அத்தியாயம் 17
“டேவிட் அண்ணா!” சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான் நந்தா. அழகிய இளம் பெண் நின்றிருந்தாள். ஆளை அசரடிக்கும் அழகு. குழந்தை தனமும், அழகும் இணைந்து குடி கொண்டிருந்தது அவளின் முகத்தில். கச்சிதமான உருவம். கிள்ளினால் சிவந்துவிடும் நிறம். உயரத்தில் நந்தாவை மிஞ்சிவிடுவாள் போல, ஹீல்ஸ் போடாமலே அவன் உயரத்திற்கு இருந்தாள். தோற்றத்தில் நடிகை ராஷி கண்ணாவை நினைவுப்படுதினாள்.
“இங்க என்ன அண்ணா பிரச்சனை?” கேட்டுக்கொண்டே அவர்கள் அருகில் வந்தவள், நந்தாவின் கார் ஓட்டுனரிடம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தவனிடம் கேட்டாள்.
“ஒண்ணுமில்லை மா. அவங்க தான் ராங் ரூட்ல வந்து நம்ம வண்டி மேல மோதிட்டு, பிரச்சனை பண்றாங்க.”
ஓட்டுனர் இவ்வாறு சொல்ல, திரும்பி நந்தாவை பார்த்தாள். அவள் பார்வையில் காந்தம் இருந்ததோ?! தெரியவில்லை, ஆனால் நந்தாவை சுண்டி இழுத்தது அந்தப் பார்வை. அவன் இதயம் முதன் முறையாகச் சலனம் கொண்டது.
அதற்குள் நந்தாவின் ஓட்டுனர், “சாரி மா. தப்பு என் மேல தான். சார் அவசரமா போகணும். அதனால தான் கொஞ்சம் வேகமா வந்துட்டேன்.” நந்தாவை சுட்டிக்காட்டி அவன் சொல்லவும், காரின் மேல் இருந்த சைரனை அப்ப்போதுதான் கவனித்தாள். உடனே புரிந்து போனது நந்தா ஒரு முக்கிய அரசாங்க அதிகாரி என்று.
அதற்குள் தன்னைச் சுதாரித்துக் கொண்ட நந்தா, “சாரிங்க, அவசரமா இருந்தாலும், இப்படி வேகமா வந்திருக்ககூடாது. நீங்க ரிபைர் காஸ்ட் பில்லை கலக்டர் ஆபீஸ்க்கு அனுப்பி வச்சுடுங்க. நான் செட்டில் செஞ்சுடறேன்.” கடகடவெனச் சொல்ல முயன்றும் ஏனோ தெரியவில்லை வார்த்தை தந்தியடித்து நந்தாவுக்கு.
“இல்ல சர். பரவால. நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க. ஏதோ அவசரமா போறீங்க போல.” – குரல் கூடக் குழந்தை தனம் மாறாமல் இனிமையாக ஒலித்தது.
“எதுக்குங்க உங்களுக்கு வீண் செலவு. நான் செட்டில் செஞ்சுடறேன்.” சொன்னதையே அவன் திரும்பத் திரும்பச் சொல்ல,
“அட, என்ன சர் நீங்க?! உங்க மேலையும் தப்பு இல்லை. அப்புறம் எப்படி? வேண்டாம் நான் பார்த்துப்பேன். நீங்க கிளம்புங்க.” அவள் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட,
நந்தாவின் ஓட்டுனரும் நேரமாவதை நியாபகப்படுத்த, மீட்டிங்கிக்கு நேரம் ஆவதை உணர்ந்து வேறு வழியில்லாமல் அங்கிருந்து கிளம்ப முடிவு செய்தான் நந்தா.
நந்தாவின் கார் புறப்பட, ஜன்னல் வழியே தலையை நீட்டி அவளைப் பார்த்தான். அவளும் அப்பொழுதுதான் காருக்குள் ஏறுவதற்காகக் கதவை திறக்க, செல்லும் நந்தாவை பார்த்தாள்.
ஒரு நொடி தான். ஒரே நொடியில் இப்பார்வை பரிமாற்றம் நடந்தேறி விட, இருவர் இதழ்களிலும் புன்னகை அரும்பியது.
“யாரு அண்ணா அவரு?” காரை ஓட்டிக் கொண்டிருந்த டேவிடம் கேட்டாள் அப்பெண்.
