வேண்டா வெறுப்பாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் நந்தா. மேஜையின் எதிரில் அம்பரீஷும், சித்தார்த்தும் சாப்பிட்டபடி தொழில் சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.
புதுப் புது ப்ரேன்ட் பெயர்களில், லேட்டஸ்ட் தொழில்நுட்பத்துடன் புதுப் புது நகை கடைகள் பல முளைத்திருக்க, அம்பரீஷின் தொழில் சற்றே தடுமாறிக் கொண்டிருந்த காலம் அது. அது சம்பந்தமாகத் தான் தகப்பனும், மகனும் பேசிக் கொண்டிருந்தனர்.
“அந்த லால்ஜி ஃபோன் பேசினார் பாபுஜி. வழக்கமா கொடுக்கிற அமௌன்ட்டை விடக் கம்மியா தான் கொடுத்திருக்கோம். மீதி எப்போ வரும்னு கேட்டார்.”
“போன தடவை அவர்கிட்ட வாங்குன சரக்கு இன்னுமே விக்கல சித்து. இந்த வருஷம் பிசினெஸ் டல்.”
“அதுக்குத் தான் நான் சொல்லிக்கிட்டே இருக்கேன், ட்ரெஸ் கடையை வித்திடுங்க. அதை எடுத்து நகை கடையில போடுங்கன்னு. நீங்க கேக்குறது இல்லை பாபுஜி.”
“அப்படி எல்லாம் செய்யக்கூடாது சித்து. அதோட வேலியு என்னன்னு தெரியுமா?! அவனவன் ரங்கநாதன் ஸ்ட்ரீட்ல ஒரு சின்ன இடம் கிடைக்குமான்னு நாயா பேயா அலைஞ்சிட்டு இருக்கான். மாப்பிள்ளை இங்கயே பிறந்து வளர்ந்தவர். அவர் கிட்ட கூடக் கேட்டுப்பாரு, அந்தத் தெருவோட வேலியு என்னன்னு.” நந்தாவை அவர் கேட்க, அவனுன் பதில் சொன்னான்.
“ஆமாம் சித்தார்த். மாமா சொல்றது சரி. அந்த ஏரியால இடம் கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம். இப்போ இருக்கிறதை வித்தோம்னா, அப்புறம் பத்து மடங்கு பணத்தைக் கொடுத்தாலும் ஒரு அரை அடி இடத்தைக் கூட வாங்க முடியாது. அந்த இடத்துக்குப் போட்டி அதிகம்.”
“பிசினெஸ் பத்தி உங்களுக்குத் தெரியாது நந்தா! புதைகுழி மாதிரி, உள்ள இழுத்திடும். ஆரம்பத்திலேயே தப்பிச்சிடனும்.”
“தப்பிக்கணும் தான் சித்தார்த். இல்லைன்னு சொல்லல. ஆனா அதுக்காகப் போட்டிருக்கிற டிரெஸ்ஸை கழட்டி என்ன பிரயோஜனும். ஏதாவது மரக்கிளைய பிடிச்சு தான் தப்பிக்கனும். என்னோட அனுபவத்தில சொல்றேன். இப்போதைக்கு லோன் வாங்கிச் சமாளிப்போம். ஆடி மாசம், அக்க்ஷயதிரிதி, தீபாவளின்னு ஹாலிடே வந்தா, கொஞ்சம் கொஞ்சம் மீட்டுக்கலாம்.”
“சரியா சொன்னீங்க மாப்பிளை!” நந்தாவை பாராட்டிய அம்பரீஷ், மகன் பக்கம் திரும்பி, “பாரு! மாப்பிளை எவ்வளவு பொறுப்பா பேசுறாரு. நீ என்னடான்னா, இருக்கிறதை விக்குறதுலையே குறியா இருக்க.” கண்டிப்புடன் முடித்தார்.
நேற்று வந்த நந்தாவின் முன்பு, அதுவும் மிடில் கிளாசை சேர்ந்தவனின் முன்பு, பரம்பரை பரம்பரையாக வைர வியாபாரம் செய்யும் வம்சத்தில் வந்த தன்னை, தன் தந்தையை மட்டம் தட்டி பேசவும், சித்தார்த்துக்குச் சுர்ரென்று இருந்தது. தந்தை மேல் அவனுக்கு உண்டான கோபம், மச்சானின் பக்கம் திரும்பியது.
