அத்தியாயம் 16
திநகர் ரங்கநாதன் தெருவே கலவரம பூமியாகக் காட்சி அளித்தது. எதோ மிகப் பெரிய போர் நடந்து முடிந்தது போல, கரும்புகையும், சிமின்ட் சுவர்களின் சிதறல்களும், மக்களின் கூச்சல், குழப்பம் நிறைந்த சலசலப்புகளும், எங்கும் நிறைந்திருந்தது.
அதோ அந்தக் குறிப்பிட்ட கடை தான் இவை அனைத்திற்கும் மையப்புள்ளி. அது தான் மேத்தா ஃபேஷன்ஸ், அம்பரீஷின் துணிக்கடை! அதுவோ முற்றிலும் எரிந்து சாம்பலாகி இருந்தது.
ஏதோ குண்டடியில் இருந்து தப்பித்த கட்டிடம் போலக் காட்சி அளித்தது மேத்தா பேஷன்ஸ். கடையின் உள்ளேயும் சரி, வெளியேயும் சரி, எங்கும் திரும்பினாலும் கருமை நிறம் மட்டுமே. நெருப்பின் மிச்சத்தால், புகை மண்டலமாக இருந்தது கடை முழுவதும். அழகுக்காகப் பொருத்தப்பட்டிருந்த முன்பக்க கண்ணாடி சுவர் நொறுங்கி கிடந்தது. சிமின்ட் சுவரோ, கண்மை பூசியது போல ஆங்காகங்கே கருப்பாகக் காட்சி அளித்தது.
அம்பரீஷின் மேத்தா பேஷன்ஸ் கட்டிடம் நெருப்பிற்குத் தன் உடமைகளைப் பறிக் கொடுத்திருந்தாலும், முற்றிலும் இடிந்து விழாமல், தீர்கமாக நின்றுகொண்டது. ஆனால் பக்கத்தில் இருந்த சின்னச் சின்னக் கடைகளோ எரிந்து முடிந்திருந்த நெருப்பில் இடிந்து தரைமாட்டமாகி இருந்தது.
அம்பரீஷின் துணிக்கடையின் உள்ளே, தீயில் கருகியதால் கருப்பு நிறத்தில் மாறியிருந்த துணிகளில் இருந்து கரும்புகை வெளியேறிக் கொண்டிருந்தது. ஸ்டாக் ரூமில் குவியலாகக் கிடந்த துணிகளும் நெருப்பின் ஆக்ரோஷத்தில் இருந்து மீளமுடியவில்லை. தரைதளத்தில் ஆரம்பித்து, ஐந்தாம் தளம் வரை, ஒரு தளமும் நெருப்பில் இருந்து தப்பவில்லை.
தீயணைப்பு துறையினர் தீயை அணைத்துவிட்டு, குப்பைகளை ஒதுக்கியபடி வேறு எங்கும் நெருப்பு மிச்சம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருக்க, காவல்துறையினரோ, சித்தார்த்திடமும், கடை மேனேஜரிடமும் வேலையாட்கள் யாரேனும் இங்கே தங்கி இருந்தனரா, உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டுள்ளதா, பொருட்களின் மொத்த மதிப்பு பற்றி விசாரித்துக் கொண்டிருந்தனர்.
இவையாவையும் பார்த்தப்படி கடையின் படிகளில், தலையில் கைவைத்து அமர்ந்திருந்தார் அம்பரீஷ்.
[the_ad id=”6605″]
பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, சற்று முன்பு தான் தீயணைப்பு படையினர் நெருப்பை முற்றிலும் அணைத்திருந்தனர். இதற்கே மாலை நேரம் ஆகிவிட்டிருந்தது. அதற்குப் பின்பே கடைக்குள் நுழைய முடிந்தது அம்பரீஷால்.
மெல்ல எழுந்து வந்து கடையின் முன் நின்று அந்த ஐந்து மாடி கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தார். தான் பார்த்துக் கொண்டிருப்பது தன் கடைதானா என்று அவருக்கே சந்தேகம் வந்துவிட்டது. சர்வசாதரணமாகக் கோடிகளைத் தன்னுள் விழுங்கி கொண்ட கட்டிடம், தற்பொழுது அரைப் பைசாவிற்குக் கூட மதிப்பு பெறாத ஒன்றாக உருமாறி இருந்தது.
