சித்தார்த் காரை ஓட்டிக் கொண்டிருக்க, பின் இருக்கையில் அமர்ந்திருந்தார் அம்பரீஷ்.
“எஸ்டிமேஷன் எவ்வளவு சித்து?” விடையைத் தெரிந்துகொண்டே கேள்வி கேட்டார்.
“இன்னும் கணக்கு போடல பாபுஜி.” அவனுமே விடையை மறைத்தபடி பதில் சொன்னான்.
“ஸ்டாக் புக் நேத்து வரைக்கும் போட்டு வச்சுருக்கத் தானே?!”
“ஆமாம் பாபுஜி.” அவரின் அடுத்தக் கேள்வி தெரியாமல் பட்டென்று சொல்லிவிட்டான்.
“அப்போ இந்நேரத்துகுள்ள தெரிஞ்சிருக்கணுமே?!”
“அது…அது…இருக்கிற பத்தட்டதுல இன்னும் கணக்கு போடல பாபுஜி.”
“நீ போடல, ஆனா மனேஜர் போட்டுட்டார் போல.”
சட்டென்று பின் இருக்கையைத் திரும்பி பார்த்தான்.
[the_ad id=”6605″]
அம்பரீஷோ மகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மேனேஜர் தன்னிடம் சொன்ன நஷ்ட தொகையைச் சொன்னவர், “நான் பயப்படுவேன்னு சொல்றதுக்கு யோசிக்கிறியா சித்து? ஆனா உன்னோட பப்பா, இதை விடப் பெரிய லாஸ் எல்லாம் பார்த்துட்டான். இதெல்லாம் கம்மி தான். நினைச்சா மீண்டு வந்துட முடியும்.” என்று சொல்லிவிட்டு இடைவெளி விட்டவர், “ஆனா அதுவரைக்கும் நான் இருக்கணுமேன்னு தான் எனக்குக் கவலையா இருக்கு!” என்றார் கரகரத்த குரலில்.
“பாபுஜி!!” அதிர்ந்து போனான் சித்தார்த்.
“அதெல்லாம் உங்களுக்கு ஒன்னும் ஆகாது பப்பா!” ஆதங்கத்துடன் சொன்னவனின் குரல் கலங்கியிருந்தது. எப்பொழுதும், தந்தையை ‘பாபுஜி’ என்று மரியாதையாக அழைப்பவன், மனம் ஒடிந்து போயிருந்தால் மட்டுமே அவரை ‘பப்பா’ என்று அழைப்பான். இதோ இந்த நொடியும் அப்படித் தான் உணர்ந்தான்.
‘என்ன வார்த்தை சொல்லிட்டார்? அவனவன் எண்பது வயசு, நூறு வயசு வரைக்கும் பேரனுங்க கல்யாணத்தையே பார்த்துட்டு கல்லு மாதிரி இருக்காங்க. இவர் என்னடான்னா, ஒத்தை பொண்ணைக் கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டு பேசுற பேச்சா இது?’ நினைக்க நினைக்க நெஞ்சில் பாரமேற, கண்களில் கண்ணீர் தேங்கி, அவனது பார்வையை மங்கலாக்கியது.
அதற்குள் வீடு வந்திருக்க, தன் கண்களைத் துடைத்துக் கொண்டான் சித்தார்த்.
ராஜேஸ்வரியும், மாதுரியும் வாசலிலேயே காத்திருந்தனர். ஏற்கனவே தொலைபேசியில் செய்தி சொல்லப்பட்டிருக்க, அது இல்லாமல் தொலைகாட்சிகளில் வேறு, தீ விபத்தை அவ்வபொழுது காட்டிக் கொண்டிருந்தனர்.
தங்கள் சொத்து, தங்கள் கண் முன் அழிவதை பார்கையில் யாருக்குத் தான் கவலை இருக்காது.
அங்குக் கட்டிடம் எரிய, இங்கே ராஜேஸ்வரியின் வயிறு பற்றி எரிந்தது. அவர் கணவரின் இரவு பகல் பாராத உழைப்பாயிற்றே!
