அத்தியாயம் 18
“என்ன டா? கிளம்பிட்டியா?” அந்தப்பக்கம் குரல் அதிகாரமாக வந்து விழ,
“இதோ கிளம்பிட்டேன் ஐயா!” பவ்வியமாகச் சொன்னான்.
“ஜாக்கிரதை! யார் கண்ணுலையும் படக்கூடாது.”
“சரிங்க ஐயா!”
“காரியத்தை முடிச்சதும், இந்த ஊரை விட்டே போய்டணும். உனக்கான பணம் உன்னைத் தேடி வந்து சேரும்.”
“அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க ஐயா! எல்லாத்தையும் பக்காவா முடிச்சிட்றேன்.”
“ம்ம்!!”
பேசிவிட்டு வைத்தவன், மடமடவென அடுத்தக் கட்ட வேலையில் இறங்கினான்.
பீரோவை திறந்தவன் உள்ளே இருந்த பெட்டியை எடுத்துக் கட்டிலில் வைத்தான். சாவியைக் கொண்டு பெட்டியை திறக்க, உள்ளே இருந்தது அந்தச் சிலிகான் ஃபேஸ் மாஸ்க். அதைக் கையில் எடுத்துப் பார்த்தான். கழுத்து வரை நீளம் இருந்தது. அச்சு அசலாக மனித சதை போலவே இருந்தது. அவ்வை சண்முகி படத்தில் கமல் பெண் வேடம் போடுவதற்காகப் பயன்படுத்துவாறே, அதே போல!
அதை எடுத்து ஓரமாக வைத்துவிட்டு, முகத்தில் ஏதோ ஒரு எண்ணெய்யை பூசியவன் அதன் மேல் ஏதோ பௌடரை பூசிக் கொண்டான். பின் அந்தச் சிலிகான் முகக் கவசத்தை எடுத்து தலை வழியே மாட்டிக் கொண்டான். பின் அங்கு இங்கு என்று சில பல அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்ட பின், கண்களைச் சுற்றி லூசாக இருந்த சதையைப் பசைக்கொண்டு ஒட்டிக்கொண்டான். கண்ணாடியில் பார்த்தான். ஒருவழியாக முகம் கச்சிதமாகப் பொருந்தி இருந்தது. திருப்தி அடைந்தவன், வாங்கி வைத்திருந்த கிராப் முடியை எடுத்துச் சரியாக மாட்டிக் கொண்டான்.
எல்லாம் முடிந்ததும், கண்ணாடி முன் நின்று தன் முகத்தைப் பார்த்தான். ஆளே மாறி இருந்தான். அவனின் ஒரிஜினல் முகம் போலவே இல்லை. தோற்றத்தில் பார்பதற்கு வேறு ஒருவனைப் போலத் தெரிந்தான்.
வேஷம் திருப்தியாக இருக்கவும், பீரோவில் இருந்து அந்த ஸ்னைப்பர் வகைத் துப்பாக்கியை, அந்த மர பெட்டியில் வைத்துப் பூட்டினான். உள்ளே துப்பாக்கி இருந்தாலும் வெளியே பார்பதற்கு வயலின் பாக்ஸ் போல இருந்தது அந்தப் பெட்டி.
தேவையான எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டவன் கடிகாரத்தில் நேரம் பார்த்தான். இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும். கணக்குப் போட்டவன், துப்பாக்கி இருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை பூட்டிவிட்டு, தனது பைக்கில் கிளம்பி அரை மணிநேரத்தில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தவன், கடற்கரையில் இருந்த அந்தப் படகில் ஏறி மறைந்து அமர்ந்து கொண்டான். பின் துப்பாக்கியை மடமடவெனப் பொருத்தியவன் அம்பரீஷின் வருகைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.
சென்னை மெரினா கடற்கரை சாலை. பரபரப்பான ஐ.டியில் வேலை பார்ப்பவர்களில் இருந்து, அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வரை, மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகளில் இருந்து தொழில் செய்யும் பணக்காரர்கள் வரை, சின்னப் பிள்ளைகளில் இருந்து பல்லு போன வயதானவர்கள் வரை, பல தரப்பட்ட மனிதர்கள், அந்த அதிகாலை வேளையில் தங்களுக்குள் பேசிக்கொண்டே நடைபயின்று கொண்டிருந்தனர்.