கட்டிடத்தைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் அம்பரீஷ். பார்த்து பார்த்துக் கட்டிய கட்டிடம். போன வருடம் தான் புதிப்பித்து இருந்தார். இப்பொழுது, பாழைடைந்த கட்டிடம் போலக் காட்சி அளித்தது.
சித்தார்த்தும், மாதுரியும் அவரின் இரு கண்கள் என்றால், நகைகடையும், துணிக்கடையும் தான் அவரின் இரு கைகள். இரண்டுமே முற்றிலும் ஒடிந்து விட்டிருந்த இந்தத் தருணம், இரண்டு கை இல்லாத மனிதராகத் தன்னை உணர்ந்தார். கை இருந்தால் தானே உழைத்துச் சம்பாதிப்பது!
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் தான் அவரின் நகைக்கடை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. சரி, துணிக்கடை இருக்கிறதே, எப்படியாது தேறி வந்துவிடலாம் என்று கணக்கு போட்டு வைத்திருந்தார். ஆனால் அழகான ரங்கோலி கோலத்தின் மேல், ஒரு வாளி தண்ணீரை கொட்டி அது இருந்த இடம் தெரியாமல் அழித்தது போல, அவரின் கனவும், ஆசையும் மண்ணோடு மண்ணாகி விட்டது.
வழக்கம் போலத் துணிக்கடையைத் திறக்க காலையிலேயே எழுந்து வந்தவரின் கண்ணில் பட்டது, மக்களின் கூச்சலும் குழப்பமும். கூட்டத்தை விலக்கிக்கொண்டு போய்ப் பார்த்தால், அவரின் கட்டிடத்தின் ஜன்னல்களில் இருந்து நெருப்பு ஜுவாலை வெளியே வரை எரிந்து கொண்டிருக்க, பக்கத்தில் இருந்த சின்னச் சின்னக் கட்டிடங்கள் எல்லாம் இடிந்து விழுந்து கிடந்தது.
பார்த்ததும் அதிர்ந்து போய் விட்டார். கட்டிடம் இடிந்துவிழும் அளவுக்கு நெருப்பு என்றால்? யோசிக்கக் கூட முடியவில்லை. அதற்குள் யாரோ தீயனைப்பிற்குச் சொல்லி இருக்க, மணி சத்தத்துடன் வந்து சேர்ந்தது தீயணைப்பு வண்டி.
மடமடவெனச் செயல்பட்டவர்கள், பைப் மற்றும் கேரேன் உதவியுடன் மேல் தளத்தில் ஆரம்பித்து அனைத்து மாடிகளிலும் தண்ணீரை பீய்ச்சு அடித்தனர். துணிகளுடன் சேர்ந்து எரிந்து கொண்டிருந்த நெருப்பானது தண்ணீர் பட்டதும், கரும்புகையாக மாற, இருந்த அத்தனை ஜன்னல்களிலும் இருந்தும் அடர்ந்த கரும்புகை அருவியைப் போல வெளிறி, நீல நிற வானத்தை மறைத்து, திநகர் பகுதியையே கரும் போர்வைக்குள் போர்த்திக் கொண்டது.
இப்பொழுது நினைத்தாலும், அதிர்வை ஏற்படுத்தியது அக்காட்சி. கலையில் நடந்த நிகழ்வுகளை நினைத்தபடி அண்ணாந்து பார்த்துக்கொண்டு நின்றிருந்தவரை கலைத்தது சித்தார்த்தின் குரல்.
“பாபுஜி?!” சத்தம் கேட்டு குனிந்து பார்த்தார். மகன் சித்தார்த் நின்றிருந்தான். தந்தையின் முகத்தில் தெரிந்த எதிர்காலத்தைப் பற்றிய கேள்வி, அவனையும் தொற்றிக் கொண்டது. இருந்தும் தானும் கலங்கி தந்தையையும் வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று நினைத்தவன், “இதுல உங்க கையெழுத்து வேணுமாம். இன்ஸ்பெக்டர் கேட்டார் பாபுஜி.” சொல்லிவிட்டு தன் கையில் இருந்த நோட்பேடை அவர் முன் நீட்டினான்.
