அத்தியாயம் 13
“ரசகுல்லா! எங்க டி இருக்க?!” அருகில் மனைவி இல்லாததைத் தெரிந்து கொண்டு, தூக்கத்தில் இருந்து எழுந்து வந்தான் நந்தா. திருமணமான மறு நாள் காலை பொழுது அது.
பொதுவாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கென்று அரசாங்கம் ஒதுக்கும் பங்களாவில் தான் நந்தா வசிப்பது. ஆனால் திருமண முடிந்த இரவு சடங்கு மாப்பிளையின் வீட்டில் நடத்தப்பட வேண்டும் என்பதால், அவன் சொந்தமாக வாங்கி இருந்த இந்தப் பங்களாவில் தான் தற்பொழுது தங்கி இருந்தான்.
இரண்டு தளம் கொண்ட அந்த வீட்டில், மேல் தளத்தில் இரண்டு படுக்கை அறை இருக்க, கீழ் தளத்தில் ஒரு படுக்கை அறை, சமையல் கூடம், ஹால் ஆகியவை இருந்தது. சுற்றிலும் தோட்டம் கொண்ட தனிப் பங்களா அது. பெற்றோருக்காகப் பார்த்து பார்த்து வாங்கி இருந்தான்.
மாவட்ட ஆட்சியராக, அலுவல் வேலைகளுக்காகவும், மக்களைச் சந்திப்பதற்கும் ஏதுவாக இருக்க வேண்டும் என்பதால், அரசாங்க பங்களாவில் தான் அவன் வசிக்க வேண்டும். ஆனால் சில சமயம் குடும்ப நிகழ்ச்சியில், பண்டிகை நாட்களில், இரண்டு மூன்று நாட்கள் இங்கு வந்து தங்கிவிட்டு செல்வான்.
மாவட்ட ஆட்சியர் பதவி என்பது அரசாங்கத்தின் ஆயிரம் கண்களில் ஒன்று என்பது போன்ற பதவி என்பதால், மற்ற துறை வேலைகளைப் போலத் திருமணத்திற்கு விடுமுறை என்பது கிடையாது. உடம்பு சரி இல்லை என்றாலும், பங்களாவில் இருந்து முடிந்த வரை வேலைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.
எந்த நேரத்திலும் எந்த அவசர நிலையம் ஏற்படலாம், முதலமைச்சர் அழைக்கலாம், காவல் துறை அதிகாரிகளுடன் மீட்டிங் இருக்கும். இதற்கு எல்லாம் உகந்தது, அரசாங்க பங்களா தான்.
இதோ இன்று கூட, குளித்துவிட்டு அலுவகம் கிளம்ப வேண்டும். ஆகையால் சீக்கிரமே எழுந்துவிட்டவன், மனைவியைக் காணாது எழுந்து கீழே வந்தான்.
கணவனுக்காகச் சமையல் அறையில் காஃபி தயார் செய்து கொண்டிருந்தாள் மாதுரி. அவளைப் பார்த்ததும் நேற்றைய இரவு நிகழ்வுகள் எல்லாம் நினைவிற்கு வர, அவளின் அருகாமைக்காக அவன் மனம் ஏங்கியது.
மெல்ல சத்தம் எழுப்பாமல் கீழ் தளத்தில் இருந்த படுக்கை அறையை நோட்டம் விட்டான். அவன் பெற்றோர் இன்னும் எழுந்து கொள்ளவில்லை. அதன் பின் சமையல் அறைக்குள் சென்றவன், காஃபி போட்டுக் கொண்டிருந்த மாதுரியை பின்னால் இருந்து அணைக்கப் போக, அதே நேரம் அவளும் காஃபி கப்புடன் திரும்பினாள்.
இரண்டு பேரும் இடித்த வேகத்தில், மாதுரியின் கையில் இருந்த காபி கப் நந்தாவின் நெஞ்சில் மோத, உள்ளே இருந்த காஃபி முழுவதும், குபுக்கென்று வெளியேறி, அவன் ட்ரௌசரின் முன்பக்கம் மொத்தமாகக் கொட்டியது.
அவ்வளவு தான், அவன் மூச்சே நின்று போனது.