அம்பரீஷும் கூட்டத்தில் ஒருவராய் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தார்.
[the_ad id=”6605″]
அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்ததில் இருந்து, கட்டாயம் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர் சொல்லி இருந்ததால், தினமும் சூர்ய உதயத்துக்கு முன்பே காரை எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு வந்து விடுவார். காரை பார்க் செய்துவிட்டு அந்த அதிகாலை சூரிய வெளிச்சத்தில் கடற்கரை பிளாட்பார்மில் நடைபயில்பவர், பின் சிறிது நேரம் கடல் அலைகளில் காலை நனைத்துவிட்டு, கடற்கரை மணலில் சிறுது நேரம் அமர்ந்திருப்பவர், சுளீரென்று வெயில் கொதிக்க ஆரம்பித்ததும் காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று விடுவார்.
அம்பரீஷிற்கு உடல்நிலை சரி இல்லாத காரணத்தால், கூடுமானவரை தந்தையை ஓய்வாக இருக்கச் சொல்லிவிட்டு கடையை முழு நேரமும் பார்த்துக்கொண்டான் சித்தார்த்.
அன்றும் அப்படித்தான் சித்தார்த் கடைக்குச் சென்றுவிட, அம்பரீஷ் அன்று சீக்கிரமே நடைபயிற்சிக்கு சென்று விட்டிருந்தார். நடையை முடித்துக்கொண்டு, மணலில் இறங்கி நடந்து சென்று, சில்லென்ற உப்புத் தண்ணீர் மீண்டும் மீண்டும் வந்து கால்களில் வந்து மோத, கடல் காற்றை ஆழ இழுத்து, தன் நுரையீரல் முழுவதும் நிரப்பியபடி தூரத்தில் தெரிந்த சூரியனை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.
அம்பரீஷுக்கு நூறு மீட்டர் தள்ளி இருந்த ஆளில்லா படகில் மறைந்திருந்தான் அவன். அவன் கையில் இருந்த துப்பாக்கி, அம்பரீஷின் இதயத்தைக் குறி பார்த்துக் கொண்டிருந்தது. அவன் விரல்கள் ட்ரிகரை அழுத்துவதற்கு முன்பு அவன் கண்கள் சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டது. நல்ல வேலை அருகில் யாரும் இல்லை. மெல்ல ட்ரிகரை அழுத்தினான்.
அடுத்த நொடி, இதயத்தில் குண்டு பாய்ந்து சத்தமின்றித் தொப்பென்று தண்ணீரில் விழுந்தார் அம்பரீஷ். சைலென்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கி என்பதால் குண்டுச் சத்தம் வெளியே கேட்கவில்லை. அவரின் இதயம் செயலிழக்க ஆரம்பிக்க, மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டவருக்கு, இறக்கும் நொடியில் கூடச் சித்தார்த், மாதுரியின் நினைவு தான் வந்தது.
எங்கே சித்தார்த்துக்கு எதுவும் செய்ய முடியாமல் இறந்து விடுவோமோ என்று அவர் அஞ்சியது போல இதோ நடந்துவிட, தன் உயிரை காப்பாற்றிக்கொள்ளப் போராடினார் அம்பரீஷ். ஆயினும் அவரின் முயற்சி பலனளிக்கவில்லை. கத்தகூட முடியாமல் துடிதுடித்து உயிரை விட்டார்.
வெற்றிகரமான தொழிலதிபர், காதல் கணவர், பாசமான தந்தை, மகனுக்குச் சிறந்த வழிகாட்டி, மகளின் ரட்சகன் இப்படிப் பல பரிமாணங்களைக் கொண்ட தொழில் சாம்ப்ராஜியத்தின் சக்கிரவர்த்தியான, அம்பரீஷ் மேத்தா, இன்று உயிர் இல்லாத சடலமாக வானத்தை வெறித்துக் கொண்டிருந்தார்.
தொலைநோக்கி மூலம் அம்பரீஷின் துடிப்பு அடங்கி விட்டது என்பதைப் பார்த்து உறுதி செய்துகொண்ட அந்தக் கொலையாளி, தன் பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் அந்த இடத்தைக் காலி செய்தான்.
