குழந்தையை அப்பொழுது தான் குளிக்க வைத்துவிட்டு, உடைமாற்றிக் கொண்டிருந்தாள் மாதுரி. ஃபோன் அடித்தது. எடுத்து பேசினாள்.
“ஹலோ! மாதுரி, மாமாவுக்கு ஹார்ட் அட்டாக்காம்.”
“ஐயோ!” அவள் குரலில் நடுக்கம்.
“ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்க. இப்போத்தான் சித்தார்த் ஃபோன் செஞ்சு சொன்னான்.”
“பப்பா, இப்போ எப்படி இருக்காங்க?”
“தெரியல. நீ சீக்கிரம் கிளம்பு. கான்ஸ்டபில் கிட்ட சொல்லிட்டேன். நம்ம காரை எடுத்துட்டு உடனே வா. நானும் அங்க வந்துடறேன்.”
“சரிங்க.” சொல்லிவிட்டு குழந்தைக்குத் தேவையான சிலவற்றை மட்டும் பையில் எடுத்துக்கொண்டு ககீழே வர, நந்தாவின் கார் தயாராக இருந்தது. அவர்களின் சொந்த கார். சில சமயம் நந்தாவின் தாய் வீட்டில் நிற்கும், சில சமயம் இங்கே.
குழந்தையைத் தூக்கிக்கொண்டு மூச்சுவாங்க அந்தப் பிரபல மருத்துவமனைக்குள் நுழைந்தவள், லிஃப்ட் பிடித்து மேல் தளத்திற்கு வர, தூரத்தில் அவளின் அண்ணன் டாக்டரிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்தாள். விறுவிறுவென்று அவனை நோக்கி சென்றாள். அதற்குள் மருத்துவர் நகர்ந்துவிட,
“பய்யா! பப்பா எங்க? அவருக்கு என்ன ஆச்சு?” பதற்றத்துடன் மூச்சு வாங்க கேட்டவளிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டவன், அவளிடம் விஷயத்தைச் சொல்ல, அதிர்ந்து போனாள் மாதுரி. உடனே தந்தையைக் காண அறைக்குள் சென்றாள்.
கட்டிலில் கண் மூடி படுத்திருந்தார் அம்பரீஷ். மருத்துவ உபகரணங்கள் அவரைச் சூழ்ந்திருக்க, அது எதையும் உணர முடியாமல் மயக்கத்தில் இருந்தார். அருகில் அவளின் தாய் ராஜேஸ்வரி, அழுகையுடன் கணவனின் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
[the_ad id=”6605″]
“அம்மா!” மகளின் குரல் கேட்டு திரும்பியவரின் கண்ணீர் உடைப்பெடுக்க, தாயை அணைத்துக் கொண்ட மாதுரி, தாய்க்கு தாயாகி போனாள். சில மணிநேரம் தாயை பார்த்துக் கொண்டவள், பின் அண்ணனிடம் வந்தாள்.
“எப்படிப் பய்யா நடந்துச்சு? செக்யூரிட்டி இருந்தும் எப்படி?” அவளால் தங்கள் நகை கடை கொள்ளை போய்விட்டது என்ற செய்தியை சுத்தமாக ஜீரணிக்க முடியவில்லை.
நடந்ததைச் சுருக்கமாகக் கூறிய சித்தார்த், “மெயின் டோர் உடைக்கப்படாம அப்படியே இருக்குப் பப்பு. நிச்சயம் பாஸ்வோர்ட் தெரிஞ்ச யாரோ தான் செஞ்சுருக்கணும். எனக்கு அப்படித் தான் தோணுது.”
“போலீஸ்ல சொல்லியாச்சா?”
“ம்ம், FIR ஃபைல் செஞ்சாச்சு.”
“பப்பாக்கு இப்போ எப்படி இருக்கு பய்யா?!”
“பயப்பட வேண்டாம்ன்னு டாக்டர் சொல்லி இருக்கார். முதல் அட்டாக் தான். இருந்தாலும் வயசு அதிகம் ஆகிட்டதால கவனமா பார்த்துக்கச் சொல்லி இருக்காங்க.”
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வந்து சேர்ந்தான் நந்தா.
கணவனிடம் விரைந்தவள், படபடவென எல்லாவற்றையும் கூறினாள்.
“என்னால சத்தியமா நம்ப முடியலங்க. எப்படி ஈசியா கொள்ளை அடிச்சிருக்காங்க….”
“மாமா, எங்க? இப்போ எப்படி இருக்காங்க?” நந்தாவை விடுத்து மனைவியிடம் கேட்டான்.
“ம்ம், இபோ ஒகே. தூங்குறாங்க.” அவள் சொல்லவும் மூவரும் அறைக்குள் சென்றனர்.
மாமனாரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மாமியாரிடம் ஆறுதலாகச் சில நிமிடம் பேசிவிட்டு மனைவியுடன் வெளியே வந்தான் நந்தா.
“போலீஸ்ல சொல்லியாச்சா?”
“சொல்லிட்டாங்களாம். நீங்க கொஞ்சம் போலீஸ்ல பேசி, சீக்கிரம் கண்டுபிடிக்கச் சொல்லுங்களேன் ப்ளீஸ்!”