“மிடில் கிளாஸ்ல பிறந்த உங்களுக்கு என்ன தெரியும் நந்தா, வைர வியாபாரத்தைப் பத்தி? ஏதோ வீட்டு லோன், பைக் லோன், கார் லோன்னு நினைச்சுட்டு பேசுறீங்க. உங்க வாழ்க்கை முழுசும் உழைச்சாலும் சம்பாதிக்க முடியாத பணத்தைக் கடனா வாங்க வேண்டி இருக்கும். இப்போ வாங்கிட்டு அப்புறம் அதை எப்போ அடைக்க?” தந்தையைப் பேச முடியாது என்ற எரிச்சலில் நந்தாவிடம் பொரிந்து தள்ளி விட்டான்.
ஏற்கனவே நந்தாவை அவனுக்குப் பிடிக்காது. இப்பொழுது இந்தச் சந்தர்ப்பத்தில் அந்தக் கோபமும் அவன் வார்த்தைகளில் வெளிப்பட்டது.
[the_ad id=”6605″]
“சித்து! என்ன பேசுற நீ? அவர் நம்ம நல்லதுக்குத் தானே சொல்றார். அவர் ஒரு ஐ.ஏ.எஸ் ஆஃபீசர். அவருக்கு நிர்வாகத்தைப் பத்தி தெரியாதா?” அம்பரீஷ் மகனை கண்டித்துக் கொண்டிருக்கும் பொழுதே, சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டிலேயே கையைக் கழுவிவிட்டு பட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து சென்றுவிட்டான் நந்தா.
ஏற்கனவே, தான் வருவதற்கு முன்பே பிறந்தநாள் விழா முடிந்துவிட்டதே என்ற கோபத்தில் இருந்தவனுக்கு, சித்தார்த்தின் பேச்சு, எரியும் தீயில் எண்ணையை ஊற்றியது போல இருந்தது. அந்தக் கோபத்தின் வெளிப்பாடாக அமைந்தது அவனின் செயல்.
நந்தா எழுந்து சென்றதும், மகனை முறைத்த அம்பரீஷ், உடனே தானும் எழுந்து மருமகனை தேடிச் சென்றார்.
சாப்பாடு மேஜையில் இருந்து வந்த நந்தா மாதுரியை தேட, அவளோ ராஜேஸ்வரியுடன் பேசிக் கொண்டிருந்தாள். விறுவிறுவென்று மனைவியின் அருகில் சென்றவன், அவள் மடியில் தூங்கி கொண்டிருந்த குழந்தையை விருட்டென்று தூக்கிக்கொண்டு, “கிளம்பு! வீட்டுக்கு போவோம்!” சொல்லிவிட்டு நகரப் போனவனின் முன்பு வழிமறித்து நின்றார் அம்பரீஷ்.
“மாப்பிளை! அவன் ஏதோ தெரியாம பேசிட்டான். நீங்க கோவிச்சுக்காதீங்க!” என்றார் தணிவாக.
இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் மாதுரியும் ராஜேஸ்வரியும் குழப்பத்துடன் இருவரையும் பார்த்தனர்.
அம்பரீஷ் சொன்னதும், பார்வையைத் தோட்டத்தின் பக்கம் செலுத்தினான் நந்தா. மன்னிப்பு கேட்க வேண்டிய சித்தார்த்தோ, ஃபோனில் எதையோ பார்த்துவிட்டு சிரித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அந்தக் காட்சியைப் பார்த்ததும், நந்தாவின் ஈகோ தட்டி எழுப்பப்பட, குழந்தையைப் பிடித்திருந்த அவனின் பிடி மேலும் இறுகியது. அதில் விழித்துக்கொண்ட குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்துவிட்டது.
