அத்தியாயம் 14
“அமைச்சர் நரசிம்மன் வாழ்க! அமைச்சர் நரசிம்மன் வாழ்க!”
தொண்டர்கள் கோஷமிட, அனைவருக்கும் தன் வணக்தை தெரிவித்தப்படி காரில் இருந்து இறங்கினார் நரசிம்மன்.
நிமிர்ந்து பார்த்தார். அந்தப் பலநூறு வருட தலைமை செயலகக் கட்டிடம் கம்பீரமாக நின்றிருந்தது. வெள்ளைக்காரன் காலத்தில் அவனின் சென்னை ராணுவ படையின் அலுவகமாகச் செயல்பட்டது. தற்பொழுது இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது அந்தக் கட்டிடம். அதில் தான் தமிழகச் சட்டமன்றம், முதலமைச்சர், அமைச்சர்களின் அலுவகம் என அரசின் அத்துனை துறைகளின் தலைமையகமும் செயல்படுகிறது.
“அண்ணே!” சத்தம் கேட்டு திரும்பி பார்த்தார். மாலைகளுடன் தொண்டர்கள் சூழ்ந்திருந்தனர்.
தலையைச் சற்றுக் குனிந்தார். “அமைச்சர் நரசிம்மன் வாழ்க!” மீண்டும் கோஷங்கள் காதை கிழிக்க, வரிசையாக வந்து அனைவரும் மாலைகளைப் போட்டுச் சென்றனர்.
கழுத்து நிரம்பி, தலை வரை மறைத்துவிட்ட மாலைகளில் இருந்து வரும் பூ வாசம் ஒரு பக்கம், வாழ்க கோஷத்தின் ரீங்காரம் ஒரு பக்கமென, இரண்டும் சேர்ந்து கொண்டு, அவரைப் போதையில் ஆழ்த்தியது.
‘அமைச்சர், இந்தக் கோஷத்தை காது குளிர கேட்கனும்ன்னு தானே டா இத்தனை வருஷம் எவன் எவன் காலையோ பிடிச்சிட்டு இருந்தேன்.’ கண்மூடி ரசித்தவர் மனதுக்குள் இவ்வாறு நினைத்துக் கொண்டார்.
அதற்குள் பி.ஏ அழைக்கவும் மாலைகளைக் கழட்டி, உடன் வந்த உதவியாளரிடம் கொடுத்தவர், உள்ளே சென்றார். அந்த நீள வராண்டாவில் நடந்து லிஃப்ட்டை பிடித்து, அமைச்சர்களின் அலுவலக அறைகள் இருந்த தளத்திற்கு வந்தவர், பி.ஏ வழிகாட்ட, அவர் பின்னால் சென்றார்.
‘உள்துறை அமைச்சர், தமிழக அரசு’ என்று பித்தளையில் போர்ட் போட்டிருந்த அந்த அறைக்குள் நுழைந்தார்.
விசாலமான அறை. சுவற்றில் முன்னால் முதல்வர்களின் படங்கள் வரிசையாக இடம் பிடித்திருக்க, அதற்குக் கீழே அந்த மிகப் பெரிய தேக்கு மர மேசை.
டேபிளின் மேல் ஃபைல்கள், கட்சி தலைவரின் சிறிய கண்ணாடி ப்ரேம் போட்ட புகைப்படம், பிளவர் வாஸ் என அனைத்தும் நீட்டாக அடுக்கப்பட்டிருக்க, கண்ணாடியாக இருந்தது அந்த மேசை.
ஏற்கனவே சில முறை இந்த அறைக்கு வந்திருக்கிறார். ஆனால் அத்தனை முறையும், பார்வையாளராக எதிர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். வாழ்கையில் இப்பொழுது தான் முதல் முறையாக, அமைச்சராக, மேசையின் இந்தப் பக்கம் அமர போகிறார்.