அடுத்த ஒரு மணிநேரத்தில் அம்பரீஷின் கொலை செய்தி பரபரப்பாக, காவல்துறையும், பத்திரிக்கையும் அவரின் உடல் கிடந்த இடத்தில் குவிந்துவிட்டது.
செய்தி கேள்விப்பட்டு ராஜேஸ்வரி மயங்கி விழ, சித்தார்த்தோ, அலறி அடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு ஓடி வந்தான்.
உயிர் பறிக்கப்படும்பொழுது எந்தக் கடலின் அருகில் இருந்தாரோ, அதே கடலின் மடியில் உயிரை விட்டிருந்த அம்பரீஷின் உடலை, தன் உப்புநீர் கொண்டு கழுவி கொண்டிருந்தது கடல் அலைகள்.
காரைவிட்டு இறங்கிய சித்தார்த், மணல்பரப்பில் நடக்க முடியாமல், விழுந்தடித்துக் கொண்டு ஓடியவன், தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த தந்தையின் உடலை பார்த்துவிட்டு, அலறி விட்டான்.
“பப்பா!!!!” கதறலுடன் தந்தையின் உடலை அவன் தொட முயல, அவனைத் தடுத்து நிறுத்திய கான்ஸ்டபிள் ஒருவர், “ஃபாரென்சிக் டிபார்ட்மெண்ட்ல இருந்து ஆளுங்க வரட்டும் தம்பி. கொஞ்சம் பொறுங்க!” என்று சொல்ல,
“சர்! என் அப்பா சர்! ப்ளீஸ் சர், ஒரு தடவை தொட்டுப் பார்த்துக்கிறேன் சர், ப்ளீஸ் சர்!” கதறலுடன் அவர் கால்களில் விழுந்து கெஞ்சினான் சித்தார்த்.
அவருக்கோ தர்மசங்கடமாகிவிட்டது. சித்தார்த்தை தூக்கி, தன் தோள் மேல் சாய்த்துக் கொண்டார்.
பள்ளிக்கு முதல் நாள் செல்லும் குழந்தை, ஆசிரியரிடம் இருந்து திமிறிக்கொண்டு பெற்றோரை நோக்கிச் செல்ல முயலுமோ, அதே போல அந்தக் கான்ஸ்டபிளின் பிடியில் இருந்து திமிறிக்கொண்டு தந்தையின் முகத்தைப் பார்க்க துடித்தான் சித்தார்த். ஆனால் முடியவில்லை. அழுதழுது ஓய்ந்து போனவன், அந்த மணல் பரப்பிலேயே மடங்கி அமர்ந்துவிட்டான். கண்கள் மட்டும் தந்தையின் முகத்தை விட்டு இம்மி அளவும் நகரவில்லை.
அங்கே மாதுரியோ, விஷயம் கேள்விப்பட்டு நிலைகுலைந்து போனவள் பிரம்மை பிடித்தவள் போலச் சுற்றம் மறந்து, கால்களில் செருப்பு கூடப் போடாமல், விறுவிறுவென்று வீட்டில் இருந்து வெளியேறியவள், வெறுங்காலுடன் நடந்தே ரோட்டில் இறங்கி நடக்க ஆரம்பிக்க, அவள் வீட்டின் காவலாளி தான், “மேடம் நில்லுங்க!! மேடம்!!” என்று கத்திக்கொண்டே காரை எடுத்துக்கொண்டு அவளைப் பின்தொடர்ந்து சென்று, “பப்பா!! பப்பா!!” என்று சிறு பிள்ளை போல அழுது கொண்டு சென்றவளை, கஷ்டப்பட்டுக் காரில் ஏற்றிக் கொண்டு, சம்பவ இடத்தை நோக்கி விரைந்தான்.
மற்றொரு காவலனோ, உடனே நந்தாவிற்கு ஃபோன் செய்து தகவலை சொல்ல, அவனோ உடனே நரசிம்மனுக்கு அழைத்து, “சபாஷ் மாமா! காரியத்தை இவ்ளோ சீக்கிரம் முடிப்பீங்கன்னு நினைக்கல. சூப்பர் போங்க!” என்று தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டான்.
