அத்தியாயம் 15
அந்த இருட்டான தெருவில், ஒருவனைப் பின்தொடர்ந்து சென்றான் ரங்கன். நரசிம்மன் ஏற்பாடு செய்த ஆள்.
நரசிம்மன் அன்று கெஸ்ட் ஹௌஸில் வைத்து தன் திட்டத்தைச் சொன்னதும், தனக்குத் தெரிந்த ஆள் மூலம், அந்தப் புதிய கொள்ளை கூட்டதைச் சேர்ந்த நபரை தொடர்பு கொண்டான். அவனோ தலைவனிடம் வந்து பேச சொல்லிவிட, இதோ அவனிடம் பேசத்தான் சென்று கொண்டிருக்கிறான் ரங்கன்.
சென்னையில் இது எந்த இடம் என்றே தெரியவில்லை, அந்த அளவுக்குக் குப்பையும் சாக்கடையுமாகக் காட்சி அளித்தது. ‘நாப்பது வருஷமா சென்னையில இருக்கேன். எனக்கே இந்த இடம் எங்க இருக்குன்னு தெரியலையே?! இப்படி ஒரு இடம் யாருக்கும் தெரியக் கூடாதுன்னு தான் கண்ணைக் கட்டி கூட்டிட்டு வந்தானுங்களா?!’ மனதுக்குள் நினைத்தபடி அந்த ஆளை பின்தொடர்ந்து சென்றான்.
சற்றுத் தூரம் சென்றதும், அதோ அந்தப் பாழடைந்த கட்டிடத்திற்கு உள்ளே சென்றான். உள்ளே தன் ஆட்களிடம் பேசிக் கொண்டிருந்த அவன், பங்கஜ் குமார் திரும்பி பார்த்தான்.
பங்கஜ், அந்தக் கொள்ளை கூட்டத்தின் தலைவன்.
அவன் பிறந்து வளர்ந்த ஊரில் சரியான கட்டமைப்பு, வேலைவாய்ப்பு இல்லாததால் தமிழ்நாட்டிற்குக் கூலி வேலைக்கு வந்தவனின் கண்களில் விழுந்தது, இங்குள்ள மக்களின் செல்வச் செழிப்பு.
திருமணம், பிறந்தநாள் விழா, என எந்த விழா என்றாலும், நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு செல்லும் பெண்கள், அடித்தட்டு மக்கள் முதல், பணம் படைத்தவர்கள் வரை, மொபைலில் இருந்து கார் வரை ஆடம்பர பொருட்களை வைத்திருக்கும் அளவுக்குப் பணப் புழக்கம் அதிகம் உள்ள மக்கள் என, எங்குத் திரும்பினாலும் செல்வம் குவிந்து கிடக்க, அவனின் மனம் சபலம் கொண்டது. விளைவு, பகலில் கூலி வேலை, இருட்டில் கொள்ளை வேலை!
வந்தவன் ஹிந்தியில் அவனிடம் ஏதோ சொன்னான்.
“இந்த ஆள் உங்ககிட்ட பேசணுமாம். இடம் பெரிய இடம்.” சொல்லிவிட்டு ரங்கனை கை காட்டினான்.
“எங்க இருந்து வரீங்க?” தமிழ் நன்றாகவே வந்தது பங்கஜின் வாயில்.
பதில் சொன்னான் ரங்கன்.
‘பெரிய இடம் தான்!’ மனதுக்குள் நினைத்துக் கொண்டான் பங்கஜ்.
“காரியம் என்ன?”
“அது சம்பந்தமா உங்ககிட்ட எங்க ஐயா பேசுவார்.” சொல்லிவிட்டு, நரசிம்மனுக்கு ஃபோன் போட்டான் ரங்கன்.
“ஹலோ!”
“ஐயா, நான் அந்த இடத்துக்கு வந்துட்டேன்.”
“ஆள் எப்படி இருக்கான்?”
உடனே குரலை தாழ்த்திக் கொண்டவன், “ஆள் பார்க்க படு பயங்கரமா இருக்கான்யா. சொன்னதைச் செஞ்சு காட்டிடுவான் போல. கூட நிறைய ஆள் வச்சுருக்கான்.”