இனி ஐந்து வருடம் இந்த அறை தான்! நினைத்தாலே புள் அரித்தது. அறையை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவர், இருக்கைக்கு வந்தார். அதை அப்படியே ஸ்பரிசித்துப் பார்த்தார். தொட்டுப் பார்ப்பதே இத்தனை கம்பீரமாக இருக்கிறதென்றால், உட்கார்ந்தால்?
பி.ஏ நல்ல நேரம் முடிய போகிறது என்று சொல்லவும், ஆசையுடன் இருக்கையில் அமர்ந்தார். அதுவும் தன் வேட்டியை பல முறை தூசி தட்டிய பிறகே!
“சர் இங்க கையெழுத்து போடுங்க!” உதவியாளர் சுட்டிக்காட்டவும், திறந்திருந்த அந்த ஃபைலில் ‘ஒப்பம்’ என்று போட்டிருந்த இடத்திற்குக் கீழே தன் அழகிய கையெழுத்தை போட்டார், தமிழில்.
வே.நரசிம்ம மூர்த்தி!
முடிக்கும் பொழுது அவரின் நினைவு பின்னோக்கி சென்றது.
[the_ad id=”6605″]
எலெக்க்ஷன் கமிஷன் தேர்தல் என்று அறிவித்ததுமே, நரசிம்மனின் கட்சி தலைவர் அனைவரையும் கூப்பிட்டுச் சொல்லிவிட்டார்.
“போன தடவை கோட்டை விட்டுடோம். இந்தத் தடவை என்ன செய்வீங்களோ தெரியாது. நம்ம கட்சி ஆட்சில உக்காரணும்.”
அவரின் முகத்தில் தெரிந்த ரௌத்திரம் மற்றும் உறுதி, உறுப்பினர்களைக் கதிகலங்க செய்ய, தீயாக வேலை செய்தனர் கட்சி உறுப்பினர்கள், முன்னால் எம்.ஏக்கள் அனைவரும்.
‘என்ன செய்வீங்களோ தெரியாது’ என்று அவர் சொன்னது போலவே என்னென்னவோ தகுடுதத்தம் செய்தார்கள். முடிவில் நரசிம்மனின் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியது.
ஆட்சியைப் பிடிக்க நடந்த போராட்டம் முடிந்ததும், அடுத்து அமைச்சர் இருக்கையைப் பிடிக்கப் போராட்டம் ஆரம்பித்தது.
தேர்தல் நடக்கும்பொழுதே, கட்சியின் முக்கியப் புள்ளிகளைத் தன் பக்கம் கூட்டு சேர்த்து வைத்திருந்தார் நரசிம்மன். இது தலைவருக்குக் கூடத் தெரியாது.
தற்பொழுது அந்தப் பலத்தைப் பயன்படுத்தி, முதல்வர் இருக்கை தனக்கு வேண்டும் இல்லையென்றால் கட்சியை ரெண்டாக உடைத்து விடுவேன் என்று திடீரென மிரட்டல் விடுத்தார் நரசிம்மன்.
முதல்வர் பதவியை எப்படித் தலைவர் விட்டுக் கொடுப்பார். ஆகையால் இரண்டு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட, முடிவில் மூத்த உறுப்பினர்கள் தான் அனைவரையும் சமாதனம் செய்தனர்.
“சரி விடுப்பா! கட்சி தலைவர் தானே எப்போவும் முதல்வர் போஸ்ட்ல உட்கார முடியும். இல்லனா கட்சிகாரங்களே தலைவரை மதிக்க மாட்டனுங்களே!” அவர்கள் இவ்வாறு சொல்ல,
எல்லோரின் அழுத்தத்தால், சற்றே இறங்கி வந்த நரசிம்மன், முதல்வர் பதவிக்கு இணையான உள்துறை அமைச்சர் பதவியைக் கேட்டார். இம்முறை அவர் எந்தச் சமாதானத்திற்கும் மனமிறங்கவில்லை.
காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உள்துறையைப் பொதுவாக முதல்வர்களே தங்கள் கட்டுப்பாட்டில் கூடுதல் துறையாகப் பார்த்துக் கொள்வார்கள். நரசிம்மனின் கட்சி தலைவரும் அவ்வாறு தான் நினைத்திருந்தார். ஆனால் இப்பொழுது கட்சி உடைந்துவிடும் அபாயம் இருப்பதால், வேறு வழியில்லாமல் நரசிம்மனுக்கு உள்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டது.
நினைத்ததைச் சாதித்துவிட்ட இறுமாப்போடு, கையெழுத்தை அவர் போட்டு முடிக்க, ஃபைலை எடுத்துக்கொண்டு அதிகாரி அங்கிருந்து நகர்ந்தார்.
“அண்ணே சும்மா சிங்கம்கனக்கா இருக்கீங்கண்ண!” அவரின் அல்லக்கை சொல்லவும், இன்னும் சிலரும் அவருக்கு ஒத்து ஊதினர்.
அனைவரின் பாராட்டைக் கேட்டதும், இருக்கையில் இன்னும் நிமிர்ந்து உட்கார்ந்தார் நரசிம்ம மூர்த்தி.
[the_ad id=”6605″]
அம்பரீஷின் வீடு சீரியல் பல்புகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காரணம், அன்று அவரின் செல்ல பேத்தியின் முதலாம் வருட பிறந்தநாள். குடும்பத்தின் முதல் வாரிசு என்பதால், பிறந்தநாள் விழாவை தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தார்.
காலையே தாய் வீட்டிற்குக் கிளம்பி வந்திருந்தாள் மாதுரி. நந்தா மாலை விழாவுக்கு வருவதாகச் சொல்லி இருந்தான். அவர்கள் இருவரின் திருமண வாழ்க்கை மேடும் பள்ளமுமாகத் தான் சென்று கொண்டிருந்தது.
இரவு கேக் கட் செய்யும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதோ அதற்கான ஏற்பாடுகள் நடந்து முடிந்திருக்க, விருந்தினர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்திருந்தனர். இன்னும் நந்தா தான் வரவில்லை.
சிவப்பு நிற லேஸ் ஃபிராக்கில், தலையில் துணி பட்டையில் கல் பதக்கம் பதித்திருக்க, காதில், கழுத்தில், கையில் வைர நகைகளுடன் சைனா பொம்மை போல இருந்தாள், தனிஷ்கா!
மகளின் ஆடை நிறத்திற்குப் பொருத்தமாக, லைட் சிவப்பு நிற ஷிப்பான் புடவையில், அதற்கேற்ற நகை அலங்காரத்துடன் காட்சி அளித்தாள் மாதுரி. ஆனால் உடல் தான், திருமணத்திற்கு முன்பிருந்ததை விட, சற்றே பூசி இருந்தது. எல்லாம் மகள் பிறந்த மகிழ்ச்சியில்!
வந்திருந்த விருந்தினர்களில் அம்பரீஷின் தொழில் நண்பர்கள் தான் அதிகம். அனைவரும் வெகு நேரம் காத்திருக்க, நந்தா இன்னும் வராததால் கேக் வெட்டப்படாமல் இருந்தது.
அனைவரும் எவ்வளவு நேரம் தான் காத்திருப்பார்கள்? அவர்களுக்கும் பல இடங்களில் பல வேலைகள் இருக்குமே!
என்ன செய்ய என்று குடும்பத்தார் கையைப் பிசைந்திருக்க, அம்பரீஷின் நண்பர் ஒருவர் அவர் அருகில் வந்து, “என்ன அம்பரீஷ் ஜி? இன்னும் கேக் வெட்டலையா? நேரம் ஆகிட்டே இருக்கு. நாங்க எல்லாம் வந்து ரொம்ப நேரம் ஆச்சு!” என்று அவர் காதை கடிக்க,
“இதோ ஒரு பத்து நிமிஷம்!” தர்மசங்கடமாகப் பதில் சொன்னவர், நேரே மகளிடம் சென்றார்.
