிட்டு தூங்குங்க.” மகனிடம் சொல்லிவிட்டு தன் அறைக்குத் தூங்க சென்றார் நந்தாவின் தாய்.
மகளைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றவன், கட்டிலில் அவளை உட்கார வைத்துவிட்டு, சென்று குளித்து உடைமாற்றிவிட்டு வந்தான். பின் மகளைத் தூக்கிக்கொண்டு சாப்பிட சென்றான்.
மகளுக்கு அவன் ஊட்டிவிட, அந்தப் பெரிய மனுஷியோ, தன் பிஞ்சு கரங்களால் கொஞ்சம் சாதத்தைத் தட்டில் இருந்து எடுத்து, அதில் பாதியை கீழே சிந்திவிட்டு மீதியை தன் தகப்பனுக்கு ஊட்டிவிட்டாள்.
இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் ஊட்டிக்கொண்டு, இருவரும் சாப்பிட்டு முடிக்க, மகளுக்கு வாயை கழுவி துடைத்துவிட்டு, தூங்க வைக்க அவளின் அறைக்குத் தூக்கி சென்றான்.
குழந்தைகளுக்கான கதைகள் சொல்லி அவளைத் தூங்க வைக்க, சிறிது நேரத்தில் கண்கள் சொக்க, தூங்கி போனாள் தனிஷ்கா. பின் மெல்ல மகளைப் படுக்கையில் அவன் படுக்கவைக்க, தூக்கத்தில் மகள் கேட்ட கேள்வி, இவன் தாடையை இறுக செய்தது.
“அம்மா எப்போ பா வர்வாங்க?”
மகளின் கேள்வியில், கோபம் சுர்ரென்று வந்தாலும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன், “கூடிய சீக்கிரம் உனக்குப் புது மம்மி கூட்டிட்டு வரேன் டா அப்புக்குட்டி.” மென்மையாகச் சொன்னான்.
ஆனால் குழந்தையோ, “எனக்குப் பழைய அம்மா தான் வேணும்.” என்று சொல்லி சிணுங்க, அப்போதைக்குச் சரி என்று சொல்லி மகளைத் தூங்க வைத்துவிட்டு, தன் அறைக்கு வந்து படுத்தவனுக்குப் பழைய நினைவுகள் அலைமோதியது.