“சரி! சரி! ஃபோனை அவன்கிட்ட கொடு.”
“சரிங்க ஐயா!” சொல்லிவிட்டு மொபைலை பங்கஜிடம் நீட்டினான்.
“ஐயா லைன்ல இருக்கார்.”
வாங்கிப் பேசினான் பங்கஜ்.
“சொல்லுங்க ஜி!”
“ஒரு நகை கடையைக் கொள்ளை அடிக்கணும்.”
கேட்டதும், கண்கள் மின்னியது அவனுக்கு.
“கடை பேரு?!”
“மேத்தா ஜுவலர்ஸ்.”
“பெரிய கடை ஆச்சே! நிறையத் தேறும். அவ்வளவும் சுத்தமான வைரம்.” படபடவென வந்தது வார்த்தைகள்.
“அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. நான் சொன்னது நடக்கணும். உன்னால முடியும்னா சொல்லு?”
‘ஏதோ பழிவாங்குற படலம் போல’ நினைத்துக் கொண்டான் பங்கஜ்.
“இந்தப் பங்கஜ் எந்தக் காரியத்தையும் முடிக்காம விட்டதில்லை. என்கிட்டே சொல்லிட்டீங்கள்ள காரியம் முடிஞ்சதுன்னு வச்சுக்கோங்க ஜி. ஆனா எனக்கான ஷேர்?”
அந்தப்பக்கம் பலமாகச் சிரித்தார் நரசிம்மன். “ஷேரா, எனக்கு அதுல ஒரு பொட்டுத் தங்கம் வேண்டாம். எல்லாத்தையும் நீயே வச்சுக்கோ.”
“ஜி?!! உண்மையாவா?!” ஆனந்த அதிர்ச்சி அடைந்தான் பங்கஜ்.
[the_ad id=”6605″]
“ம்ம். உண்மையாத் தான் சொல்றேன்.”
‘அஹா! லைப்டைம் செட்டில்மென்ட் டா! இந்தக் காரியத்தை எப்படியாவது முடிச்சுட்டு, இந்தத் தொழிலுக்கு முழுக்கு போட்டுட்டு, நம்ம ஊருக்கே போய்டணும்.’ மடமடவெனக் கணக்கு போட்டது பங்கஜ்ஜின் மூளை.
அந்தப்பக்கம் தன் பேச்சை தொடர்ந்தார் நரசிம்மன். “ஆனா திருட்டு போன நகைங்க எக்காரணம் கொண்டும், இங்க திரும்பி வரக்கூடாது. நீயும் போலீஸ்ல மாட்டிக்கக் கூடாது. ரெண்டும் இந்த ஜென்மத்தில நடக்கக் கூடாது, நடந்துது……” கர்ஜித்தார்.
“இல்லை ஜி. நாங்க இதுவரைக்கும் போலீஸ்ல மாட்டிகிட்டது இல்லை. இனியும் நடக்காது. இந்தக் காரியம் முடிஞ்சதும் நாங்க எங்க ஊருக்கு போய்டுவோம். இனி தமிழ்நாட்டுப் பக்கம் தலைவச்சு படுக்க மாட்டோம்.” தீவிரமாகச் சொன்னான் பங்கஜ்.
“நல்லது! உனக்கு எவ்வளவு தொகை வேணுமோ, காரியம் முடிஞ்சதும் வந்து வாங்கிக்கோ.”
“காரியம் நல்லபடியா முடிஞ்சா, உங்க பணம் வேண்டாம் ஜி.”
“ம்ம். காரியத்தை என்னைக்குச் செய்யலாம்ன்னு இருக்க?”
“அடுத்த வாரம் ஜி. ஆனா சில விஷயம் இருக்கு.”
“சொல்லு!”
“கடைல பாதுகாப்புக்கு நிறைய இருக்கும். கதவுல எலக்ட்ரானிக் லாக் மாதிரி ஏதாவது இருக்கும். அது எல்லாம்….?!”
யோசித்தார் நரசிம்மன், பின், “அதைப் பத்தி நீ கவலைப்படாத. போறதுக்கு ரெண்டு நாள் முன்னாடி என் கிட்ட சொல்லு. அதுக்கான ஏற்பாடை நான் செஞ்சுடறேன்.”