“சென்னை கலெக்டர் மா!”
“ஓ!!” என்றவளின் குரலில் என்ன இருந்ததோ?
அதன்பின் அவர்களின் சந்திப்பு இரண்டாம் முறையும் நடந்தது. இம்முறை ஒரு மாலில். மாதுரியுடன் மாலுக்கு வந்திருந்த நந்தா, ஃபோன் கால் வரவும் கடைக்கு வெளியே வந்து பேசிவிட்டு மீண்டும் கடைக்குள் செல்ல திரும்பியவனின் மேல் மோதினாள் அப்பெண்.
“சாரி!” என்றபடி இருவரும் நிமிர்ந்தபொழுது தான், ஒருவரை ஒருவர் கவனித்தனர்.
“அட! கலக்டர் சர் நீங்க எங்க இங்க?” சிரிப்புடன் அவள் கேட்க,
ஒருமுறை மட்டுமே பார்த்த ஆடவனிடம் சட்டென்று சிரித்த முகமாய்ப் பேசும் அவளின் அந்தக் குணத்தைப் பார்த்து வெகுவாகக் கவர்ந்திழுக்கப்பட்டவன், “ட்ரெஸ் எடுக்கத்தான்!” என்று தானும் பதிலுக்குப் புன்னகையுடன் சொன்னான்.
“இதுக்குக் கூட உங்களுக்கு நேரம் இருக்குமா?!” ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தினாள்.
“பின்ன! எடுத்து தானே ஆகணும்.”
பதிலுக்குச் சிரித்தவள், “ரெண்டு தடவை மீட் செஞ்சுட்டோம். பேர் சொல்லவே இல்லை பாருங்க. ஐயம் ஐஸ்வர்யா!” என்றவள் பட்டென்று கை நீட்ட, ஒரு நொடி இன்ப அதிர்ச்சி அடைந்தவன், நீட்டிய அவளின் கையைப் பற்றி, தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
“நந்தகுமார்!”
“நைஸ் நேம்!” அழகான புன்னகை அவளின் இதழ்களில்.
ஆனால் அதை உணரும் நிலையில் இல்லை நந்தா. அவளின் பட்டுப்போன்ற ஸ்பரிசத்தில் தன்னையே மறந்திருந்தான்.
பெண்களைப் பார்த்திறாதவன் இல்லை நந்தா! தாம்பத்தியத்தை உணராதவன் இல்லை நந்தா! இருந்தும் ஏதோ ஒன்று ஐஸ்வர்யாவை நோக்கி அவனை இழுத்தது.
அதற்குள் அவளின் ஃபோன் அடிக்க, தன் கையை உருவிக் கொண்டவள், “ப்ரெண்ட்ஸ் கூப்பிடறாங்க. படத்துக்குப் போறோம். டைமுக்கு வரலன்னா உண்டு இல்லைன்னு ஆக்கிடுவாங்க.” கலகலவெனச் சிரிப்புடன் சொன்னவள், “பை!” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
குழந்தை போலத் துள்ளி குதித்தப்படி போகும் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த நந்தா, தன் உள்ளங்கையை மூக்கின் அருகில் கொண்டு சென்று ஆழ்ந்த மூச்செடுத்து அதை முகர்ந்தான். அவளின் வாசம் அவன் உள்ளங்கை முழுவதும் நிறைந்திருந்தது.
அதற்குள் மாதுரி அழைக்கவும், சட்டென்று தன் உணர்வுகளை மறைத்துக்கொண்டு கடைக்குள் சென்றான்.
அதன் பின்பு நந்தா, ஐஸ்வர்யா இருவருக்குமிடையில் அடிக்கடி சந்திப்புகள் நிகழ, மெல்ல அவர்களுக்குள் நட்பு வளர ஆரம்பித்தது. போகப் போக அவர்களுக்குள் நெருக்கம் உண்டானது. அந்த நெருக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியது.
நந்தா திருமணம் ஆனவன் என்பது ஐஸ்வர்யாவுக்குத் தெரியவில்லை. நந்தாவும் அவளிடம் அதைச் சொல்லவில்லை. சொல்லவும் அவன் விரும்பவில்லை.