நந்தாவிற்குக் காஃபி ஆவி பறக்க இருக்க வேண்டும். கொஞ்சம் சூடு குறைந்தால் கூடக் குடிக்க மாட்டான். அதுவும் அவனுக்கு ரெடிமேட் காப்பீத்தூள் எல்லாம் பிடிக்காது. டிகாஷன் காபி தான் இஷ்டம். ஆகையால் மாதுரி, கொதிக்கக் கொதிக்க இருந்த டிகாஷனில், சூடாகக் காய்ச்சிய பாலை அப்பொழுதுதான் கலந்து, சர்க்கரையைக் கூடக் கலக்காமல் வெறுமென ஸ்பூனில் எடுத்து போட்டிருந்தாள்.
இப்பொழுது நினைத்துப் பாருங்கள், அந்தக் காஃபி எவ்வளவு சூடாக இருக்குமென்று!
கொதிக்கக் கொதிக்க இருந்த காஃபி அவனை நன்றாகப் பதம் பார்த்திருக்க, அந்த நேரத்தில் வாய் திறந்து கத்தக் கூட முடியாமல், ஒரு கையால் ட்ரௌசரின் முன்பக்கத்தையும், மறு கையால் வாயையும் இறுக பிடித்துக் கொண்டான்.
மாதுரியோ, “ஐயோ!” என்றபடி பதறிப்போய்க் கணவனைப் பார்த்தவள், அவன் ‘பேரழகன் சூர்யா’ போல வளைந்து நிற்பதை பார்த்துவிட்டு, சிரிப்பை அடக்க முடியாமல், பக்கென்று சிரித்துவிட்டாள்.
“அடியே! உனக்குச் சிரிப்பா இருக்கா?!” அவள் விழுந்து விழுந்து சிரிப்பதை பொறுக்க முடியாமல் கத்தியவன், வலியில் முகத்தைச் சுருக்கினான். அதற்கும் மாதுரி சிரித்தாள்.
“ரொமான்ஸ் செய்ய வந்தீங்களாக்கும்?” சிரிப்புடன் அவள் கேட்க,
“ம்ம்..” கஷ்டப்பட்டுத் தலையாட்டினான்.
“உலகத்தில இப்படி எவனும் ரோமன்ஸ் செஞ்சிருக்க மாட்டான்.” சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தாள்.
நந்தாவோ, வாயில் புகை வர, “போச்சே! போச்சே! பஸ்ட் நைட் கொண்டாடுன எனக்குச் செகண்ட் நைட் கொண்டாட முடியாம போச்சே!” என்றான் வடிவேலு பாணியில்.
அதற்குள் யாரோ வாரும் சத்தம் கேட்கவும், “நான் மேல போறேன். நீ சீக்கிரம் வா…யாரவாது என்னை இந்த நிலமையில பார்த்தா என் மானமே போய்டும்.” சொல்லிவிட்டு திரும்பியவன், “அம்மே! அம்மம்மே! லவ் பண்ண வந்த என்னை, இப்படி லவ் பண்ண விடாம செஞ்சுட்டாளே!” என்று சொல்லிக்கொண்டே, சூர்யா போலக் கோணலாக நடந்தபடி மாடி ஏறினான்.
மாதுரியோ, “ஆஹா! மெல்ல நட, மெல்ல நட மேனி என்ன ஆகும்….” என்று சிரிப்பை அடக்கியபடி கணவனைப் பார்த்துப் பாட, அவனோ, “ஏற்கனவே அவிஞ்சு போய்க் கிடக்கு, இதுல உனக்குப் பாட்டு வேறையா? போமா வேலையைப் பார்த்துக்கிட்டு.” என்றான் கத்தவும் முடியாமல், உடம்பை அசைக்கவும் முடியாமல்.
[the_ad id=”6605″]
சத்தமாகக் கத்திவிட்டான் போல, உள்ளே ஏதோ வெடிப்பது போல இருக்க, “ஐயோ! உள்ள மூணாம் உலகப் போறே நடக்குதே! நியுக்கிளியர் வெடி சத்தம் எல்லாம் கேட்குதே! கருகுன வாசம் வேற வருது. கல்யாணம் முடிஞ்ச முத நாளே இப்படி ஆக்கிட்டாளே என்னைய, இன்னும் என்னவெல்லாம் செய்ய ப்ளேன் போட்டிருக்காளோ?! இனி காஃபீயே குடிக்கக் கூடாது சாமி!” தனக்குள் சொல்லிக் கொண்டவன், வலியை பொறுத்துக் கொண்டு வேகவேகமாக மாடி ஏறினான்.