சித்தார்த்திடமாவது சற்று கண்டிப்புடன் தான் நடந்து கொள்வார் அம்பரீஷ், ஆனால் மாதுரியிடம் அப்படி இல்லை. அவருக்கு மாதுரி இப்பொழுதும் சின்னக் குழந்தை தான். அவரின் செல்ல பிள்ளை இவள். அண்ணனை விடத் தந்தையுடன் நெருங்கி பழகியவள் மாதுரி. ஆகையால் தந்தையின் மரணத்தை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. பக்கத்தில் இருக்கும் ஓட்டுனரை கூடப் பொருட்படுத்தாமல், வழிநெடுகிலும் அழுதுகொண்டே வந்தாள்.
கடற்கரைக்கு வந்ததும் தூரத்தில் தெரிந்த கூட்டத்தைப் பார்த்துவிட்டு, ஓட்டுனர் வண்டிய நிறுத்துவதற்குக் கூட நேரம் கொடுக்காமல், நகர்ந்து கொண்டிருந்த வண்டியில் இருந்து இறங்கிய மாதுரி, பேலன்ஸ் தவறி, கீழே விழுந்து, கைகளில் சிராய்ப்பை வாங்கிக்கொண்டு, ரத்தம் வழிவதைக்கூடப் பொருட்படுத்தாமல், “பப்பா!!” என்ற கதறலுடன் வேகமாகத் தந்தையை நோக்கி ஓடினாள்.
காவல்துறையின் நடைமுறை எல்லாம் முடிந்து, வெள்ளை துணி கொண்டு போர்த்தப்பட்டிருந்தது அம்பரீஷின் உடல்.
புதையும் கடற்கரை மணலில் விழுந்து எழுந்து எப்படியோ தந்தையின் உடல் அருகில் வந்துவிட்ட மாதுரி, வெள்ளை துணி போர்த்தப்பட்ட தந்தையின் உடலை பார்த்துவிட்டு, “பப்பா!!!” என்ற கதறலுடன் அவர் மேலேயே தொப்பென்று விழுந்தவள், தந்தையின் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.
வெகு நேரம் அழுது கொண்டிருந்தவளின் தலையில் தன் நடுங்கும் விரல்களைப் பதித்தான் சித்தார்த். அப்பொழுதுதான் அண்ணன் அங்கிருப்பதை உணர்ந்தாள் மாதுரி.
[the_ad id=”6605″]
“பையா!! ஏன் பையா?! அப்பாவை யார் கொன்னது?! அப்பாவை பிடிக்காம இருக்குமா? அவரைப் போய்?…” மேற்கொண்டு பேச முடியாமல் இருமினாள். சற்று முன்பு வரை அழுது கொண்டிருந்ததால், அவளின் குரலே கரகரத்துப் போயிருந்தது.
தங்கைக்கு என்ன பதில் சொல்வது? முடியவில்லை, தங்கையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். இனி அவளுக்கு எல்லாம் அவன் தானே!
இதோ அம்பரீஷ் இறந்து மாதம் ஒன்றாகி விட்டது.
செய்தி கேள்விப்பட்டு மயக்கம் போட்டு விழுந்த ராஜேஸ்வரி, அதன்பின் மதியம் தான் கண்விழித்தார். அதற்குள் அம்பரீஷின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, வெள்ளை துணியில் கட்டப்பட்டு வீட்டிற்கு வந்துவிட்டது.
கணவனைப் பார்த்ததும் ஆரம்பித்த அவரின் அழுகை, அதன்பின் பல நாள் ஆகியும் நிற்கவில்லை. இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பிருந்தே, அம்பரீஷ் அவரிடம், “என்னமோ தெரியல ராஜி, மனசு ரொம்ப நாளாவே பாரமா இருக்கு. ஒரு மாதிரி அழுத்தமா, எதையோ இழக்கப்போற மாதிரி தோணுது.” என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.
ராஜேஸ்வரியோ, “அதெல்லாம் ஒன்னுமில்லைங்க! நிறையக் கெட்டது நடந்து போச்சுலையா, அதான் உங்க மனசுக்கு அப்படித் தோணுது. மனசை போட்டு குழப்பிக்காதீங்க, உடம்பு வேற சரி இல்லை உங்களுக்கு.” என்று அவரைச் சமாதனம் செய்திருந்தார்.