“சரிங்க ஜி!”
“சரி ஃபோனை என் ஆள் கிட்ட கொடு.” கொடுத்தான் பங்கஜ்.
“சொல்லுங்க ஐயா!”
“எல்லாம் பேசிட்டேன். நீ கிளம்பி பண்ணை வீட்டுக்கு வா.”
“சரிங்க ஐயா!” பங்கஜிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் ரங்கன்.
சில நாட்கள் கடந்திருந்தது.
தன் அறையில் இருந்த அம்பரீஷை சந்திக்க வந்தான், அவர் கடையின் பாதுகாப்பு சம்பந்தமான டெக்னிகல் பொறுப்பைப் பார்க்கும் வெங்கட்.
“சார்!”
“சொல்லுங்க வெங்கட், என்ன விஷயம்?”
“சார், நம்ம சாப்ட்வேர்ல ஏதோ ப்ராப்ளம் ஆகிடுச்சு. செக்கியுரிட்டி ஃபீச்சர்ஸ் எதுவும் வேலை பார்க்க மாட்டேங்குது.”
“ஏன் என்ன ஆச்சு?”
“தெரியல சர். ஒரு வேலை ஹேங் ஆகி இருக்கலாம், இல்லனா யாராவது ஹேக் செஞ்சிருக்கலாம். இனி தான் பார்க்கணும்.”
“ஓஹ்!” கவலையுடன் சொன்னார் அம்பரீஷ்.
“எப்போ சரி ஆகும்?”
“ரெண்டு மூணு நாள் ஆகும் சர்.”
“வேற எதுவும் தற்காலிகமா, ஏதாவது பாஸ்வோர்ட் போட்டு லாக் எதுவும் செய்ய முடியாதா?”
“செய்யலாம் சர். ஆனா, உங்க மொபைலுக்கு எஸ்எம்எஸ் வராது. கடைய லாக் செஞ்சுக்கலாம்.”
சில நிமிடங்கள் யோசித்தார் அம்பாரீஷ், “சரி, அதையே இப்போதைக்குப் போடுங்க. நான் செக்கியுரிட்டி செர்வீஸ் யார் கிட்டையாவது ரெண்டு நாளைக்கு ஆள் ஏற்பாடு செஞ்சுக்கிறேன்.”
“ஒகே சர். நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன் சர். நம்ம சாப்ட்வேர் சம்பந்தமா ஒரு வேலை இருக்கு.’
“சரி, சீக்கிரம் பண்ணுங்க.”
“சரி சார்!” சொல்லிவிட்டு கடையை விட்டு வெளியேறியவன், சிறிது தூரம் சென்றதும், தன் ஃபோனை எடுத்து நரசிம்மனின் அல்லைக்கையைத் தொடர்பு கொண்டான்.
“சொல்லு காரியம் என்ன ஆச்சு?”
“செஞ்சு முடிச்சிட்டேன் சர். இப்போதைக்கு வேற ஒரு லாக் போட சொல்லி இருக்கார். அதோட பாஸ்வோர்ட் உங்களுக்கு நான் அனுப்பிடறேன். அத்தோட ஏதோ ப்ரைவேட் செக்கியுரிட்டு ஏற்பாடு செய்யப்போறதா சொல்லி இருந்தார்.”
“ஓஹ்?! சரி அது எந்த ஏஜென்ட்ன்னு விவரம் தெரிஞ்சா, மெசேஜ் பண்ணு.”
“சரிங்க.” சொல்லிவிட்டு வைத்தவன், ஒருதரம் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தன் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
[the_ad id=”6605″]
சொன்னபடி அன்று நள்ளிரவு, தன் ஆட்களுடன் வந்தான் பங்கஜ் குமார். கடையின் முன்பக்கம் ஒருவன் பின்பக்கம் ஒருவன் எனத் தனியார் பாதுகாப்பு ஏஜெண்டை சேர்ந்த இருவர் துப்பாக்கியுடன் பாதுகாப்புப் பணியில் இருந்தனர். அவர்களுடன் எப்பொழுதும் பாதுக்காப்பில் இருக்கும் வழக்கமான் காவலர்கள் நால்வர்.