அதன்பின் மறுவீட்டிற்கு என்று மாதுரியின் வீட்டில் இருந்து ஆட்கள் வர, அவர்கள் முன் நன்றாக இருப்பது போல நடிப்பது வேற, அவனுக்குப் பெரும்பாடாக ஆகிவிட்டது.
நந்தாவின் நடையைப் பார்த்துவிட்டு, மாதுரியின் தாய் வேறு அவளைத் தனியே அழைத்து, “என்ன பப்பு! மாப்பிளைக்கு என்ன ஆச்சு? இப்படி நடக்கிறாரு?” என்று குசுகுசுவெனக் கேட்டு வைக்க, அவளுக்கோ நடந்த நிகழ்வு மீண்டும் நியாபகம் வர, சட்டென்று சிரித்துவிட்டாள்.
“அடியே! என்னடி சிரிப்பு? நான் இங்க சீரியஸா கேட்டுட்டு இருக்கேன், நீ என்னடான்னா?” என்றார் சற்றே கோபமாக.
ஆனால் அருகில் இருந்த உறவு பெண் மாதுரியின் சிரிப்பை வேறு விதமாக எடுத்துக்கொண்டு, ராஜேஸ்வரியின் காதில் ஏதோ சொல்லிவிட்டுக் கள்ளச்சிரிப்பு சிரிக்க, பெரியவரின் முகத்திலோ வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது.
மகள் இன்னும் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, “வாய மூடு பப்பு! லூசுத்தனமா சிரிச்சுக்கிட்டு. இன்னும் விளையாட்டு பொண்ணாவே இருக்கா!” சொல்லிவிட்டு அங்கிருந்த சென்றுவிட்டார்.
ஆனால் அதன்பின்பு தான் நடந்தது கூத்து!
என்னதான் நந்தா கஷ்டப்பட்டு நேராக நடக்க முயற்சித்தாலும், அவனின் நடையில் வித்தியாசம் தெரிய, பார்க்கும் எல்லோரும் ‘என்னாச்சோ! ஏதாச்சோ!’ என்று பதற, ஆனால் அந்த உறவு பெண் மூலம் விஷயம் வேறு விதமாகப் பரவ, எல்லோரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
எல்லோரும் தன்னை வித்தாயசமாகப் பார்ப்பதும், பிறகு தங்களுக்குள் சிரிப்பதையும் பார்த்துவிட்டு, மனைவியிடம் தனியாக விசாரித்தான் நந்தா.
அவளோ தாயுடன் நடந்த உரையாடலை சொல்ல, தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான் நந்தா.
“எல்லா வீட்டுலையும் முத ராத்திரி முடிஞ்சதும், கல்யானை பொண்ணைத் தான் பார்த்து சிரிப்பாங்க, ஓட்டுவாங்க. முத முறையா, மாபிள்ளையைப் பார்த்து கெக்கபுக்கன்னு சிரிச்சிட்டு போறாங்களே!” அழ ஆரம்பித்துவிட்டான்.
“ஒரு சேஞ்சுக்கு இதுக்கூட நல்லா இருக்குங்க..” மாதுரியும் கணவனைக் கிண்டலடிக்க,
அவனோ, “உன்னை!” என்று ஆக்ரோஷமாக எழுந்தவன், அடுத்த நொடி, “அம்மா!!” என்றபடி அமர்ந்து விட்டான்.
கணவனால் தன்னைப் பிடிக்க முடியாது என்று தெரிந்தே மெதுவாக நடந்து சென்றாள் மாதுரி, அதுவும் சிரிப்புடன்.
இப்படியே கேலியும் கிண்டலுமாக, (மணமக்களுக்கு இல்லை, உறவினர்களுக்கு) மறுவீடு, அதன்பின்பான சடங்குகள் எல்லாம் செல்ல, ஒரு வாரத்திற்குப் பின்பே நந்தாவால் செகண்ட் நைட் கொண்டாட முடிந்தது என்பது கூடுதல் தகவல். (“உங்களுக்கா, இந்த நிலைமை?” என்று ஊர் மக்கள் வாயில் துண்டை வைத்து அழுதது வேறு கதை!)