ஏனெனில் மாதுரியுடனான திருமண வாழ்க்கை, தினம் தினம் சண்டை சச்சரவு என, அவனை மூச்சடைக்க வைக்க, அதற்கு வடிகாலாக நினைத்தான் ஐஸ்வர்யாவுடனான உறவை. ஆகையால் தனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லி, தன் சந்தோஷத்தை கெடுத்துக்கொள்ள அவனுக்கு விருப்பமில்லை. இந்த உறவு எவ்வளவு தூரம் போகிறதோ அவ்வளவு தூரம் போகட்டும் என்று நினைத்திருந்தான்.
ஆனால் உண்மையை எத்தனை நாள் மறைக்க முடியும். ஒரு நாள் உண்மை தெரிந்து நந்தாவுடன் சண்டைப் போட்டாள் ஐஸ்வர்யா.
“எவ்வளவு பெரிய உண்மையை என்கிட்டே இருந்து மறைச்சுட்டீங்க!”
“அப்படி இல்ல டா. ப்ளீஸ் நான் சொல்றதை கேளு.” கெஞ்சினான் நந்தா. மாதுரியிடம் கூட இப்படிக் கெஞ்சி இருக்க மாட்டான் போல!
“பேசாதீங்க என் கூட!” கூச்சலிட்டவள், அத்தோடு உறவை முறித்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
ஆனால் அவளால் நந்தாவை, அவனின் கரிசனமான பேச்சை, அவனின் காதலை, மறக்க முடியவில்லை. தினம் தினம் கண்ணீர் வடித்தாள். பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது.
ஒரு கட்டத்தில், நந்தாவை மறக்கவும் முடியாமல், மீண்டும் அவனிடம் பேசவும் முடியாமல் போகவே, மனபலத்தை இழந்தவள், தற்கொலைக்கு முயன்றாள். எப்படியோ காப்பாற்றப்பட்டாள்.
அதன்பின் பல நாட்கள் கழித்து, நந்தாவை பார்க்க வந்தாள். ஆனால் நந்தாவின் தோற்றத்தை பார்த்துவிட்டு அதிர்ந்து போனாள். கலக்டர் மாதிரியா இருந்தான்? தெரு பிச்சைக்காரன் போலச் சவரம் செய்யாத தாடியும், பொலிவில்லாத முகமும், சிரிப்பை தொலைத்த உதடுகளும் என அவனின் கம்பீரம் முற்றிலும் மறைந்திருந்தது.
நந்தாவின் அழகும், கம்பீரமும் தான் ஐஸ்வர்யாவுக்கு மிகவும் பிடித்த விஷயம். இப்பொழுது அதையே அவன் இழந்து நிற்க, தாங்க முடியாமல், அவனிடம் தனியே பேசினாள்.
“என்னால முடியல நந்தா! உங்களை மறக்கவும் முடியல, உங்ககிட்ட முன்ன மாதிரி பேசவும் முடியல.” முகத்தை மூடிக்கொண்டு கதறினாள்.
“ப்ளீஸ் டா. ஏற்கனவே கல்யாண வாழ்கையில நிம்மதி இல்லாம, நாயா பேயா அலையுறேன். இதுல நீயும் என்னைச் சாகடிக்காத டா. ப்ளீஸ்.” ஆண் என்பதையும் மறந்து அவன் அழ, காதலினின் அழுகையைப் பார்க்க முடியாமல் அவனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.
ஐஸ்வர்யாவுக்காகக் கட்டிய மனைவியையும் இழக்க தயாரானான் நந்தா. அதற்கும் காரணம்?
அதன்பின் அவர்களுக்கு இடையேயான உறவு இன்னும் நெருக்கம் அடைந்தது. தாலி கட்டாமலே கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்தனர்.
தந்தை வீட்டில் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை மேல், கணவனுடன் எதற்கெடுத்தாலும் சண்டை என இருந்ததால், மாதுரி நந்தாவின் இந்த மாற்றத்தை கவனிக்கத் தவறி விட்டாள்.
இந்நிலையில் விஷயம் கேள்விப்பட்டு, ஐஸ்வர்யாவின் தந்தை தனியே பேசுவதற்காக நந்தாவை அழைத்தார். அவன் எதிர்பார்த்தது தான். அவனுக்குத் தெரியும் இது நடக்குமென்று. ஏனெனில் ஐஸ்வர்யா வேறு யாருமில்லை அமைச்சர் நரசிம்மனின் ஒரே மகள். (Provigil) இத்தனை வருடங்கள் வெளிநாட்டில் இருந்தவள், சமீப காலமாகத் தான் தமிழ்நாட்டில் வசிக்கிறாள்.