ஆனால் அம்பரீஷோ அன்றே தன் குடும்ப வக்கீலை வரவழைத்து, இருக்கும் சொத்துகளை மனைவி, மகன் மற்றும் மகளுக்குச் சரிசமமாகப் பிரித்து உயில் எழுதி வைத்துவிட்டார். ராஜேஸ்வரிகூட, “எதுக்குங்க இப்போவே இதெல்லாம்?” என்று கேட்டிருந்தார்.
ஆனால் இன்று கணவன் நினைத்தது போலவே நடந்துவிட்டதில், மனமொடிந்து போனவருக்கு, வாழ்க்கையே வெறுத்துப் போனது. ‘இனி வாழ்கையில் என்ன இருக்கிறது?’ மிகபெரிய கேள்வி அவர்முன்!
கணவன் மட்டுமே அவரின் உலகம். எந்த ஒரு விஷயத்திற்கும் வெளிஉலகம் அவருக்குத் தேவைப்பட்டிருக்கவில்லை. அந்த அளவுக்கு அவரைப் பார்த்துக்கொண்டார் அம்பரீஷ். ஆனால் இன்றும் கணவன் இல்லாத இந்த உலகம், தண்ணீர் இல்லாத பாலைவனமாகத் தோன்றியது ராஜேஸ்வரிக்கு.
அவருக்கு அப்படி என்றால், தந்தையின் அன்பு என்னும் மழையில் ஒற்றை மகளாய் நனைந்து வளர்ந்த மாதுரிக்கு, அவர் இல்லாத வெறுமை, மனதில் பெரும் பயத்தை உண்டாக்கி இருந்தது. நந்தாவுடன் ஏற்படும் தொடர் சண்டைகளால், கணவனே அன்னியமாகி போயிருக்க, தந்தையை மட்டுமே பற்றுகோளாக நினைத்திருந்த அந்தச் செல்ல மகளின் கையில் இருந்து, இருந்த அந்த ஒரே ஊன்றுகோலும் இப்போது பறிக்கப்பட்டிருக்க, பெரிய காட்டில் தனியாக விடப்பட்டது போலத் தோன்றியது மாதுரிக்கு.
தந்தையின் உடலை எடுக்ககூட விடாமல் கத்தி கூச்சலிட்டு, பெரிய களேபரமே செய்து விட்டாள். எல்லோரின் பிடியில் இருந்தும் திமிறிக்கொண்டு, இறுதி ஊர்வலத்தின் பின்னே ஓடியவள், “பப்பா! என்னை விட்டுட்டு போகாதீங்க!! உங்க பொண்ணைத் தனியா விட்டுட்டு போகாதீங்க பப்பா!! எனக்குப் பயமா இருக்கு பப்பா!!” என்று கத்திக்கொண்டே சென்றவள், ரோட்டிலேயே மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள்.
ராஜேஸ்வரியும், சித்தார்த்தும் ஒரு சில வாரங்களில் தங்கள் துக்கத்தில் இருந்து மீண்டுவிட, மாதுரி மீண்டு வரத்தான் வெகு நாட்கள் பிடித்தது. சாப்பிடாமல், தூங்காமல், குழந்தையைப் பார்த்துக்கொள்ளாமல், அப்படியே பிரம்மை பிடித்தவள் போல அமர்ந்திருந்தாள்.
ஆனால் அடுத்து அவள் மீண்டு வந்தபொழுது, புயலாக மீண்டாள். தனது கருப்பு அங்கியை எடுத்து மாட்டிக் கொண்டவள், அம்பரீஷின் கொலை சம்பந்தமாகக் கோர்டில் வழக்குப் பதிவு செய்து, அதற்கான விசாரணையில் இறங்கினாள். காவல்துறை ஒரு பக்கம், இவள் ஒரு பக்கமென அம்பரீஷை யார் கொலை செய்திருப்பார்கள் என்று ஆதாரத்தைத் தேடும் வேட்டை தீவிரமானது.
அம்பரீஷின் எதிரிகளை ஒவ்வொருவராகப் பட்டியலிட்டாள் மாதுரி. ஆனால் முக்கால்வாசிப் பேர் தொழில் போட்டியாளர்கள் தான். அதுவும் எப்பொழுது அம்பரீஷ் இரண்டு கடைகளையும் இழந்தாரோ, அப்பொழுதே அவர்களின் சந்தேகப்படும்படியான நடவடிக்கைகள் குறைந்திருந்தது. மீதம் இருந்த சிலரும், கடந்த பல வருடங்களாகச் சென்னைப் பக்கம் வரவே இல்லை.