கையெழுத்து எதற்கு என்றெல்லாம் கேட்கவில்லை அம்பரீஷ். கேட்கும் மனநிலையிலும் அவர் இல்லை. மகனிடம் இருந்து நோட்பேடை வாங்கினார், அவன் சொன்ன இடத்தில கையெழுத்திட்டார், திருப்பிக் கொடுத்துவிட்டார். அவ்வளவு தான்.
தந்தையின் முகத்தை ஒரு நொடி பார்த்தவன், பின் விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டான்.
“சர்!” சத்தம் கேட்டு திரும்பினார் அம்பரீஷ். கடை மேனேஜர் நின்றிருந்தார்.
“சொல்லுங்க சிவசாமி!”
“ஒன்னு கூடத் தேறலை சர். எல்லாம் தீயில எரிஞ்சு போச்சுன்னு தீயணைப்புக்காரங்க சொல்றாங்க.”
“இன்ஸ்பெக்டர் எதுவும்…”
“கரென்ட்னால தீ விபத்து நடக்கல, வேற ஏதோ காரணம் இருக்கலாம்ன்னு சொல்றாங்க சர். அவங்க இன்னொன்னும் சொன்னாங்க….” என்றவர் மேற்கொண்டு சொல்லாமல் இழுக்க,
“சொல்லுங்க சிவசாமி!”
“சிகரட் எதுவும் பிடிச்சிட்டு அணைக்காம போட்டிருக்கலாம்ன்னு சொல்றாங்க சர்…” என்றவர் அம்பரீஷின் சுருங்கிய புருவத்தைப் பார்த்ததும், பதற்றத்துடன், “நம்ம பசங்க யாரும் கடைக்குள்ள சிகரட் எல்லாம் பிடிக்க மாட்டாங்க சர். அவங்களைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். கஸ்டமருங்க யாராவது வேணும்னா….அதுவும் நான் பார்த்தவரை யாரும் பிடிக்கலை சர். ஆனா எப்படி நெருப்பு பிடிச்சிதுன்னு சத்தியமா ஒன்னும் புரியல சர்.” எங்கே தன் மேல் பலி விழுந்துடுமோ என்ற பதற்றம் அவரின் முகத்தில்.
“டேமேஜ் எஸ்டிமேஷன் எவ்வளவு இருக்கும் சிவசாமி?”
தொகையைச் சொன்னார் அவர்.
கேட்டதும் மலைத்துப் போனார் அம்பரீஷ். முகம் யோசனையில் மூழ்கியது. இனி புதிதாகச் சரக்கு வாங்கினால் தான் கடையைத் திறக்கவே முடியும் என்ற நிலைமை.
அன்றைக்கு ஹார்ட் அட்டாக் வந்ததில் இருந்து, கடையின் முழுப் பொறுப்பையும் சித்தார் தான் பார்த்துக்கொள்கிறான். அம்பரீஷ் வெறும் மேற்பார்வை மட்டுமே! அதனால் அன்றைய தேதியில் கடை இருப்பு எவ்வளவு, வங்கி கை இருப்பு உள்ளிட்டவை எல்லாம் அவனுக்குத் தான் தெரியும். யாரிடம் பிசினெஸ் செய்வது, எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை மட்டும் அம்பரீஷ் சொல்வார்.
இப்படித்தான் இத்தனை நாள் சென்று கொண்டிருப்பதால், கடையில் எவ்வளவு மதிப்புள்ள சரக்கு இருக்கிறது என்பது அம்பரீஷிற்குத் தெரிந்திருக்கவில்லை. இப்பொழுது கேட்கையில், பாதிக்கு மேல் சரக்கு மீதம் இருப்பதைப் புரிந்து கொண்டார்.
“சரி, நீங்க கிளம்புங்க சிவசாமி.” அம்பரீஷ் சொல்ல, மேனேஜர் இன்னும் நகராமல் இருக்கவும், என்னவென்பது போலப் பார்த்தார் அவரை.