கணவரை பார்த்ததும், முந்தானையால் வாயை பொத்தி தன் கண்ணீரை கட்டுபடுத்த முயன்று முடியாமல் போக, கதறியபடி கணவனை அணைத்துக் கொண்டார் ராஜேஸ்வரி. அம்பரீஷிற்கோ இதுவரை ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தாமல் ராணி போலப் பார்த்துக்கொண்ட தன் காதல் மனைவி, சமீபகாலமாகத் தொடர்ந்து அழும்படி ஆயிற்றே என்று நினைத்து மனதொடிந்து போனவர், ராஜேஸ்வரியை அணைத்தபடி கண்கலங்கினார். பெற்றோரின் கண்ணீரை பார்த்துப் பிள்ளைகள் இருவரும் துடித்துப் போயினர்.
“நாம யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம்? ஏன் நமக்கு இப்படி எல்லாம் ஆகுதுங்க? உங்க உழைப்பெல்லாம் இப்படிக் கையைவிட்டு போகுதே! என்னால முடியலைங்க!” கணவனின் மார்பில் முகம் புதைத்து அழுதவரின் இதழ்கள் இவ்வாறு உச்சரிக்க, பதில் சொல்ல முடியாமல், சொல்ல தெம்பில்லாமல் மனைவியின் தலையை வருடிக் கொடுத்தார் அம்பரீஷ்.
அன்று இரவு மனைவியை அழைத்துச் செல்ல வந்திருந்த பொழுது, நந்தாவும் அம்பரீஷிடம் தன் ஆறுதலை தெரிவித்தான்.
“கவர்ன்மென்ட்ல நிறைய லோன் வசதி இருக்கு மாமா. வேணும்னா சொல்லுங்க நாளைக்கே நான் ஏற்பாடு செஞ்சு தரேன். மேற்கொண்டு பணம் தேவைப்பட்டாலும் மாதுரியோட நகையை எடுத்துக்கோங்க. தேவைனா அவளுக்கு நான் வாங்கிக் கொடுத்துக்கிறேன். இன்சூரன்ஸ் செஞ்சுறீங்க தானே?” என்று கரிசனையாகப் பேசினான்.
அம்பரீஷிற்கு மகளின் வாழ்கையை நினைத்து மனம் நிறைந்து போனது. அதே நேரம் மருமகனின் குணத்தைப் பார்த்து பெருமையாய் உணர்ந்தார்.
“அதெல்லாம் நான் ஏற்கனவே ஏற்பாடு செஞ்சு வச்சுட்டேன் மாப்பிள்ளை. மாதுரி நகையெல்லாம் வேண்டாம். அது என்னைக்கு அவளுக்குத் தான். திரும்பி இங்க வரக்கூடாது.” கண்டிப்புடன் சொல்லிவிட்டார்.
தான் நினைத்திருந்தது போலவே, தனக்குச் சொந்தமான வீட்டை விற்று அதில் கிடைத்த பணத்தில் கட்டிடத்தைச் சுத்தம் செய்து, பெயிண்ட் அடித்து, கண்ணாடி எல்லாம் மாற்றி, புதுக் கட்டிடம் போல மாற்றியவர், சூரத் சென்று குறைந்த விலையில் ஆடைகளை வங்கி வந்து, கடையில் விற்பனைக்கு வைத்து, மீண்டும் கடையைப் புதுப் பொலிவுடன் ஆரம்பித்தார். இதைச் செய்ய அவருக்கு இரண்டு மூன்று மாதங்கள் தேவைப்பட்டது.
இந்நிலையில் அருகில் இருந்த கட்டிடத்தின் உரிமையாளர்கள் வேறு, அம்பரீஷின் கவனக்குறைவு தான் நடந்த தீ விபத்திற்குக் காரணம், ஆகையால் அதற்கு நஷ்டஈடு தொகை கேட்டு அம்பரீஷின் மேல் வழக்கு தொடுக்க, மாதுரியோ, காவல்துறை தன் விசாரணையை முடிக்காதவரை இது விபத்தா, இல்லை சதி செயலா என்று தெரியாதவரை எப்படி அவர்கள் அம்பரீஷிடம் நஷ்டஈடு கேட்க முடியும் என்ற வாதத்தின் மூலம், அவ்வழக்கை எல்லாம் திறமையாகக் கையாண்டு முறியடித்தாள்.