பலமணிநேரம் யோசித்தவளுக்கு, இறுதியில் ஒன்று மட்டும் புரிந்தது, இது யாரோ புது எதிரி செய்திருக்கும் வேலை என்று, அதுவும் பலம் பொருந்திய எதிரி! யார் அவன்?
சமீபத்தில் தந்தைக்கு யாருடன் உரசல் எற்பட்டது, என்ற கோணத்தில் யோசித்துப் பார்த்தாள், ஆனால் அப்படி எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்பொழுதுதான் சட்டென்று அவளின் மூளையில் அந்த எண்ணம் உதித்தது.
அன்று ஒருநாள் யாரோ சிலர் தன்னை வெட்ட வந்து, அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்த சம்பவம்.
அந்த நேரங்களில் எல்லாம் பார்த்திருக்கிறாள், அம்பரீஷ் யாருடனோ அடிக்கடி ஃபோனில் பேசுவதும், பின் எங்கோ கிளம்பிச் செல்வதும் என. அப்படித்தான் ஒரு முறை, ஃபோனில் யாருடனோ கோபமாகப் பேசிவிட்டு கிளம்பி சென்றார். அதன்பின் தாய் ஏதோ விவரம் கேட்க, அதைக் கேட்பதற்காகத் தந்தையின் மொபைலுக்குப் போட்டாள் மாதுரி, ஆனால் ஃபோன் எடுக்கப்படவில்லை. சரி என்று கடைக்குப் போட்டு கேட்டால், அம்பரீஷ் அங்கு வரவில்லை என்று மேனேஜர் சொன்னார். சரி என்று சில மணிநேரம் கழித்து மீண்டும் அழைத்துப் பார்த்தாள், அப்பொழுதும் அதே பதில். ‘கிளம்பி வெகுநேரம் ஆகிறதே, இன்னுமா கடைக்குப் போகவில்லை; என்று யோசித்தவள், ஒருவேளை வியாபாரம் சம்பந்தமாக யாரையாவது பார்க்க போயிருப்பார் என்று நினைத்து, அந்த எண்ணத்தை அத்தோடு விட்டுவிட்டாள்.
ஆனால் இன்று அந்த நிகழ்வுகள் உறுத்தலை ஏற்படுத்தியது. ‘என்னமோ நடந்து இருக்கு? ஆனால் என்ன?’
வெகு நேரம் யோசித்தவளுக்கு, தந்தையின் இறுதி சடங்கின் பொழுது வந்திருந்த ஒருவனின் முகம் நினைவுக்கு வந்தது. யார் கண்களிலும் படாமல், யாருடனும் பேசாமல் ஒரு ஓரமாக நின்றிருந்தான். தந்தையின் உடலை தூக்கி செல்லும்பொழுது நால்வரில் ஒருவராய் இருந்தான். அதன்பின் அவனைக் காணவில்லை. அந்த முகத்தை அவள் இதற்கு முன்பு பார்த்ததில்லை. சிறு வயதில் இருந்தே தங்கள் கடைகளில் யார் வேலை செய்கிறார்கள், யார் புதிதாகச் சேர்கிறார்கள் எல்லாம் மாதுரிக்கு அத்துப்படி. அப்படி இருக்கையில் அவன்? நிச்சயம் அவளுக்குத் தெரியும், அவன் கடையில் வேலை செய்பவன் இல்லை. பின் யார் அவன்? அவனுக்கும், இந்த வழக்குக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்பதை மட்டும் மாதுரியின் மனம் உறுதியாக நம்பியது.
உடனே அவனைத் தேடும் முயற்சியில் இறங்கினாள். தந்தைக்குத் தெரிந்தவர்கள், அவர்களின் கடைகளில் வேலை பார்பவர்கள் என அம்பரீஷின் நட்பு வட்டம் முழுவதிலும் விசாரித்துப் பார்த்தாள். முஹூம்! ஒரு துப்பும் கிடைக்கவில்லை.