“இன்னைக்குச் சம்பள தேதி….” என்று இழுத்தார் அவர்.
[the_ad id=”6605″]
கேட்ககூடாத நேரம் தான். ஆனாலும் அவருக்குமே வீட்டில் ஆயிரத்தெட்டுப் பிரச்சனை. டிவியில் ஆரம்பித்து, ஏஸி வரை அனைத்திற்கும் மாத தவணை கட்ட வேண்டியது நிறையவே இருந்தது. தேதி தவறிவிட்டால், கழுத்தில் துண்டை போட்டுவிடுவான் கடன் கொடுத்தவன்.
“நாளைக்கு வீட்டுக்கு வாங்க, கொடுத்துவிடுறேன்.” சொன்னார் அம்பரீஷ்.
“ரொம்ப நன்றி சர்.” கும்பிட்டுவிட்டு நகர்ந்தார் அவர்.
‘இவ்வளவு பெரிய தொகையில் இருந்து எப்படி மீள்வது? என்றவரின் எண்ணம் இதற்கு ஈடாக எந்தச் சொத்தை விற்கலாம் என்றதில் போய் நின்றது. கைவசம் இருக்கும் அசையா சொத்துகளின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. இது எங்கே போய் நிற்கும் என்று தெரியவில்லை.
எதிர்காலத்தை நினைக்கையில் மனதை பிசைந்தது. பாட்டன் காலத்தில் இருந்து ஓடி ஓடி உழைத்து சேர்த்த சொத்துக்களைத் தன் காலத்தில் பல மடங்காக உயர்த்தி இருந்தார் அம்பரீஷ். அந்தச் சொத்துகளை வைத்து, மகளை ஊரே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு நிறையப் பொருட்செலவுடன் நல்ல இடத்தில் திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார். தனக்குப் பின் தன் மகன் ராஜாவாக இருக்க வேண்டும் என்பதே அவரின் இப்போதைய ஆசை. ஆனால் நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கையில், மகனை நிர்கதியாக விட்டுவிட்டு போய் விடுவேனோ என்ற பயம் அவரை மூச்சுமுட்ட வைத்தது.
அம்பரீஷ் யோசனையில் மூழ்கியிருக்க, இன்ஸ்பெக்டரை அனுப்பிவிட்டு தந்தையின் அருகில் வந்த சித்தார்த், “காரணம் என்னன்னுனு, விசாரிச்சிட்டு சொல்றோம்ன்னு இன்ஸ்பெக்டர் சொல்றார் பாபுஜி.” தகவலை பகிர்ந்து கொண்டான். மகனை பார்த்தார் அம்பரீஷ். அந்தப் பார்வையில் பெரும் கவலை குடி இருந்தது.
தந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு, “ரொம்ப டயர்டா இருக்கீங்க, வீட்டுக்குப் போலாம் பாபுஜி. காலையில இருந்து சாப்பிட கூட இல்லை.” என்று சொன்னவன், தந்தையை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து காரை பார்க் செய்திருந்த இடத்திற்கு வர, அவர்களைச் சூழ்ந்து கொண்டனர் பத்திரிகையாளர்கள். இத்தனை நேரம் எங்கு ஒளிந்து இருந்தனரோ, தெரியவில்லை!
“எதனால இந்தத் தீ விபத்து நடந்திருக்கு மிஸ்டர் அம்பரீஷ்?”
“நகை கடை கொள்ளை, இப்போ இந்தத் தீ விபத்து. இதைப்பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க அம்பரீஷ்?”
“நடக்கிற சம்பவங்கள் எல்லாம், தொழில் போட்டினால நடக்குதா?”
“இதையெல்லாம் யார் செஞ்சிருப்பாங்கன்னு நீங்க நினைக்குறீங்க சர்?”
என்றெல்லாம் கேள்விகளை அவர்கள் அடுக்கிகொண்டே போக, பதில் சொல்ல முடியாமல் திணறினான் சித்தார்த். அவன் வாயை திறக்க கூட நேரம் கொடுக்காமல் கேள்வி மேல் கேள்வியை, ஒருவர் மாற்றி ஒருவர் கேட்டுக் கொண்டே இருக்க, எங்கே இருந்து அவன் பதில் சொல்வது?