நந்தாவுக்கு ஆரம்பத்தில் இந்த உண்மை தெரியாது. பின்னாளில் தான் தெரிந்தது. அப்பொழுது அவனுக்குப் பயம் இருந்தது அமைச்சருக்கு தெரிந்தால் என்ன நடக்குமே என்று. ஆனால் அந்தப் பயமெல்லாம் நரசிம்மனின் ரகசியம் அவனுக்குத் தெரியும் வரையில் தான். அதன் பின்போ இதை வைத்தே நரசிம்மனை மிரட்டி தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ள நினைத்தவன், ஐஸ்வர்யாவுடனான உறவை பலப்படுத்திக் கொண்டான்.
மொத்தத்தில் முழுச் சந்திரமுகியாக மாறி இருந்தான்!
நரசிம்மன் அழைத்ததின் பெயரில், வீட்டில் பொய் சொல்லிவிட்டு, நரசிம்மனை பார்க்க அவரின் தனிப் பங்களாவுக்குச் சென்றான். அவர் மட்டும் இருந்தார்.
“வாங்க கலெக்டர் சர்!” நக்கலாக வரவேற்ற நரசிம்மன், “அமைச்சர் வீட்டுக்கு மாப்பிளை ஆகணும்னு திட்டம் போட்டு இருக்கீங்க போல!” என்றார் சற்றே கோபமாக.
பதிலுக்கு நந்தாவோ, “நீங்க மட்டும்……………” என்று அந்த விஷயத்தைச் சொல்ல, ஆடிப்போனார் அவர்.
“என்ன சொல்ற?” நடுக்கம் தெரிந்தது அவரின் குரலில்.
“நான் என்ன சொல்ல வேண்டி இருக்கு. அதை நீங்களே பாருங்க.” என்றவன் தன் மொபைலில் இருந்து சில ஆடியோ மற்றும் சில வீடியோவை காட்ட, முகம் வியர்த்துவிட்டது நரசிம்மனுக்கு. ‘***** *****’ மனதுக்குள் திட்டிக்கொண்டார்.
“இது…..இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?!” நடுக்கத்துடன் கேட்டார்.
“ம்ம் சொல்றேன் மினிஸ்டர் சர்.” என்றவன் அன்றைய நிகழ்வை கூற ஆரம்பித்தான்.
சில வாரங்களுக்கு முன்பு.
அலுவல் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தான் நந்தா. நேரம் நள்ளிரவை தொட்டிருந்தது. ரோட்டில் வாகனங்களின் போக்குவரத்து குறைவாக இருந்தது.
மிதமான வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டிருந்த நந்தாவின் கார் டிரைவர், திடீரென, “சர்!” என்றபடி காரை பிரேக் போட்டு நிறுத்தியவன், ரோட்டின் அந்தப் பக்கம் கை காட்ட, அங்கே ஒரு கார் விபத்தில் சிக்கி கவிழ்ந்து கிடந்தது. நள்ளிரவு நேரம் என்பதால், அந்தத் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து சொற்பமாகவே இருந்தது.
ஓட்டுனர் கை காட்டியதும், கதவை திறந்துகொண்டு இருவரும் அந்தக் காரை நோக்கி சென்றனர். அருகில் வந்த பார்த்ததும்,
“சர், இவன் கோபால்! மினிஸ்டர் நரசிம்மனோட கார் டிரைவர்.” என்றான் நந்தாவின் கார் ஓட்டுனர்.
“அப்போ இது மினிஸ்டர் காரா?!”
“ஆமாம் சர். ஆஃபீஸ் காரு.”
நந்தா உடனே காருக்குள் நரசிம்மன் இருக்கிறாரா என்று பார்த்தான். இல்லை கார் காலியாக இருந்தது. கோபால் மட்டும் மல்லாக்க விழுந்து கிடந்தான். உடனே இருவரும் சேர்ந்து அவனைத் தூக்க முற்பட, அவனின் மேல் இருந்து மது வாடை அடித்தது. ‘குடிச்சிட்டு வண்டி ஒட்டி ஆக்சிடென்ட் செஞ்சுட்டான் போல’ நினைத்துக்கொண்ட நந்தா, அவனைத் தன் காரில் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றான்.