[the_ad id=”6605″]
இந்நிலையில் தனிஷ்காவின் இரண்டாம் ஆண்டுப் பிறந்தநாள் வந்தது. மகளைப் பொறுத்தவரை எதிலும் குறை வைக்காத அம்பரீஷ், வழக்கம் போல ஊரை கூட்டி விழா ஏற்பாடு செய்து, பேத்திக்கு வைர நகையைப் பரிசாக அளித்தார். மாதுரி கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள், ஆனால் அவரோ எதையும் காது கொடுத்து கேட்கவில்லை.
“பரிசு கொடுக்க முடியாத அளவுக்கு நான் ஒடிஞ்சு போய்டல பப்பு. நான் இருக்கிற வரைக்கும் என் பேத்திக்கு நான் செஞ்சுட்டே இருப்பேன். அவ என்னோட இளவரசியோட இளவரசி! என்னோட குட்டி ராணி!” சொல்லிவிட்டு அழகாகச் சிரித்தார்.
மாதுரிக்கு தான் கஷ்டமாகி போய்விட்டது. அவர் ஒடிந்து போய் இருக்கும் நிலைமையைத் தன்னால் பார்க்க முடியுமா? நிச்சயம் முடியாது. அதற்கான சக்தி தன்னிடம் ஒரு துளி கூடக் கிடையாது என்பதை அவள் நன்கு அரிவாள். அவளுக்கென்ன எந்த மகளுக்குமே தந்தையை ஏழ்மை நிலையில் பார்க்கும் சக்தி உண்டு?
அதிலும் மாதுரியை பொறுத்தவரை, பிறந்ததில் இருந்து தந்தையைத் தினமும் ராஜ தோரணையில் தான் பார்க்கிறாள். அவரின் அந்தக் கம்பீரம் என்ன! அவரின் கம்பீர உடலுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் அவரின் உடை நேர்த்தி என்ன? அவரின் முகத்தில் தெரியும் அந்த ராஜகளை என்ன? சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒவ்வொரு பெண்ணிற்கும் கணவன் இளவரசனாகத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவளின் தந்தை எப்பொழுதும் அவள் கண்களுக்கு ராஜா தான்!
“தன் தந்தை கூடிய சீக்கிரம் இந்நிலையில் இருந்து மீண்டு, இழந்ததை மீண்டும் கிடைக்கப்பெற்று, பழையபடி ராஜகம்பீரத்துடன் உலா வரவேண்டும் என அந்த ஆண்டவனை மனமுருக வேண்டிக் கொண்டாள்.
ஆனால் அந்தக் கடவுள் வேறல்லவா நினைத்து வைத்திருக்கிறார்!
மாதங்கள் உருண்டோடியது!
அன்றைய தினம், மாதுரியை அவளின் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, முதலமைச்சர் அழைத்ததின் பெயரில், அவரைப் பார்ப்பதற்காகத் தலைமை செயலகதிற்குச் சென்று கொண்டிருந்தான் நந்தா.
அந்த அரசாங்க காரை ஓட்டுனர் ஓட்டிக் கொண்டிருக்க, பின்பக்க இருக்கையில் அமர்ந்து, முதலமைச்சருடன் பேசப்போகும் விஷயம் அடங்கிய ஃபைலை புரட்டி கொண்டிருந்தான் அவன்.
அப்பொழுது திடீரென்று நந்தாவின் கார், எதன்மீதோ ‘டமார்’ என்று மோதியதில் மொத்த காரும் குலுங்க, ஃபைலில் இருந்து கண்ணை எடுத்து முன்பக்கம் பார்த்தான்.
“என்ன ஆச்சு மணி?”