திருமணப் பரிசாக, சில கோடிகள் பெறுமானமுள்ள அபார்ட்மெண்ட்டை மகளுக்கு வாங்கித் தந்திருந்தார் அம்பரீஷ். ஏற்கனவே வைரத்தால் மகளை அலங்கரித்தது பத்தாமல், கூடுதலாக விலை உயர்ந்த வீடு வேறு. இதைக் கேள்விப்பட்டு, நந்தாவின் உறவினர்கள் வாயை பிளந்து விட்டார்கள்.
சில மாதங்கள் நந்தாவின் வீட்டில் அவனின் பெற்றோரோடு இருந்த மாதுரி, அதன்பின் கணவனுடன் அரசாங்க பங்களாவிற்குக் குடிபெயர்ந்தாள். மனைவி அருகில் இருந்ததால், நந்தாவிற்கு நாட்கள் இனிமையாகச் சென்றது.
அம்பரீஷும், ராஜேஷ்வரியும் அவ்வபொழுது மாதுரியை வந்து பார்த்துவிட்டு சென்றனர்.
நந்தா சொன்னதின் பேரில், மாவட்ட ஆட்சியரின் மனைவியாக இருந்து கொண்டே தனது வழக்குகளை நடத்த ஆரம்பித்தாள் மாதுரி. வழக்கம் போலக் காலை கிளம்பி, தனது அலுவகம் சென்று விடுவாள். ராஜேஸ்வரி கண்டிப்புடன் சொல்லியிருந்ததால், நண்பகல் கிளம்பி, இருட்டுவதற்கு முன்பே வீடு போய்ச் சேர்ந்து விடுவாள்.
இப்படியே மாதங்கள் கடந்து கொண்டிருக்க, இடையில் இரண்டு முறை ட்ரான்ஸ்ஃபர் கிடைத்தது நந்தாவிற்கு. முதல் முறை, நீலகிரியில் ஒரு வருடமும், மற்றொரு முறை, கரூரில் இரண்டு வருடமும் சென்று பணியாற்றிவிட்டு வந்தான்.
இரண்டு முறையும், மாதுரியையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டான். இரண்டு பக்க பெற்றோர் கூடச் சொல்லிப் பார்த்தார்கள், “ஆள் தெரியாத ஊர்ல அவ எப்படித் தனியா இருப்பா? சென்னை தான் அவளுக்கு வசதி. அவ இங்கயே இருக்கட்டும்.” என்று.
ஆனால் அவன் மறுத்து விட்டான். மாதுரியும் கணவனின் முடிவிற்கு ஒன்றும் சொல்லவில்லை. ராஜேஸ்வரி தான் மகளை நினைத்து மிகவும் கவலை கொண்டார். சென்னை தவிர எந்த ஊருக்கும் அவள் சென்றதில்லை. எல்லாமே தமிழ் தெரிந்த ஊர் தான் என்றாலும், மகளின் பாதுகாப்பை நினைத்து வருந்தியது அந்தத் தாய் உள்ளம்.
அம்பரீஷோ, செல்வ செழிப்பாக வளர்ந்த மகள், அரசாங்க குவார்ட்டர்ஸில் என்ன கஷ்டப்படுவாளோ என்று நினைத்து கவலை கொண்டார்.
ஆனால் எல்லோரின் கவலையையும் முறியடித்து, வெற்றிகரமாக மூன்று வருடங்கள் கழித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பினாள்.
ஆம்! யார் யாரோ கையைக் காலை பிடித்து, சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்துவிட்டான் நந்தா. பின்னே அவன் கனவு என்ன ஆவது?! இதோ செர்வீசில் கிட்டதட்ட பத்து வருடங்களைக் கடந்துவிட்டான். இதோ அதோ என்று இரண்டு மூன்று வருடங்களை ஓட்டிவிட்டாள், யாரையாவது பிடித்துச் செயலாளர் பதவி வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.
அதற்கான சந்தர்ப்பமும் அவனுக்குக் கிடைத்தது பிற்காலத்தில், ஆனால் அதற்குப் பேசப்பட்ட விலை?
[the_ad id=”6605″]
சென்னை திரும்பி சில மாதங்கள் ஆகி இருந்தது. அன்றொரு நாள், காலை அலுவகம் கிளம்பி கொண்டிருந்த மாதுரி மயக்கம் போட்டு விழ, நந்தா ஏற்கனவே அலுவலகம் கிளம்பி செண்டிருந்ததால், காவலுக்கு இருந்த கான்ஸ்டபிள் இரண்டு பேர் தான் அவளை மருத்துவமனை சென்று சேர்த்தனர்.