குழந்தையைச் சமாதனம் செய்வதா, கணவனைச் சமாதனம் செய்வதா என்று மாதுரி குழம்பி தவித்துக் கொண்டிருக்க, நந்தாவோ, “நான் ஒரு ஐ.ஏ.எஸ் ஆஃபீசர் மாமா! எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. இப்படி எல்லாம் மட்டம் தட்டி பேசுனா நான் எப்படிப் பொறுத்துக்க முடியும். நான் ஒரு மிடில் கிளாசுன்னு தெரிஞ்சு தானே என்னை மாப்பிளையா ஏத்துக்கிட்டீங்க. இப்போ அதைக் குத்திக்காட்டி பேசுனா?” சுற்றிலும் ஆட்கள் நடமாட்டம் இருப்பதால், கோபத்தை அடக்கியபடி கேட்டான் நந்தா.
படபடவெனப் பேசிய நந்தா, மாதுரி பக்கம் திரும்பி, “உன்னைக் கிளம்புன்னு சொன்னேன்.” என்றான் அடிக்குரலில்.
“மாப்பிளை, இன்னைக்கு இங்க தங்கிட்டு போலாமே!” ராஜேஸ்வரி சொன்னதுக்கு, “வேண்டாம் அத்தை! நாளைக்குச் சீக்கிரம் போகணும். வேலை இருக்கு.” என்று கத்தரித்துப் பதில் சொன்னவன், மனைவியை முறைத்து விட்டு விறுவிறுவென்று முன்னே சென்றுவிட்டான்.
கணவன் போவதை தவிப்புடன் பார்த்த மாதுரி, “நான் கிளம்புறேன் மா.” பெற்றோரை பார்த்துத் தர்சங்கடமாகச் சொல்லிவிட்டு, கிட்டத்தட்ட ஓடாத குறையாக நந்தாவை பின் தொடர்ந்தாள்.
“என்னங்க ஆச்சு?!” மகள் போவதை கவலையுடன் பார்த்துக்கொண்டே, கணவனிடம் விசாரித்தார் ராஜேஸ்வரி. நடந்ததைச் சுருக்கமாகச் சொன்ன அம்பரீஷ், “ஏற்கனவே அவனுக்கு மாப்பிளையைப் பிடிக்கல. இப்போ இதுவும் சேர்ந்திடுச்சு.” சொன்னவரின் முகத்தில் கவலை தெரிந்தது.
கோபித்துக்கொண்டு விறுவிறுவென்று வெளியே வந்த நந்தா, ரோட்டில் போன ஆட்டோவை கைகாட்டி நிறுத்த, மாதுரியும் அவனுடம் ஏறி கொண்டாள்.
கலெக்டர் பங்களாவில் நந்தா இறங்கி கொள்ள, சல்யுட் வைத்து கதவை திறந்த கான்ஸ்டபில் இருவரையும் கேள்வியாகப் பார்த்தார். ஆட்டோ டிரைவரோ, ‘என் ஆட்டோல வந்தது கலெக்டரா!’ என்று வாயை பிளந்தான்.
வேக நடையுடன் தங்கள் அறைக்குள் நுழைந்த நந்தா, முகல் கைகால் கழுவிவிட்டு உடைமாற்ற, ஒரு பக்கம் குழந்தை அழுது கொண்டிருக்க, மறுப்பக்கம் கணவன் வேறு கோபத்தில் இருக்க யாரை பார்ப்பது என்று தவித்துப் போனாள் மாதுரி.
குழந்தையைத் தோளில் போட்டு தட்டியபடி, “என்னங்க! ஏன் இவ்ளோ கோபம்?! என்ன ஆச்சு?!” மெதுவாகக் கேட்டாள்.
அவ்வளவுதான் படபடவெனப் பட்டாசாக வெடித்துவிட்டான் நந்தா!
“எல்லாருக்கும் என்னைப் பார்த்தா இளக்காரமா தெரியுதா? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க எல்லாரும்? உங்க அப்பன் என்னடான்னா, பெத்தவன் நான் வர்றதுக்கு முன்னாடியே கேக்கை வெட்டி கொண்டாடிட்டான். உன் அண்ணன் என்னடான்னா, பத்து பைசாவுக்கு லாய்க்கு இல்லாதவன் மாதிரி என்னைக் கேவலாமா பேசுறான். நீ என்னடான்னா, என் வேலையைப் பத்தி புரிஞ்சிக்காம, உன் கூட நான் இல்லைன்னு என்னைக் குத்தி காட்டி பேசுற?!”