அங்கே சென்றதும், அவனுக்குச் சிகிச்சை நடைபெற்றது. இது விபத்து என்பதால், காவல்துறையிடம் நேரில் பார்த்தவர்கள் விவரம் சொல்ல வேண்டும். நந்தாவின் ஓட்டுனருக்கு வேறு, வீட்டில் நிறைமாத கர்ப்பிணி மனைவி இருந்ததால், அவனைப் போகச் சொல்லிவிட்டு தான் மட்டும் மருத்துவமனையில் இருந்தான் நந்தா. மாதுரிக்கு ஃபோனில் தகவல் சொல்லிவிட்டான்.
க்ளுகோஸ் ஏறிக்கொண்டிருக்க, கட்டிலில் படுத்திருந்தான் கோபால். அவன் அருகில் ஒரு சேர் போட்டு அமர்ந்திருந்தான் நந்தா. அப்பொழுது கோபாலிடம் இருந்து ஏதோ முனங்கள் சத்தம் கேட்டது. மருத்துவரை அழைக்கலாமா என்று நந்தா நினைப்பதற்குள், அடுத்து அவன் உளறிய விஷயம் நந்தாவை அதிர வைத்தது.
உடனே கோபால் அருகில் சென்றவன், அவன் சொன்னதை முழுவதும் கவனித்தான். அதில் ஒளிந்திருந்த செய்தி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த நேரம் என்ன தோன்றியதோ, உடனே தனது மொபைலை எடுத்த நந்தா, கோபால் பேசியதை முழுவதும் ரிகார்ட் செய்து கொண்டான்.
அதன் பின் நரசிம்மனை கண்காணிக்க ரகசியமாக ஆள் ஏற்பாடு செய்தான். இதற்கிடையில் ஒரு நாள் ஃபைல் ஒன்றில் கையெழுத்து வாங்க நரசிம்மன் நந்தாவை அழைத்திருக்க, அவரின் தனிப்பட்ட அறைக்குச் சென்றான் நந்தா. நந்தாவின் நல்ல நேரம், முதல்வரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வர, அந்தப்பக்கம் முதலமைச்சர் என்ன சொன்னாரோ, காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார் நரசிம்மன். அதனால் அவரின் முழுக் கவனமும் லேண்ட்லைனில் இருந்தது. நந்தாவை கவனிக்கத் தவறினார்.
இப்படி ஒரு சந்தர்ப்பத்திற்காக வெகுநாள் காத்திருந்த நந்தா, நரசிம்மனின் கவனத்தைக் கவராதபடி அவருக்குத் தெரியாமல் அவரின் மொபைல் ஃபோனை எடுத்தவன், அதில் தன்னிடம் இருந்த ‘உளவு பார்க்கும்’ செயலியை அதில் பதிவேற்றம் செய்துவிட்டுச் சத்தமில்லாமல் மேஜை மீது வைத்துவிட்டான். எல்லாம் நண்பனிடம் இருந்து தெரிந்து, விலை கொடுத்து வாங்கியது.
அதன்பின், நரசிம்மனின் உரையாடல்கள், மெசேஜ்கள், கேமரா, மொபைலில் சேவ் செய்து வைத்திருந்த விவரங்கள் என எல்லாம் நந்தாவால் ஹேக் செய்யப்பட்டு அவனின் லேப்டாப்பில் ஒரு காப்பிச் சேவ் செய்யப்பட்டது.
தற்பொழுது அதில் தனக்குத் தேவையானதை நரசிம்மனிடம் போட்டுக் காண்பித்தான் நந்தா.
“எப்படி மினிஸ்டர் சர்? ஆதாரம் எல்லாம் போதுமா?” இப்பொழுது நக்கல் நந்தாவின் குரலில் குடி இருந்தது.