அங்குப் பரிசோதித்தில அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவர, விஷயம் கேள்விப்பட்டு இரண்டு குடும்பமும் கிளம்பி மருத்துவமனை வந்துவிட்டது. ஆனால் நந்தா தான், மீட்டிங் இருந்ததால், இரவு தான் வீட்டிற்கு வந்தான்.
“ஹே! ரசகுல்லா!! எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா!! மீட்டிங் எப்படா முடியும்ன்னு காத்திட்டு இருந்தேன். எவ்ளோ வருஷம் கழிச்சு, இப்படி ஒரு குட் நியுஸ். நான் அப்பாவாகப் போறேன்!!!” துள்ளிக்குதிக்காத குறையாக வீட்டிற்குள் ஓடி வந்தவன், மனைவியைக் கட்டியணைக்க,
அவளோ, “போங்க! உங்க பேச்சு கா! கல்யாணம் ஆகி, எத்தனை வருஷம் கழிச்சு, நான் கன்சீவ் ஆகி இருக்கேன். உங்ககிட்ட தான் முத முத சொல்லனும்னு நினைச்சேன். ஆனா நீங்க என்னடான்னா….” என்று கோபித்துக் கொண்டாள்.
“என்னடி நீ, நான் என்ன அங்க சும்மா வா ஊஞ்சல் ஆடிகிட்டு இருந்தேன். சீ.எம் கூட மீட்டிங். எப்படிப் பாதில எழுந்துச்சு வர முடியும்? என் அம்முகுட்டில, இதுக்கு எல்லாம் கோபிச்சுக்கலாமா?” அவன் கெஞ்ச, இவள் மிஞ்ச என்று இனிதே சென்றது அந்த நாள்.
அதன் பின்னும் மாதுரிக்கு நாட்கள், கணவனின் அருகாமை கிடைக்காமல் கஷ்டமாகத் தான் சென்றது. நினைத்த நேரம், கணவனின் மடியில் தலை சாய்ந்து, தன் மகவின் அசைவை இருவரும் உணர்ந்து, பிறக்காத பிள்ளைக்குப் பெயர் சூட்டி, இப்பொழுதே, பிள்ளையின் கல்யாணம் வரை திட்டம் போட்டு, என என்னென்னவோ கனவு கண்டிருந்தாள் பிரசவ காலத்தை நினைத்து.
ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தோழிகள் அவர்களின் பிரசவ காலத்தைக் கதை கதையாகப் பகிர்ந்திருக்க, அவற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் கூட இவளுக்கு நடக்கவில்லை.
ஆனால் நந்தாவை பொறுத்தவரை வருடங்கள் கூடக் கூட நந்தாவின் செர்வீஸ் அதிகரித்ததால், பொறுப்புகளும் அவனுக்குக் கூடியது. எப்பொழுதும் ஏதாவது ஒரு அரசியல் பிரச்சனை, சட்ட ஒழுங்கு சிக்கல், மக்கள் பிரச்சனை என, மண்டையைப் பியித்துக் கொள்ளும் அளவுக்குப் பல பிரச்சனைகள் வரிசை கட்டிக்கொண்டு வந்தது.
இதில் ஆட்சி சரி இல்லை என்று ஆங்காங்கே மக்கள் சாலை மறியல், இளைஞர்கள் போராட்டம், மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்பு எனத் திரும்பும் திசை எல்லாம் போராட்டம் என்றிருக்க, மூச்சு விடக்கூட அவனுக்கு நேரமில்லை.
அவர்கள் பக்கம் தப்பே இருந்தாலும், போராட்டத்தைச் சரி செய்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டியது ஆட்சியரின் கடமை ஆயிற்றே! செய்யவில்லை என்றால், கூப்பிட்டு அசிங்கமாகக் கேட்பார்கள் ஆட்சியில் இருப்பவர்கள்.
இவற்றுக்கு எல்லாம் மேலாக, எந்த ஆட்சியரையும் இத்தனை வருடம் ஒரே ஊரில் வைத்திருக்க மாட்டார்கள். இதுவரை அதிகபட்சம் இரண்டு மூன்று வருடங்கள் தான். அதற்காகவே அவர்கள் சொல்லும் காரியங்களை வாயை மூடிக்கொண்டு செய்து தான் ஆகவேண்டும். வேறு வழி?