“என்ன பப்பு மாப்பிளை எப்போ வருவாரு?”
“இதோ வந்துடறேன்னு சொன்னாரு பப்பா!”
“இதைத் தான் ரொம்ப நேரமா சொல்லிட்டே இருக்க. எல்லாரும் வெயிட் பண்றாங்க பப்பு!”
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றிருந்தாள் மாதுரி. அவளும் தான் என்ன செய்வாள்?! ஐந்து நிமிடத்திற்கு முன்பு தான் கணவனை ஃபோனில் தொடர்புகொள்ள முயற்சித்தாள். ஆனால் கால் எடுக்கப்படாமலே இருந்தது. மீண்டும் மீண்டும் முயற்சித்தும், பதில் இல்லை.
“ஒரு பத்து நிமிஷம் பாப்போம் ங்க.” ராஜேஸ்வரி சொல்ல பதில் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டார் அம்பரீஷ்.
அவர் சொன்ன பத்து நிமிடத்தையும் தாண்டி, இருபது நிமிடம் ஆகிவிட, வேறு வழியில்லாமல் நந்தா வருவதற்கு முன்பே பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்டுவிட்டது.
பேத்தியை தன் கைகளில் வைத்துக்கொண்டு, அம்பரீஷே கேக்கை வெட்டினார். மற்றவர்களுக்காக முகத்தைப் புன்னகையோடு வைத்திருந்தாலும், கணவனைத் தான் தேடியது மாதுரியின் கண்கள்.
விழா முடிந்து தோட்டத்தில் விருந்து நடந்து கொண்டிருக்க, தந்தையின் வற்புறுத்தலில் அனைவருடனும் அமர்ந்து இரவு உணவை முடித்தாள் மாதுரி.
அதன் பின்பே வந்து சேர்ந்தான் நந்தா.
“நீங்க கிளம்புங்க. நாளைக்குக் காலையில குவார்டர்ஸ் வந்திடுங்க.” சொல்லிவிட்டு டிரைவரை காருடன் அனுப்பி வைத்தவன், எல்லோரும் காத்திருப்பார்கள் என்பதால், விறுவிறுவென்று மாமனாரின் வீட்டிற்குள் நுழைந்தான்.
ஹாலில் யாரையும் காணவில்லை. தோட்டத்தில் அனைவரும் உணவருந்தி கொண்டிருந்தனர். மனைவியும் குழந்தையும் எங்கே என்று அவன் கண்கள் தேடியது.
அதோ, தோட்டத்திற்குப் போகும் வழியில் ஹாலின் பக்கவாட்டில் இருந்த சோஃபாவில் அமர்ந்து தாயுடன் பேசிக்கொண்டு இருந்தாள் அவனின் மனைவி.
‘என்ன இங்க உட்கார்ந்துட்டு இருக்கா? எல்லாரும் சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க போலாவே?! ஃபங்க்ஷன் முடிஞ்சிடுச்சா என்ன?!’ ஒருவித குழப்பத்தோடு மனைவியை நோக்கிச் சென்றான்.
கணவனைப் பார்த்ததும் எழுந்த மாதுரி, “வாங்க! ஏன் இவ்ளோ நேரம்?!” என்று கேட்க,
“கேக் வெட்டியாச்சா?!” கேட்கும்போதே, அவனின் முகத்தில் கோபத்தின் ரேகை தெரிந்தது.
“அது….அது ரொம்ப டைம் ஆச்சுன்னு அப்பா தான்…” அவள் தயக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, இடைபுகுந்த ராஜேஸ்வரி, “மன்னிக்கணும் மாப்பிளை. எல்லாரும் ரொம்ப நேரமா காத்திட்டு இருந்தாங்க. எல்லாரையும் எவ்வளவு நேரம் காத்திருக்க வைக்க முடியும், அதான் கேக் வெட்ட வேண்டியதா போச்சு.” கையைப் பிசைந்தவாறு பதில் சொன்னார்.