“ப்ளீஸ் கோபப்படாதீங்க! என்ன நடந்துச்சு? பையா என்ன சொன்னாரு?”
“அடிச்சேன்னு வச்சுக்கோ!” இருந்த கோபத்தில் மனைவியை அடிக்க எகிறிக் கொண்டு வந்த நந்தா, பின் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
“துணிக்கடையை விக்கனும்னு சொல்லிட்டு இருந்தானேன்னு அட்வைஸ் பண்ணேன். அது பொறுக்கல உங்க அண்ணனுக்கு. என்னமோ நான் மிடில் க்ளச்சாம். எனக்குப் பிசினெஸ் பத்தி ஒன்னும் தெரியாதாம். நான் வாழ்க்கை ஃபுள்ளா சம்பாதிச்சாலும், அவங்க கடனை அடைக்க முடியாதாம். சொல்றான் உங்க அண்ணன்..” கோபத்தோடு சொன்னவனுக்கு, நடந்து முடிந்த அந்த நொடி தற்பொழுது நினைவுக்கு வர, சித்தார்த் மேல் எழுந்த கோபத்தில், கையில் இருந்த பேன்டை கட்டிலில் விசிறி அடித்தான்.
பின் கோபத்தோடு மனைவியின் பக்கம் திரும்பியவன், “அவ நான் பெத்த பொண்ணு டி. என் பொண்ணுக்கு நான் இல்லாமலே பிறந்தநாள் கொண்டாடுறீங்க? அதையும் நீ பார்த்திட்டு இருந்திருக்க. அவ பிறக்கும்போது நான் இல்லைன்னு இப்போ என்னைப் பழிவாங்குறியா?” சொல்லும்பொழுதே கண்கள் சிவந்துவிட்டது அவனுக்கு.
மாதுரியோ, “ஏங்க இப்படி எல்லாம் பேசுறீங்க? நான் என்ன பண்ணட்டும்? வந்திருக்கிறவங்க எல்லாம் அப்பாவோட பிசினெஸ் ப்ரெண்ட்ஸ். அதுவும் நம்மளை விடப் பெரிய இடம்.”
[the_ad id=”6605″]
“அப்போ நான் சின்ன இடம்ன்னு சொல்றியா?!”
“எது பேசுனாலும் தப்பா எடுத்துகிட்டா எப்படி? அப்பாவை விடப் பெரிய இடம்னு சொன்னேன். உங்களைச் சொல்றதா இருந்தா, அது என்னையும் சொல்றது தானே? என்னைக்குக் கல்யாணம் ஆச்சோ, அன்னைக்கே நானும் உங்க குடும்பம் தாங்க!” கண்ணீர் தேங்கிவிட்டது மாதுரியின் கண்களில்.
“இதுக்குத் தான் சொன்னேன், உங்க வீட்டில பார்டி வேண்டாம். நம்ம வீட்டில சிம்பிளா வச்சுக்கலாம்ன்னு.” குரலில் உஷ்ணம் குறைந்திருந்தது.
“அப்பா கேக்கும்போது நான் எப்படி மறுத்து சொல்ல முடியும். உங்க பொண்ணுக்கு அவரும் தாத்தா தானே!”
“அதான் அப்பன் வேண்டாம். தாத்தா மட்டும் போதும்னு அவரே கேக்கை வெட்டிட்டார் போல!” பட்டென்று அவன் சொல்லிவிட,
“அப்பா வேண்டாம்னா, அம்மாவும் வேண்டாம்ன்னு தான் அர்த்தம். நீங்க இல்லாத இடத்தில நான் எப்படி இருப்பேன். அவ உங்களுக்கும் எனக்கும் பிறந்தவங்க. உங்க ரத்தம் அவ. நீங்க தான் அவளுக்கு முதல்ல வேணும். அப்புறம் தான் மத்தவங்க எல்லாம்.” ஆதங்கத்துடன் சொன்ன மனைவியைத் திரும்பி பார்த்தவன், என்ன நினைத்தானோ, “குழந்தை அழறா. அவளை முதல்ல பாரு!” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று அறையை விட்டு வெளியேறினான்.