மாதுரி ஒரு பக்கம், நந்தா ஒரு பக்கம் என மாதங்கள் செல்ல, கணவன் இல்லாமலே மாதுரியின் வளைகாப்பு நடந்து முடிந்தது. அதுவும் அவள் மனதில் ஒரு வலியை உண்டாக்கியது.
இதற்கிடையில், திடீரென ஒரு நாள், ஆட்சியர் அலுவகத்தில் நுழைந்த ஒருவர் தன் குடும்பத்தாரோடு தீ குளிக்க, மக்களிடையே அது மிகப் பெரிய கொந்தளிப்பை உண்டாக்கியது.
விசாரித்ததில், ஏதோ ஆளுங்கட்சி எம்.எல்.ஏவால் பிரச்சனை என்றும் அதைப் பல முறை குறிப்பிட்டு ஆட்சியரிடம் மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படாததால், அவர் இப்படிச் செய்ததாகத் தெரியவந்தது.
இது வேறு நந்தாவிற்கு மிகப் பெரிய தலைவலியை உண்டாக்கியது. இறந்தவர் உறுப்பினராக இருந்த கட்சி தலைவர் ஒரு பக்கம், முதலமைச்சர் ஒரு பக்கம் என ஆளாளுக்கு நந்தாவை பந்தாடினார்.
ஒருபக்கம் தங்கள் கட்சி எம்.எல்ஏ என்பதால், விஷயத்தை எப்படியாவது முதலைமச்சர் சமாளிக்கச் சொல்ல, மறுபக்கம் நடவடிக்கை எடுக்கச் சொல்லி, எதிர் கட்சி தலைவர் போராட்டத்தில் ஈடுபட, என்ன செய்வது என்று புரியாமல் தவித்துப் போனான் நந்தா.
இதில் கமிஷனர் வேறு, எதிர்க்கட்சி ஆட்கள் எந்த நேரத்திலும் ரகளையில் ஈடுபடலாம் என்ற செய்தியை வேறு சொல்லி இருக்க, அடுத்து என்னென்ன நடவடிக்க எடுக்க வேண்டும் என்று அவருடன் ஆலோசனையில் ஈடுப்பட்டான்.
கமிஷனர் சொன்னது போலவே, அடுத்தச் சில நாட்களில் எதிர்கட்சியினர் சத்தமில்லாமல் போராட்டத்தில் இறங்கி விட்டனர். ரயிலை மறிப்பது, அரசாங்க பஸ்களை அடித்து நொறுக்குவது என இல்லாத அட்டகாசம் செய்தனர்.
இந்த நிலையில் தான், மாதுரிக்கு பிரசவ வலி ஏற்பட, மருத்துவமனைக்கு அவளைத் தூக்கி செல்லும் வழியில் எதிர்கட்சியினர் போராட்டத்தின் காரணமாக அவளது வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது.
ஏற்கனவே உயிர் போகும் வலியில் இருந்தவளுக்கு, இது வேறு பீதியை ஏற்படுத்த அழுது விட்டாள். எப்படியோ, காவல்துறையின் உதவியோடு அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.
அடுத்த நாள் மாலை தான் தனிஷ்கா பிறந்தாள்.
வழக்கம்போலப் பத்து நாட்கள் கழித்துத் தான் குழந்தையைப் பார்க்க வந்தான் நந்தா. ஏற்கனவே நடந்த நிகழ்வுகள், பிரசவ வலி, போஸ்ட்பார்டம் பிரச்சனை என அவதிப்பட்ட மாதுரி, கணவனைப் பார்த்ததும், கத்திவிட்டாள்.