“ஒண்ணுமில்லை சர், எதிர்ல வந்துட்டு இருந்த கார் மேல லேசா இடிச்சிடுச்சு.” சற்றே பதற்றத்துடன் சொன்ன மணி, வேகமாகக் கார் கதவை திறந்துகொண்டு இறங்கினான்.
அதன்பின் சில நிமிடங்கள் இருக்கையில் அமர்ந்தபடி ஓட்டுனரின் வருகைக்காகக் காத்திருந்த நந்தா, அவன் வராமல் போக, ஏதோ சண்டையிடும் சத்தம் போலக் கேட்கவும், காரை விட்டு இறங்கி வந்தான்.
நந்தாவின் கார், மற்றொரு காருடன் நேருக்கு நேர் மோதியபடி நின்றிருந்தது. அவனின் காருக்கு அவ்வளவாகச் சேதாரம் இல்லை. ஆனால் எதிரில் இருந்த காரின் முன்பக்க பம்பர் நன்றாக வளைந்திருக்க, ஃபாக் லேம்ப் நொறுங்கி இருந்தது.
இரண்டு காரையும் பார்த்தபடி மணியை நோக்கி அவன் செல்ல, மணியுடன் ஏதோ ஒரு ஆண் சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.
“மணி என்ன ஆச்சு?”
“இல்லை சர், இந்த ஆள் தான் தேவை இல்லாம பேசிட்டு இருக்காரு.”
இருவரையும் ஒரு பார்வை பார்த்த நந்தா, “சர் உங்களுக்கு என்ன பிரச்சனை? எதுக்கு என் டிரைவர் கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கீங்க?” என்றான் சற்றே கோபமாக.
[the_ad id=”6605″]
“சர், உங்க டிரைவர் தான் சிக்னல் போட்டு இருக்கிறதை பார்க்காம வண்டியை திருப்பி இருக்காரு. பாருங்க அவர் இடிச்சதால என் வண்டி பம்பர் உடைஞ்சு போச்சு, பல்பும் நொருங்கிடுச்சு.” வேகவேகமாகக் குற்றபத்தரிக்கை வாசித்தான் அவன்.
வெறும் வாசிக்க மட்டும் தான் முடிந்தது. மணியுடன் எகிறிக்கொண்டு வந்ததைப் போல நந்தாவிடம் எகுற முடியவில்லை. அதற்கான தைரியமும் அவனுக்குக் கிடையாது. ஏனெனில் காரின் மேல் இருந்த சைரனே, நந்தா ஒரு முக்கிய அதிகாரி என்று உணர்த்திட, கொஞ்சம் அடக்கி வாசித்தான் அந்த ஓட்டுனர். இருந்தாலும் உடைந்த பொருட்களுக்கு அவன் முதலாளிக்கு அவன் பதில் சொல்ல வேண்டுமே!
உடனே மணி பக்கம் திரும்பிய நந்தா, “நீ தான் தப்பா போனியா?” என்று கேட்க, அவனோ பயந்தபடி ‘ஆம்’ என்று தலை அசைத்துவிட்டு, “ரொம்ப ஸ்பீடா எல்லாம் வரல சர். ரொம்ப மெதுவா தான் வந்தேன்.” என்றான் முகத்தைப் பாவமாய் வைத்துக்கொண்டு. பின்னே! கலக்டர் இதனால் தனக்கு மெமோ எதுவும் கொடுத்துவிடக் கூடாதே என்ற பயம் தான்.
மணியை முறைத்தவன், எதிரில் நின்று கொண்டிருந்தவரிடம், “உங்க அட்ரெஸ் கொடுத்திட்டு போங்க. ரிபேர் பண்ண எவ்வளவு செலவாச்சோ அதை நான் கொடுத்துடறேன்.” என்றான் தணிவாக.
அந்த நேரம், “டேவிட் அண்ணா!” என்ற சத்தம் கேட்க, திரும்பி பார்த்தான் நந்தா. பார்த்தவன் ஸ்தம்பித்து நின்றுவிட்டான்.