சில மாதங்கள் கடந்திருந்தது.
தன் கெஸ்ட் ஹௌசில் அமர்ந்திருந்தார் நரசிம்மன். எதிரில் அவருக்குச் சரக்கை எடுத்து கொடுத்தப்படி அவரின் காலை பிடித்துவிட்டு அமர்ந்திருந்தான் அவரின் அல்லக்கை.
அப்பொழுது ஒருவன் அவர் முன்பு வந்து நின்றான்.
“கூப்பிட்டீங்களா ஐயா!”
“ம்ம்!” போதையில் கர்ஜித்தவர், அவனை எதுக்காக அழைத்தார் என்பதை முழுவதும் கூறினார்.
கேட்டதும் சற்றே தயங்கியவன், “ஐயா! காரியம் ரொம்பப் பெருசு! நம்ம ஆளுங்களால செஞ்சு முடிக்க முடியாது. வெளியூர் காரனுங்களை வச்சு தான் செய்யணும்.”
சற்றே யோசித்தவர், “அப்போ யாரை வச்சு செய்யலாம்?”
“நார்த் இண்டியாகாரனுங்களை வச்சுச் செய்யலாம் ஐயா! போலீஸால கண்டுபிடிக்க முடியாது.”
“உனக்கு அப்படி யாரையாவது தெரியுமா?”
“தெரியும் தலைவரே! புதுக் கோஷ்டி ஒன்னு தொழிலுக்கு வந்திருக்கு. காரியத்தைப் பக்காவா முடிச்சிடுவாங்களாம்.”
“அப்போ, எவ்வளவு செலவானாலும் சரி. சரியான பார்ட்டியை ஏற்பாடு செய்.”
“சரிங்க தலைவரே!” சொல்லிவிட்டு வந்தவன் சென்றுவிட,
[the_ad id=”6605″]
“தலைவரே! அவ்ளோ சீக்கிரத்தில கை வைக்க முடியாது. இடம் பெருசு.” தயங்கி தயங்கி சொன்னான் அல்லக்கை.
பட்டென்று அவனின் பிடியில் இருந்து தன் காலை உருவிக் கொண்டவர், கையில் இருந்த கிளாசை அவன் முகத்துக்கு நேராக விசிறி அடித்தார். நல்லவேளை அவன் சுதாரித்துக்கொண்டு சட்டென்று குனிந்து கொண்டான். க்ளாஸ் பூ தொட்டி மேல் பட்டு சிதறியது.
“ **** **** என்னடா பெரிய இடம் பெரிய இடம்ன்னு….பெரிய ******* அவன்?! என் பையனை அறுத்து போட்டானே, அவனைச் சும்மா விடுவேனா நான்? அப்படி எல்லாம் விட மாட்டேன். இன்னும் என் கண்ணுக்குள்ள நிக்குதுடா என் பையனோட முகம். பச்ச மண்ணு டா அவன்.” சொல்லிவிட்டுப் போதையில் அழுதவர், பின் திடீரென்று ஆக்ரோஷத்துடன், “என் புள்ளையைக் கொன்னு போட்டவனைக் கரு அறுக்காம விட மாட்டேன். அன்னைக்குத் தான் அவனை ஒன்னும் செய்ய முடியாம இருந்தேன், ஆனா இன்னைக்கு எந்தக் கொம்பேறி நாயும் என் காலுக்குக் கீழ தான் டா. என்ன நினைச்சிட்டு இருக்க, இன்னைக்குத் தமிழ்நாடே என் கைக்குள்ள இருக்கு. அவனால ஒரு ******* புடுங்க முடியாது. அவனாவது என் பையனை ஒரு தடவை தான் அறுத்தான் டா. ஆனா நான் அவனைக் கொஞ்சம் கொஞ்சமா அறுப்பேன். துடி துடிக்கச் சாகுற வரைக்கும் அறுப்பேன்.” ஆத்திரத்தில் தன் முன் இருந்த கண்ணாடி மேசையை அடித்து நொறுக்கினார்.
அவர் கண்களில் தெரிந்த வெறி, அவரின் அல்லகையைக் குலை நடுங்க வைத்தது.