கட்டிடத்தின் அருகில் வந்ததும் தன் ஆட்களுக்குச் சமிக்ஜை கொடுத்தான் பங்கஜ். அடுத்தச் சில நொடிகளில், பக்கத்து கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருத்த பங்கஜின் ஆள், சைலென்சர் துப்பாக்கியால் பாதுகாப்புப் பணியில் இருந்த அனைவரையும் சுட்டுத்தள்ள, ரத்த வெள்ளத்தில் இறந்து போனார்கள் அவர்கள்
அதன்பின், தங்களிடம் இருந்த டூப்ளிகேட் சாவியைக் கொண்டு கடையின் ஷட்டரை திறந்தவர்கள், அடுத்து வெங்கட் கொடுத்த பாஸ்வோர்டை வைத்து கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர்.
சில நிமிடங்களில் சத்தமில்லாமல் கடைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டது கொள்ளை கும்பல்.
Cctv கேமெர இருந்தாலாவது பரவாயில்லை ஆளை அடையாளம் கண்டுபிடித்திருக்காலம். ஆனால் வெங்கட் தான் அதற்கும் ஆப்பு வைத்திருந்தானே! சொல்லப் போனால் Cctv இருந்தால் கூடப் பங்கஜ் கவலைப்பட்டிருக்க மாட்டான், அவன் தான் இனி இந்தப்பக்கம் வர போவது இல்லையே! இருந்தும் எதற்கு ரிஸ்க் என்று, தக்க முன் ஏற்பாடுகளுடன் முகத்தை முற்றிலும் மறைக்கும் மாஸ்க்குடன் வந்திருந்தது அவனின் கும்பல்.
தளத்திற்கு இரண்டு பேர் என, மடமவெனக் காரியத்தில் இறங்கினர். கண்ணாடி கதவுகளைச் சத்தமில்லாமல் உடைத்து, செல்ஃபில் இருந்ததைப் பெட்டியோடு அப்படியே தங்கள் கையில் உள்ள சாக்கு பைக்குள் சரித்தனர். ஷோகேஸில் இருந்ததையும் விட்டு வைக்கவில்லை. எல்லாம் அவர்களின் மூட்டை எனும் வயிற்ருகும் ஸ்வாகா ஆனது.
அவ்வளவு தான் சில மணி நேரங்களில் கடையே, காலியானது. ஒரு பொட்டுத் தங்கம் இல்லை. ஒரு கல் வைரம் இல்லை. ஏனோ இப்பொழுது தான் புதிதாகக் கட்டிய கட்டிடத்தைப் போல வெறுமையாகக் காட்சி அளித்தது.
அம்பரீஷ் குடும்பத்தின் பல வருட அயராத உழைப்பு, சில மணிநேரங்களில் காணாம போனது.
எல்லாவற்றையும் ஒரு முறை சரி பார்த்துக்கொண்ட பங்கஜ், அடுத்தச் சில நிமிடங்களில் கடையைக் காலி செய்திருந்தான். கூடவே பக்கத்துக் கட்டிடத்தில் இருந்த அவனின் ஆட்களும்.
இரவு முழுவதும் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்ததில், அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார் அம்பரீஷ். திடீரென்று ஃபோன் அடிக்கவும், தூக்கம் கலைந்து கஷ்டப்பட்டு எழுந்து அமர்ந்தவர் பக்கத்தில் திரும்பி பாரக்க, மனைவியைக் காணவில்லை. ‘குளிக்கச் சென்றிருப்பாள்’ நினைத்துக்கொண்டவரின் நினைவை கலைத்தது ஃபோன் அழைப்புமணி. சைட் டேபிளில் இருந்த கண்ணாடியை தேடி எடுத்து போட்டுக்கொண்டவர், மொபைலை எடுத்து திரையைப் பார்த்தார். ‘மேனேஜர்’ என்று காட்டியது.
உடனே திரும்பி சுவற்றில் இருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்தார். காலை எட்டு முப்பது என்று காட்டியது. ‘இவ்ளோ நேரம் தூங்கிட்டேனா!’ நினைத்தவர், ஃபோனை ஆன் செய்து காதில் வைத்தார்.