அவனின் தோரணையில் சற்றே கோபமடைந்த நரசிம்மன், “என்னால உன்னை என்ன வேணா செய்ய முடியும்.” என்று மிரட்ட,
“உங்களைப் பத்தி தெரியாதா? என்னைக் கொன்னுக்கூடப் போடுவீங்க. தெரிஞ்சும் பேசுறேனா, நீங்க யோசிக்க வேண்டாமா. இந்த ஆதாரங்கள் எல்லாம் என் நண்பன்கிட்டையும் ஒரு காப்பி இருக்கு. உடனே அவனையும் கொல்லலாம்ன்னு நினைக்க வேண்டாம். அவன் இந்தியால இல்லை. ஆனா தேவைனா அங்க இருந்தே என்ன செய்யணுமோ அதைச் செஞ்சுடுவான்.” திடமாகச் சொன்னான்.
“அப்போ இதையெல்லாம் கட்டி மிராட்டி என் பொண்ணைக் கல்யாணம் செய்துக்க நினைக்குறியா?”
“அது உங்க இஷ்டம். ஆனா என்னோட வேற.”
“என்ன?”
“ஹோம் செக்ரட்ரி போஸ்ட்.”
யோசித்தார் நரசிம்மன்.
அவரின் யோசனையைப் பார்த்துவிட்டு, “இஷ்டம் இருந்தா செய்ங்க. இல்லனா இதை எங்க கொடுக்கணுமோ, அங்க கொடுத்துடறேன்.” சொல்லிவிட்டு நந்தா எழுந்துகொள்ள, அவனை உட்கார சொன்னவர்,
“நீ கேட்டது கிடைக்கணும்னா, நான் நினைச்சது நடக்கணும். அப்போத்தான் உன்னோட ஆசை நிறைவேறும்.” என்றார்.
“ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அப்படித்தானே?!”
‘ஆம்’ எனத் தலை அசைத்தவர், “உனக்கு வேண்டியதை நான் செய்றேன். அதே நேரம் என்னோட திட்டத்துக்கு நீ உதவுனும்.” கேட்டார் நரசிம்மன்.
“நான் எப்படி?!” குழம்பினான் நந்தா.
தன் திட்டத்தைச் சொன்னார் நரசிம்மன்.
கொஞ்சம் சிக்கலான திட்டம் தான். யோசித்தான் நந்தா.
“செஞ்சு முடிச்சனா, என் பொண்ணையும் உனக்குக் கல்யாணம் செய்து தரேன். நீ கேட்ட செயலாளர் பதவியும் உனக்கு வரும்.” திடமாகக் கூறினார்.
வெகு நேர யோசனைக்குப் பிறகு சரி எனச் சம்மதித்தான் நந்தா.
“என் பொண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கணும்னா உன் பொண்டாட்டி?”
“அவளைச் சமாளிக்கிறது பெரிய விஷயம் இல்லை. அவ அப்பனை தான் இப்போதைக்குச் சமாளிக்கணும். விஷயம் தெரிஞ்சுது துப்பாக்கியை எடுத்து சுட்டு பொசிக்கிடுவான்.” சற்றே பயத்துடன் நந்தா கூற, நரசிம்மனுக்கு அன்று அம்பரீஷ் தன் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்தது நினைவு வந்தது. ‘செஞ்சாலும் செய்வான்!’ நினைத்துக்கொண்டார்.
“வெளியில் உங்களை மாமனாருக்கு தப்பாத மாப்பிளைன்னு சொல்றாங்க. நீங்க என்னடான்னா மாமனாரையே அவன் இவன்னு சொல்றீங்க?” சிரிப்புடன் கேட்டார் நரசிம்மன்.
“எல்லாம் நடிப்பு தான்!” சர்வ சாதரணமாகச் சொன்னான் நந்தா.
“என்னது?!” அதிர்ந்து போனார் நரசிம்மன். பின்னே, வெளியே அவனுக்கு ‘ராமச்சந்திர மூர்த்தி’, ‘மாமனார் மேல் மரியாதை வைத்திருக்கும் மருமகன்’ என்று மிகவும் நல்ல பெயர் உண்டு. அப்படி இருக்கையில் இப்படிப் பேசினால்?
“என்ன சொல்றீங்க தம்பி?!” குரலில் நெருக்கம் தெரிந்தது. பின்னே எதிரிக்கு எதிரி நண்பன் ஆயிற்றே!