“ம்ம், நிச்சயம் சொல்றேன். இருந்தாலும் எனக்குன்னு ஒரு லிமிட் இருக்கு மாதுரி. ரொம்ப அவங்க எல்லைக்குள்ள நான் போக முடியாது. அதையும் நீ புரிஞ்சிக்கணும்.”
“ம்ம்!” அரை மனதாகவே தலை ஆட்டினாள் அவள்.
ஓர் அளவுக்குப் பேர் பெற்ற பெரிய கடை என்பதால், அந்தச் செய்தி அனைத்து செய்தி சேனல்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அடுத்த வேலையாக, போலீஸ் தங்கள் விசாரணையைத் தொடங்கினர். பல நாள், பல வாரங்கள் விசாரித்தும், எந்தக் கும்பல் இந்த வேலையைச் செய்திருக்கும் என்று யூகிக்க முடியவில்லை. அவர்கள் ரிக்கார்டில் இருந்த அனைத்து கொள்ளை கும்பல் தலைவனையும் கூப்பிட்டு விசாரித்துப் பார்த்தார்கள். கூடவே சிறையில் இருக்கும் திருட்டு கைதிகளிடமும் விசாரணை செய்து பார்த்தனர், முஹூம்! ஒரு சிறு துப்பு கூடக் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், புதிதாகப் பதவியில் சேர்த்துள்ள சென்னை கமிஷனரை தனியே அழைத்து, பேசினார் நரசிம்மன். அவர் வேறு நரசிம்மனை விடப் படுபயங்கரப் பணம் திண்ணி முதலையாக இருக்க, “சொல்லிட்டீங்கள்ள நான் பார்த்துக்கிறேன் ஐயா!” முதுகு வளைய கும்பிடு போட்டார். பின்னே அமைச்சர் என்றால், சும்மாவா!
பழைய கமிஷனர் என்றால், கொஞ்சமாவது அம்பரீஷிற்கு உதவி இருப்பாரோ?
அதன்பின் அம்பரீஷின் நகை கடை கொள்ளை பற்றிய வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகள் சத்தமில்லாமல் இடமாற்றம் செய்யப்பட்டனர். சாதகமான ஆட்கள் அப்பதவியில் அமர்த்தப்பட்டனர். விசாரணை ஆமை வேகத்தில் நகர்ந்தது. முன்பிருந்த வேகம் இல்லை.
[the_ad id=”6605″]
மாதங்கள் சென்றது. அம்பரீஷ் ஓர் அளவுக்கு உடல்நிலை தேறி வந்தார். சித்தார்த்தும், மாதுரியும் அவ்வபொழுது காவல்துறையின் நடவடிக்கையை ஃபாலோவ் செய்து கொண்டனர். ஆனால் அவர்களின் நடவடிக்கை இவர்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை.
அதுப்பற்றிக் கணவனிடம் பேசினால் மாதுரி. இதனால் மீண்டும் நந்தாவிற்கும் மாதுரிக்கும் இடையில் சண்டை வந்தது.
“எனக்கு என்னமோ, வேணும்னே அவங்க விசாரணையை லேட் பண்ற மாதிரி தெரியுதுங்க. கலெக்டர் தானே நீங்க, கொஞ்சம் அவங்க கிட்ட பேசுங்க.”
“ஏற்கனவே பல தடவை பேசி பார்த்துட்டேன் மாதுரி. விசாரிச்சுட்டு தான் இருக்கோம்ன்னு சொல்றாங்க. அதுக்கு மேல அவங்ககிட்ட என்னத்தைக் கேட்க சொல்ற? கூப்பிட்டு திட்டவா முடியும்? நிர்வாகம் தான் என் கண்ட்ரோல், லா அண்ட் ஆர்டர் இல்லை. அவசியம்னா மட்டும் தான் என்னால அவங்களுக்கு ஆர்டர் கொடுக்க முடியும். நார்மல் விசாரணை எல்லாம் கூப்பிட்டு கேட்க முடியாது. இது உனக்கே நல்லா தெரியும்.”
அவனும் தான் என்ன செய்வான் நேரடியாகக் கமிஷனரையே தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டு பார்த்துவிட்டான். அவரோ, “செஞ்சுட்டு தான் இருக்கோம் கலக்டர் சர். இதுக்கு மேல எங்களை என்ன பண்ண சொல்றீங்க? இது ஒன்னு தான் கேசா? வேற எங்களுக்குக் கேசே இல்லையா? அங்க கொள்ளை, இங்க கற்பழிப்புன்னு ஆயிரத்தெட்டுக் கேஸ் பெண்டிங்ல இருக்கும்போது, லிமிட்டெட் போலீசை வச்சு ஒரே நேரத்தில எத்தனை கேசை தான் ஹேண்டில் பண்ண முடியும். உங்க மாமனார் கேசை கண்டுபிடிப்போம், கண்டுபிடிக்கா எங்க போய்ட போறோம்.”