அந்தப் பக்கம் சொல்லப்பட்ட செய்தியில், தன் உயிரை யாரோ பிடுங்கி எரிந்தது போல உணர்ந்தார்.
“என்ன சொல்றீங்க?! உண்மையாவா?” திக்திக்கென்று அடித்துக்கொண்டது அவரின் இதயம்.
என்ன பதில் வந்ததோ, அவரின் கைகள் நடுங்க ஆரம்பித்தது. “இதோ உடனே வரேன்.” சொல்லிவிட்டு எழுந்தவருக்குத் தலை சுற்றியது. நிற்க முடியாமல் தடுமாறியவர், சட்டென்று கட்டிலை பிடித்துக்கொண்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டார்.
சில நொடிகள் தான். அதற்கு மேல் அவரால் இங்கு இருக்க முடியவில்லை. விறுவிறுவென்று கீழே வந்தவர், வேலைக்காரியிடம், சித்தார்த்தை உடனடியாகக் கடைக்கு வரும்படி சொல்லச் சொல்லிவிட்டு, டிரைவரை கூட அழைக்காமல் காரை எடுத்துக்கொண்டு, கடையை நோக்கி சென்றார். அவரின் பதற்றத்தின் அளவை போலச் சீறிப் பாய்ந்தது அவரின் கார்.
அடுத்தப் பத்து நிமிடத்தில் கடையின் பின்பக்கம் காரை பார்க் செய்தவர், விறுவிறுவென்று கடைக்குள் நுழைந்தார். நுழைந்தவர் அப்படியே ஆணி அடித்தது போல ஸ்தம்பித்து நின்றுவிட்டார். சுற்றிலும் பார்வையை ஒட்டினர். துடைத்து வைத்தது போல, கடையில் ஒரு குண்டுமணி பொருள் கூட இல்லை. தரை முழுவதும் கண்ணாடி சிதறல்கள் பரவி கிடைந்தது. ஷோகேஸ் கண்ணாடி, செல்ஃப் கண்ணாடி என்று அனைத்தும் அடித்து நொறுக்கப்படிருந்தது.
கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தவரின் அருகில் வந்தார் கடை மேனேஜர். “சர், வழக்கம் போலக் கடையைத் திறக்கலாம்ன்னு வந்தேன். பார்த்தா முன்பக்க செக்யூரிட்டி கார்ட் நெத்தில குண்டடிப்பட்டுச் செத்து கிடந்தான்.” அவர் சொல்லவும் திரும்பி வாசலை பார்த்தார் அம்பரீஷ். நேற்று இரவு இவருடன் பேசிக் கொண்டிருந்தவன், வாய் பிளந்து மல்லாக்க கிடந்தான். அவன் முகம் முழுவதும் ஈ வட்டமடித்துக் கொண்டிருந்தது. பதற்றத்தில் வரும்பொழுது அவர் கண்ணில் அக்காட்சி பதியவில்லை. இப்பொழுது தான் பார்க்கிறார்.
மேனேஜர் தொடர்ந்தார், “உடனே, கடையைத் திறந்து பார்த்தேன் சர். உள்ள….உள்ள ஒன்னும் இல்லை. எல்லாத்தையும் கொள்ளை அடிச்சிட்டு போயிருக்காங்க சர். வைரம், தங்கம், ஒன்னுத்தையும் விடல.”
உடனே நியாபகம் வந்தவராக, வைரம் இருந்த தளத்திற்கு ஓடினார் அம்பரீஷ். அவரைப் பின்தொடர்ந்து சென்றார் மேனேஜர். மூச்சு வாங்க படிகளில் ஏறி, தளத்திற்கு வந்தவருக்கு, இதயத்துடிப்பு நின்று போனது போல இருந்தது. கீழே பார்த்த அதே காட்சி. ஒரு சிறு வைர கல்லை கூடக் காணவில்லை.
இதயம் வலிப்பது போல இருந்தது. வலியில் முகம் சுருங்கியது அவருக்கு.