“ம்ம். எல்லாம் பணத்துக்காகத் தான் செஞ்சேன். என் பொண்டாட்டியை முதல் முதல்ல பார்த்ததும் அவளைப் பிடிச்சது என்னமோ உண்மை தான். ஆனா அவ அப்பனுக்கு இருக்கிற சொத்தை பத்தி கேள்விப்பட்டதும், அசந்து போயிட்டேன். என் வாழ்கையில ரெண்டே குறிக்கோள் தான், ஒன்னு பணம், இன்னொன்னு பதவி. பதவிக்கான வாய்ப்பை நானே தேடிகிட்டேன். ஆனா பணம்? என் வாழ்க்கை ஃபுள்ளா மாடு மாதிரி உழைச்சாலும், என்னால அவ்வளவு பணத்தை நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. கிட்டத்தட்ட ஒரு வைர கடையே அவனுக்குச் சொந்தம். நினைச்சுப் பார்த்தேன். எப்படியும் சொத்துல பாதியாவது இவளுக்கு வரும்ன்னு கணக்கு போட்டுத் தான் அவளைக் கல்யாணம் செஞ்சேன். ஆனா என் ஆசையெல்லாம் மன்னா போச்சு. நகை கடை, ட்ரெஸ் கடைன்னு எல்லாத்தையும் இழந்துட்டு கடன்காரனா இருக்கான் அந்த அம்பரீஷ். இப்போ அவன் ஒரு செல்லா காசு! அவன் எனக்கு இப்போ தேவைப்பட மாட்டான். அவனை என் வாழ்கையில இருந்து ரிமூவ் செய்யணும்னா, அவன் பொண்ணுக்கும் எனக்கும் இருக்கிற உறவை முதல்ல முறிக்கணும். அதனால மெதுவா என் பொண்டாட்டியை கழட்டி விட ப்ளேன் போட்டேன். தேவை இல்லாத விஷயத்துக்கு அவ கிட்ட சண்டை போட ஆரம்பிச்சேன். பதிலுக்கு அவளும் சண்டை போட, இப்போ எங்க உறவு இப்பவோ அப்பவோன்னு ஊசல் ஆடிகிட்டு இருக்கு. என்னோட கலக்டர் வேலையும் அதுக்குச் சாதகமா ஆகிடுச்சு.” முழுவதும் சொல்லி முடித்தான் நந்தா.
நரசிம்மனின் கண்களுக்கு இப்பொழுது நந்தா முன்பிருந்த நந்தா போலத் தெரியவில்லை, அரசியல் செய்வதில் தன்னையே தூக்கி சாப்பிட்டுவிடும் அளவுக்குப் பயங்கரமாகத் தெரிந்தான். ஒரு பெரும் வியாபாரியின் கண்ணிலேயே மண்ணைத் தூவி இருக்கிறானே! அதுவும் தானே பயந்து நடுங்கிய ஒருவனை!
‘இவனை மட்டும் அரசியல்ல இறக்குனோம். அடுத்தத் தேர்தல்லையே cm ஆகிடுவான்.’ மனதுக்குள் வருங்கால மாப்பிளையை நினைத்து கணக்கு போட்டார்.
ஆம்! நந்தாவை தன் மாப்பிள்ளையாக ஆக்கிக்கொள்வது என்று முடிவு செய்துவிட்டார் நரசிம்மன்.
“சரி, இப்போ என்ன பண்றது?”
“அந்த ஆளை போட்டுத்தள்ள வேண்டியது தான்.” பந்தம் முற்றிலும் தொலைந்திருந்தது அவனின் குரலில்.
“ஹா…..ஹா…..அதை பத்தி நீங்க கவலைப்படாதீங்க மாப்பிள்ளை. அவனுக்கும் எனக்கும் முடிக்காம ஒரு கணக்கு பாக்கி இருக்கு. அவனை நான் பார்த்துக்கிறேன்.” கண்களில் சிவப்பேற கூறினார் நரசிம்மன்.
“அதுக்கு அப்புறம் அந்தப் பொண்ணை என்ன பண்ணப்போறீங்க?”
“அதுக்கும் ஒரு வழி வச்சுருக்கேன்.” சொன்னவனின் முகத்தில் தீவிரம் தெரிந்தது.
“ஆனா இந்த விஷயம் எதுவும் என் பொண்ணுக்கு தெரியக்கூடாது.” கண்டிப்புடன் கூறினார் நரசிம்மன்.
“நிச்சயம் மாமா!”
“மாப்பிளை!!!” சிலாகித்தார் நரசிம்மன்.