நந்தா பதில் சொல்லவில்லை. மனைவியின் கையில் இருந்த குழந்தையை வாங்கியவன், “வா வீட்டுக்கு கிளம்புவோம்!” என்று அழுத்தத்துடன் சொன்னான்.
“மாப்பிளை! தயவு செஞ்சு கோபப்படாதீங்க. நிலைமை அப்படி. இப்போ எல்லாரும் உங்களைத் தான் எதிர்பார்த்திட்டு இருப்பாங்க. இப்படிச் சொல்லாம கிளம்பி போனா எப்படி?”
“கோபமெல்லாம் இல்லை அத்தை. நேரம் ஆகிடுச்சு. பாப்பாக்குத் தூக்கம் வந்திடும் அதான் என் வீட்டுக்கு கிளம்புறேன்.” கோபத்தை அடக்கியபடி சொன்னான்.
“சாப்பிட்டு போங்க மாப்பிளை! அவர் உங்களைக் கேட்டுட்டு இருந்தாரு.”
“இல்ல அத்தை வீட்டுல போய் நாங்க ரெண்டு பெறும் சாப்பிட்டுக்குறோம்.”
“மாதுரி சாப்டிட்டா மாப்பிளை. நீங்களும் சாப்பிடுங்க..”
மாமியார் சொன்னதும் மனைவியைத் திரும்பி முறைத்தான். அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
[the_ad id=”6605″]
“அவ மேல தப்பு இல்லை மாப்பிள்ளை. தாய்பால் கொடுக்கிற உடம்பு. ரொம்ப நேரம் சாப்பிடாம இருக்கக்கூடாது. மதியமே அவ சரியா சாப்பிடல. நான் தான் அவளைக் கட்டாயப்படுத்திச் சாப்பிட சொன்னேன்.” சமாதனம் செய்தார் ராஜேஸ்வரி.
அந்த நேரம் அம்பரீஷும் சித்தார்த்தும் அங்கு வர, அப்போதைக்குத் தன் கோபத்தை மறைத்துக் கொண்டான் நந்தா.
“மாப்பிளை வாங்க வாங்க!” சிரிப்புடன் மருமகனை வரவேற்றார் அம்பரீஷ். ஒன்றும் நடக்காதது போலப் பதிலுக்குப் புன்னகைத்தான் நந்தா.
ராஜேஷ்வரியோ, “எல்லாரும் சாப்பிட வாங்க. நான் போய் எடுத்து வைக்கிறேன்.” அம்பரீஷ் இருக்கும்பொழுது நந்தா ஒன்றும் மறுத்து கூற மாட்டான் என்ற தைரியத்தில் அவனைச் சாப்பிட வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லிவிட்டு விறுவிறுவென்று தோட்டத்தை நோக்கி ஓடினார்.
“ஆமாம் மாப்பிளை! வாங்க சாப்பிடுவோம். உங்களுக்குத் தான் எல்லாரும் காத்திட்டு இருக்கோம்.” நந்தாவின் தோளில் கைவைத்து விருந்து நடக்கும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
மாதுரியும் இது தான் சாக்கென்று குழந்தையை அவன் கையில் இருந்து வாங்கிக் கொண்டு, அவனைச் சாப்பிட போகச் சொன்னாள்.
அருகில் யாரும் இல்லாததால் மனைவியின் புறம் குனிந்தவன், “உன்கூட நான் இல்லேன்றதுக்காக, என்னைப் பழி வாங்குறியா?” என்றான் கர்ஜனையாக. அதிர்ந்து போய் நிமிர்ந்து கணவனைப் பார்த்தாள் மாதுரி.
அதற்குள் அவர்கள் அருகில் வந்துவிட்ட ராஜேஸ்வரி, மகளின் முகத்தில் தெரிந்த கலவரத்தை பார்த்துவிட்டு ஓர் அளவுக்கு விஷயத்தை ஊகித்தவர், நிலைமையை மாற்றும் பொருட்டு, நந்தாவை உணவருந்த அழைத்துச் சென்று விட்டார்.