ஏற்கனவே இருந்த தலை சுற்றல் இந்த அதிர்வில் இன்னும் அதிகரிக்க, நிற்க முடியாமல் தள்ளாடி கீழே விழப்போனார். “சர்!!” என்றபடி சட்டென்று அவரைத் தாங்கி பிடித்துக் கொண்டார் மேனேஜர்.
[the_ad id=”6605″]
முஹூம்! அவரால் நிற்க முடியவில்லை. அதற்கான தெம்பு அவர் உடம்பிலும் இல்லை, நெஞ்சிலும் இல்லை. தலையில் கைவைத்தபடி தரையில் பொத்தென்று அமர்ந்துவிட்டார். வயது முதிர்ந்த ஆண், அதுவும் தொழில் சிங்கம் என்பதை எல்லாம் மறந்து, கண்கலங்க ஆரம்பித்தார், அந்த வைர வியாபாரி.
அதே நேரம் விஷயம் கேள்விப்பட்டு அங்கு வந்து சேர்ந்தான் சித்தார்த். அவனுக்குமே, கண் முன் கண்ட காட்சியில், தலையில் இடி விழுந்தது போல இருந்தது. தந்தையைத் தேடி மாடிக்கு ஓடினான்.
வெறுமையாக இருந்த செல்ஃபுகளைக் கண்கலங்க பார்த்தப்படி தரையில் அமர்ந்திருந்தார் அம்பரீஷ். இதுவரை தந்தையை அந்தக் கோளத்தில் பார்த்திராத சித்தார்த், அதிர்ந்து போய் அவர் அருகில் சென்றான்.
“என்னப்பா? இதெல்லாம்?!” கைத்தாங்கலாகத் தந்தையைத் தூக்கி, பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர செய்தவன், மேனேஜர் கொண்டு வந்து கொடுத்த தண்ணீரை அவருக்குப் புகட்டினான். இரண்டு மடக்கு குடித்தவர், அதற்கு மேல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
பின் மேனேஜரிடம் திரும்பி, நடந்ததைக் கேட்டான் சித்தார்த். அவரும் சொன்னார். கேட்கவே பயங்கரமாக இருந்தது. ஸ்னைப்பர்ஸ் எல்லாம் வச்சு, துல்லியமா செஞ்சுருக்காங்க, நினைத்துக் கொண்டான்.
“ஆனா, கதவை எப்படித் திறந்தாங்க? பாஸ்வோர்ட் எப்படித் தெரிஞ்சுது?” தன் சந்தேகத்தைக் கேட்டான்.
“தெரியல சர். ஏதாவது ஹாக்கிங் சாஃப்ட்வேர் பயன்படுத்தி இருக்கலாம். அப்படித் தான் எனக்குத் தோணுது. இப்போ அந்த லாக் கூட வேலை பார்க்க மாட்டேங்குது.”
குழம்பித்தான் போனான் சித்தார்த். ‘மனேஜர் சொல்வதைப் போல ஏதாவது சாஃப்ட்வேர் பயன்படுத்தி இருக்க வேண்டும், இல்லையென்றால் பாஸ்வோர்ட் தெரிந்த ஒருவர் மூலம் இந்தக் குற்றம் நடந்திருக்க வேண்டும். ஆனால், தன்னையும் தந்தையும் தவிர, மேனேஜருக்கும், வெங்கட்டுக்கும் தான் பாஸ்வோர்ட் தெரியும். இருவருமே கடை ஆரம்பத்தில் இருந்து வேலை செய்கிறார்கள். இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டும் அவர்கள் மேல் வந்ததில்லை. அப்படி இருக்கையில் யாரை சந்தேகிப்பது?’
அவன் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும்பொழுதே, “சர், அப்பா!” மனேஜரின் பதற்றமான குரல் கேட்டு நடப்புக்கு வந்தவன், திரும்பி பார்க்க, அம்பரீஷ் நெஞ்சை பிடித்துக்கொண்டு முகம் சுருங்கியபடி சேரில் இருந்து தொப்பென்று கீழே சரிந்தார். தலை நங்கென்று தரையில் மோதியது.
“பாபுஜி!!!” குலை நடுங்கி போனவன், தந்தையை நோக்கி ஓடினான். ஆனால் அவரோ முற்றிலும் மயக்கத்திற்குச் சென்றிருந்தார்.