“ஒரு தடவை…..ஒரு தடவைக் கூட நீங்க என் பக்கத்தில இல்லை. அவ உண்டானப்போ, ப்ரெக்நன்சி டைம்ல, இதோ இப்போ இவ பொறந்தப்போவும்….சரின்னு நானும் உங்க வேலையை நினைச்சு அட்ஜஸ்ட் செஞ்சுட்டு தான் இருக்கேன். ஆனாலும், எனக்கும் ஆசை இருக்காதா? மத்த நேரம் சரி, குழந்தை பிறந்தப்போவும் கூடவா? ஒரு நாள் வந்து பார்த்துட்டு போயிருக்கலாமே? கன்சீவ் ஆன செய்தியும் உங்ககிட்ட தான் மொதல்ல சொல்லனும்னு நினைச்சேன். வயிறு பெருசா வளரும்பொழுதும் உங்களைத் தான் மொதல்ல தொட்டுப் பார்க்கச் சொல்லனும்னு நினைச்சேன். அவ அசைவையும் உங்களுக்குத் தான் மொதல்ல சொல்லனும்னு நினைச்சேன்…..இப்படி எத்தனையோ நினைச்சேன், ஆனா எல்லாம் நினைப்போடவே போச்சு. ஒன்னுக்கூட நடக்கல.” சொல்லிவிட்டு இடைவெளி விட்டவள், மீண்டும் தொடர்ந்தாள்,
[the_ad id=”6605″]
“அன்னைக்கு ஹாஸ்பிட்டல் போறப்போ, ரவ்டிங்க வந்து அவ்ளோ பிரச்சனை. எனக்கு உயிரே போய்டுச்சு. எனக்கு எதுவும் ஆனாலும் பரவாயில்லை, ஆனா உங்க பொண்ணுக்கு எதுவும் ஆகக் கூடாதுன்னு தான் வேண்டிகிட்டேன்.” சொல்லும்பொழுதே அவளது உதடுகள் அழுகைக்குத் தயாராகத் துடிக்க ஆரம்பித்தது.
“இதோ, இப்போ நீங்க ஆசைப்பட்ட மாதிரி பொண்ணு பிறந்திருக்கா, அவளை முதல்ல உங்க கையில தான் கொடுக்கணும்னு நினைச்சேன். அதுவும் நடக்கல. எவ்ளோ தேடினேன் தெரியுமா உங்களை?” முடிக்கும்பொழுது, அவள் கட்டுப்பாட்டையும் மீறி மொழுக்கென்று கண்ணீர் வழிந்தது மாதுரிக்கு.
மனைவியின் கண்ணீரை பார்த்து சகியாத நந்தா, அவளை இறுக அணைத்துக் கொண்டவன், “ரசகுல்லா! ஏன் டி இப்படி எல்லாம் பேசுற? உன்னையும் பாப்பாவையும் பார்க்கணும்னு எனக்கு மட்டும் ஆசை இருக்காதா? நான் என்ன பண்ணட்டும், என் வேலை அப்படி? கொஞ்சம் புரிஞ்சுகோ டி.” கெஞ்சினான்.
“நான் புரிஞ்சிகிட்டதுனால தான் இத்தனை நாளா உங்ககிட்ட எதுவும் சொல்லல.” சொல்லிவிட்டு நிமிர்ந்து கணவனின் முகத்தைப் பார்த்தவள், “எனக்கு நீங்க வேணும், என் பக்கத்தில வேணுங்க..” சொல்லிவிட்டு கதறி அழுதவளை என்ன சொல்லி தேற்றுவது என்று நந்தாவுக்குத் தெரியவில்லை. மனைவியுடன் சேர்ந்து அவனும் அழுதான்.
அப்போதைக்கு அவர்கள் இருவரும் சமாதனம் ஆனாலும், இதுவே அவர்களுக்குள் ஏற்படப் போகும் விரிசலுக்கு முதல் படியாக அமைந்தது.
என்னதான் ஏதாவது ஒரு சில நேரங்களில் சண்டைப் போட்டாலும், கணவன் மனைவி உறவு என்பது, ஒரு வகை அன்புச்சிறை தானே! எத்தனை நாள் கோபித்துக்கொள்ள முடியும்.
எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும் கணவன் தன் அருகில் இல்லையென்றாலும், அவனின் வேலையின் பளுவை உணர்ந்து, சமாதானமாகப் போன மாதுரி, மீண்டும் மீண்டும் கணவனைக் காதலிக்க ஆரம்பித்தாள்.
ஆனால் நந்தாவின் மனதில் தான், ஆழமாகத் தங்கிவிட்டது அவர்களுக்கிடையான சின்னச் சின்னச் சண்டைகள் எல்லாம்.
அது அவனைப் பிற்காலத்தில் வேறு ஒரு பாதைக்கு அழைத்துச் செல்ல காரணமாக அமைந்தது.