“எங்களுக்கு யார் மேலையும் சந்தேகமில்லை. போலீஸ் விசாரிச்சிட்டு இருக்காங்க. விசாரணை முடிஞ்சதும் தான் உங்க கேள்விக்கான பதில் கிடைக்கும். இப்போ ப்ளீஸ் நாங்க கிளம்பனும். அப்பாக்கு உடம்பு சரி இல்லை. கொஞ்சம் காரை எடுக்க வழி விடுறீங்களா?!” படபடவென அவன் சொல்ல,
“தீ விபத்துல டேமேஜ் ஆன பொருட்களோட மொத்த மதிப்பு எவ்வளவு இருக்கும் சர்?” பட்டென்று கேட்டுவிட்டார் ஒரு பத்திரிகையாளர்.
அவர் அப்படிக் கேட்டதும், திரும்பி தந்தையைப் பார்த்தான் சித்தார்த். அவர் இருக்கும் உடல்நிலையில் இப்போதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்திருந்தான் அவன். ஆனால் பத்திரிக்கையாளர் வேறு கேட்டு விட்டாரே. ஏதாவது பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். இருந்தும் மேலோட்டமாகச் சொன்னான்.
“நாங்க இன்னும் எஸ்டிமேட் பண்ணல. அப்புறம் தெரியப்படுத்துறோம்.” சொன்னவன், “தேங்க்ஸ்!’ என்றுவிட்டு விறுவிறுவென்று தந்தையைப் பின் இருக்கையில் அமர வைத்தவன், தானும் ஓட்டுனர் இருக்கையில் ஏறி அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்து, எப்படியோ அந்தப் பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தைக் கடந்து மெயின் ரோட்டிற்கு வந்துவிட்டான்.
[the_ad id=”6605″]
தன் வீட்டு தொலைக்காட்சியில் இக்காட்சியைப் பார்த்துவிட்டு, சத்தமாகச் சிரித்தார் நரசிம்மன்.
“ஓடு டா! ஓடு! அவனுங்ககிட்ட இருந்து நீ தப்பிச்சிடலாம். ஆனா என்கிட்டே இருந்து நீ தப்பிக்க முடியாது.” கர்ஜித்தார்.
அவர் காலை பிடித்தபடி அருகில் அமர்ந்திருந்த அவரின் அல்லக்கை, “எப்படிங்க ஐயா, இவ்வளவு பெரிய காரியத்தை அசால்ட்டா செஞ்சு முடிச்சுட்டீங்க?”
“அடப்போடா லூசு பயலே! பணம் பாதளம் வரைக்கும் பாயும்ன்னு சொல்றாங்க, போயும் போயும் அவன் கடைக்குள்ள பாயாதா?! அதெல்லாம் எவனெவனைப் பிடிக்கனுமோ, அவனைப் பிடிச்சு, எங்க பணத்தைக் கொடுக்கணுமோ அங்க பணத்தைக் கொடுத்து, எங்க அருவாளை காட்டனுமோ அங்க அருவாளை காட்டி, காரியத்தைச் சாத்திகிறவன் டா, உன் ஐயா.”
“பார்க்க அப்பாவி மாதிரி இருந்துட்டு, எப்பேர்பட்ட காரியத்தையும் ஈசியா செஞ்சுட்றீங்க ஐயா!” சிரித்தான் அல்லக்கை.
“ஹா….ஹா….ஒருத்தன் இந்த நரசிம்மனை பகைசுக்காத வரைக்கும் தான் அவனுக்கு நான் நல்லவன். சீண்டினானுன்னு வச்சுக்கோ, அப்போ இந்த நரசிம்மனோட இன்னொரு முகத்தைப் பார்க்க வேண்டி இருக்கும். அதுக்கு அப்புறம் அவன் இருந்த இடம் தெரியாம அழிஞ்சு போய்டுவான்.” கடுமையாகச் சொன்னார் நரசிம்மன்.