ஏற்கனவே இன்ஸ்பெக்டரை அடிக்கடி நந்தா கூப்பிட்டு அம்பரீஷ் கேஸ் சம்பந்தமாகக் கேட்டு நச்சரிப்பதை எப்படியோ தெரிந்துகொண்ட கமிஷனர், நந்தாவிடம் இவ்வாறாகப் பொரிந்து தள்ளிவிட்டார். இதற்கு மேல், கேட்க நந்தாவிற்கே ஏதோ போல ஆகிவிட்டது.
இனிமேல் கேட்டால், விஷயம் தமிழக அரசுக்கோ, இல்லை IAS அதிகாரிகளின் கண்ட்ரோலிங் அத்தாரிட்டியான, ministry of personnel public grievances and pensions துறையைத் தன் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும் பிரதமருக்கோ புகார் சென்றுவிடுமோ என்ற பயத்தில் பொறுமை காத்தான்.
ஆனால் மாதுரிக்கோ, இந்தக் கேஸ் தந்தையின் வாழ்க்கை அல்லவா, அதனால் அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை.
“அவங்க அப்படித் தான் சொல்லுவாங்க. நீங்க தான் கேட்கணும்.”
“அடிச்சுடுவேன் மாதுரி, என் நிலைமை தெரியாம பேசிட்டு இருந்தன்னா!”
“கலக்டர் பதவில இருக்கிறதால தான நான் உங்களைக் கேட்கிறேன். இல்லனா உங்களை ஏன் டிஸ்டர்ப் பண்ண போறேன்? இது சின்ன விஷயம் இல்லையே, எங்க அப்பாவோட வாழ்க்கையே இதுல தானே அடங்கி இருக்கு. எனக்கு ஆதங்கம் இருக்காதா? அந்த ஆதங்கத்தில தானே கேட்கிறேன். உங்களால முடியலைன சொல்லுங்க, நான் பார்த்துக்கிறேன்.”
திரும்பி மனைவியை முறைத்தவன், விறுவிறுவென்று அங்கிருந்து சென்றுவிட்டான்.
இந்த மாதிரி சின்னச் சின்ன உரசல்கள். ஏற்கனவே அவர்களுக்குள் எரிந்து கொண்டிருந்த தீயை இன்னும் கொழுந்துவிட்டு எரிய வைத்தது.
அதன்பின் காவல்துறையின் செயல்பாடு குறித்துக் கேள்வி எழுப்பி, நீதிமன்றத்தில் கேஸ் போட்டாள் மாதுரி, ஆனால் அதுவும் பெரிய இடத்தின் தலையீட்டால் தள்ளுபடி செய்யப்பட்டது.
சட்டத்தின் மூலம் சென்றால், கண்டுபிடிக்க முடியாது என்று உணர்ந்த சித்தார்த், தனியார் துப்பறியும் நிறுவனத்தை நாடினான். ஆனால் அவர்களால் கூட ஓர் அளவுக்கு மேல இந்த வழக்கில் துப்பறிய முடியவில்லை. கிரிமினல் கேஸ் ஆயிற்றே, வலுவான ஆதாரங்களோ, ஆட்களின் விவரங்களோ கிடைக்கவில்லை. கை விரித்துவிட்டனர்.
போனது போனது தானா?! நினைக்க நினைக்க அம்பரீஷிற்கும் சிதார்த்திற்கும் எதிர்காலமே இருண்டது போல இருந்தது.
[the_ad id=”6605″]
இந்த நேரத்தில், அம்பரீஷிடம் வியாபாரம் செய்தவர்கள் வேறு, செய்தியை கேள்விப்பட்டு, கொடுத்த நகைகளுக்கான பணத்தைத் திருப்பிக் கேட்க ஆரம்பித்தனர். அம்பரீஷ் எவ்வளவோ சமாளித்துப் பார்த்தார், முடியவில்லை. அவர்கள் போலீஸ் போவதாகச் சொல்லிவிட, எங்கே தன் மானம் கப்பலேறிவிடுமோ என்ற பயத்தில், சில சொத்துபத்துகளை விற்று அவர்களுக்கு எல்லாம் செட்டில் செய்தார்.
இனி தொடர்ந்து நகை கடையை நடத்துவதா இல்லை கடையை வாடகைக்கு விடுவதா என்ற எண்ணம் எழுந்தது அவருக்கு. சித்தார்த் தான், போதும் நகை பிசினெஸ், பணம் சேர்ந்த பின்பு பிறகு தொடரலாம் என்று கண்டிப்புடன் சொல்லிடவே, அந்த மூன்று மாடி கட்டிடத்தைக் கணிசமான தொகைக்கு வாடகைக்குக் கொடுத்தார். அந்த வாடகை பணமும் அவருக்கு நல்ல உதாவியாக இருந்தது.
இதோ ஓர் அளவுக்குத் தலை எடுத்தார். அந்நிலையில் தான் அடுத்த அடி விழுந்தது அவருக்கு.
அவர் இனி எழவே கூடாது என்று ஒருவன் அங்கே முடிவு செய்து வைத்திருக்கிறானே. பின் சும்மா விடுவானா?