ஒருவேளை தந்தையைப் பார்க்க கடைக்கு வந்திருப்பானோ என்ற சந்தேகம் எழ, தங்கள் கடை ஊழியர்களை விசாரித்துப் பார்த்தாள். ஒருவன் மட்டும் சொன்னான். “ஆமாம்ங்க மேம்! ஒரு தடவை சாரப் பார்க்க இவன் வந்திருக்கான்.” அவனின் இந்த வார்த்தைகள் மாதுரியின் வயிற்றில் பாலை வார்த்தது.
“என்னைக்குன்னு நியாபகம் இருக்கா?”
சில நிமிடங்கள் யோசித்தவன், அந்தக் குறிப்பிட்ட மாதத்தைச் சொல்ல, உடனே அந்தக் குறிப்பிட்ட மாதத்தின் cctv காட்சிகளைப் பார்த்தாள். அதோ, அன்று பார்த்த அவன், ஒரு காட்சியில் கடைக்குள் நுழைந்து தந்தையின் அறையை நோக்கி செல்வதைக் கணினி திரையில் பார்த்தாள் மாதுரி.
உடனே அவனது உருவத்தைத் தன் மொபைலில் சேவ் செய்து வைத்துக் கொண்டாள்.
[the_ad id=”6605″]
அதன்பின்பு அவனைப் பற்றிய தேடுதலில் இறங்கினாள் மாதுரி. அப்பொழுது ஒருநாள், சிக்னலில் நின்றிருந்தவள் எதேர்ச்சையாகப் பக்கத்தில் பார்க்க, யாரை இதுநாள் வரை தேடிக் கொண்டிருக்கிறாளோ அவன் நின்றிருந்தான். பல்சர் பைக்கில் அமர்ந்தவாறு ஃபோனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தான்.
அவனைப் பார்த்ததும், தன் மொபைலில் இருந்த அவனது புகைப்படத்தை எடுத்து பார்த்தாள் மாதுரி. அவன் தான்! அவனே தான்! உடனே தன் கார் கண்ணாடியை இறக்கிவிட்டு அவன் என்ன பேசுகிறான் என்பதைக் கவனித்தாள்.
ஏதோ ஒரு ஹோட்டல் பெயரை சொன்னவன், இன்னும் ஐந்து நிமிடத்தில் அங்கிருப்பதாகக் கூறிவிட்டு வைத்தான். அவன் சொன்ன ஹோட்டல் பெயரை தனது மொபைலில் நோட் செய்து கொண்டாள் மாதுரி. அதற்குள் பச்சை சிக்னல் விழ, வண்டிகள் நகரத் தொடங்கிவிட, அவனும் கிடைத்த இடைவெளியில் புகுந்து சென்றுவிட்டான். ஆனால் மாதுரிக்கு தான், தனது காரை அந்த டிராஃபிக்கில் முன்னே செலுத்துவது கடினமாக இருந்தது.
எப்படியோ ஒருவழியாக இடம் கிடைத்துவிட, வேகமாக வண்டியை செலுத்தியவள், ரோட்டின் திருப்பத்தில் வந்து பார்க்க அவனைக் காணவில்லை. தெருவின் இரண்டு பக்கமும் திரும்பி பார்த்தாள். அவனின் அறிகுறியே தெரியவில்லை. அடுத்து என்ன செய்வது என்று யோசித்தவள், பேசாமல் அந்த ஹோட்டலுக்குச் சென்று அவனைப் பிடிக்கலாம் என்று முடிவெடுத்து, காரை அந்த ஹோட்டலை நோக்கி செலுத்தினாள்.
‘ஹோட்டல் ஹாட் சூப்’ கருப்பு நிற போர்டில் சிவப்பு எழுத்துக்களில் மின்னியது வார்த்தைகள். காரை பார்க் செய்த மாதுரி, உள்ளே சென்று உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, ஓரமாக ஒரு இடம் பார்த்து அமர்ந்து கொண்டாள்.
ஐந்து, பத்து, இருபது என நிமிடங்கள் தான் கரைந்ததுவே தவிர அவனைக் காணவில்லை. ‘லேட்டா வருவானோ? இல்லை வேற எங்கயும் போயிட்டானா?’ யோசனையுடன் அவள் அமர்ந்திருக்கும்பொழுது தான் அந்தக் காட்சியைப் பார்த்தாள், பார்த்தவள் அதிர்ந்து போனாள்.